நம் குரல்

இயக்கப்பண்பாடு



ஒரு விமர்சனத்தைப் பொதுவெளியில் வைக்கையில் பெரும்பாலான தருணங்களில், அது தன்னைத்தான் நோக்கி ஏவப்பட்டது என்று நினைத்துக்கொண்டு அதை ஓர் அவதூறாக மாற்றும் மனித மனநிலை குறித்து நாம் மிகவும் வருந்தவேண்டும். உண்மையில், இயக்கப்பண்பாட்டில் எந்த அளவிலும் பங்குபெறாதவர்களே, தன் சுயம் பற்றி மட்டுமே கவலை கொண்டோராக இருக்கின்றனர். சிறிது காலமேனும், இருபது பேர் அல்லது நூறுபேர் கொண்ட இயக்கத்தில் குழுவாகப்பணியாற்றும் போது கிடைக்கும் மனிதப்பக்குவம் குறிப்பிடத்தக்கது. அப்பொழுது தான் தெரியும், பொதுச்சமூகத்தின் தேவை முன்னால், அதன் பிரச்சனை முன்னால், ஒரு தனிமனிதன் அல்லது அவனின் படைப்பு அல்லது அவனின் செயல் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை என்பது. நிறைய 'பிரபலங்களைப்' பார்க்கிறேன். அவர்கள் தன்னளவில் மிகவும் புகழ்மிக்கவர்களாக இருக்கிறார்கள். ஆனால், சமூகவெளியில் சமூகத்தின் மாற்றத்திற்கு எந்த அளவிற்கு அவர்களின் சுயப்புகழ் வெளிச்சம் அல்லது பிரபல கிரீடம் உதவியாக இருக்கிறது என்று பார்க்கையில் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. சுய அதிகாரத்திற்கும் அங்கீகாரத்திற்கும் ஏங்குபவர்கள், தன் உடன் இயங்குபவர்கள் குறித்து அவதூறுகள் பதிவாகும் போது, மறைமுகமாகப் புன்னகைத்து அதை ஆதரிக்கும் மனநிலை, பொதுவெளியில் ஓர் அவலமாகப் பதிவாகிறது. அவர்கள் அடையாளத்தைப் பொதுவெளியில் இழிபுகழ் நிலைக்குத் தள்ளுகிறது. இதைவிடப் பெரிதாக, இயக்கங்களில் ஈடுபட்டுப் பெரிய பங்களிப்பையும் கடமையையும் ஆற்றிவிட்டு அமைதியாகவும் பண்பாகவும் இருப்பவர்கள் தாம், தம் செயலுக்கு ஏன், புகழுக்கே கூட ஒரு நிரந்தரத்தன்மையைக் கொடுக்கிறார்கள். தொடர்ந்து உற்சாகமாகப் பணியில் ஈடுபடுகிறார்கள். தமிழ் இலக்கியவெளியில், எந்த விமர்சனத்தை முன்வைத்தாலும் அது தன்னைத்தான் என்று எண்ணும் மனநிலை, அவர்கள் இன்னும் அந்த இருள் குகைக்குள்ளிருந்து வெளியே வரவில்லை என்பதன் அப்பட்டமான வெளிப்பாடு. உண்மையில், அந்த விமர்சனத்திற்கான தகுதியைத் தனக்குத் தானே கொடுத்துக்கொள்கிறார்கள். விமர்சனத்திற்கு அஞ்சுவோர், அவதூறை ஆதரிப்போர், அங்கீகாரங்களுக்கு ஏங்குவோர் கொஞ்ச காலமேனும், சமூக இயக்கங்களில் இணைந்து பணியாற்றுவது மிக மிக அவசியம் என்று தோன்றுகிறது. தன் சுயத்தைத் தானே எதிர்த்து நிற்க அரும்பெரும் துணிவு வேண்டும், இல்லையா!

குட்டி ரேவதி

பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! - இயங்கியல் பார்வை


குட்டி ரேவதி






இன்று தான் என்று இல்லை. பெண்கள் எழுத வந்த முதல் கணம் முதலே பெண் எழுத்தாளர்கள் மீதான வெறுப்பும், சந்தேகங்களும் சமூகத்திடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அது வரை, ஆணின் ஆளுமைகளையும், குடும்பம், திருமணம், சாதி, மதம் இன்ன பிற, ஆணுக்கு இசைவான அமைப்புகளையும், ஆண் ஏற்ற அதிகார அடையாளங்களையும் கட்டிக்காக்கும் பொறுப்புகளை மட்டுமே நிறைவேற்றி வந்த பெண்கள், தம் கைக்கு மொழி கிடைத்ததும், சிந்திப்பதைப் பதிவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால், இதுவும் காலங்காலமான தடைகளுக்குப் பின்பு தான் நிகழ்ந்தது. எல்லா வர்க்கப்பெண்களுக்கும், எல்லா சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் இது ஒன்று போல, ஒரே சமயத்தில் நிகழவில்லை. இந்தியாவின் பார்ப்பனப் பெண்களின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுதிக்கொண்டிருக்கும் போது தான், பிற இடைநிலைச் சாதிகளின் முதல் தலைமுறை, எழுத வாசிக்கவே கற்றுக்கொண்டிருந்தனர். இன்றும் இன்னும், தாழ்த்தப்பட்டவர்களின் பெரும்பகுதியும், பழங்குடிப் பெண்களின் பெரும்பகுதியும் எழுத்து மொழியைப்பெறாமல் இருக்கிறார்கள் என்பதையும் நாம் இவ்விடத்தில் நினைவில் கொள்ளவேண்டும்.

பெண்கள் எழுத வரும்போது, சமூகத்தில் உருவாகும் பதட்டம் என்பது, நிறைய விடயங்களை அம்பலமாக்கும் என்பது தான். அது வரை மறைத்தலுக்கும் மறந்துபோதலுக்கும் ஆளான வாழ்க்கைச் சம்பவங்கள், அது சார்ந்த முறையீடுகள் எல்லாம் பகிரங்கமாகத் தெரிய வந்து, இது வரை தாம் அனுபவித்து வந்த அதிகாரங்களையும் சமூக மரியாதைகளையும் குலைக்கும் என்பதை ஆண் எழுத்தாளர்கள் உள்ளிட்ட, அதிகாரங்களை அனுபவித்தவர்கள் அறிந்தது தான். நான் எழுதுவது ஒன்றும் புனைவு இல்லை. கடந்த கால நாவல்களிலும், திரைப்படங்களிலும் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதை விட, அதிகமாகவும் ஆண் சமூகத்தை அச்சுறுத்துவது, பெண் தன் கற்பனைகளை எழுதத்தொடங்கிவிடுவாள் என்பதும், அதற்காகவே கற்பனை செய்வதை ஓர் ஆற்றலாக்கிக் கொள்வாள் என்பதும் தான். இதற்கு முன், பெண்கள் கற்பனை செய்வதற்குக் கூட வாய்ப்பு தராத சமூகச்சூழல் தான் எப்பொழுதும் வழங்கப்பட்டிருந்தது. தரவேற்றம் செய்யப்பட்டதை ஓர் இயந்திரம் போல, ஆணைகளுக்கு ஏற்ப அவளால் நிறைவேற்றமுடியும். அவ்வளவே.

இன்று நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக, மீனவர் பெண்கள், தாழ்த்தப்பட்ட பெண்கள், மதச்சிறு பான்மையினர், உழைக்கும் பெண்டிர், பாலியல் வாழ்வைத் தொழிலாக ஏற்றவர்கள், அதிகாரத்திற்கு எதிரான போராட்ட வாழ்வைத் தம் வாழ்வாக ஏற்றுக்கொண்டவர்கள் என எல்லோரும் எழுத வந்துவிட்டனர். இதனால், ஏற்படும் "பாதுகாப்பின்மை உணர்வு" ஆண் எழுத்தாளர்களைப் பதட்டம் நிறைந்தவர்களாக ஆக்கியுள்ளது. இதுமட்டுமன்று, இந்தப் பாதுகாப்பின்மையை நான் எழுத வந்த காலத்தில், இப்படித்தான் என்னிடம் செயல்படுத்தினார்கள்: இப்படியெல்லாம் எழுதுவது எழுத்து இல்லை என்றும், இந்தச் சாதியிலிருந்து வரும் எழுத்தை மற்ற சாதியினர் ஏன் வாசிக்கவேண்டும் என்றும், 'நீ தான் எழுதவந்து விட்டாயே, எழுதும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவும், குடிக்கவும் தயாரா?' என்றும் 'பெண்களால் எத்தனை வருடங்களுக்குத் தொடர்ந்து இப்படி எழுதிவிட முடியும்!' என்ற பரிகாசங்களும் பல முனைகளிலிருந்து வந்து கொண்டே இருந்தன. அதை விட எளிதாக, பாலியல் நகைச்சுவையுணர்த்தும் குறிப்புகளையும் பாலியல் அறிவை நமக்கு புகுத்துவதற்கான ஆலோசனைகளையும் கடிதங்களாகவும் மின்னஞ்சல்களாகவும் ஆண் எழுத்தாளர்கள் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அதில், இன்றைய பெரிய படைப்பாளிகள் என்பவர்களும் அடக்கம்.

இம்மாதிரியான அணுகுமுறைகள், ஆண்களுக்குத் தத்தம் சாதிச்செயல்பாடுகளிலிருந்து வருபவையே என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். படைப்புவெளியில், வெவ்வேறு சாதிப் பின்புலத்திலிருந்து வந்த ஆண் எழுத்தாளர்கள் இருக்கின்றனர். ஆனால், பெண்கள் மீதான பாலியல் வெறுப்பை வெளிப்படுத்துவதிலும், கேலி செய்வதிலும் இவர்கள் எல்லோருமே ஒன்று போல இருந்தாலும் அதற்குக் காரணமான பதட்டமும், வெளிப்படுத்தும் விதமும், அவரவர் சாதி அதிகாரம் சமூகத்தில் எந்த இடம் கொண்டிருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போன்ற "வன்ம அளவுடன்' தான் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை எந்த நீதிமன்றத்திலும், அல்லது எந்த அறிவியல் பரிசோதனைச்சாலையிலும், நான் வந்து நிரூபிக்கத்தயார். பார்ப்பனர், பிள்ளைமார், முதலியார், நாயர், நாயக்கர், கவுண்டர், நாடார், தேவர், கோனார், வன்னியர் எனத் தத்தம் வீடுகளில், தன்னையொட்டிய சாதிச்சமூகத்தில் பெண்களை நடத்தும் முறையொத்த முறைகளையே பெண் எழுத்தாளர்களிடம் கையாள்வது, இந்த ஆபாசங்களிலேயே மிகவும் சுவாரசியமானது. இதை யாரும் இப்படி நுணுகிப்பார்த்திருக்கமாட்டீர்கள், என்றால் இனி அப்படிப் பார்ப்பதை ஒரு பயிற்சிமுறையாகக் கொள்ளலாம்.

பெண் எழுத்தின் மீதான அச்சமும், வெறுப்பும், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி ஆண்களின் கண்காணிப்பாக மாறியது. பின், அவள் எழுதுவதில், பாலியல் விடயங்களோ, கல்வி, விவசாயம், அரசியல், வரலாறு போன்ற விடயங்களோ இருந்துவிடக்கூடாது என்பதைத் திட்டவட்டமாக எல்லோரும் உணர்ந்து முழு எதிர்ப்பும் அத்திசையில் திரும்பியது. இப்பொழுது, அது 'பெண் எழுத்தையே' முற்றிலும் நிராகரிக்கும் ஒரு போக்காக மாறிவிட்டது. அதற்கு இந்த வெறுப்புணர்வும், வன்மமும், காழ்ப்புணர்வும் உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். எழுத வந்த தொடக்கக்காலப் பெண்கள், இந்தியச்சாதியச்சமூகத்தின் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து விடுபடத் தமக்கு தேவையான விடுதலை மற்றும் பிரச்சார முன்மொழிதல்களை மேலைநாட்டுப் பெண்ணியத்திலிருந்து எடுத்துக்கொண்டார்கள். இயல்பாகவே, மேலை நாட்டுப்பெண்ணியம், அங்கு நிலவும் அரசியல் புரிதலின்பாற்பட்டு, ஆண் இனத்தைப் பெண்ணுக்கு எதிராக வைப்பது கெடுவாய்ப்பானது. அந்த முறையையே, இந்தியப்பார்ப்பனீய, ஆதிக்க சாதிப் பெண்களும் முன்மொழிந்ததால், பெண்ணியம் பேசும் பெண், ஆண்களை எதிரியாக, எதிர் இனமாகத் தான் பார்ப்பாள் என்பது நடைமுறையில் பதிந்து போன ஒன்றாகிவிட்டது. தொடர்ந்த எதிர்ப்புக்கு, ஆண்கள் இதையே காரணமாகவும் பார்க்கிறார்கள். உண்மையில், இந்தியப் பெண்களின் மரபணுவிலோ, நினைவுகளின் நரம்புக்கூட்டங்களிலோ கூட, பிழையாகக் கூட, பெண்ணுக்கு ஆண் எதிரி என்று நினைப்பது இந்தியாவில் சாத்தியமாகாது. அத்தகைய பண்பாடு, இந்தியாவில் வேர்விடவே வாய்ப்பு இல்லை. சாதிச்சிக்கல்களும் அதன் மரபார்ந்த அடக்குமுறைகளும் பெண்களுக்கு இருக்கும் சவால்களும் அந்த அளவிற்குக் கொடுமையானவை. 

இத்தகைய பிரச்சனையின் மையம், பார்ப்பன மற்றும் ஆதிக்கசாதி ஆண்கள் தான். இவர்கள், பெண்களைக் காலம்காலமாக இப்படித்தான் பார்த்துவந்திருக்கிறார்கள். தம் பாலியல் இச்சையை, வெறுப்பை, அதிகாரத்தை நிலைநிறுத்தும் வெளிக்காட்டிக்கொள்ளும் இடமாகவே பெண்களை வைத்திருக்கின்றனர். வரலாறு தோறும் இதற்கான சான்றுகள் இலட்சோப இலட்சம் நிறைந்திருக்கின்றன. ஆக, அறிவின் உறைவிடமாகவோ, கருத்தின் பிறப்பிடமாகவோ பெண்கள் மாறுவது, ஆண்களின் தன்னிருப்பை அச்சுறுத்தும் ஒன்று தான். அதிலும் எழுத்து என்பது சிந்தனை முறையைக் கேள்விகேட்கும் பணி என்பதால், இயல்பாகவே ஆண் படைப்பாளிகள் சாதாரண, பழைமைகள் தோய்ந்த, ஒரு சராசரி அவரவர் சாதி ஆண்களாகிவிடுகின்றனர். மொழியில் கையாளவேண்டிய குறைந்தபட்ச அறம் கூட, தேய்ந்துபோய்விடுகிறது. 

ஆனால், தாழ்த்தப்பட்ட மற்றும் சாதி அதிகாரத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பின்புலத்தில் இருந்து வரும் ஆண் படைப்பாளிகள், பெண்களிடம் இது போல நடந்து கொள்வது இல்லை. (இதில், விதிவிலக்குகள் இருக்கலாம். அப்படி இருப்பின், அவர்கள் சாதி அதிகாரத்தை உள்வாங்கிய, பார்ப்பனீயமயமாக்கச் சிந்தனைக்கு இரையாகிப்போனவர்கள் என்று கொள்ளவேண்டும்.) இத்தகைய ஒடுக்கப்பட்டப் பின்னணியிலிருந்து வரும் ஆண்கள், வாழ்வின் எந்தக்கட்டத்திலும் பெண்கள் மீது வெறுப்பையும் வன்மத்தையும் உமிழும் வாய்ப்பை எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள். காரணம், இவர்கள் எப்பொழுதுமே பெண் பாலியல் ஆற்றலை ஓர் அச்சுறுத்தலாகப் பார்த்தப் பண்பாட்டில் வந்தவர்கள் இல்லை. இன்னொன்று, வரலாற்றின் எந்தக் கட்டத்திலும் தன் மனைவியோ, சகோதரியோ எந்தப் பிறச் சாதி ஆணுடனும் சென்று உறவு கொண்டு விடுவாளோ என்ற அச்சம் இவர்களுக்கு இருந்ததே இல்லை. சாதிக்கலப்பு, ஆதிக்கசாதி ஆண்களுக்கு ஓர் அச்சமாக இருந்தது போன்று, இவர்களுக்கு ஒரு பொருட்டு இல்லை. இவர்கள் ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாகவும், ஒடுக்குமுறைகளின் போதும், பாலைகளிலும் வனாந்திரங்களிலும் ஆணும் பெண்ணுமாக, கையறு நிலையில் விடப்பட்டவர்கள். அந்த அளவிற்கு, சாதி அதிகாரங்கள் ஏதும் இல்லாதிருந்தவர்கள். இவர்கள் எல்லோருமே, ஆதிக்கசாதி ஆண்படைப்பாளிகள் காட்டும் தற்பொழுதைய வெறுப்புக்கு எதிராக, பெண் எழுத்தின் பக்கம் நின்று அறம் பேணுபவர்கள். ஏனெனில், எந்தப்பெண்ணின் மீது, சாதி வன்கொடுமை நிகழும் போதும், அதைத்தம் சகோதரிக்கும் மகளுக்கும் நிகழ்வதாக உணரும் சிந்தனை உடையவர்கள். 'இசைப்பிரியா' என்ற பெண் மீதான பாலியல் வன்முறையைத் தம் சகோதரி மீதான வன்முறையாகப் பார்க்கும் மாண்பு கொண்டவர்கள்.

பெண்கள் எழுதுதல் என்பது ஒன்றும் எளிதாக நடந்துவிடவில்லை. தமக்கான நேரத்தைக் கண்டுகொள்ளல், தரவேற்றம் செய்யப்பட்ட சுயத்தணிக்கை முறைகளிலிருந்து விடுபடல், சமூகத்தணிக்கைகளைச் சமாளித்தல், இது மீறிய கற்பனை வெளிகளுக்கு உய்யும் வாய்ப்பைத் தேடிக்கொள்ளுதல், பணியிடங்களில் உயர்பதவிகளில் இருக்கும் ஆண் அதிகாரங்களால் பெண் பாலியல் மரியாதைகளுக்கு இழைக்கப்படும் சவால்களைச் சமாளித்துத் தன் இருப்பைப் போற்றுதல், சமரசம் ஆகாதிருத்தல், எந்த அங்கீகாரமும் இல்லாத நிலையிலும் தொடர்ந்து எழுதுதல், பதிப்பக அதிகாரங்களைக் கையாளுதல் எனத் தொடரும் சவால்கள் என்றுமே புதியவை. இன்றும் மாறாதவை. இன்னும் சொல்லப்போனால், தமிழ் ஆண் எழுத்தாளர்கள் சொல்வது போல், பெண்கள் ஒன்றும் ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு இரையாகி 'ஊடகப்பிம்பங்களாக' ஆகிவிட முடிவது இல்லை. 'உன்னை எவ்வளவு பெரிய ஆளாக ஆக்கிக்காட்டுகிறேன்!' என்ற பசப்பு வார்த்தைகளுடன் வந்த ஆண் படைப்பாளிகள், அத்தகைய பெண்களைச் சமூக வெளிச்சத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி, இருட்டடிப்பு தான் செய்திருக்கிறார்கள். இத்தகைய முறை, நடைமுறைக்கு உதவாது என்பது தான் அடிப்படையான தர்க்கம். பெண் நாளும் உழைத்தும், போராடியும் தான் எழுத்தை மட்டுமல்ல, எந்தவகையான கலைவெளிப்பாட்டையும் இந்தச்சமூகத்தில் செய்யமுடியும் என்பது வெகு யதார்த்தம்.
இவ்விடத்தில், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. உலகெங்கிலும் உள்ள ஆண் படைப்பாளிகள் இப்படி இருப்பதில்லை. அல்லது, உயர்ந்த அலல்து புகழ்பெற்ற ஆண் படைப்பாளிகள் என்று பாரட்டப்பட்டவர்கள், உண்மையில் அப்படியான புகழ்பெறுவதற்கு அடிப்படையான காரணம், பெண்களை எதிரினமாகப் பார்க்காதது தான். மனித இனமாகப் போற்றியது தான். பெண்ணும் ஆணும் ஹோமோசேப்பியன்ஸ் என்ற ஒரே வகை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை அறிவியல் அறிவை அவர்கள் பெற்றிருப்பது தான். குதிரையும் கோழியும் என்ற வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர்களும் கூட. எந்தச்சந்தர்ப்பத்திலும், அவர்கள் பெண்கள் மீது அபாண்டமான சொற்களை உபயோகித்ததில்லை, உபயோகிக்கத் தயங்கியிருக்கிறார்கள். இன்றைய ஆண்படைப்பாளிகளின் ஆண் எழுத்து, அவர்கள் கொண்டிருக்கும் பெண் மீதான அடிப்படை வன்மங்களினாலேயே கடுமையாகப் பரிகசிக்கப்படும், புறக்கணிக்கப்படும் சூழலில் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள். மார்க்வெஸ், தாஸ்தாயேவ்ஸ்கி, டால்ட்ஸ்டாய், பஷீர், நொபக்கோ என்று இந்த எழுத்தாளர்களே கொண்டாடும் படைப்புகளிலிருந்து கூட, இந்த ஆண் எழுத்தாளர்கள் தம் மூடப்பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளும் துணிவைப் பெறவில்லை என்பது வருத்தமான விடயம் தான். பெண் எழுத்தின் மீதான நாட்டாமை அதிகாரத்தையும் அவர்களுக்கு எழுத்து அங்கீகாரம் வழங்கும் சலுகை உணர்வையும் இவர்கள் தக்கவைத்துக்கொள்வதன் வழி தான் இவர்கள் தம்மைப் படைப்பாளிகளாகக் காட்டிக்கொள்ளும் குறைந்தபட்ச வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை இன்று உணர்த்தியிருக்கிறார்கள். இது அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். மனநிலை. துப்பாக்கியைக் கையில் எடுத்துச் சுடும் வாய்ப்புக் கிடைக்காத பட்சத்திலும், துப்பாக்கியில் குண்டு போட்டு எதையாவது சுட்டுச்சுட்டுப் பார்க்கும் கற்பனையின் வழியாகவே, மனப்பயிற்சியை தொடர்ந்து எடுத்துக்கொள்வது போன்றது தான்.
ஆனால், பெண்கள் இந்த வெறுப்புணர்வில் இருந்தெல்லாம் எளிதாக விடுபடக்கூடியவர்கள். உடனே எதையும் எவரையும் மன்னித்துவிடக்கூடியவர்கள். வரலாற்றில், இதைவிடக்கடுமையான சம்பவங்கள் பெண்கள் மீது இழைக்கப்பட்டிருந்தபோதும், பெண்கள், ஏதோ ஒரு வகையில் இப்படி மன்னிக்க முடிந்ததால் தான், இனஉற்பத்திப்பணியைக்கூட செவ்வனே செய்யமுடிந்தது. மானுடம் அதனால் தான்தொடர்கிறது. கருப்பையின் வழியாகப் பெண்களை மட்டுமே ஈனும், அற ஒழிப்பைப் பெண்கள் ஒருபொழுதும் செய்யமாட்டார்கள். மானுட இயங்கியலை, அறிவியலை மாற்றிவிட முடியும் என்ற மூடநம்பிக்கையைப் பெண்கள் ஒரு பொழுதும் கொண்டதில்லை! பெண் எழுத்தும் ஒரு பொழுதும் அதைப் பாராட்டாது!

* * *

நன்றி: கணையாழி மற்றும் ஆசிரியர் குழு