நம் குரல்

ஈழத்தமிழர்களை நோக்கி நீட்டப்பட்ட மதத்துப்பாக்கி




இலங்கையில் மதம் என்பது தொடர்ந்து ஓர் அரசியல் அமைப்பாக வலியுறுத்தப்பட்டு வந்தமை குறித்து இத்தருணத்தில் பேசுவது இன்றைய அரசியலுக்கு எவ்வாறு தொடர்புடையதாகவும் பொருத்தமுடையதாகவும் இருக்கும் என்பது தெளிவாகும். ஓர் அரசு ஏன் மதத்தைத் தன் துணையாக எடுத்துக்கொண்டு இயங்குகிறது என்பது இலங்கையின் அரசியலைமைப்பில் பெளத்தத்திற்கு என்ன மாதிரியான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து அறியலாம். எல்லா மதங்களையும் அங்கீகரிக்கும் அதே வேளை புத்த சாசனம் என்பதை முதன்மையாகக் கொள்வதும் அதைக் காப்பாற்றி வளர்ப்பதும் அரசின் கடமை என்பதை 1978-ல் அரசியல் அமைப்பில் உள்ளடக்கியதும் உறுதி செய்ததும் சாதாரண அர்த்தத்தில் அல்ல. மேலும் மேலும் மதத்தின் கட்டமைப்பை அரசின் வல்லமைக்கு ஆதரனவானதாக மாற்றுவது என்ற அர்த்தத்தில் தான். அதற்கு ஏதுவாக அரசியல் வரலாறு முழுமையும் புத்த மதகுருக்களும் தொடர்ந்து அரசியல் குறுக்கீடுகளைச் செய்துள்ளனர்.

அயல்நாட்டு அரசுகள் குறிப்பாக பிரிட்டன் மற்றும் பிரான்சு போன்ற நாடுகள் ஈழத் தமிழர்களுக்காக ஆதரவு செலுத்திய போது மிகப்பெரிய கண்டனக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். அரசின் குரலாக மதகுருமார்கள் முன்னின்று நடத்திய இக்கண்டனக் கூட்டத்தில் அவர்கள் கூறியது, ’மற்ற நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிடக்கூடாது; இது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை. இதை நாங்களே தீர்த்துக் கொள்வோம்’, என்பது தான். இவ்விடத்தில் அரசு அளித்த பாதுகாப்பு உணர்வே, பெளத்த குருமார்களை அரசியல்வாதிகளாக இயங்கச் செய்தது. ஆக தொடக்கத்திலிருந்தே அரசு பேணிவந்த மத ஆதிக்க ஆட்சியின் விளைவால், இந்த மத குருமார்கள் மக்களுக்காக நிற்காமல் அரசிற்காக நிற்கத் தலைப்பட்டனர். சர்வதேச அளவில் யாரும் தலையிட முடியாத அளவிற்கு மதத்தால் இறுகிப்போன அரசு, இலங்கை அரசு. வரலாற்றிலேயே மதத்தைப் பயன்படுத்தி ஒரு மனிதக்கூட்டத்தை அழித்தொழித்த நிகழ்வுக்கு இலங்கை அரசும் அங்கு நிலவும் பெளத்தமுமே என்றென்றும் உதாரணமாயிருக்கும். கடந்து சென்ற அரசியல் பாதையில் இந்த மதகுருமார்கள் தமிழர்களுக்கு அடிப்படைகளைப் பெற்றுத் தருவதற்கான அரசியலமைப்புச் சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இதே காரணத்திற்காக 2000-ல் ஒரு பெளத்த மதகுரு இறக்கும் வரையிலான உண்ணாவிரதத்தைக்கூட மேற்கொண்டிருக்கிறார். பொதுவாக ஒரு துறவியோ, குறிப்பாக பெளத்தத்தை உள்வாங்கிய ஒருவரோ செய்யக்கூடிய காரியமாக இது இல்லை. இனவாத உணர்வை பலப்படுத்தும் பரப்பும், செயல்களின் தொடர்ச்சி தாம் இவையெல்லாம். வேறுவேறு வடிவில் காலந்தோறும் தமிழர்களுக்கெதிரான போரை முடுக்குவிட்டவர்களின் இப்பெளத்த குருக்கள் கடுமையான அதிகாரங்களைப் பிரையோகித்துள்ளனர்.


அதற்குப்பின்பு, 2002 – லும் அரசியலமைப்பில் எந்த மாற்றம் செய்தாலும் அது மகா சங்கத்துடன் விவாதிக்கப்பட்டு செய்யப்படவேண்டும் என்றும் சிங்கள அரசின் விழைவைக் கருத்தில் கொண்டும் செய்யப்பட வேண்டும் என்றும், சிங்கள மக்களுக்கு மட்டுமே இந்த தேசத்துடன் அடிப்படையான உறவு உண்டு என்றும் இம்மத வாதிகளால் வலியுறுத்தப்பட்டது. மேலும் தேசிய அடையாளங்களும் பெளத்த குறியீடுகளால் மட்டுமே ஆனவையாக இருக்கவேண்டும் என வற்புறுத்தப்பட்டது. சமாதானக்குழுவில் இருந்த நார்வே தூதுவரை வெளியேற்ற மதத்தலைவர்கள் கையொப்பமிட்டு பிரச்சாரம் செய்தனர். இஸ்லாமிய கிராமங்களில் கூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன. ஆழிப்பேரலை அழிவுக்குப்பின்பு புனரமைப்புப் பணியில் ஈழத்தமிழர்களுக்கு எந்த அளவிலும் பங்களிக்கப்படக்கூடாது என்பதற்காக புத்த மத வாதிகளால் போராட்டம் நிகழ்த்திக் கட்டுப்படுத்தப்பட்டது.

அரசு மதகுருமார்களுக்கு இத்தகைய அரசியல் முக்கியத்துவம் அந்த அரசால் தரப்பட வில்லையெனில், அவர்களுக்கு இத்தகைய மேலோங்கிய சமூக முக்கியத்துவம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அரசும் இந்த மதவாதிகளை ஒரு நிறுவனமாக்கி தனது இனவாதத்துக்குப் பயன்படுத்தவில்லையெனில் இத்தகைய ஓர் இனவாதப்போரை அவர்களால் நிகழ்த்தியிருக்க முடியாது. எப்போதுமே இலங்கை வாழ் தமிழர்களுக்கு பண்பாட்டு ரீதியாக தங்களை தமிழகத் தமிழர்களோடு அடையாளப் படுத்திக்கொள்வதற்கான தேவை இருந்ததால் இந்த மத ரீதியான சூழ்ச்சியும் நடவடிக்கைகளும் தோற்கடிக்க முடியாதனவாக வளர்ந்துவிட்டன. இன்று இலங்கை அரசினை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது புத்த சாசனங்களும் அம்மதவாதிகளும் தாம். மேலும் ஒட்டுமொத்தமாக நடந்து முடிந்த இன அழிதொழிப்புக்கு அதுர்லியே ரதானாதான் நாம் அறிந்த எல்லா சிங்கள அரசியல்வாதிகளையும் விட முக்கியமான காரணம். இவரது பிரச்சாரத்தால் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கு மேலான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தால் இணைந்தனர், தமிழர்களைக் கொன்று குவிக்க. அதுமட்டுமின்றி சமாதான நீரோட்டத்தைச் சேறாக்குவதில் இவரது பங்கு ராஜபக்க்ஷேக்களைவிட மேலதிகமானது. அவரது அடிப்படையான நோக்கம் மண்ணின் ஆதிக்கத்தை மதம் என்னும் பெயரில் தன் கையில் கொள்வது தான்.

இந்த அபாயத்தை தமிழ்ச் சூழலிலிருந்தே நான் புரிந்து கொள்கிறேன். தமிழகத்தில் சாதி எனும் அமைப்பை எதிர்க்க வேண்டியை, கட்டுடைக்க வேண்டிய ஒன்றாக ஒத்துக் கொள்ளாதவர்கள் எல்லாம் ஆன்மீகம் என்பதை இந்து மதத்தோடு மட்டுமே இணைத்துப் பார்ப்பதைப் போன்றது இது. அவர்கள் தேசியவாதிகளாகவும் மதவாதிகளாகவும் சாதியவாதிகளாகவும் ஏன் அரசியல்வாதிகளாகவுமே தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றனர் என்பதே இதன் அர்த்தம். இந்தியச் சமூகத்தில் மதம் ஒடுக்குமுறையை நிகழ்த்தும் ஒரு வல்லரசாக எவ்வாறு உருக்கொண்டிருக்கிறது என்பதை இங்குள்ள சாதிய அரசியலை புரிந்து கொள்வதன் மூலம் தெளியலாம். அவ்வாறே இலங்கையிலும் மதம் என்பது ஓர் ஆயுதமாக, ஒரு வன்முறை வடிவமாக வார்க்கப்பட்டு அரசியல் ஆதாயத்துக்காக, இனவாதத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் எந்தத் திசையிலிருந்து வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது இப்பொழுது மிகத் தெளிவாகத் தெரியும். தீவிரமான மதவாதம் ஒரு துப்பாக்கியை இயக்குதலைவிட வன்முறைப் பூர்வமானது.



குட்டி ரேவதி



சேவலண்ணன் கதறுகிறார்





சேவலண்ணனுக்கு முட்டையிட்டு அடைகாக்கும் அவசியமுமில்லை : பெட்டையைப்போல் கூடித்திரியும் களிப்பையும் அறியார். பிரக்ஞையின் கூட்டிற்குள்ளிருந்து தினப்படி சாட்டையாலடிக்கும் சேவலண்ணனின் குரல், கனவில் நாவறுந்த கதறலுடையது. முட்டையின் கவர்ச்சியையும் பெட்டையின் விடியல் நோக்கிய வாழ்வையும் பொறாமையாய்க் கழிய மட்டுமே தெரியும். காலைதோறும் வலைத்தளங்களிலெல்லாம் பேதியாய் சேவலின் கழிவு. சேவலின் மகிழ்ச்சியற்ற வார்த்தைகள் சொருகிக்கொண்ட வெளி முட்காடென மாறும். பொழுது மாறிக்கூவும் புட்டத்திமிர் ஒரு வெற்று. ஆகவே முட்டைகளே வீணெண்றும் குஞ்சுகளை புறக்கணித்தும் அலைகின்றன. பொரிகின்றன மின்னொளியில் பிளாஸ்டிக் கோழிகள் ஒரே நிறக்கொண்டையுடனும் உடலுடனும்.


குட்டி ரேவதி

தமிழகத்தின் ’படிம உரு’ அரசியல்



தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமையைக் கருத்தில் கொள்ளுகையில் ஒரு புனைவுரு செயல்பாட்டை தொடர்ந்து அவதானிக்க முடிக்கிறது. அது மக்களே தயாரித்துப் பரப்பும் படிம உரு வழிபாடுகள் தாம். கடவுளை மறுத்து இயக்கமாற்றிய பெரியாருக்குப் பின்பு, கடவுளின் இடத்தை தனிமனிதர்கள் எடுத்துக்கொண்டனர். வெகுசன மக்களிடம், தனக்கு அளிக்கப்பட்ட, அல்லது தான் எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தைப் பெருக்கிக்கொண்ட சினிமா, அரசியல், இலக்கியம், மதம் போன்றவற்றின் வழியாக தம்மை கடவுளராக வளர்த்தெடுத்துக் கொள்கின்றனர். கிட்டத்தட்ட குறுநில மன்னர்களைப் போல அந்தந்தத் தளத்தை அவர்கள் பேராட்சி செய்கின்றனர். இக்குறுநில மன்னர்கள் மயக்க மருந்தாக மக்களின் குருதியில் இந்த மனித வழிபாட்டு உணர்வை ஏற்றுகின்றனர்.

உதாரணத்திற்கு, திரைப்படக் கதாநாயகர்களை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் தமது திரைப்படங்களில் காட்டும் கதாநாயகன், சொல்லப்படும் கதை, அவன் சம்பந்தப்படும் ஆபாசங்கள், வன்முறைகள் நியாய அநியாயங்கள் ஆகியவற்றால் தம்மைப்பற்றிய தீவிரப் பதிவுகளை தொடர்ந்து உருவாக்கி, அந்தச் சித்திரங்களை நோக்கியே பார்வையாளர்களை நகர்த்துவதும் அந்த கதாநாயகனின் குணாதிசயங்களை மனப்பதிவுக்குள் செலுத்துவதும் நடக்கின்றது. ஆனால் அந்தக் கதாநாயகன் ஆயிரமாயிரம் பணியாளர்கள் இயங்கும் திரைத்தளத்தை அதற்கான அறம் மீறியும், அதன் சமூக மதிப்பீடுகளை புறக்கணித்தும் அதைத் தன் சுயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றான். அந்தக் கதாநாயகனைப் போற்றி வழிபடும் நிலைக்கு நகர்த்தப்பட்ட ரசிகர்கள், அக்கதாநாயகன் திரைக்குப் பின்னால் அந்தத் திரை வழியாகக் கிடைத்த அதிகாரத்தை எப்படி தனக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை ஒரு போதும் அறிவதில்லை. அறியும் நிலைக்கும் அனுமதிக்கப்படுவதில்லை.

திரைப்படத்துறையைப் போலவே மற்ற துறைகளிலும் நிகழ்ந்துள்ளன. திரைப்படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் போன்றவர்களும் அரசியலில் கருணாநிதி, மு.க.அழகிரி, ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் போன்றவர்களும் இலக்கியத்தில் சுஜாதா, ஜெயகாந்தன் போன்றவர்களும் இவ்வாறு உருவாக்கப்பட்ட குறுநில மன்னர்களே. இவர்கள் ஏற்படுத்திய விபரீதங்களை ஆராய்வது அவ்வளவு சுலபமானதும் அன்று. ஏனெனில் இந்த பிம்பங்கள் ஒரு பதிவாய் நமக்குள் நிகழ்வதும் அவர்களின் சுயமாய் நாம் அறிவதும் இரு வேறு பிம்பங்கள். ஆனால் நம்மெல்லோருக்கும் ஒரு கற்பனைக் கதாநாயகன் தேவைப்படுகிறான். நமது கற்பனை உலகிற்கு ஊட்டமளித்துக் கொண்டேயிருக்க இத்தகைய முரண்பட்ட பிம்பங்களை நாம் நாடுகிறோம். இவர்களை எந்த வித விமர்சனமும் இன்றி நமது சிந்தனைக்குள் ஏற்றிக்கொண்டு நடைமுறை யதார்த்தத்தை நம்ப மறுக்கிறோம். இத்தகைய கதாநாயகக் குறுநில மன்னர்கள் ஆளும் தமிழகமாய் நம் மாநிலம் மாறியிருப்பதை உணரமுடிகிறது. ஆகவே தான் சமீப காலங்களில் எந்தச் சமூகப் புரட்சியும் தமிழகத்தில் நிகழ்ந்து விடவில்லை. தொலைக்காட்சிகளில், வானொலியில், செய்தித்தாள்களில் என்னென்ன தகவல்கள், உரையாடல்கள், உரைகள் நிகழ்த்தப் படவேண்டும் என இக்குறு நில மன்னர்கள் தாம் தீர்மானிக்கிறார்கள். அவை, நமது மற்ற சமூக வடிவங்களான குடும்பம், மதம், திருமணம், காதக், கல்வி, உடை, உணவு, வாழும் முறை என எல்லாவற்றையும் வடிவமைக்கிறது.


எந்த ஒரு சிறந்த தலைவரும் சமூகப் பிரபலமும் முதலும் முடிவானவரும் இல்லை என்பது தமிழ்ச் சிந்தனை மரபை உள்வாங்கிய எல்லோருக்கும், அதில் ஈடுபடுத்திக் கொண்ட எல்லோருக்கும் தெரியும். இதில் சாதாரண மனிதர்களாகிய நாம் எவ்வாறு நமது சிந்தனையைப் பங்களிக்க முடியும் என்பதை உணரத்தலைப்பட வேண்டுமே அன்றி ஒரு தலைவரின் மலிவான கருத்துச் சுமையை வாழ்வெங்கிலும் இணைத்துப் பார்த்துப் புளகாங்கிதமுறுவதில் எந்த தனிமனித, சமூகப்பயனும் இல்லை.
இத்தகைய வழிபாட்டுருவங்களைத் தகர்ப்பதில் நாம் ஒவ்வொருவரும் மெல்ல ஈடுபடவேண்டியிருக்கிறது. கருத்தாழங்களைத் தொட விடாமல் இந்த ’படிம உருவங்கள்’ சுமைகளாய் மாறிவிடுவார்கள். அந்தப் படிம உருக்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள்? வெளி பற்றிய உங்கள் நம்பகத்தன்மையைக் குலைக்கிறார்கள், மு.க. அழகிரி மதுரை மாநகரின் அழகியலைக் கலைப்பது போல. கதைக்கூற்றின் மைய நீரோட்டமாய் இருக்கும் கதாநாயகனாய் நீங்களும் மாற வேண்டுமென்று நினைக்கும் போது உங்களுக்குள்ளும் ஆபாசத்தையும் வன்முறையையும் திணிக்கிறார்கள். சமூக மதிப்பீடுகள், நீங்கள் சமூகத்துடன் செய்து கொள்ளும் சமரசங்களாலானவை என்று உங்களையும் கட்டுப்படுத்தும் நாவலாசிரியர்களைப் போல. எந்த உண்மையானதொரு சிறந்த ஆளுமையும் இந்தப் பூமியில் ஒரு சிலையாக மாறி விட தன்னையே தான் மறுக்கிறான். மேலும் அவன் அடுத்த மனிதனை நோக்கி, அவன் தான் என்னை விடச் சிறந்தவன் எனக் கை காட்டுகிறான். அத்தகைய சமுதாயத்தில் தான் பொதுவுடைமை உதயமாகும்.


குட்டி ரேவதி

பனிக்குடம் - நூல் பதிப்பின் வழியாக ஓர் இயக்கச்செயல்பாடு


பனிக்குடம் கடந்த மூன்று வருடங்களாக பெண்ணிய இலக்கியங்களையும் பெண்களின் படைப்பாக்கங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தமிழகத்திலேயே முதன்முறையாக இத்தகைய பெண்ணிலக்கிய கவனக்குவிப்புச் செயல்பாட்டை படைப்பாக்கச்செயல்பாட்டோடு இணைத்துப்பார்க்கும் பணியில் பனிக்குடம் தீவிரப்பட்டுள்ளது.

தமிழ்ச்சூழலில் பெண்களின் படைப்புகள் பெரிதும் கவனமும் அரசியல் முக்கியத்துவமும் பெற்றுவரும் சூழலில் வெறும் வியாபார முக்கியத்துவத்துடனே மட்டும் அணுகப்படுவதைத் தவிர்க்கவும் பரவலான வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் கொண்டு செல்லவும் பனிக்குடம் முனைந்துள்ளது. பெண்ணியம் என்பது எழுதப்படுவதற்கான தத்துவம் மட்டுமேயன்று. தற்காலத்தொடர்பான இலக்கியங்களையும் பெண்ணியம் தொடர்பான மொழிபெயர்ப்பு மற்றும் மறுபதிப்பு படைப்புகளையும் வெளிக்கொணர இருக்கிறது. மிக அழகாகவும் அர்த்தப்பூர்வமான வடிவிலும் கொண்டுவர இருக்கிறது. பெண்ணிலக்கியங்களையும் பெண்ணியப் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முயற்சியைப் பனிக்குடம் பரந்த அளவில் எடுத்துச்செல்ல இருக்கிறது.

பெண்ணியப் பேச்சை இலக்கியம் அரசியல் உரையாடல் இயக்கம் மூலமே முழுமையானதாகவும் காத்திரமானதாகவும் ஆக்கமுடியும். அதற்கு பெண்ணியத்தளத்தின் வெற்றிடங்களை இனங்கண்டறிந்து அரசியல்படுத்தவும், பெண்ணிய இலக்கியப்பரப்பை விரிவுபடுத்தவும் வேண்டியிருக்கிறது. பெண்ணியத்தளம் பெண்களின் தொடர் ஆக்கங்களான நாவல் கவிதை சிறுகதை கட்டுரைகள் வழியாகத் தீவிரப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இலக்கியத்தளத்தில் ஏற்பட்ட இம்முளைகளை உறுதிப்படுத்தும், விரிவாக்கும், விதமாக பெண்ணியத்தின் ஆழமான உயிரோட்டமான, இதுவரையிலும் கவனிக்கப்படாதிருந்த இலக்கிய வடிவங்களை ’பனிக்குடம்’ மீட்டுக் கொண்டு வரும் செயல்பாட்டில் இறங்கியுள்ளது.

பனிக்குடத்தின் இப்பெண்ணிய இலக்கிய பதிப்பு முயற்சி, வழக்கொழிந்துபோன பெண்ணியப்பாதைகளை மீள்விசாரணை செய்தல், தனித்த சிறப்பான பெண்ணிய முறைமைகள் சார்ந்த கட்டுரைத்தொகுப்புகள், மேலைப் பெண்ணியத்தத்துவங்கள் பற்றிய மொழிபெயர்ப்புகள், பிறமொழி பெண்படைப்பாக்கங்களின் மொழிபெயர்ப்புகள், நவீன வாசிப்புக்குட்படுத்த வேண்டிய மூத்தப் பெண்படைப்பாளிகளின் படைப்புகளின் மறுபதிப்புகள், ஈழப்பெண்களின் புத்துயிர்ப்பு ஆக்கங்கள் என விரியப்பார்த்திருக்கிறது. இதுவரை பனிக்குடம் குட்டி ரேவதியின் பெண்ணீய கவிதை ஆக்கங்ளையும் கு. உமாதேவியின் கவிதை ஆக்கம், ஈழப்புலத்திலிருந்து புத்துயிர்ப்புடன் கவிதை அளிக்கும் தமிழ் நதி, பஹீமா ஜஹான் போன்றோரின் படைப்புகளையும் உருவாக்கித்தந்துள்ளது. ப. சிவகாமியின் உடலரசியல் இந்தியச்சூழலில் இயங்கும் சாதியத்தை மறுக்கும் விசாரணைகளுடன் வந்துள்ளது. குறுகிய காலத்தில் தனது சாத்தியப்பாடுகளை தேர்ந்தெடுத்த படைப்புகளால் நிரூபித்துள்ளது.

மேலும் ’பனிக்குடம்’ என்னும் பெண்ணிய இலக்கியச்சிற்றிதழையும் புதிய பெண்ணிய இலக்கிய வகைக்கான ஊடகமாகவும் உரையாடல் வெளியாகவும் தொடர்ந்து கொண்டுவந்திருக்கிறது. இதனால் இளம் பெண்படைப்பாளிகளின் சிந்தனை வெளியாகவும் படைப்பாக்க வெளியாகவும் அது தன்னை மாற்றிக்கொண்டது. பெண்ணியத் தளத்தின் வெற்றிடங்களை இனங்கண்டறிந்து அரசியல்படுத்தவும் பெண்ணிய இலக்கியப்பரப்பை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

2009 முதல் பனிக்குடம், தீவிரமான பதிப்பகமாக இயங்கிவரும் ஆழிப்பதிப்பகத்துடன் கைகோர்த்து இதே பனிக்குடம் என்ற சிறப்புப்பெயர் மற்றும் முத்திரையுடன் வெளிவர இருக்கிறது. பனிக்குடம் பதிப்புகளை ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட இருக்கிறது. பெண்ணியப் பதிப்பாசிரியர்கள் ஒரு குழுவாக இப்புத்தகத்தயாரிப்பில் முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்புதிய நூல்களுக்கான வெளியீட்டு விழாக்களும் விவாதக் களங்களும் திறக்கப்பட இருக்கின்றன. இலக்கியம் – இயக்கம் – நிபுணத்துவம் என முப்பரிமாண வடிவில் இப்புத்தகத்தயாரிப்புப் பணியை பரிணமிக்கச் செய்ய இருக்கிறோம். கல்லூரிகள், அமைப்புகள், இயக்கங்கள் என பெண்ணிய முளைகளுக்கான விளைநிலங்களாக இருக்கும் இடங்களிலெல்லாம் இந்நூல்கள் பெண்ணியத்தின் பிரச்சார கருவிகளாக பயன்படுத்தப்பட இருக்கின்றன.

நூல்கள் திறந்து தரும் உலகங்களுக்குள் பயணிக்க வாருங்கள்!




குட்டி ரேவதி

அகத்திணை

ன்று கிருஷ்ணகிரியிலிருந்து கஜலெக்ஷ்மி எனும் கவிதை எழுதும் பெண் அழைத்தாள். எனக்கு எந்த ஊர் என்று கேட்டாள். ஏன் என்று கேட்டதற்கு கிருஷ்ணகிரியிலிருந்து கவிதை எழுத வரும் முதல் பெண்ணாக அவளே இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறாளாம். உறுதியான உற்சாகமான குரல். ஒன்பதாவது படித்திருக்கிறேன் என்று கூறினாள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது செடிகளுக்கும் மரங்களுக்கும் நீரூற்றிக்கொண்டிருக்கிறேன் என்றாள்.

காஃபிக்கும் சிகரெட்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
காஃ பி இரத்தத்தில் தோய்ந்து நீண்ட நேரத்திற்கு அது தனது உணர்ச்சித்தூண்டலை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் சிகரெட் நேராக தலைக்கேறி அங்கேயிருந்து நரம்புத் தூண்டலைச்செய்கிறது. அது நேரடியானதாகவும் மிகக் குறுகிய நேரத்திற்குமேயானதாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் அவர்கள் சிகரெட்டைத்தேடிச் செல்லவேண்டியிருக்கிறது. மேலும் அவர்கள் அதை நிறுத்திவிட முடிவெடுக்கும்போது கூட அவர்கள் விரல்கள் தளர்ந்து ஓர் எழுத்தாளன் தேடும் பேனாவைப் போல சிகரெட்டைத்தேடுகிறது.

மீசையை நீவிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் அந்த விநோதமான செயல் குறித்து கேள்வியெழுப்புகையில், ”என்ன, என்னைப்பார்த்தால் பொறாமையாக இருக்கிறதா?” என்று சொல்கிறான். நேரடியான அரசியலுக்கு இந்த பதில் கேள்வி இழுத்துச் சென்றது. அவனது மனோவெளியில் உலாவும், பெண்கள் குறித்த நூற்றுக்கணக்கான பொறாமையுணர்வுகளை சொல்லமுடியும். அவன் மூளை வெடித்துச் சிதறுவதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது தானே?

குட்டி ரேவதி

மிசோகுச்சியின், ஒயு என்றொரு பெண்






ஒயு-சாமா (Miss Oyu) – நாம் தலைப்பை ஒயு என்றொரு பெண் என வைத்துக்கொள்ளலாம். இது ஒரு ஜப்பானிய திரைப்படம். முக்கோண வடிவ உறவின் போக்குகள் தாம் கதை. ஆனால் ஒரே வரிக்கதை என்றாலும் சுவாரசியத்தையோ கவனத்தையோ மட்டுப்படுத்தாத ஒரு கதை. முதல் காட்சியிலேயே கதை தொடங்குவது தான் இக்கதைத் திரையின் வலு. எந்த இடத்திலும் யதார்த்தத்தின் தரம் பிறழாமல் அழகியலோடும் உறவின் பேதலிப்போடும் கதை நகர்கிறது.
இரு சகோதரிகள் சேர்ந்து தங்கையின் திருமண ஆணைப் பார்க்கப்போகும் ஒரு சம்பிரதாயமான நிகழ்வுடன் கதை தொடங்குகிறது. அக்காவும் தங்கையும் மணமகனைப் பார்க்கப்போகும்போது மணமகன் அவர்களைத்தொலைவில் இருந்து காணும் ஒரு சந்தர்ப்பத்தில் அக்காவைத்தான் மணமகள் என்று அசந்தர்ப்பமாய் நினைத்துவிடுகிறான். இந்த ஓர் அசந்தர்ப்பமான நிகழ்வே கதையின் விதை. படத்தின் தொடக்கத்திலேயே இவ்விதை பார்வையாளரின் மனத்திலும் கதாநாயகர்களின் நடிப்பிலும் விதைக்கப்பட்டு அவ்வாறே அவர்கள் அசைவும் நிகழ்த்தப்படுகிறது. முழுப்படமும் இந்த விதையிலிருந்து முளைவிடும் நேரடியான கிளைகளே.

பல திரைப்படங்களில், படம் ஆரம்பித்து பல காட்சிகளின் நகர்வுக்குப் பின்னும் கதை தொடங்காமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும். மேலும் ஒரு சிதறிய வடிவம் பெற்று பார்வையாளர்களுக்குச் சோர்வையும் தரும். ஆனால் மிசோகுச்சியின் இப்படம் தெளிவான கதையோட்டத்தைக் கொண்டுள்ளது. இது பெண்களுக்கான ஒரு சினிமாவாகவே இருக்கிறது. அக்கா மீது ஈர்ப்பு கொண்ட மணமகனை தனக்கு ஒவ்வாத ஒரு கணவனாகவே தங்கை பார்க்கிறாள். அவளின் மரணம் வரை அந்த எண்ணம் மாறவே இல்லை. ஆணுடனான உறவில் பெண் ஏற்கும் தீவிரமும் அதற்கான அறச்சிரமங்களும் ஆழமாகப்பேசப்பட்டிருக்கிறது. முக்கோண உறவின் துன்பியல் வெளியினை மேன்மைப்படுத்திப்பேசாமல் தருக்கப்பூர்வமாக அணுகுவதும் அதன் அடித்தளத்தினை கதாப்பாத்திரங்களின் உணர்வுகள் வழியாகத் தொட்டுப்பார்ப்பதும் மிசோகுச்சியின் சிறப்புத்திறன். இக்கதையில் கையாளப்படும் மென்னய உணர்ச்சிகள், வழக்கொழிந்து போனவை இல்லை என்பது நவீன ஊடகங்களின் ஆக்கிரமிப்பைக் கடந்தும் இம்மாதிரியான சுழலுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நமது மனித மனம் மாறாமல் இருப்பதிலிருந்து அறியலாம்.

1951 இல் வெளிவந்த இத்திரைப்படம், இன்றும் அதன் நவீனமும் மனித மனத்துடனான பொருத்தப்பாடும் இழக்காமல் இருக்கிறது. இவர் இம்மாதிரியான படக்கருவை எடுத்துக்கொள்வதற்கு அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் காரணமாக இருக்கலாம். அவரது சகோதரி கெய்சாவாக (ஆண்களின் சமூகக்கூட்டங்களில் பங்கேற்று உரையாட, நடனமாட, இசையமைக்க தயார்செய்யப்பட்ட பெண்களுக்கான ஒடுக்குமுறை வடிவாக) ஜப்பானில் விற்கப்பட்டது அவரின் மனநிலையை முற்றிலும் மாற்றியிருக்கவேண்டும். அவரது தந்தை தாய் மீதும், சகோதரி மீதும் தொடர்ந்து அதிகாரத்தை செலுத்திக்கொண்டேயிருந்ததும் மிசோகுச்சிக்குக் கடுமையான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். வாழ்வியலையும் அழகியலையும் ஒருங்கிசைக்கும் பயிற்சியை தனது வாழ்விலிருந்து இவர் எடுத்திருக்கவேண்டும்

இவர் கதையைப் பின்னிச்செல்வதில் கையாளும் நேர்த்தியும் அழகியலும் எந்த தர சமரசமுமற்றது. இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு அமைதியானதும் திடமானதுமான தமிழ்ப்படத்தை திரையில் காணுவது சாத்தியமா என்பது ஐயமே. குளிர்ந்த பாறைகளுக்கிடையேயான நீரோடையைப் போன்றதொரு சில்லிப்பை அடியாழத்தில் நம்மை உணரச்செய்து கொண்டேயிருக்கிறார். கால எல்லைக்குள் கட்டுப்படாததாக இருக்கிறது இத்திரைப்படம்.

குட்டி ரேவதி

மழைச்சாலை



விரல் நடுக்கத்தில் நரம்பு அதிர மழை அவிழ்கிறது. மழை அறுக்க முயலும் வாகன ஓட்டமோ தெருவில் ஒரு நதியாகப் பாய்கிறது. அதில் கலக்காது மிதக்கும் மின்சார இரத்தம் ஒரு கலவரத்தை எழுப்பாது மயக்கத்தையூட்டுகிறது. என்ன சொல்ல முயன்றும் வார்த்தை அகப்படாத குளிரால் நீரின் கயிறு உடலைக்கட்டுகிறது. ஓங்கி விழுந்த சரடின் அடியை மண்டையில் வாங்கிக்கொண்டு பொறி கலங்கி எழுந்து நடப்பவரே போல் உடலை முன் சாய்த்து சாலையின் மழையை பின்கட்டி இழுத்துச்செல்கின்றனர் பாதசாரிகள். சூனியம் தழுவிய வெயிலின் பருவத்திலிருந்து அடுக்கு சிமெண்ட் மஞ்சரிகளை வானத்தின் கோலாகலம் நோக்கும் மொட்டை மாடிகளாக்குகின்றது. காரை தலைகீழாய் புரட்டும் நீரின் முரட்டுக்கரங்கள் தாம் சைக்கிளின் சக்கரக்கம்பிகளில் கூந்தல்மயிராய் சிக்கிக் கொள்கின்றன. எச்சில் ஒழுகும் கீழுதடுகளுடன் நீருக்கிள்ளிருந்து எழும்பி வருகின்றன எருது வகை வாகனங்கள். வர்க்கம் மறக்கும் பொழுதில் மழை ஒரு சூடான தேனீராய் மாறிவிடும் அழகைக்கொள்கிறது. பின் விடாது வருடிக்கொடுக்கும் ஒரு செல்ல நாயாயிற்று.

குட்டி ரேவதி