நம் குரல்

நிலவின் பேரொளி




வானத்தின் பெருவெளியைப் 
பயணித்துத் தீராத ஒற்றை நிலவே 
தீரத்தின் குறியீடு நீ நிலாவே
நீ நிறைத்து வைத்திருக்கும் மெளனம்

இசையின் துல்லியத்துடன்
என்னுள் இறங்குகிறது
நம்மிடையே எவ்வளவு அகண்ட
காலமும் வாழ்வும்
உன் பேரழகில் மதி தெளியும்
மதி அழியும் மதி உயிர்க்கும்
என் ஒரே எதிரொளி நீ
நீர் நழுவும் விரிந்த நதியின்
ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு
சத்தமில்லாமல் நீந்துகிறாய்
எத்தனை காலத்தின் ரகசியங்களும்
நினைவுகளும் தின்று தீர்த்த பின்னும்
பறவையின் சிறகசையும் நகர்வில்
இன்னும் பயணம் தொடர்கிறாய்
இன்று என் மிக அருகில் என் எதிரொளி
பேரொளியுடன்!






குட்டி ரேவதி

இனி வரும் நம் நாட்களை மரணதண்டனை ஒழிப்பு நாட்களாய் அறிவிப்போம்!







நண்பர்களே, முன்னெப்போதினும் இப்பொழுது தான் மரண தண்டனையை ஒழிப்பதற்கான அவசியமும் அவசரமும் தேவைப்படுகிறது.


ஏனெனில், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை அழித்தொழிப்பதற்காக ஆதிக்க சமூகத்தினால் நீதி என்னும் பெயரில் வடிவமைக்கப்பட்ட தண்டனை முறையே 'மரணதண்டனை'.


நம்மீதான இந்த ஆதிக்கத்தை நிறுத்துவதற்கு நம் எதிர்ச்சமூகமாகிய பார்ப்பனீய, ஆதிக்க சக்தியினரைத் தான் எதிர்த்துப் போராடவேண்டியிருக்கிறது என்றில்லை. நம்மக்களே இதன் விபரீதங்களையும், முறைகேடுகளையும் அறியாத நிலையில் இருக்கின்றனர். 'மரண தண்டனை'யை ஆதரிக்கின்றனர்.


'மரண தண்டனைக்கு'ப் பின் இருக்கும் ஆதிக்க அரசியல், நீடிக்கும் ஒடுக்குமுறை, நம்மக்களின் அறியாமை அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. 


நாம் எங்கெங்கு இருந்து என்னென்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதன் ஒரு பகுதியாக, 'மரண தண்டனை' ஒழிப்புக்கான போரை நிகழ்த்துவோம்.


ஒவ்வொரு நாளும் அதை அழித்தொழிப்பதற்கான பாதை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்போம்.


நம் சமூகத்தில் நிறைய தமிழ் அறிஞர்கள், பகுத்தறிவாளர்கள்  இது பற்றிய ஆழமான உரையாற்றுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். மக்களுக்கு விழிப்புணர்வூட்டவும், இக்குற்ற ஒழிப்புக்கு ஆதரவாக மக்கள் எல்லோரும் ஒரு பெருஞ்சக்தியாகத் திரள்வதற்கும் அவ்வறிஞர்களைப் பயன்படுத்துவோம். 


குறிப்பாக, விடுதலை ராசேந்திரன், இத்தண்டனை முறை எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரானது என்று வரலாற்றுப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசுவதில் வல்லவர். 


நமக்குள்ளேயே அரங்கக்கூட்டங்கள் என்றில்லாமல் பொதுமக்களுக்கு எட்டும் வண்ணம் தெருமுனைக்கூட்டங்கள், பொதுவெளிக் கூட்டங்கள் நடத்துவோம்.


ஒரே சமயத்தில் பல வடிவங்களில் இப்போராட்டத்தை இயக்கமாக்கினால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒருமித்த நிர்ப்பந்தத்தை நாம் கொடுக்கமுடியும். மக்களின் ஒருமித்த ஆற்றலால் தான் அது சாத்தியம்.


ஒரே கணத்தில் நம் விழிப்புணர்வும் இயக்கமும் காட்டுத்தீ போல இயங்கினால் தான் இக்காட்டுமிராண்டித்தண்டனையும் குற்றமுறையையும் அழித்தொழிக்கமுடியும்.


நம் பகுத்தறிவு வெளிச்சம் பெறட்டும். 


நம் எழுதுகோல், எழுத்து, ஓவியம், நூல், பாடல், இசை, அக்கறை, கனவு, இலட்சியம், நம்பிக்கை எல்லாமும் மரண தண்டனை ஒழிப்பாகட்டும்.


'மரண தண்டனை ஒழிப்பு' கவனக்குவிப்பு சிற்றதழ்கள், இலக்கியங்கள், செய்வோம். திரையிடல்கள் நிகழ்த்துவோம்.

நம் கலை, பண்பாட்டை அது குறித்த சிந்தனையாக புணரமைப்போம்.

சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்களை அவரவர் கைபலத்துக்கு எட்டிய மட்டில் பரவலாக்குவோம்.


நான் அறிந்த நண்பர் ஒருவர் இது பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார். விரைவில் அது பொதுத்திரையிடலுக்கு வருகிறது.


இன்னொரு பாடலாசிரியர் அருமையான விழிப்புணர்வுப் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். விரைவில் அதுவும் வெளியிடப்படும்.


இன்னொரு நண்பர் முழு நீள திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான திரைக்கதையுடன் களம் புகுந்திருக்கிறார்.


நண்பர்களே, நாம் என்ன செய்யப்போகிறோம்?


குட்டி ரேவதி





இன்றைய கவிஞன் பற்றி…!







1. மிதித்து ஏறி வந்த படிகளால் கால் வலிக்கின்றன என்ற அளவுக்கு நான் படித்து எழுதிய கவிஞர்கள் இன்று எனக்கு கவிஞராகத் தெரியவில்லை என்று நரைத்த மீசை முறுக்குகிறான்  மூத்த கவி.


2. இன்னும் பின் காலனிய வெளியிலிருந்து சிந்தனைச் சிறகை விரிக்க முடியாத அளவிற்கு இரும்புக்கிராதிகளுக்கு இடையே வைக்கப்பட்ட உடலுடன் வாழ்கிறான் நடுவயது கவி.


3. இளைய கவி, தன் சிந்தனை உடல் எழுச்சி சோடா போல் எம்பி எம்பி வார்த்தைக் குமிழ்களை அனுப்பிக் கொண்டே இருக்க, கவிதை எதுவென தெரியாத பதட்டம் வெளிக்காட்டாமல் ஒரு தொகுப்பை மேடையில் வெளியிட்டுக் கைதட்டல் கேட்டுக் கொண்டான்.


4. இன்னொரு உடலைப் படைக்கும் முன், எரிந்து போன உடல் சுமந்து சாம்பல் உதிரும் காளியென பெண் கவி.


5. சக்கை சக்கையாகத் துப்பித்தீர்க்கும் மூர்க்கமுடன் எச்சிலைப் படையலாக்கி அழிகின்றான் நவீனக்கவிஞன்.


6. 'செம', 'அட்டகாசம்', 'பல்பு கொடுத்திருக்காரு' இன்னபிற சொலவடைகளுடன் மேடையில் கவிவிமர்சகர்கள் சவ்வுமிட்டாய்க் கவிதைகளைச் சொப்புகொட்டுகின்றனர்.


7. உடலை மலவாடையிலிருந்து இழுத்துவரும் காலம் நோக்கிய சாதி மறுப்பாளன், கவிதைகளில் கோபத்தை நிறைத்துவைக்கிறான், கோபமும் சொரணையுமற்ற மற்ற மலவாடைக் கவிஞர்கள் முன்.


8. நான்கைந்து வரிகளுக்குள் திருகிய தன் புத்தியை திரியாக்கி வெளிச்சம் காட்டுகிறான் அரசியல் கவிஞன்.



8. கொம்பு சீவுதலே கலையென தினந்தோறும் கத்தியுடன் வித்தைப் பழகி அதைக் கவிதை என்கிறேன் நானும் ஒரு கவியென.





குட்டி ரேவதி

வன்மம்

ஒரு கற்பனையான உரையாடல்.



"என்னோட வேலையில நீங்க கொஞ்சம் உதவனும்! உங்கள விட்டா எனக்கு வேற ஆள இங்கத் தெரியாது."

"ம். யோசிக்க கொஞ்சம் சமயம் கொடுக்க!"

"யோசிக்கிறதுக்குக் கூட எனக்கு நேரம் இல்லை. பாருங்க இந்த ஐம்பது வயசிலயும் எவ்வளவு இளமையா, உற்சாகத்தோட அடுத்தடுத்த வேலைக்குப் போயிக்கிட்டே இருக்கேன்.
இந்த இளவயசில வேலை செய்யுறதுக்கு யோசிக்கிறீங்களே!"

"ஆமா..இனி யோசிக்காம எதையும் செய்யமுடியாது. காலம் விரயமாகிறத பாத்துக்கிட்டு இருக்குறவிட, அதக் கட்டுப்படத்துற உரிமைய இழக்குறத விட, திட சோம்பேறியா இருக்கலாம்னு தோணுது! ஏன்னா காலம் விரயமாகுற வேலையையே செஞ்சிக்கிட்டு இருக்குறதா அலுப்பு தட்டுது"

"அப்படி என்ன வேலையால காலம் விரயம் ஆகுதுன்னு சொல்லுறீங்க!"

"விரயம் தான். விதைக்குள்ள வேற செடிக்கான வீர்யம் தான் இருக்கு. நீங்க சொல்லுற மரமோ, கள்ளிச்செடியோ அதுக்கான வீர்யமோ இல்ல. அதப்பத்தின கவலை உங்களுக்கு தேவை இல்ல"

"நான் எப்படி கவலப்படாம இருக்கமுடியும். ஒங்களுக்கு நீங்க ஓவர் ஸ்மார்ட்டுன்னு நெனைப்பு."

"அப்படி இருந்திருந்தா ஏன் மத்த ஆட்களுக்குக் கீழ வேலை செய்யுறோம்"

"ஏதோ இல்லாததுனால தான வரீங்க. அப்புறம் என்ன வீராப்பு?"

"அப்ப, உங்கக்கிட்ட என்ன இல்லங்குற குறைய தீர்க்க என்னைய தேடுறீங்க. விட்டுடுங்க"

"என்ன குரல் உயருது?"

"உங்க அதிகாரம் உயருறதோட எதிரொலியா இருக்கும்!"

"வார்த்தைய அளந்து பேசுங்க!"

"வார்த்தைய அளந்து பேசுறதுக்குத்தான் சமயம் கேட்டேன்"

"இப்ப என்ன தான் சொல்லவரீங்க? இந்த ப்ராஜெக்ட்ல வேலை செய்யமுடியுமா முடியாதா?"

"ஒப்பந்தத்துக்கு முன்னாடியே இவ்வளவு காயப்படுத்துற அதிகாரம் ஒரு பொழுதும் என்னுடைய கிரியேட்டிவிட்டியால மகிழ்ச்சியடையாது. 
மடியிலருந்து பால இறக்குற அவசரமும் பேராசையும் தான் இருக்கும்"

"என்ன என்னைய சொரண்டுறவன்னு நெனைக்கிறீங்களா?"

"எனக்கு அவகாசம் வேணும்னு கேட்டது சலுகை இல்ல. என்னோட உரிமை. அதுவே உங்க அதிகாரத்தைக் கிண்டிவிடுறத பாக்கும் போது, ஒங்க ப்ராஜெக்ட்ல நீங்க வைக்கிற ஹ்யூமன் வேல்யூஸ் பத்தின கேள்வி இப்பவே தலைதூக்குது"

"விருப்பம் இல்லன்னா ஒரே வார்த்தையில சொல்லிட்டு போவலாம். நொண்டியடிச்சிக்கிட்டு இருக்கீங்க!"

"விருப்பம் இல்ல!"

"உங்கக் கிட்ட எப்படி வேலை வாங்கனும்னு எனக்குத் தெரியும்! போங்க."

"அது வேலை இல்ல. என்னோட சரக்கு. அத நீங்க எவ்வளவு எங்கிட்ட கறந்தாலும் அது உங்களுக்குப் பயன்படாது. மண்ணில கொட்டுற பால்மாரி"

"எனக்குப்பயனில்லாதது மண்ணோட மண்ணா ஆனா எனக்கு என்ன?"

"குட் லக்!"






குட்டி ரேவதி








'மரப்பசு'வும் பல பேருடன் உறவும்!





'மரியான்' பணி முடிந்ததோ இல்லையோ, படிப்பதற்காகவென்று எடுத்துவைத்திருந்த நூல்களை எல்லாம் வாசிக்கவென வரிசைப்படுத்தி வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றையும் சுரவேகத்தில் வாசிக்கிறேன். ஒரு வகையில் வேலைப்பளு, மனதை ஆக்கிரமித்திருந்த வேலை எல்லாவற்றிலிருந்தும் பெற்ற விடுதலை உணர்வு கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

நண்பர் ஒருவரின்  திரைக்கதைப் பணிக்காக தி.ஜா.வின் 'மரப்பசு' வாசித்துமுடித்தேன். ஏற்கெனவே முன்பொரு காலத்தில் வாசித்திருந்த போதும், தற்பொழுது வாசிக்கும்போது சுய மனமாற்றங்களுக்கு ஏற்பவும், வளர்ச்சிக்கு ஏற்பவும் நாம் உள்வாங்கிக் கொள்ளும் கருத்துகளும் மாறியிருப்பதை உணரமுடிகிறது. 'மோகமுள்'ளிலிருந்து  முற்றிலும் மாறுபட்ட பெண் பாலியல் விழைவைச் சொல்லும் நாவலாக  'மரப்பசு' விரிகிறது.

பெண்ணின் பாலியல் விடுதலை என்பது காலந்தோறும் விவாதிக்கப்படும் அதி சூடானதொரு கருப்பொருளாகவே இருப்பது தெரிகிறது. 'அம்மணி' என்ற கதாபாத்திரம் தன் நிலையிலிருந்து நிகழ்வுகளை அனுபவங்களைப் பயணமொழியில் சொல்லிச் செல்கிறது. நாவல் முழுதும் ஒரு பார்ப்பனப் பெண்ணாகவே இருந்து விடுதலையைப் பெற விழையும் பெண்ணாகத்தான் அம்மணி இருக்கிறாள். 

பெண், ஏன் பல பேருடன் உறவு கொள்ள வேண்டும்? அது என்ன விடுதலையைத் தந்துவிடப்போகிறது? இது ஒருவகையில் நோக்கமற்ற போராட்டம் தான். இந்தியாவின் மதம், குடும்பம், சாதி, திருமணக் கோட்டைகளைத் தகர்ப்பதற்கேற்ற பாலியல் போராட்டங்களைத் தான் நாம் கையில் எடுக்கவேண்டும். இந்தியாவின் சாதியச் சதுரங்கத்தைக் கலைத்துப் போட, 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கட்டாயம் ஒருபொழுதும் உதவப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அது சதுரங்கக் கட்டங்களை பெரிய அரண்களாகவே ஆக்குகிறது. எந்த ஆணும் சமூகத்தில் 'ஒருவனுக்கு ஒருத்தி' யைப் பின்பற்றுவதில்லை. இது பெண்ணின் உளவியலில் வலிந்து திணிக்கும் ஒரு எச்சரிக்கையே.

பல பேருடன் உறவு என்பது பெண்ணைப் பொருத்தவரை சமூக நிறுவனக்கட்டங்களைத் தகர்ப்பதன் வழியாகவே சாத்தியம்.  'மரப்பசு'வின் கதாநாயகி அம்மணி பார்ப்பன ஆணின் அதிகார முறைகளைத் தகர்க்க முயல்கிறாளே தவிர,  மேலை நாட்டு ஆண்களின் ஆண்மையைக் கேள்வி எழுப்புகிறாளே தவிர, இந்திய நிலப்பரப்பில் பிற சாதியினர், பிற மதத்தினர் அவர்களுக்கு இருந்த பாலியல் உரிமைகள், அதிகாரங்கள் குறித்த கேள்வியையோ ஏன் சிந்தனையையோ கூட  எழுப்புவதே இல்லை. ஏதோ இந்தியாவில் உள்ள பெண்கள் எல்லோருமே "பார்ப்பனப் பெண்" என்ற மனநிலை ஓங்கிய நிலை தான் உள்ளது.

'மரப்பசு' என்பதே பெண்ணை ஒரு பசுவின் வடிவில் சடமாக்கிய குறியீடாகத் தான் கையாண்டிருக்கிறார் தி.ஜா. அம்மணியைப் போல பல பெண்கள்,  நான் அறிந்த அளவில் இந்திய அளவில் பல பேருடன் உறவு என்பதை விடுதலைக்கான ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கின்றனர். என்றாலும், அது அவர்களை விடுதலையை நோக்கி ஓர் அடியும் அழைத்துச் செல்லவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதில் தன் சுயம் சார்ந்த புரிதலுக்கும் அறிதலுக்குமே முழுக்காலத்தையும் முழு உடலையும் பணயம் வைக்க வேண்டியிருக்கிறது. சமூகத்தின் கட்டங்களில் சிக்கிக்கொண்ட பிற பெண்களை இணைத்துப் புரிந்து கொள்ளாத இந்தப் பாலியல் போராட்டம், எந்த வகையிலும் அந்தப் பெண்ணுக்கே கூட விடுதலை அளிப்பதில்லை. 

இந்தியாவின் பெண்ணிய விடுதலை என்பது ஒரு பெண்ணின் விடுதலையும் உரிமையும் அதிகாரமும் பிற பெண்களுடன் முழுமையான தொடர்புடையது. இதைப் புரிந்து கொள்ளாதவரை, 'அம்மணி' போன்ற தனி கதாபாத்திரங்களின் பாலியல் விடுதலை வெறும் பேசுபொருளாகவே இருக்கும். ஆனால், தி.ஜா. இந்நாவலில் சில அகழிகளைக் கடந்திருக்கிறார். அவர் காலத்தில், அல்லது அவரையொட்டிப் பின்வந்த பல படைப்பாளிகள் 'அம்மணி' கதாபாத்திரத்தின் நவீனம் தொனிக்கும் மன எழுச்சியைக் கடக்கமுடிந்ததில்லை. அவருக்குப் பின் வந்த, இன்று புகழோங்கிய பல படைப்பாளிகளின் நாவல்களின் அம்மணியின் குரல் தொனியைக் கேட்கமுடிகிறது. தி.ஜா. செய்த புரட்சியைக் கூடச் செய்யமுடியாத மனக்கூண்டில் சிக்கியிருக்கின்றனர் சில எழுத்தாளர்கள் இன்றும்.


சமீபத்திய சாதிமறுப்பு எழுச்சியும் தலித் மக்களின் உரிமைப்போராட்டங்களும் தாம் இந்த நாவலை, சீர்தூக்கிப் பார்க்கவைக்கிறது.





குட்டி ரேவதி

நடிகை ஜியாகானின் காதல்!






ஜியாகானின் காதல் கடிதம் மனதின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் பல விஷயங்களைத் தட்டி எழுப்புகிறது. சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியா கானின் காதல் கடிதம் கிடைக்கப்பெற்றதாக, ஒரு முழுக் கடிதத்தை ஊடகங்கள் பகிர்ந்து கொள்கின்றன. 

ஜியாகான், கவிதை எழுதுபவராக இருந்திருக்கவேண்டும். அவரது மறைவிற்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனையில் வாசிக்கவென ஜியாகானின் கவிதைகளைத் தேடிய போது அவரது தங்கை ஜியாவின் பர்ஸிலிருந்து ஒரு கடிதத்தைக் கண்டெடுத்ததாகக் கூறியுள்ளார். இந்த மரண வாக்குமூலமே, காதலின் ஈடு இணையற்ற கவித்துவம் நிறைந்ததாகவே இருக்கிறது. மரணத்தின் விளிம்பில் நின்று காதலை உணர்ந்த நிலையை ஜியா இக்கடிதத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகை ஜியாவின் கவர்ச்சியான புகைப்படங்கள் அவருடைய ஆளுமையையும், உடலின் எல்லையிலா ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக உள்ளன. இயல்பாகவே, சினிமா என்பது ஆண்கள் நிறைந்த ஆண் சிந்தனைகள் மலிந்த ஊடகவெளி என்பதால், பெண்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் காட்டவேண்டிய உணர்திறன்  காணக்கிடைப்பது அரிது. புகழ், அதிகாரம், பணம், வெளிச்சம் தரும் மயக்கமும் போலிமையும்  இதை உணர்ந்த எந்த நடிகையையுமே உண்மையை நோக்கி அல்லது உண்மையைத் தேடித் தள்ளக்கூடியது. ஜியாவின் காதல் கடிதத்தில் இந்த உண்மைக்கான தேடலை, அதற்கான அதிதீவிரத் தேவையை உணரமுடிகிறது.

பொதுவாகவே, நடிகைகளின் உடலைப் பொதுச்சொத்தாகவும், அவர்களின் பிம்பங்களைக் கவர்ச்சியானதாகவே மட்டும் கருதும் நம் சமூகங்களில், உடல் தாண்டிய மரியாதையை, அல்லது உடலுக்கான மரியாதையைக் கூட நடிகைகள் பெறமாட்டார்கள். பல நடிகைகள் இதனால் தான் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் என்னுள் எழும் கேள்விகள் இது தான்: எல்லா வகையான சமூக மாற்றங்களுக்கும், வளர்ச்சிகளுக்கும் உட்படும் ஒரு பெண் (நடிகை), போதுமான சமூக விழிப்புணர்வு இல்லாத நிலையில் தானே தற்கொலை வரை செல்லமுடிகிறது?

சமூக ஏணியில் ஏறும் வாய்ப்பு கிடைத்த ஒவ்வொருவரும் தன் பின்னால் ஒரு பெரிய சமூகம் அதற்கு வாய்ப்பின்றி இருப்பதை உணரும் போது இந்த உளவியல் சிக்கல் நிகழாது. ஏனெனில், உண்மையான காதலைக் கையாளும் அறிவு இல்லாத நிலையே ஓர் உளவியல் சிக்கல் தானே?




குட்டி ரேவதி


ஜியாகானின் கடிதம்:




Page 1
"I don't know how to say this to you but I might as well now as I have nothing to lose. I've already lost everything. If you're reading this I might have already left or about to leave. I am broken inside. You may not have known this but you affected me deeply to a point where I lost myself in loving you. Yet you tortured me everyday. These days I see no light I wake up not wanting to wake up. There was a time I saw my life with you, a future with you. But you shattered my dreams. I feel dead inside. I've never given so much of myself to someone or cared so much. You returned my love with cheating and lies. It didn't matter how many gifts I gave you or how beautiful I looked for you. I was scared of getting pregnant but I 
Page 2

The pain you have caused me everyday has destroyed every bit of me, destroyed my soul. I can't eat or sleep or think or function. I am running away from everything. The career is not even worth it anymore. When I first met you I was driven, ambitious and disciplined. Then I fell for you, a love I thought would bring out the best in me. I don't know why destiny brought us together. After all the pain, the rape, the abuse, the torture I have seen previously I didn't deserve this. I didn't see any love or commitment from you. I just became increasingly scared that you would hurt me mentally or physically. Your life was about partying and women. Mine was you and my work. If I stay here I will crave you and miss you

Page 3

So, I am kissing my 10-year career and dreams goodbye. I never told you but I received a message about you. About you cheating on me. I chose to ignore it, decided to trust you. You embarrassed me. I never went out, I never went with anyone else. I am a loyal person. I never met anyone with Karthik I just wanted you to feel how you make me feel constantly. No other woman will give you as much as I did or love you as much as I did. I can write that in my blood. Things were looking up for me here, but is it worth it when you constantly feel the pain of heartbreak when the person you love wants to abuse you or threatens o hit you or cheats on you telling other girls they are beautiful or throws you out of their house when you have

Page 4

no where to go and you've come to them out of love or when they lie to your face or they make you chase after them in their car. Or disrespects their family. You never even met my sister. I bought your sister presents. You tore my soul. I have no reason to breathe anymore. All I wanted was love. I did everything for you. I was working for us. But you were never my partner. My future is destroyed my happiness snatched away from me. I always wished the best for you, was ready to invest what little money I had in your betterment. You never appreciated my love, Kicked me in the face. I have no confidence or self esteem left, whatever talent whatever ambition you took it all away. You destroyed my life.


Page 5

It hurt me so much that I waited for you for ten days and you didn't bother buying me something. The Goa trip was my birthday present but even after you cheated I still spent on you. I aborted our baby when it hurt me deeply. You destroyed my Christmas and my birthday dinner when I came back. When I tried my hardest to make your birthday special. You chose to be away from me on Valentines Day. You promised me once we made it to one year we would get engaged. All you want in life is partying, your women and your selfish motives. All I wanted was you and my happiness you took both away from me. I spent money on you selflessly

Page 6

you would throw in my face. When I would cry for you. I have nothing left in this world to live for after this. I wish you had loved me like I loved you. I dreamt of our future. I dreamt f our success. I leave this place with nothing but broken dreams and empty promises. All I want now is to go to sleep and never wake up again. I am nothing. I had everything. I felt so alone even while with you. You made me feel alone and vulnerable. I am so much more than this.



ஆண்கள் தாலி அணிவதற்கான தீர்ப்புவரின் நான் மகிழ்ச்சியடைவேன்!





ஆண்கள் தாலி அணிய நேர்ந்தால் இது மாதிரியான விவாதப் பொருளாக ஆகியிருக்காது என்று நம்புகிறேன். 'தாலி' என்பது 2013 - ல் எவ்வளவு பெரிய வேடிக்கை என்பது எல்லோரும் அறிந்ததே.

என்றாலும், திருமணம் என்று வரும் போது தாலி கட்டாமல் கல்யாணம் செய்வதோ அல்லது, சாதி பாராமல் திருமணம் செய்து கொள்வதோ இன்றும் பரவலாக இல்லை. இன்னும் சொல்லப்போனால், முற்போக்குக் கருத்துகளை உதிர்க்கும் ஆண்களுக்குக் கூட  அவரவர் திருமணத்தின் போது, இது பெருத்த குழப்பமாக இருப்பதைப் பல  பார்த்திருக்கிறேன்.

ஆண்கள் 'முற்போக்கு'க் கருத்துகளைப் பேசும் அளவுக்குத் தம் வாழ்க்கையில் அதை நிலைநிறுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதே நான் காண்பது.  ஏனெனில், அது உடன் வாழும் பெண்ணின் சமத்துவத்தையும் அதிகாரத்தையும் விடுதலையையும் உள்ளடக்கியது என்பதால். ஆண்களின் 'முற்போக்கு'க்கருத்துக்கள், 'பெண்நிலை' அற்றவையே பெரும்பாலும்!

பெண் - ஆண் பாலுறவு வைத்துக்கொண்டாலே திருமணம் நடந்ததாகத்தான் அர்த்தம் என்ற இன்றைய தீர்ப்பு கூட பல வகைகளில் பெண்ணுக்குச் சாதகமானதே. இருப்பினும், இம்மாதிரியான சட்டங்களும், தீர்ப்புகளும் நடைமுறை என்று வரும் போது உலர்ந்து ஆவியாகிவிடுவதை பல வழக்குகளில் காண முடிகிறது. 'பெண் சொத்துரிமை' என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருப்பது போல.

இன்னும் ஒரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். 'தாலி' என்பது இந்து மதத்தின், அதன் நிறுவன வடிவமான சாதிப்பிரிவுகளின்  குறியீடாகவே இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆகவே, மேலே குறிப்பிட்ட தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்து மதத்தின் அடிமை முறைகளிலிருந்து பெண் விடுதலை அடைய முதன்மையான வழியாக இருக்கும்.


என்றாலும், ஆண்கள் தாலி அணியும் முறையை இது போன்ற ஏதேனும் தீர்ப்புகள் கொண்டு வரின் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். திருமணம் ஆன ஆண் என்பதன் அடையாளமாய்,  அவர்கள் கழுத்தில் தாலி தொங்குவதே சமூகத்தின் முற்போக்காக இருக்கமுடியும்.  பெண் தாலியால் பெண்களுக்குக் கிடைக்காத சமூக உரிமைகள், ஆண் தாலியால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏன், முற்போக்கு ஆண்கள் இதற்கு முன்வரக்கூடாது? ஏதேனும் ஒரு வகையிலேனும், ஆண்கள் 'அடிமைத்தளையை' உணரும் போது தான் விடுதலையின் முழுமையான பொருளை உணரமுடியும், இல்லையா?  பெண்களின் விடுதலை அவர்கள் பற்கடிக்கு உள்ளாவதைக் காணச்சகிக்கவில்லை!




குட்டி ரேவதி






ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு என் கண்டனம்!








இயக்குநர் மணிவண்ணனைப் பற்றிய இயக்குநர் பாரதிராஜாவின் பதிவு கடந்த வாரம் ஆனந்தவிகடனில் வெளியாகியிருந்தது எல்லோரும் அறிந்ததே. 'ஆனந்தவிகடன்' பத்திரிகை அதை அப்படியே வெளியிட்டிருக்கவேண்டாம் என்பது என் கருத்து!

இயக்குநர் பாரதிராஜா அப்படிச் சொல்லியிருப்பது உரையாடலுக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது என்றாலும், பத்திரிகைகள் இதுமாதிரியாக ஒரு மனிதர் பிறரைப் பற்றிச் சொல்லும் அவதூறுகளை வெளியிட்டுத் தம்முடைய வணிகச்சந்தையை நிலைநிறுத்திக் கொள்ள முயல்வது ஒரு சமூகக் குற்றமே.

இதை ஒது தனிமனிதரின் கருத்துச் சுதந்திரம் என்றோ, பத்திரிகைகளின் உரிமை என்றோ சொல்லமுடியாது. இது ஒன்றும் கருத்தும் இல்லை. உரிமையும் இல்லை. ஒரு பதிவின் விபரீதங்கள் அறியாத குருட்டுச் செயல்பாடு தான்.  சமீப காலங்களில், தமிழ் உரையாடல்கள் எல்லாம் பிற மனிதர்களைப் பற்றிய அவதூறுகளாலேயே நிறைந்திருக்கின்றன. அது போன்ற ஒன்று தான், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் மணிவண்ணனைப் பற்றிச் சொல்லியிருப்பதும், அதைப் பதிவுசெய்திருப்பதும். இப்படியான இரு ஆளுமைகளின்  உறவு விரிசலைக் கொண்டாடும் மனநிலை, சமூகத்திற்கு ஆரோக்கியமானது அன்று.

நம் பண்பாட்டை மெல்ல மெல்ல அவதூறுகளின் பண்பாடாக்கிக் கொண்டிருக்கிறோம். இரு சகோதர்கள் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்து ரசிக்கும் மனம் மேலோங்கி நிற்கிறது.  இத்தகைய வன்மம் எல்லோருக்குள்ளும் பாம்பின் படம் போல் தலைதூக்கி நிற்கிறது. அது மட்டுமன்று. சமூகத்தில் பொது மனிதராய் இயங்கிக் கொண்டிருக்கும் பலரின் சமூகச்செயல்பாடுகளை மறுப்பதற்கு அவருடைய சொந்தவிஷயங்களைத் தனிமனிதப் பார்வையில் அள்ளிவீசி அவரை முடக்க நினைக்கின்றனர். 

சமூகத்தின் மையத்தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் 'ஆனந்தவிகடன்' இது போன்ற பதிவுகளைத் தவிர்க்கும் படிக் கேட்டுக் கொள்கிறேன். பத்திரிகையின் தர்மத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது, ஆனந்தவிகடனில் வெளியாகியிருக்கும் அவதூறு! 







குட்டி ரேவதி

இயக்குநர் மணிவண்ணனுக்கு அஞ்சலிகள்!








இயக்குநர் மணிவண்ணனின் மறைவு பெருத்த அதிர்ச்சியைத் தந்துள்ளது எல்லோருக்கும். 

கடந்த சில வருடங்களில் பல சந்தர்ப்பங்களில் அவரைப் பொதுக்கூட்டங்களில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் வாய்த்தன. 
சமூகப் போராட்டங்கள் எழுச்சியுற்றபோதெல்லாம் தன் கொள்கையிலும் தான் கொண்ட நிலைப்பாட்டிலும் உறுதியாக இருந்து, அதையே வெளிப்படுத்தினார். 
மிகவும் தீவிரமான அரசியல் நிலைப்பாட்டையும் நகைச்சுவை தொனிக்கப் பேசுவதில் வல்லவர்.
மூவர் தூக்குதண்டைனைக்கு எதிராகப் போராட்டம் கனன்று கொண்டிருந்த காலத்தில், சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் எந்த விதமான உதவி வேண்டுமென்றாலும் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

சமூகத்தைப் பிரதிபலிக்கிறது, திரைப்படம். திரைப்படம் சமூகத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. சில திரை ஆளுமைகள் திரைவெளியையும் கடந்து தம் ஆளுமை நிலைகுலையாமல் வைத்துக்கொள்ளக்கூடியவர்கள். நான் அறிந்த அளவில் மணிவண்ணனும் அத்தகையவரே.

இயக்குநர் மணிவண்ணனுக்கு இந்த உலகத்தைப் போல மோசமானதாக இருந்துவிடாது, அவரது மரணம்! அமைதிபெறட்டும்! ஆழ்ந்த அஞ்சலிகள்!





குட்டி ரேவதி



கூழாங்கற்கள் இலக்கியச் சந்திப்பு - 4



இடம்:
தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் - மதி திரையரங்கம் அருகில் . ஆரப்பாளையம் . மதுரை .

நாள்:

16.06.2013, காலை 10 மணி

1.  கவிஞர் கணியன் செல்வராஜ் எழுதிய "மீனவனும் இந்தியனே" தொகுப்பிற்கான கருத்துரை கவிஞர் யாழி கிரிதரன் 


2. கவிஞர் வெண்புறா எழுதிய 'தகிப்பின் குரல்" தொகுப்பிற்கான கருத்துரை கவிதா குமார் 


3. கவிஞர் குட்டி ரேவதி எழுதிய "இடிந்தகரை "தொகுப்பிற்கு கருத்துரை கவிஞர் லிபி ஆரண்யா .




சிறப்புரை : தொழில் நுட்ப வளர்ச்சியில் மொழியும் மக்களும் - ஈரோடு கதிர் .நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம் ........

சொற்கத்திகள்








சமீபத்திய சொற்கத்திச் சண்டைகள் எனக்குக் கீழ்க்கண்ட பிம்பத்தைத் தந்தன. 


கற்பனை நாற்காலிகள்


வெளியில் சுழன்று கொண்டிருக்கின்றன அவரவர் ஆசைக்கும் அதிகாரத்திற்கும் ஏற்ற அழகில் நாற்காலிகள்.
எவர் கண்களுக்கும் தென்படுவதில்லை மற்றவரின் நாற்காலிகள்
ஒன்றுடன் ஒன்று மோதும் போது மட்டும் தலைகுப்புற தரை தட்டி வீழ்கின்றன
அப்பொழுது அறியத் தந்தோம் நாற்காலியின் வண்ணங்கள்



*

கீழ்க்கண்ட வரிகளும் வன்முறை நிரம்பிய ஒரு தருணம் பற்றியது.


இரவு

இரத்தம் வாங்கிய வாளை
வசதியாக மறைக்கும்
ஓர் உறையாகிறது இரவு
உறைந்த இரத்தத்திட்டுகள்
பொருக்குத்தட்டி உதிர ஏதுவாகிறது
கவனமாய் வடிவமைத்திருந்த இதயத்தை
வன்மம் வகிர்ந்த வலியை
வாள் அதன் குளிர்ச்சியுடன் 
நினைவில் வைத்துக் கொள்கிறது
மெளனத்தின் பெருவிரல் அழுத்தத்தால்
எல்லாவற்றையும் அடக்குகிறது
வேகமாய் இயங்கிய வாள்களை
எல்லாம் உறைக்குள் செலுத்தமுடிகிறது
இரத்தக் கொதிப்புடைய வாள்முனை
உறையின் இருளை முட்டியதும்
முடங்கிப் போகிறது
அதன் கைப்பிடியில் பதிந்திருந்த ஆத்திரம்
கண்விழித்து இரவைத் துழாவுகிறது
வேட்டைக்கான மூர்க்கத்துடன்.


*




குட்டி ரேவதி

'காயாம்பூ' என்னும் புனைவு









ஒரு முறை 'சங்கம் ஹவுஸ்'  என்ற அமைப்பின் கூட்டுறவினால் தரங்கம்பாடியில் இரண்டு வாரங்கள் தங்கி எழுதும் வாய்ப்பு கிடைத்தது.  அச்சு இயந்திரத்தின் 300 வருட நிறைவைக் கொண்டாடும் முகமாக இந்த எழுத்து உறைவிட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்து இந்திய எழுத்தாளர்களும் டென்மார்க்கிலிருந்து வந்திருந்த ஐந்து எழுத்தாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

ஒரு நாவலுக்கான முனைப்பு தீவிரமாக இருந்த நேரம். மனதின் அடித்தளத்தில் அதற்கான நீரோட்டங்கள் பாய்ந்து கொண்டிருந்தன. எழுதுவதற்கான தனிமையும், காலமும் வாய்க்காமலிருந்த பொழுது, 'தரங்கம்பாடி' நாட்கள் மிகவும் முக்கியமாகப்பட்டன. பெண்களின் வெவ்வேறு போராட்ட வெளிகளும் அதை அவர்கள் தனி மனித அளவில் வெளியேறி வரும் திறமும் அளவிட முடியாத அளவிற்கு பெண்களிடம் நிறைந்திருப்பதைப் பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் என்னிடம் மேலோங்கியிருந்தது. அப்பொழுது உருவானது தான், 'காயாம்பூ' நாவல். நவீனம் என்று அடையாளப்படுத்தப்படும் எல்லா வாய்ப்புகளையும் தொட்டுவிட்ட ஒரு பெண்ணும், மலை மற்றும் மரபு சார்ந்த நம்பிக்கைகளைத் திடமாகத் தன் உடல் வழியாக உள்வாங்கிய பெண்ணும் சந்தித்துக் கொள்ளும் தருணங்களையும் நிலக்காட்சிகளையும், எண்ணப் பகிர்தலையும் பதிவு செய்தேன்.  நாவல் நூற்றி இருபது பக்கங்களுக்கு விரியத் தொடங்கியது.

'காயாம்பூ' எனும் புனைவை, எழுதி முடிக்கும் போது முத்தாய்ப்பாக மனதில் தோன்றியவை இவை தாம். புனைவு என்பது கற்பனையின் எல்லையின்மையையும் அதன் சாத்தியங்களையும் கண்டறிவது. பெண்களைப் பொறுத்தவரை கற்பனை என்பது படைப்பாற்றலின் வெளிப்பாடு.   பெண்களாய் இருப்பதாலேயே சமூகத்தின் எந்தத் தருணத்திலும் சலுகை என்றோ ஆதரவு என்றோ ஒரு துளி கூட வாய்ப்பது இல்லை. தீவிரமான எதிர்ப்பையும், அதிகப்படியான போராட்ட வலுவையும் காட்டியே எந்த ஒரு பெண்ணும் ஒரு சிறிய உரிமையைக்கூடப் பெறமுடிகிறது. என்னளவில் நான் இது வரை சந்தித்த ஆளுமை நிறைந்த நிறைய பெண்களை நினைவூட்டிக் கொள்ளும் வாய்ப்பாகவும் இருந்தது இந்தப்பயணம். 

நாம் நிறைய நாவல் ஆளுமைகளைக் கண்டுவிட்டோம். கதை சொல்லல், அசாதாரண குணச்சித்திரிப்பு, மொழியில் நவீனம் என நாவலின் வழியாக நம் கற்பனை வெளியை விரிக்கும் ஆற்றல் கொண்டவர்களை எல்லாம் பரவலாகக் கண்டு விட்ட நிலையில் தற்காலத்தன்மையை எவ்விதம் கருப்பொருளாக்குவது என்பது பெரிய கேள்வியாகவே இருந்தது. சிந்தனையின் விடுதலையில் சமரசங்கள் அற்ற பெண் மனம் தான் இந்நேரத்தில் சமூகத்திற்கான தேவையாக இருக்கும். அது தான் பெண், ஆண் இருபாலாருக்கும் சிந்தனை ஊட்டமளிக்கக் கூடியது. 

'காயாம்பூ' நாவலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும், டேனிஷ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு தற்பொழுது அச்சிற்குச் செல்கிறது. நாவலை தமிழுக்குக் கொண்டு வரும் எந்த முயற்சியும் எடுக்கமுடியாமல் 'மரியான்' திரைப்படப் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த வாரத்துடன், 'மரியான்' திரைப்பணி நிறைவுறுவதால் நாவலை வெளியிடும் முயற்சி இனி சாத்தியமாகிவிடும் என்று நினைக்கிறேன்.



குட்டி ரேவதி





குட்டிப்புலியும் அபாயகிரகமும்!









'அபாய கிரகம்' என்ற பெயரில் வெளியாகியிருக்கும் 'ஆஃப்டர் எர்த்' படம் பார்த்தேன்.  நாம் வாழும், இந்தப் பூமி ஆயிரம் வருடங்களுக்குப் பின் 'அபாயகிரகம்' என்று சித்திரிக்கப்படும் ஓர் அறிவியல் புனைகதை.

நண்பர் ஒருவர் 'குட்டிப்புலி' பார்த்துவிட்டு, அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சியைக் குறிப்பிட்டு கண்டிப்பாய், அந்தப்படத்திற்குக் குழந்தைகளை அழைத்துச்செல்லவேண்டாம் என்று எல்லோரிடமும் அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.  பெரும்பாலான நேரங்களில், நான் பெரியவர்கள் மட்டுமே (அடல்ஸ் ஒன்லி) பார்க்கக் கூடிய படங்களைப் பார்க்க விரும்புவதில்லை. குழந்தைகளால் பார்க்கமுடியும் படங்களைப் பார்த்தாலே போதும் என்று தோன்றுகிறது. குழந்தைகளை அழைத்துச் சென்று காட்டவேண்டிய படம், 'அபாய கிரகம்'.

வசூலில் மிகப்பெரிய சரிவு என்றும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட திரைக்கதையாகவும் எதிர்கொள்ளப்பட்ட, 'ஆஃப்டர் எர்த்' - ஐ, தோல்வியின் கண்களால் மட்டுமே பார்க்கமுடியவில்லை. 'பயம்' என்பதை ஓர் அசாதாரண உயிரியாகச் சித்திரித்ததுடன் மட்டுமல்லாமல், அது ஒரு கண்மூடித்தனமான உணர்வு என்ற நிலையிலும் தத்துவார்த்தமான நிலையில் அணுகப்பட்ட திரைக்கதை. ஒரு பெரிய கேள்விக்கு, நேரடியான ஒற்றை பதில். அவ்வளவே படம். வில் ஸ்மித்தும் அவருடைய மகன் ஜேடன் ஸ்மித்தும் நடித்திருக்கின்றனர்.

பயம், வலி, மரணம் போன்றவை மானிட இனத்திற்கு காலந்தோறும் எழும்பி நிற்கும் கேள்விகள் என்றாலும், மானுட பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவகையில் விடை காணும் வித்தையில் தேர்ந்தவர் 'புத்தர்'. பெரும்பாலும், கீழைத்தேய நாடுகளின் சிந்தனை, இவற்றின் தோற்றவாயை ஆராய்ந்தவிடத்து, மேலைத்தேய சிந்தனைகள், இந்த உணர்வுகளை வெல்லும் வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும்.

'குட்டிப்புலி' பார்க்காமல் நான் ஏதும் விமர்சிக்க முடியாது என்றாலும், ஓர் இனப்படுகொலையைச் சந்தித்த நமக்கு இனி வன்முறையை ஒரு காலும் கருணையிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாத மரத்துப் போன இதயம் வாய்த்துவிட்டதோ என்று தோன்றுகிறது. 'காட்சிப் படிமங்கள்' ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து விடுபடமுடியாத  பரிணாம வளர்ச்சியின் கட்டத்தை நாம் எய்தி விட்டோம் என்பது எவ்வளவு பெரிய அபாயகரமான எச்சரிக்கை!



குட்டி ரேவதி






கவிதைகளின் குளம்படி!

ஸர்மிளா ஸெய்யித்தின் 'சிறகு முளைத்த பெண்' கவிதைத்தொகுப்பு பற்றி... தமிழ் ஆழிக்கு எழுதியது.




1990 -களில் தமிழ் நாட்டில் பெண் கவிதை வீர்யம் பெற்றதற்கு பெருமளவில் காரணமாக இருந்தவை ஈழத்திலிருந்து வந்த பெண்களின் அரசியல் கவிதைகள். அவர்கள் தாம்   தம் 'உடலை' முதன்முதலாக இலக்கியத்தின் பேசு பொருளாக ஆக்கினர். அவர்கள் உடல் மீது செலுத்தப்பட்ட அதிகார வன்முறையையும் போர்ச்சூழலையும் வெகு யதார்த்தமாக கவிதைகளில் பிம்பப்படுத்தினர். அந்தக் கவிதைச்  செயல்பாட்டின் உத்வேகம் தான், தமிழகத்தின் பெண் கவிதை மொழியையும் கூட பீடித்தது. அது வரை ஆண் மொழியில் வெறும் வர்ணனைகளாகவும் உள்ளீடற்ற கூடுகளாகவுமே இடம்பெற்று வந்த பெண் உடல், பெண்கள் கவிதைகளில் அவர்களின் அரசியல் பொருளுடன், சமூக வேட்கையுடனும் வெளிப்பட்டது. இந்தப் பத்தாண்டுகளில் பொதுவெளியில் பெண் உடல் என்பது பேசுபொருளாக மாறுவதற்கு பெண்களின் இந்நீண்ட இலக்கியப் பயணம் தேவைப்பட்டது. அதே சமயம்,பெண் உடல் பற்றி வெளிப்படையாகப் பேசிப்புழங்குவதற்குத் தேவையான வார்த்தைகளும்  பெருமளவில் இக்கவிதைகளாலேயே  சமூகத்திற்குப் வழங்கப்பட்டன. இன்று தமிழ்ப் 'பெண் உடல்' பெரிய அரசியல் பிம்பத்தைக் கொண்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



ஸர்மிளா ஸெய்யித்தின் 'சிறகு முளைத்த பெண்' கவிதைத் தொகுப்பு மேற்சொன்ன வழியிலேயே தன் சிந்தனைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. 'நீ இல்லாத இரவு என் கழுத்தை நெரிக்கிறது', என்று தன் காமத்தைப் பேசுவதிலாகட்டும், 'குளம்புகள் கற்களில் மோத அதோ எம் கலவியைக் களவில் பார்த்த புரவிகள் தேரை இழுத்துக்கொண்டு விரைந்தோடி வருவதைப் பார்', என பெண் மீதான சமூகக் கண்காணித்தலைப் பேசுவதிலாகட்டும்,  'நான் மழை. ஆட்டுத்தொழுவத்திலும் வீழ்வேன். அரசமாளிகையிலும் வீழ்வேன். என்னைக் கண்டு ஒதுங்கியேயாகனும். ஆளுநர் அரசாங்கத்தலவர் அனைவரும் குடைபிடித்தாகனும் எனக்கு. நான் மழை. வேறுபாடின்றி நனைப்பேன்' என எளிமையான முறையில் தன் உரிமைப் போரை நிகழ்த்துவதிலாகட்டும் ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதைகள்  சமூகப்பார்வையின் வெளிச்சம் பெறுகிறது. சிந்தனையின் நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் ஓடும் குதிரையில் பயணிக்கும் ஒரு பெண்ணின் தனி முழக்கம் போல, தனி சாட்சியங்கள் போல ஸர்மிளா ஸெய்யித்தின்  கவிதைகள் இத்தொகுப்பு முழுக்க உருக்கொண்டிருக்கின்றன.  பெண்கள் இதுவரையிலும் பேசாத தம் உணர்வுகளை நேர்மையைப் பேசுமிடத்து ஸர்மிளா மிகுந்த கவனம் கொள்ளத் துணிந்திருக்கிறார். தமிழ்ப் பெண்ணிலக்கிய வரலாற்றின் அரசியலை முற்றும் அறிந்த ஒரு கவிஞரின் மன எழுச்சி தான் அவரைக் கவிதை காலகட்டத்தின் அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதை மொழியும் குரலும் அத்தகையதோர் எழுச்சியைத் தன்னுள் கொள்வதன் வழியாக பெண் கவிதையின் அரசியலை கூர்மைப்படுத்தமுடியும் என்று நம்புகிறேன்!





குட்டி ரேவதி