நம் குரல்

முழுநிலவு



முழுநிலவின் நீர்த்தேக்கத்தை உள்ளங்கையால் அள்ளி
அதன் நீர்மை உணரும் அவாவினைப் போலவே
காதலுணர்வும் ஒவ்வொரு பருவமும் சீண்டிப் பார்க்கிறது
நிலவு எனைத் தொடரும் பயணமும் மூர்க்கமானது
சதைத்த முகத்துடன் முழங்கால்களுக்கிடையே
துக்கம் புதைத்த இளம்பெண்ணைப் போல
அதை அடையாளம் கொண்ட நாள் முதல்
அது கிளர்த்தும் தாபம் காதலுக்கானதை விட அதிகம்
உயர்ந்த இருள்தாங்கும் கிளைகளுக்கிடையே அதன் தனிமை
இருளால் விளைந்ததில்லை
மனிதக்கைகளின் சமைதலுக்கு அப்பாற்பட்ட அழகாலும்
உயிர்களின் துயரடர்ந்த உறக்கத்தாலும்
கொஞ்சமும் கனம் குறையாத கனவை
ஒரு பாதரசக் குமிழியாக்கி மிதக்க விட்டேனா நான்
உனக்குமானது அதன் கன்னக் குமிழி முத்தமிடு முத்தமிடு
நிலவு தோள்களில் யுகம்யுகமாய்ச் சுமக்கும்
நாகரீகத்தின் கண்ணீர்
குடமாகித் தளும்பி என் கண்களின் விளிம்பைத் தேடுகிறது
உறக்கமிலா நிலவின் குருதி
அணையாத நெருப்பாகி என்னுடலை இரவெல்லாம் சுடும் சுடும்
அதன் எரிவெளிக்குள் ஒரு கிழவி முடங்கிக்கிடப்பதான
நமது கதைகளெல்லாம் அவளுக்குப் புனைவுகளல்ல



*



நிலவின் மதுவைக் குடிப்பவள் நான்
அதன் வெறியூட்டு விளையாட்டில் இரவைக் கழிப்பவளும் யானே
இரவெனும் வயல்வெளியின் நீள அகலங்களைப்
பொருட்படுத்தாத
ஒரு மீனாகிய அதன் நீச்சல் நீர்த்திவளைப் பிழையாது
விரிகிறது பாரேன்
உறக்கத்தை சதுரங்களாய்த் துண்டிக்கும் கனவுக்குள்
பால்வெளியை வரையும் போது
நீ உன் கண்களை அந்நிலவொளியால் தான் நிரப்பிக்கொள்கிறாய்
காமரசம் நிலவூறி
உன் கண்ணில் சொட்டுச்சொட்டாய் சொட்டுகிறது அரசனே
தாங்கவொணா வெறிகொண்டலையும் என்னுயிர்க் குட்டிகள்
கானகத்தின் தொலைந்த திசைகளாகி
காற்றைத் துணைக்கு அழைக்கும் வேளையில்
நிலவென்று வந்து முலையூட்டும் மூதாதையாய் வந்திறங்குகிறது
நீர்ப்படிகக் குளத்தின் நடுவே
ஆகவே கேட்டுக் கொள்
என் பிரக்ஞையை அதனுடலுக்குக் கடத்தும் வேளையில் மட்டுமே
மரணத்துடன் சமரசம் செய்து கொள்வேன்.






குட்டி ரேவதி

2 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

முழுநிலவு தேய்ந்து பின் வளர்ந்து நாளொரு தோற்றம் தருவது போல வார்த்தைகளும் வரிகளும் சேர்ந்து
அருமை.அருமை.

வாழ்த்துக்கள்.

யாழினி சொன்னது…

அருமை.....


வாழ்த்துக்கள்.