நம் குரல்

அம்பேத்கரும் காந்தியும் அருந்ததிராயும்


அம்பேத்கரும் காந்தியும் எதிரெதிராகச் செயல்பட்டார்கள் என்பது நாடு அறிந்தது.
ஒருங்கிணைந்த இந்தியாவிற்கான தேவைகளையும் திட்டங்களையும் அம்பேத்கர் வகுத்தும் செயல்பட்டும் வந்தார்.
காந்தியை மகாத்மா, தேசப்பிதா என்று சொல்லுமிடத்து மட்டுமே இந்தியாவின் அடையாளமாக ஆக்கப்பட்டிருக்கிறார். உண்மையில், அதற்கான எந்தத்தகுதியும் காந்திக்கு இல்லை.
குறிப்பாக, இந்துக்கள் அல்லாத தாழ்த்தப்பட்டவர்கள் குறித்த, பாரபட்சமில்லாத புரிதலை காந்தியால் இறுதிவரை ஏற்கவே முடியவில்லை. அவர்களையும் இந்துமதக் கட்டத்தில் கொண்டுவந்து வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்துவதற்கே போராடினார்.
அம்பேத்கரையும் காந்தியையும் ஒரே கோட்டில் வைத்துப் புரிந்துகொள்வது கூட மிகவும் அபத்தமானது.
இந்திய அறிவுசீவிகள், அல்லது இந்தியா உடைந்துவிடப்போகிறது என்ற போலியான பதட்டத்தைத் தாமே உருவாக்கி அதன் வெப்பத்தில் குளிர்காய்பவர்கள் முதலாயும் இறுதிவரையிலும் தொடர்ந்து செய்வது, அம்பேத்கரையும் காந்தியையும் ஒரே கோட்டில் வைத்து விவாதிப்பதும், அடுத்தடுத்து வைத்துப் பொருள் விளக்கம் கொடுப்பதும்.
அருந்ததிராய் 'சாதி ஒழிப்பு' நூலில் முன்வைத்திருந்த எழுத்திலும், இத்தகைய பதட்டத்தை உணரமுடிந்தது. காந்தியைச் சொல்லாது அம்பேத்கரை விளக்கினால், தான் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோம், தீண்டத்தகாத கருத்தியல்வாதியாகிவிடுவோம் என்ற திருகுமனநிலை அருந்ததிராய்க்கும் இருந்தது.
காந்தியின் திருகுமனநிலைகள், உண்மையில் இந்துத்துவ மதவெறியிலிருந்து உருவாகுபவை. தொடர்ந்து இதற்கு ஆதாரமான விடயங்களை தரவுகளுடன் முன் வைப்பது என்று இருக்கிறேன்.
உண்மையில், இந்தியாவை உடைக்கமுடியாது. இந்தியாவை உடைப்பது என்றால், அதைச் செய்வது இந்துத்துவ சக்திகளாக இருக்கும் அல்லது, செயலிலும் சொல்லிலும் சிந்தனையிலும் இந்துமத வாதத்தை முன்வைப்பவர்களாக இருக்கும்.

குட்டி ரேவதி