நம் குரல்

பொது வெளி



பொது வெளி எது என்பதை ஆண்களை மையமிட்ட சமூகம் தான் தீர்மானிக்கிறது என்பது பழைய தகவல் தான். ஆனால் பெண்களுக்கு அது என்றுமே புதிய செயல்பாட்டைக் கோருவது. அதை முறியடிக்க வேண்டி அவ்வெளியுடன் முதன் முதலாக மோத வேண்டியிருக்கும் பெண்களும், அதை படைப்பாக்க வெளிக்குள் கொண்டு வர வேண்டிய பெண்களும் தாம் போராடவேண்டியிருக்கிறது. இதை ஆண்களின் அறிவுத் திமிர் அல்ல, எல்லாம் அறிந்ததான திமிர்! பெண்ணைக் கேளிக்கைப் பொருளாக்கி வாழ்வதென்பது இன்று நேற்றைய பணி அன்று. ஆக, பொது வெளியை நாம் நமதாக்கலாம்.

பெண்ணுக்குக் கல்வி என்பதே முதல் பொதுவெளியை ஏற்படுத்தித் தந்தது. அது புற அளவிலான வெளியாக இருந்தது போல வாசிப்பு என்பது கற்பனையான அக வெளியாக விரிந்தது. பெண்கள் தம் வாசிப்பிற்கான நூல்களை கண்டடைவது புற வயமான பயணத்தைக் கோருவது. வாசிப்பின் வழியாக தம் எண்ணத்திற்கு ஒத்த சிந்தனைகளைக் கண்டுபிடித்து மொழியாக்குவது அக வயமான பயணமாகும். இவ்வாறு அகவெளியையும் புறவெளியையும் மீறி பொது வெளிக்குள் நுழைவதற்கு சிறிதளவேனும் அதிகாரமும் முயற்சியும் தேவைப்படுவதாகும்.

மரத்தடி, தேநீர்க்கடை, சாலைப் புறங்கள், மைதானங்கள், வரவேற்பறைகள், திரை அரங்கங்கள், கருத்தரங்க வெளிகள் எனப் பொது வெளிகளில் தம்மை இருத்திக் கொள்வதற்கான வசதிகள் இருந்த போதும் வாய்ப்புகளை பெண்கள் பெறுவது சாத்தியமில்லை தான். அந்த அளவிற்கு அறிவாக்கத் துறை பெண்ணின் மீது அளவிலா வெறுப்பைத் திணித்துக் கொண்டிருக்கிறது. அது வெறுமனே போட்டி உணர்வினால் எழுந்தது மட்டுமே என்று தோன்றவில்லை. பெண்களை இயல்பாகவே கேலி செய்யும் மனோபாவமும் உடனுக்குடன் அதைச் செயல்படுத்தும் சுதந்திரமும் ஆண்களுக்கு இனாமாகக் கிடைத்தது. என்பதாலும் பொதுவெளியில் அந்தவெளிக்குள் தன்னை இருத்திக் கொள்ள விரும்பும் பெண் அந்த கேலியின் தாக்குதலுக்கு நேரடியாகத் தன்னை ஒப்படைப்பதாக எண்ணி ஆணின் எல்லாம் அறிந்த மனோபாவம் தன் கேலியை மொழியாக்குகிறது. ஆகவே தான் பெண்கள் தம் மொழியை இருப்பிற்கான அவசியமாக்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு மொழி என்பது விடுதலைக்கான ஆயுதம் மட்டுமன்று. அது அறிவாக்கப் பணிக்கான ஆயுதமும். தம் இருப்பின் அடையாளம். தம் திறனைச் செயல்பாடாக்கும் அரசியல். ஆக, இத்தகைய பெண்கள் ஆண்களை வெறுப்பவர்கள் பொத்தாம் பொதுவாக கூறுவதெல்லாம் பொதுவெளியில் பெண்களை கேலியின் நுகர்வாளர்களாக்கி இன்புற்ற ஆண்களின் முழக்கங்கள்.

பெண்கள் பொதுவெளிக்குள் வருவதை ஆர்வத்தோடும் குறுகுறுப்போடும் நோக்கும் கண்களுடையவர்கள், எரிச்சல்களால் இன்புறுகிறார்கள் என்பதே என் உளவியல் புரிதல். நடுத்தர வர்க்கம் இதில் இன்னும் அதிகமாய் ஆரோக்கியமற்ற சிந்தனையுடன் இயங்குகின்றது. அதாவது, தம் வீட்டுப் பெண்களை இப்படித்தான் வைத்திருக்கிறோம் என்ற இறுமாப்பும் அதே இறுமாப்பின் நியதிகளில் மற்ற பெண்களையும் ஒப்பிட்டு நோக்கும் இயல்புடையவர்களாயும் இந்தக் கணவான்கள் இயங்குவார்கள். தம் வீட்டுப் பெண்களை பிற ஆண்கள் கேலி செய்ய நேர்கையில் இயன்றால் ஓர் அடி தம் வீட்டுப் பெண்களையும் அடித்துத் துன்புறுத்துபவர்கள். பொதுவெளி, பாலியல் விஷயங்களை மறைத்து வைப்பதற்கானது என்பதை இவர்கள் தாம் முதலில் பிரசங்கிப்பவர்கள். இன்று அரவாணிகள் பற்றிய விவாதமும் முன்னெடுப்பும் இத்தகைய மனச்சிதைவுற்ற சமூகத்திலிருந்து பிதுங்கி வெளிவந்து துருத்தி நிற்பதற்குக் காரணமானவர்கள். இயல்பான வெளியுடன் தம்மைப் பொருத்திக் கொள்ள எந்த வித நியதியுமற்ற, விடுதலையற்ற ஒரு சமூகத்தின் மீது துப்பப்படும் எச்சிலாகக் கூட இவர்கள் இருக்கலாம். இதற்குப் பதிலாக சமையல் குறிப்புகள் எழுதலாம், நவீன உடைகள் குறித்த அக்கறையில் ஈடுபடலாம், கோலங்கள் எழுதலாம் என்ற சிந்தனைகளை ஒப்புக்காய் ஏற்கும் மனநிலையைப் பெண்களுக்குக் கொடையளிக்கும் மறைமுகமான அறிவார்ந்த பணியை இவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர் என்பது தான் இதன் அர்த்தம்.

பேருந்துகளில் எல்லோரும் தன்னையே நோக்கிக்கொண்டிருக்கத் தனியே மீண்டும் மீண்டும் பயணம் செய்வது, பெண் ஆரோக்கியம் பற்றிய எந்த அக்கறையுமற்ற ஒரு நாட்டில் பொதுக் கழிவறைகளைத் தேடி அலைவது இவை போன்ற செயல்பாடுகளுடன் ஒரு பெண் இணையத்தள வெளியில் இயங்குவதையும் ஒப்பிடலாம். இன்று வரை ஒரு பெண்ணின் படைப்பாக்கம் ஆரோக்கியத்தைத் தரும் அருமருந்தாக இல்லாமல் ஒவ்வோர் ஆணும் தானும் உள்நுழைந்து, மனம் பிறழ்ந்த விருப்பத்துடன் நோக்கும் உளவியல் நோயுற்று, பின் பொதுவெளியில், ‘அய்யகோ!’ என்று முறையிட்டு அழுவதாகத் தான் இருந்து வருகிறது. காகிதத்திற்கு இருந்த வெறுமனே மலத்தைத் துடைக்கும் உபயோகத்தைப் பெண்கள் மாற்றி வைத்தது கூட காரணமாக இருக்கலாம்.
இவர்களை எல்லாம் யார் அழைக்கிறார்கள் எமது படைப்புகளைப் படிக்க வேண்டி?














குட்டி ரேவதி

விமர்சனம் ஒரு சொல்


விமர்சனத்தின் ஆழம் மறுத்த வெளியில்


கவிதை சிகை மழிக்கிறது உருவழிகிறது


ஒரு சொல்லும் பொறுக்காதது கவிதை இல்லை

இது கண்டவன் தனதையே கல்லால் நொறுக்குவான்



மின்னூட்டம் பெற்ற கண்ணாடிக் குப்பிகளில் கவிதை
குழல்வழி ஆக்சிஜனில் நீந்தி மகிழ விரும்புவதில்லை
திரைப்பதிப்பில் உயிருறும் தம்மைக் கொஞ்சும்
குழந்தைகளிடமும் முத்தம் பெறா
கண்ணீர்க் கசியும் வாசகனின் உஷ்ண மூச்சு
மேல் மோதியதும் வாரி அணைத்துக் கொள்ளும் கவிதை
நிகழ்வுகளுடன் மோதி உள்சிராய்ப்புகள் பூத்து
அது அழுவதுமில்லை பதறுவதுமில்லை
காற்றில் எழும் விமர்சனங்கள்
அதன் திக்கு எட்டும் புரவிகளாய்ச் சீற

கல்லடி தாங்கிய கவிதையோ ஒரு போதும்

பிணவறையை நோக்கிப் பயணிப்பதேயில்லை
சொல்லப்போனால் நிகழ்வுகளின் முகத்தில் கரியைப் பூசும்








குட்டி ரேவதி

எதன் பொருட்டுத் தொலையும்?



முப்பது வருடங்களிலேயே கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும் ஒரு நிலைமையும் காலத்தின் வேகமும் கூடிவிட்டது. அதில் புதியதைப் புரட்டிப் போடுகையில் பழைய மனிதர்களும், ஏன் மிகவும் முக்கியம் என்று நாம் மதித்திருந்த பொருட்களுமே கூட தொலைந்து போவது தான் கண் முன்னால வந்து நிற்கின்றன. நாம் உறுதியான பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்த மனிதர்களும் மிகச் சிறிய அசந்தர்ப்பமான காரணங்களால் தொலைந்து போயிருக்கிறார்கள். வனஜாவைப் போல. எப்படி ஏன் வாழ்க்கையிலிருந்து தொலைந்து போனாள் என்று யோசித்துப் பார்க்கையில் கொசுவர்த்திச் சுருள் போல ஒன்று கண் முன்னே சுழல்கிறது. சமீபத்தில் ஜகன் மோகினி திரைப்படம் பார்த்த விளைவு தான்!

அந்தச் சிற்றூரில் நானும் அவளும் மட்டும் தான் முதன் முதலாக சைக்கிள் வாங்கிய பெண்கள். ஒருவரையொருவர் சந்திக்கும் போதே இருவரும் சொந்தமாக சைக்கிள் வைத்திருந்தோம். பள்ளி நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலையிலேயே எங்கு செல்வது என்று திட்டமிட்டு விடுவோம். வீட்டிலிருந்து கிளம்பி அந்த ஊரின் புறப் பகுதியில் இருக்கும் கோவிலைச் சுற்றி ஐந்து மைல்கள் தாண்டி இருக்கும் கல் குவாரியையும் அதைச் சுற்றியும் உள்ள கிராமங்களையும் கடந்து திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலை வரைத் தொட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோம். வெளியை விரிக்கும் எங்கள் உடல் கட்டுக்கடங்காத ஆற்றலுடனும் ஊக்கத்துடனும் இருந்தது. குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டும் பெண்களாக எங்களிருவரால் வளைய வரமுடியவில்லை. எங்கள் சைக்கிள்களின் சக்கரங்களில் காலத்தின் இறக்கைகளைக் கட்டிக் கொண்டிருந்தோம். எங்கள் எதிர்கால வாழ்க்கை பற்றிய கற்பனைகளை நாங்கள் சிறிதும் குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல் சமூகப் பணிகள் ஆற்றுவது என்று இருபது வருடங்களுக்கு முன்னேயே முடிவெடுத்திருந்தோம். அம்மாதிரியான அபத்தங்கள் இன்றைய பிடிமானமற்ற தனிமையில் சுவரைப் பார்த்து முட்டி முட்டிப் புன்னகைக்க வைக்கின்றன.

எங்கள் சைக்கிள் பயணங்கள் பாதையறுந்த நாட்களில் பேருந்தேறி காவிரிக் கரை அடைவோம். எங்களுக்குப் பிடித்தமான நிழலார்ந்த குளிரடைந்த இடம் மலைக்கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உள்ள மிகப் பெரிய பாலம். அதன் அடியில் சூரிய மினுமினுப்புடன் பாயும் காவிரி கரை மோதும் இடம். நாங்கள் அங்கு காவிரிக்குள் இறங்கி அதன் மத்தியப் பகுதி வரை நடந்து உள்ளே சென்று நீரில் மிதப்பது போல தோன்றும் பாறைகளைத் தேர்ந்தெடுத்து அமர்வோம். மாலை சூரியன் நீருக்குள் மூழ்கும் வரை அமர்ந்து விட்டு நீர் பொன்னாகக் கரைந்து ஒழுகியோடும் வரை காத்திருந்து விட்டு வீடுகளுக்குத் திரும்புவோம். தொலைந்து போய் விட்டன அந்த நாட்களும். வனஜாவும். காலம் காவிரியைப் போல நினைவுகளைத் தேக்கும் சக்தியற்றது போல.

அப்பாவின் மரணம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஓர் அறுவை சிகிச்சை நடப்பதாக இருந்தது. அதில் அப்பா பிழைப்பதற்கான வாய்ப்பு இரு சதவிகிதமே இருப்பதாக மருத்துவர் கூறியிருந்தார். அப்பாவை அதற்கான அறையில் அழைத்துச் செல்லும் முன் அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் அவர் எப்போதும் வைத்திருக்கும் பேனா மற்றும் சில நினைவடர்ந்த பொருள்களான பர்ஸ், உபயோகித்த மர சீப்பு, முக்கியமான சிறிய புகைப்படங்கள், இரவு ஒரு மணி வரை அம்மாவும் அப்பாவும் கேட்டு மகிழ ஏன் ஒருவரையொருவர் கேட்டுக் கொஞ்சிக்கொள்ள பயன்படுத்திக் கொண்ட வானொலி, நுட்பமான மரவேலைப்பாடுகள் செய்யப் பயன்படுத்திய உளிகள் என எல்லாமும் அடங்கிய சிறு கைப்பை என்னிடம் கொடுக்கப்பட்டன. அதை நித்தமும் என் பையில் வைத்திருந்தேன். ஒரு முறை வண்டியில் என் வேகமான பயணத்தின்பொழுது நழுவி வீழ்ந்துவிட்டது. அதைக் கண்டெடுக்கவே முடியாத படிக்குத் தொலைந்து போனது. தொலைந்த அப்பொருட்கள் இன்றும் கனவின் மாயாலோகத்தில் சுழன்று மிதந்து கொண்டிருக்கின்றன.

நாட்கள். மிகுந்த வெளிச்சம் சிறகடிக்கும் அந்த நாட்கள் எங்கோ பழுத்து உதிர்ந்து விட்டன. நீருக்குள் மூர்க்கமாய் மூழ்கித் திளைத்த நாட்களும் மலையின் உச்சம் நோக்கி மூச்சிளைக்க நடந்த நாட்களும் காடுகளில் நெடிதுயர்ந்த மரங்களினூடே திடீர்த்திருப்பங்களுடன் புதிர்விளையும் வெளியை நுகர்ந்த நாட்களும் தொலைதூரத்திலேயே தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. அந்த நாட்களில் கண்ட அனுபவங்கள் இரத்தத்தில் சேர்ந்து கரைந்து சிவப்பாகிக் கொண்டிருக்கின்றன. முதல் முத்தத்தை எப்படிப் பொத்தி வைப்பது? அதைப் போலத்தான்.

மேலும் எதையும் தொலைந்த இடத்தில் போய்த் தேடிக் கண்டுபிடிக்க இயலாத படிக்கு வெளி என்பது நினைவுகளின் சுவரிடிந்த அறைகளில் ஓவியமாய் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றைக் குடைந்து நம்மால் அங்கு செல்ல முடியாத படிக்கு அவை முற்றிலும் கற்பனை வெளியாக இருக்கின்றன. தொலைந்த பொருட்கள் வேறு வேறு உருவமெடுத்துக் கொண்டே இருக்கின்றன என்பதும் அவை ஒரு கட்டத்தில் அந்நியமாகி விடுகின்றன என்பதும் உறைந்து போன உண்மைகளாக இருக்கின்றன.
ஆனால் என்னுடைய அனுபவத்தில் ஒரு பொருள் தொலைந்து போகும் முன்னர் ஒரு முறை பொய்யாகவேனும் தொலைந்து காட்டுகிறது. நம்மை மூர்ச்சிக்க வைக்கிறது. எண்ணங்கள் எல்லாமே புகையாகக் குழம்பி என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற திக்கற்ற வெளியில் நம்மைக் கொண்டு போய் நிறுத்தி விடும். எண்ணாயிரம் பொருட்கள் நிறைந்த வெளியில் எந்தப் பொருளைத் தேடுகிறோம் என்று தெரியாத சிந்தனைக் கொம்பில் தன்னந்தனியே நம்மை விட்டுவிடும்.


குட்டி ரேவதி

அவன் பாடுகையில்

அந்தக் குரலை என்தொண்டைக்குள் அடை காக்கும்
வழியறியா வேதனையில் கொழுந்து விட்டெரியும்
மெய்மையின் நெருப்பில் வெந்தழிகிறேன்

மடிந்த நீளமான இதழ்களுக்கிடையே
ஒரு புகையைப் போல கமழ்ந்திடும் அக்குரல்
பரவும் திசையெலாம் தோகை போல
ஒயிலாய் நடனமாகி நகரும்
முழுநிலவைக் கவ்வி இழுத்து வருகின்றதோ
துயர் கனிந்த ஆரஞ்சுப் பழத்தின் சுளைகளை உரித்து
தின்னச் சொல்லிக் கொடுக்கிறதோ
உதடுகள் சுழித்துச் சுழித்து அவன் பாடுகையில்
இழக்க விரும்பா உரிமைகளின் வேர்களிலிருந்து
எழும்பி வரும் சிட்டுக்குருவிகள் எதிர்வெயிலில் மின்னும்
பாடலற்ற இதயப் பாலையின் தீய்ந்த சூரியனைச்
சுமந்தலையச் சம்மதியான்
ஒருபொழுதும் என்கின்றனவோ வேர்க்குருவிகள்










குட்டி ரேவதி

கவிதைக்குத் தலைப்பு




கவிதைக்குத் தலைப்பு அவசியம் என்பது பற்றிப் பல சமயங்களில் என் கவித்தோழிகளுடன் வாதாட வேண்டியிருக்கிறது. கவிதைக்குத் தலைப்பு அவசியமில்லை என்பது அவர்கள் வாதம். தலைப்பில்லாமல் கவிதை முழுமை பெறுவதில்லை என்பது எனது. சிறுகதைக்கோ நாவலுக்கோ இம்மாதிரியான கேள்வியின் அவசியமே இருந்திருக்காது. இந்நிலையில் அவர்கள் கூறுவது: கவிதை எழுதி முடித்த பின்பு சடங்கார்த்தமாக அல்லது கவிதை வரியிலிருந்து ஒரு வார்த்தையை அல்லது வரியை தலைப்பாய் இடுவது முற்றிலும் செயற்கையானது என்று. ஆனால், எனக்கோ, கவிதை என்பது ஒரு குறியீட்டுக் கலை வடிவமெனில் அதற்குக் குறியீட்டுத் தன்மையைத் தருவதே அதன் தலைப்பு தான். வடிவம் சம்பந்தப்பட்ட நியாயங்களும் உடன் உண்டு.

உணர்ச்சிகளின் தீப்பிழம்பு தோன்றும் இடத்தை, காலத்தை அல்லது அந்தத் தீநாக்கு நோக்கிச் செல்லும் திசையைப் பெயரிட்டுக் குறிப்பிடுவது தான் தலைப்பு. இந்த நிகழ்வு கவிதையில் தான் ஏற்படுகிறது. இதன் க்ஷண வேகத்தைப் பெயரிட்டு விடுவது அவசியத்திலும் அவசியம். ஏனெனில் அதே வேகத்தில் கவிதை முடிந்தும் போகிறது. அது முடிந்து போகும் முன் பெயரிட்டு அதை அழைத்து விடுவது தான் கவிதைக்குக் கொடுக்கும் மரியாதை என்று தோன்றுகிறது. கடலின் ஆழத்தைத் துளாவி முத்துக் குளித்து எழும் மீனவன், கண்டடையும் கடலுக்கு வெளியிலான ஆசுவாசம் போலவும் தலைப்பு உருக்கொள்கிறது. சிற்பி, படைப்பின் வளைவுகளையும் நுணுக்கங்களையும் கூர்மைப்படுத்திய பின்பு கண் திறப்பதைப் போலும். வாசகனை படைப்புக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் திறவுகோலாகவும் இருக்கலாம். படைத்தவனுக்கு படைப்பிலிருந்து தன்னையே வெளியே உந்திப் படைப்பைப் பொதுவுடைமை ஆக்கும் வாயிலும் அதுவே.


கவிதை என்பது கதை விடுவது அன்று. ஒரு நிகழ்வைச் செய்தியாக்குவதுமில்லை. அது ஒரு பெயர்ச் சொல்லும் அன்று. உணர்ச்சியின் பருப்பொருள் தன்மையைச் சொற்கள் மற்றும் அதன் அர்த்தங்கள் வழியாக வரைந்து காட்டி, மழுங்கற் தன்மையால் நுண்மைகளைக் கேட்டுணரும் சக்தியிழந்த சாமானியனுக்கு விளக்க முயல்வது போல. கவிதையில் நிகழும் யதார்த்தத்தின் சிதைவைத் தலைப்பு என்பது குறியிட்டுக் காட்டுகிறது. தலைப்பிடுவதும் கவிதை எழுதும் திறனுடன் சேர்ந்தது தான். கவிதை பேசும் அழகியலை நிறைவு நிலைக்குக் கொண்டுவருவது. கவிதையின் தலைப்பு என்பது அந்தக் கவிதையின் வரிச்சுவர்கள் எங்கும் எதிரொலித்து ரீங்கரித்துக் கொண்டேயிருப்பது. வாசகருக்கு அந்தக் கவிதையை அதன் உண்மையான அர்த்தத்தில் அடையாளம் கண்டறிய உதவுவது. ஒரு துப்பறியும் நாவலில் எழுத்தாளன் என்பவன், துப்பைத் தேடிச் செல்லும் வழியில் எல்லாம் ஆங்காங்கே ஆவலை, புதிரை, தவிப்பை, ஊசல் நிலைகளை வாசகனுக்கு ஏற்படுத்திச் செல்வது போல கவிதையும் தன் இறுதி வரியில் சுமந்திருக்கும் துப்புக்கான புதிரைத் தலைப்பிலேயே சுட்டுகிறது. தாயின் கருவுக்குள் துடிப்புடன் காத்திருக்கும் சிசுவைப் போன்றது தலைப்பு.

குட்டி ரேவதி

’ஏகாந்தம் ஏதுக்கடி?’



பெண்கள் எல்லோரும் வாழ்வியல் பெருஞ்சுமையினால் தமது தனிமையின் இருள் வெளியில் உழன்று கொண்டிருக்கும் சமயத்தில், அதையே நான் வேண்டி விரும்பிப் பெற்றுக் கொள்வதன் காரணம் தனிமை என்பது எனக்குத் தரும் உல்லாசமும் ஆசுவாசமும். தமிழ் மொழியில் ஒன்றுக்கொன்று எதிரான ஆனால் ஒரே மாதிரியான இரண்டு மனித நிலையைக் குறிப்பிடுவதற்கான சொற்களுண்டு; ஏகாந்தம் மற்றும் தனிமை. ஏகாந்தம் நேர்மறையான அழுத்தமற்ற பொருளுடனும், தனிமை துக்கத்தின் சாயல்களுடனும் ஒலிக்கின்றன. கூட்டத்திற்கு மத்தியில் இருந்தாலும், நெருங்கிய உறவினர் குடும்பத்தினர் மத்தியில் இருந்தாலும் எவருமே தொட்டுப்பார்த்து உணர முடியாத தனிமை என்னும் தோடால் (தோலால்) பெண்கள் மூடப்பட்டுள்ளனர். இந்தத்தனிமை எந்த வகையிலும் இனிமையானது அன்று. ஆண்களால் எப்பொழுது வேண்டுமானாலும் தங்களுக்கான ஏகாந்தத்தை அதிகாரத்தாலும் உரிமையாகவும் ஏன், இயல்பாகவும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். வெட்டவெளி, சிதம்பரம், விண், அந்தரம் போன்ற சொற்கள் எல்லாமே உணர்த்தும் வெளிசார்ந்த அர்த்தங்கள் ஆண்களின் வாழ்வியலுடன் தான் நெருங்கியவையாக இருக்கின்றன. இவையெல்லாம் பெண்கள் பிரவேசிக்க முடியாத வெளிகளாக நிறுவப்பட்டிருப்பதும், பெரும்பாலும் சமயங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதும், தம் உடலை விட்டு வெளியேற முடியாதவர்களாகப் பெண்கள் இயக்கப்படுவதும், தாம் காரணம்.


பெண்கள், தனிமை என்ற அழுத்தமான வெளியிலிருந்து வெளியேறி எப்பொழுதாவது ஏகாந்தம் என்பதை நுகர்கிறார்களா என்று நான் யோசித்ததுண்டு. கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள் இந்த சமகால, யதார்த்தமான வெளியிலேயே தாங்கள் இல்லை என்பது போல நடந்து கொண்டிருப்பதை பல சமயங்களில் நான் பார்த்திருக்கிறேன். குழந்தையின் பூவுடலின் மீது கொண்டிருக்கும் பேரன்பும் அதைப் பேணும் சகல உரிமைகளும் அதிகாரங்களும் பெற்றுள்ள தாய்மை நிலையில், அவர்கள் தங்களைச் சுற்றி இயங்கும் இந்த உலகத்தையே மறந்து வேறு ஒரு கற்பனை அல்லது மீமெய் வெளிக்குள் சஞ்சரிப்பது போல அவர்கள் முகத்தில் சிற்சில சொற்பக் கணங்கள் பேரொளி வீசக் கண்டதுண்டு. ஆனால் குழந்தை வளர வளர அந்த ஏகாந்த உலகமும் உருவழிந்து அவர்கள் மீண்டும் தனிமைக்குள் தள்ளப் படுகின்றனர்.

தனிமை என்பது பெண்ணை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தான் தனிமையில் இருக்கிறோம் என்று அறிய முடியாத அளவுக்கு அவள் அதனால் அழுத்தப் பட்டிருக்கிறாள். மூச்சடைக்கச் செய்கிறது அவளின் வீடு. பெரும்பாலான சமயங்களில் தனது சுயத்தேவைகள் குறித்த சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் பெண்கள் நிர்க்கதியாய் நிற்பதன் காரணம் தனிமை குறித்த அவர்களின் கற்பனையான பயம் தான். ஏதோ அவர்கள் ஏற்கெனவே தனிமைக்கு வெளியே தப்பித்து நின்றவர்களைப் போல. காலங்காலமாய் ஆண்மைய தத்துவங்கள் எல்லாம் வாழ்வியலின் விளிம்புகளில் பெண்ணுக்கான தனிமையையும் நிரந்தரமின்மையையும் வரைந்து அதை நோக்கி அவளைத் தள்ளிக் கொண்டேயிருக்கின்றன.

தங்கும் விடுதிகளில் நாட்களைக் கழிக்க நேரும் போதோ அல்லது எழுதுவதற்கான காலத்தைத் தேர்ந்தெடுத்துத் தனியாக அமரும் போதோ இந்தத் தனிமையின் அடுத்த ஆரோக்கியமான கட்டமான ‘எல்லா தற்கால அழுத்தங்களிலிருந்தும் விடுபட்ட நிலை’யை உணர்கிறேன். தொலைபேசிகளின் அலைகளால் நான் அவ்வப்பொழுது கவனம் சாய்க்கப்படாத நிலை அது. காலம், என் கையில் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடும். என் சுவாசத்தின் காற்று மட்டுமே வீசும் சப்தத்தின் பின்னணியில் நான் ஏதோ மலையின் உச்சியில் நிற்பதைப் போல உணர்ந்ததுண்டு. அந்த அளவிற்கு சுகமும் அதே சமயம் விட்டு விடுதலையாகி இயங்குவதற்கான ஆர்வமும் என் கைகளிலேயே இருக்கும். மரங்கள் கூட்டமாக தோட்டங்களில் தோப்புகளில் வாழலாம். ஆனால் தனிமையைத் தாங்கி தனியே வளரும் மரம் தான் உறுதியாக வளர்கின்றது.


‘சாகாமல் தாண்டித் தனி வழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி? – குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி?’, என்பது குதம்பைச் சித்தரின் வரிகள். இதில் கூறப்பட்டுள்ள ஏகாந்தம் என்பதின் பொருள்கனம் மிகையானதாகவோ நான் மேலே இயம்பியிருக்கும் விவாதத்திற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும். சித்தர்கள் தாம் அதிகமான ஆண் மையச் சொற்களை உருவாக்கியவர்கள். இதையெல்லாம் புறம் தள்ளி, தனிமைக்கும் ஏகாந்தத்திற்கும் கருத்து மயக்கம் உள்ள நிலையில் நானே விரும்பி ஏற்கும் தனிமை என்பது என்னை மூதாதையரின் அகாலமான சிந்தனைவெளியோடும் முக்காலத்தோடும் என்னைத் தொடர்புப்படுத்தி இயங்கத் தூண்டுகிறது, வெகு தற்காலிகமான கணத்திற்கே என்றாலும்...




‘ஏகாந்தம் ஏதுக்கடி?’ – குதம்பைச் சித்தரின் பாடல் வரி.




குட்டி ரேவதி

இன்று எனது 120-வது பயண நாள்!

இன்றைய வருடத்தின் என்னுடைய நூற்றி இருபதாவது பயண நாள். ஏதேச்சையாக டைரியைப் புரட்டி இந்த வருடம் பயணம் செய்த நாட்களை எண்ணிப்பார்த்த போது ஏறத்தாழ நான்கு மாதங்கள் அளவிற்கு பயணம் செய்திருக்கிறேன். சென்ற வருடம் இதைக் காட்டிலும் அதிகமாயிருக்கும். எழுத்தாளர் சிவகாமி அவர்களுடன் இணைந்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து பெண்களிடையே அவர்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம். எங்களை ஒரு மூர்க்கமான நல்விசை அவ்வாறு பயணிக்கச் செய்தது என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு பயணிக்கவில்லையெனில் என் கூடு நூலாம்படை படர்ந்து வீச்சமடிக்கத் தொடங்கிவிடும் என்று நம்புகிறேன். எண்ணங்களைத் தீர்க்கவும் உடனுக்குடன் கருத்துக்களைப் புதிப்பிக்கவும் முக்கியமாக மனோபாவத்தை ஆரோக்கியமானதாகப் பேணவும் ஒவ்வொரு மனிதனுக்கும் பயணம் அவசியம் என்பது என் கருத்து. இந்த மாதத்தில் இன்னும் பன்னிரண்டு நாட்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது.

இன்று சேலத்தில் வந்து இறங்கியிருக்கிறேன். பாலின சமத்துவம் பற்றிய விழிப்புணர்வுக்கான பயிற்சிகள் அளிப்பதற்காக. தொலைதூரக் கிராமத்துப் பெண்களைச் சந்தித்து அவர்களுடன் சிந்தனைப் பரிமாற்றம் செய்ய வேண்டும். பாலின சமத்துவம் பற்றிய அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதுடன் என்னுடைய கருத்துக்களை அவர்களுடன் பரிமாறிக் கொள்ள வேண்டும். இன்னும் நான்கு நாட்களுக்கு இதுவே என் பணி. பெண்களை அதுவும் கிராமத்து, அடித்தட்டுப் பெண்களைச் சந்திப்பதை எனக்கே நான் அளித்துக் கொள்ளும் பயிற்சியாக வைத்துக் கொள்கிறேன். ஓர் அளவுமானி போல. பெண்ணியம் என்பது அதரப் பழசான வார்த்தை தான். என்றாலும் என்னளவில் அது தொடர்ந்து இயங்க வேண்டிய தேவையையும் எவர் மறுத்தாலும் அதன் பாதையில் நான் சீராகப் பயணப்படுவதில் என்னுடைய முழு கவனத்தையும் கோருவதாகவும் உணர்கிறேன்.

சேலத்தில் பெண் சிசுக் கொலை நிகழ்வது அன்றாடச்செயல்களில் ஒன்று. இன்று காலையிலும் செய்தித் தாளில் ஒரு செய்தி உண்டு: ஒரு பெண் தனது எட்டு மாதக் குழந்தையை மருத்துவமனையில் உட்கார்ந்திருந்த ஒரு முதிய பெண்ணிடம் கொடுத்து, ‘கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்! பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்’, என்று சொல்லிவிட்டுச் சென்றவர் திரும்பவும் வரவே இல்லை. பெண் சிசுக் கொலை முன்பை விட இப்பொழுது குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் பிரசவத்திற்குத் தாய்வீட்டுக்குச் சென்றவர் திரும்பி வரும்போது பிரசவத்தில் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறுவார். மேலும், பெண் குழந்தைகள் வளர்ப்பில் தொடரும் அலட்சியமும் வெறுப்பும் வேதனையை அளிக்கக் கூடியது. முதல் குழந்தை பெண் என்றால் தப்பித்தது. முக்கியமான இன்னொரு விஷயம் இளம் வயதுத் திருமணம். பெண்கள் தங்கள் பதினைந்து வயது வரைக் கூடத் தாமதிப்பதில்லை. அரை குறையான கல்வி. கல்வி துண்டிக்கப்படுவதன் காரணத்தைக் கேட்டால் வறுமை என்று கூறும் பெற்றோர் உடனே நடத்தப்படும் திருமணத்திற்குச் செலவு செய்யத் தயங்குவதில்லை. தான் ஒரு காவல் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்த ஒரு பெண், காதல் திருமணம் செய்து கொண்ட கணவனே படிக்கக் கூடாது என்று தடையிட்டதைக் கூறி அழுதார். பெண்களுக்கு எதையும் விட திருமண ஆசை இளம்பருவத்திலேயே தாயாலும் சுற்றியுள்ள பெண்களாலும் நாடி நரம்பெல்லாம் ஊட்டப்படுகிறது. அது ஒரு சொர்க்கம் என்பது போலத்தான் கழுத்தில் மாலையை வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் தான் அது பலி கொடுப்பதற்கான நிகழ்வு என்று விளங்குகிறது. இத்தகைய திருமணங்கள் ஆண்களையும் கண்டிப்பாய் வாட்டி வதைக்கத் தான் செய்யும்.

இன்று அத்தகைய பெண்களுடன் ஏழு மணி நேரம். நீண்ட உரையாக இல்லாமல் உரையாடலாக எல்லோரின் வாழ்வையும் பிளப்பாய்வு செய்வதான வேலையை எளிதாகவும் வருத்தமில்லாமலும் செய்து பார்த்தோம். கொஞ்சம் கொஞ்சமாய் வலி மருந்தை ஏற்றிப்பார்ப்பது போல. தொடர்ந்து கண்ணீர் முட்டும் விழிகள் சுடரும் வரை உடனிருக்க வேண்டியிருக்கும். கல்வி, வேலை, வருமானம், ஆரோக்கியம் என்பதெல்லாம் பெண்களுக்கு யாரோ வந்து கொடுக்கப் போவதில்லை. அதைப் பெறுவதற்கான ஊக்கமும் பிடிவாதமும் அவர்களே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதை ஏதும் பெற முடியாத பெண்கள் அன்றாட வாழ்வோடும் வறுமையோடும் கணவனோடும் நோயோடும் படும் பாடுகள் வேகவேகமாய் முதுமையைக் கூட்டி வருகின்றன. மேற்கண்ட எனது அனுபவத்திற்குப் பிறகு சேலம் என்ற நகரம் ஒளி மங்கிய தூங்குமூஞ்சி நகரத்தின் தோற்றம் கொள்கிறது என் நினைவில். கூட்டங்களில் கலந்து கொண்ட பானுமதியும் கீதாவும் ஒருவரோடொருவர் கை கோர்த்து சிரித்து சிரித்துக் களித்தது அவர்களின் நாற்பது வயதுக்கான அழகாகவும் இன்றைய நாளின் வெளிச்சமாகவும் தோன்றியது! மாலையினை இரவுக்குள் அழைத்துச் சென்ற பெருமழையும் இன்றைய நாளுக்கான வரவு தான்.


குட்டி ரேவதி

சக்கரங்கள்


இனி எல்லாமும் முதலிலிருந்து தொடங்கப்படவேண்டும் இல்லையெனில் நிகரற்ற இவ்வாழ்வின் பெருங்கிணறு எந்நேரமும் தூர்ந்து போகலாம் கண்கூசும் வெயிலின் பதாகையின் கீழ் நிரந்தரமானதோர் ஒற்றைப் புறாவாகலாம் காட்டின் திக்கற்ற வெளியில் ஒரு மதம் கொண்ட யானையாகலாம் அவரற்ற உலகில் காலத்தை மெல்ல மெல்ல கொன்று தின்னும் கரையான் ஆகலாம் இரவழியாத பொழுதுகளால் என் வீடு வழிந்து நிறையலாம் மழை சாரை சாரையாய் கண்ணின் வீதிகளை நனைக்கலாம் புற்களின் மென்படுகையில் நுனிப்பாதங்களை ஊன்றியது போல் இனி எல்லாமும் முதலிலிருந்து தொடங்கப்படவேண்டும் ஆனால் ஏனோ தொடங்கப்பட்ட இடத்திலேயே நெடுஞ்சாலைகளை அரைக்கின்றன சக்கரங்கள்.

குட்டி ரேவதி

கதை நெய்தல்

ஆறு மாதங்களாக ஒரு திரைப்படத்திற்குக் கதை நெய்யும், வசனம் எழுதும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். மிகவும் உவப்பான அனுபவமாக இருந்தது. கதை உருவாகும் போதே பல கதாபாத்திரங்கள் தோன்றுவதும் மறைவதும் தங்கள் கைகளை நம் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதும் என புது விதமான அனுபவத்தைக் கொடுத்தது. கதையின் போக்குகள் நாளுக்கு நாள் மாறியவாறே இருக்கும். கதாபாத்திரங்கள் முழுமையாக உருப்பெறுவது படத்தின் முதல் திரைப்பதிப்பு உருவாகும் வரையிலும் தொடரும். அந்தப் படம் தந்த அனுபவத்திலும் ஊக்கத்திலும் இப்பொழுதும் சென்ற மாதம் முதல் மற்றுமொரு திரைப்படத்திற்குக் கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

தற்காலத் தமிழ் சினிமாவின் சம்பிரதாயங்களுக்கும் நியாயங்களுக்கும் உட்பட்டு அந்தக் கதா பாத்திரங்களின் தலை சீவப்படும். பொட்டு வைக்கப்படும். குணச்சித்திரங்கள் கதையின் வழியாக உருவேற்றப்படும். நடிகர்கள் அந்தக் கதா பாத்திரங்களுக்குள் புகுந்து கொண்டு அவற்றின் கண்களைத் திறந்து விடுவர். நம் சிந்தனையின் இடைப்பட்ட நினைவு வெளிகளிலிருந்தெல்லாம் அக்கதாபாத்திரங்கள் தோன்றும் தருணம் மிகவும் உற்சாகம் கொப்புளிக்கக் கூடியது. இன்னொரு கதாசிரியருடன் எனது இப்பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர் தினம் தினம் கதையை தொடக்கத்திலிருந்தே சொல்லத் தொடங்குவார். கதையின் போக்குகள் சீர்ப்படுமாறு அவர் சொல்வதும் இன்னும் இன்னும் கற்பனையைச் செழுமையாக்குவதும் உற்சாகமான பணியாக இருக்கும். கதைப் போக்கைச் செதுக்குதல் என்று சொல்லலாம். மாறி மாறி கதாபாத்திரங்களின் உள்ளுலகை உருவாக்குவதில் எங்கள் இருவருக்கும் உண்டாகும் ஈடுபாடும் வேகமும் எங்களைக் கதைக்குள் தலைகுப்புற விழச்செய்வது போல் நாங்கள் நிற்கும் தரையை இழுப்பதையும் உணர்வோம். கதைக்குள் பாய்ச்சலுடன் குதித்து மூள்கித் திளைப்பதும் எதிர் நீச்சலடிப்பதும் எனக்குப் பிடித்தமானதாய் இருப்பதால் மீண்டும் மீண்டும் இந்தப் பணியைத் தேடித் தேடித் தொடர்கிறேன்.

அவரும் நானும் அதிகாலையிலேயே ஒரு பெரிய உணவு விடுதியில் சந்திப்போம். அவர் வீட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அந்த உணவு விடுதிக்கு ஓட்ட கதியில் வருவார். தினமும் ஓடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ஓட்டப் பழக்கம் கற்பனையின் ஊற்றுக்கு ஆரோக்கியமானது என்று கூறுவார். நிறைய கதைக் காட்சிகளை அவ்வாறு ஓடி வரும் போது தான் கண்டடைவதாகக் கூறுவார். எனக்கு நீண்ட தூரம் நடந்து செல்வது அம்மாதிரியான அனுபவத்தைக் கொடுப்பதாக உணர்ந்திருக்கிறேன்.


கதை நெய்தல் கடுமையான உழைப்பையும் மனம் குவிந்த நிலையையும் வேண்டுவது. கற்பனையின் பாய்ச்சலும் யதார்த்தத்துடனான தொடர்ச்சியும் பேணவேண்டுவது. இந்நிலையில் உருவாகும் கதை வெறும் கதை சொல்லலை மட்டுமே பணியாகக் கொண்டிருப்பதில்லை. இயக்குநர் அல்லது கதாசிரியர் உணர்ந்த அனுபவத்தை பார்வையாளர்க்கு வாசகர்க்கு கடத்துதலாகவும் இருக்கலாம். அப்படியான மெய்ம்மையான திரைப்படங்கள் தமிழில் மிக மிகக் குறைவு. கதைக்காக ரூம் போட்டு யோசிப்பவர்களிடம் அனுபவ விளைச்சலும் குறைவாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


தீவிரமான ஈடுபாட்டைக் கோரும் எந்தப் பணியும் உலோகாயத சம்பவங்களில் இருந்து நம்மை விடுவிக்கின்றன. அப்பொழுது புனைவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே கூடுபாயும் நிலையை அடைகிறோம். முந்தைய திரைப்படத்திற்கு ஒரு வசனகர்த்தாவுடன் இணைந்து வேலை செய்யும் அனுபவம் கிடைத்தது. அவர் ஒவ்வொரு கதாபத்திரத்தையும் பக்கம் பக்கமாக வசனங்களால் நிறைப்பவர். அவருடைய பாத்திரங்களால் அமைதியாக ஒரு விஷயத்தை வெளிப்படுத்தவே முடியாது. கேட்டால் சொல்வார், ‘தியேட்டர் சென்று தமிழில் வரும் எல்லா திரைப்படங்களையும் பாருங்கள். வசனங்களால் தான் வசூல் பெட்டிகள் நிறைகின்றன’, என்று. ஆனால் மனித மனங்களை வசனங்கள் அற்ற உறவு நிலைகள் எப்படி வெல்லுகின்றன என்பதைத் திரைக்குக் கொண்டு வருவது தான் சினிமா விடுக்கும் சவால் என்பதே நான் புரிந்து கொண்டது.



குட்டி ரேவதி

இரண்டடுக்குச் சிந்தனை






பழங்களைத் தின்று விதைகளைக் கழிக்கும் போதேல்லாம் தேடுகிறேன் ஜன்னலுக்கு வெளியே அந்தப் பக்கம் ஒரு சிறு மண்நிலத்தை. ஆனால் விதைகள் எப்பொழுதும் சிமெண்ட் தரையைத் தான் மோதி உடைகின்றன.

ஏராளமான தோழிகள் வாழ்க்கையின் அந்தரங்கம் வரை தொட்டு விட்டு ஏதுமே நடவாதது போல் வெளியேறுகின்றனர், எனில் அவர்கள் ஆண்களிடம் அன்னியோன்யம் தொடுவது எப்படி?

மனதுக்குள் ஏராளமான கதைகளை வைத்திருந்தேன். ஆனால் காலத்தின் ஓட்டத்திலும் நெருக்கடியிலும் அக்கதைகள் எல்லாம் வெளியேறுவதற்கு வாய்ப்பின்றி கலைந்து குலைந்து ஒன்றோடு ஒன்றாய் பின்னிக் கொண்டு ஒரே கதையாய் ஆகிவிட்டன.

கவிதைகளை விவாதிப்பவரை விட, விளைவிப்பவரை விட கவிதைகளை வாசிப்பவர்கள் சமீபத்தில் அதிகமாகிவிட்டனர். அரங்கங்கள் அதிகமாகிவிட்டதால் இருக்கலாம். ஆனால் எழுதியவர்களே தம் கவிதைகளையே ஏன் வாசித்துக் கொண்டு இருக்க வேண்டும்?

வீடு நம்முடன் எப்பொழுதாவது தான் உரையாடுகிறது. வெளி நம்முடன் உரையாடி உரையாடிக் களிக்கிறது.

தன்னுடலுக்குள் தானே நுழைவதற்கான ஒரே வழி தான் மூச்சு என்று சித்தர்கள் ஆணித்தரமாகச் சொல்ல விரும்பியிருக்கலாம்.

தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளர்களுடன் எதையுமே பரிமாறிக்கொள்வதேயில்லை. அதுவே தனக்குத் தானே ஓயாமல் அர்த்தம் சலிக்கப் பேசி ஓய்ந்து போகின்றன. படம் முடிந்து எல்லோரும் வெளியேறிய பின் திரையரங்கின் தரையில் சிதறியிருக்கும் சோளப்பொரிகள் போல வறுபட்ட வெறுமையே எஞ்சியிருக்கிறது.

பழைய நிறைவேறாத நெருங்க அனுமதியாத காதல் நாளடைவில் மழையின் ஈரக்காற்றினால் பாசம்படர்ந்த தலையணையைப் போல.

தங்கைகள் விசித்திரமான பெண்கள். அக்காக்கள் தவற விட்ட கேளிக்கைகளை எல்லாம் தேடிப் பிடித்துக் கொண்டாடும் வாழ்க்கையை வரைந்து கொள்ள முடிகிறது அவர்களால்.

காதலர்கள் எல்லோரும் ஆண்களாயிருக்க வேண்டிய அவசியமில்லை, நண்பர்களெல்லோரும் பெண்களாயிருக்க வேண்டிய அவசியமுமில்லை என்ற நிலைக்கு உலகம் உய்வடைந்த பின் என் தனிமை எனக்கு மிகவும் அவசியமானதாயிற்று.

ஆண்களின் உரையாடல்கள் சலிப்பூட்டுபவையாக இருக்கின்றன. இரத்தக் கறைகள் படர்ந்த சுவர்களைப் போல எப்பொழுதோ நிகழ்ந்து முடிந்த வன்முறையை எப்பொழுதும் நினைவூட்டுவதாலோ என்னவோ?

எனக்கான சென்னை தொடங்குவது, என் தோழிகளுடன் சேர்ந்து காபி அருந்தும் இடத்திலிருந்தும் மனோவுடன் இரண்டாம் காட்சி திரைப்படம் பார்த்துத் திரும்பும் தருணத்திலிருந்தும்

நீண்ட பயணங்கள் தாம் நினைவுகள் சலித்த அகன்ற வெளியை கொடையளிக்கின்றன. ஆனால் அவை தூரத்தால் மட்டுமே வரையப்படுவதில்லை. நினைவுகளினூடான பயண சிரத்தையையும்.



குட்டி ரேவதி

புனைவு

முன்பு போல் நீயும் நானுமினி வாழ இயலாது என்றுன்
உதடுகளும் விரல்களும் ஒரு சேர பகன்ற சமயம்
வலிகளை கொதிக்கும் தேநீர் இலைகளென்றெண்ணி
இனி ஒரு போதும் பருகப் போவதில்லை என்றும்
கண்ணாடி தாக்குண்டு உடைந்து சிதறிக் கிடந்ததான
ஓர் அவலம் பற்றிய வெளியிலிருந்து
வேறு வேறு கதவுகளைத் திறந்து பிரிந்தோம்
வேறு வேறு புனைவுகளின் எலும்புக் கூடுகள் வழியே
இருமையான காலங்களைத் திறந்தோம்
கதைகளின் பக்கங்கள் நீரலைகளால் ஆனவை போல
கண்ணீருக்கும் தாகத்துக்கும் இடையே நம் இரவுகள் புரண்டன
நல்ல வேளையாகக் கனவுகளுக்குள் புனைவுகள் நுழைய விதியில்லை
பாறை மிகுந்த வெளியில் கண்ணீர்க் கிணறுகள் திறப்பதை
நானும் ஒப்பவில்லை நீயும் விரும்பவில்லை
நெடுகத் திறந்த புனைவுகளில் மனித ஆவிகளைச் சுமந்து
மரங்களின் கபால உச்சிகள் அங்குமிங்கும் அலைந்தன
அவற்றின் மீது சிந்திக் கொண்டிருந்த நிலவின் ஒளி
புனைவுக்கான விதைகளைப் பருவமெய்தச் செய்தது
இருவரும் வேறு வேறு கதவுகள் திறக்க ஓரிடம் வந்து
எதிரெதிர் கண்டோம் நம்மை நாம் இறுகப் பிணைய






குட்டி ரேவதி


கண்ணை அவிழ்க்கும் கவிதை

சமீபத்தில் எம்.ஏ.நுஃமான் அவர்கள் தமிழாக்கம் செய்து தொகுத்திருந்த ‘பலஸ்தீனக் கவிதைகள்’ என்ற கவிதைக் தொகுப்பை வாசித்தேன். அப்போது என் மனதில் சிக்கிக்கொண்ட கவிதை இது:

கிட்டத்தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட்குறிப்பில் இருந்து

நாளை கட்டை அவிழ்ப்பார்கள்
எனக்கு யோசனையாக இருக்கிறது
எஞ்சியிருக்கும் என் ஒற்றைக் கண்ணால்
ஆப்பிள் பழத்தின் ஒரு பாதியை மட்டும்
தோடம் பழத்தின் ஒரு பாதியை மட்டும்
என் தாயின் பாதி முகத்தை மட்டும் தான்
என்னால் பார்க்க முடியுமா?

துப்பாக்கிக் குண்டை நான் பார்க்கவில்லை
என் தலைக்குள் வெடித்த
அதன் வலியை மட்டுமே உணர்ந்தேன்
பெரிய துப்பாக்கியுடன்
நடுங்கும் கைகளுடன்
கண்களில் ஒரு வெறித்த பார்வையுடன்
அந்த ராணுவ வீரன்
என் மனதில் அழியாதிருக்கிறான்
அதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை

என் மூடிய கண்களால் இவ்வளவு தெளிவாக
அவனைப் பார்க்க முடியுமென்றால்
எங்கள் தலைகளுக்குள்ளே
நாம் இழக்கும் கண்களை ஈடுசெய்ய
ஒன்னும் ஒரு சோடிக் கண்கள் உள்ளன போலும்

அடுத்த மாதம் என் பிறந்த நாளுக்கு
முற்றிலும் புதியதோர் கண்ணாடிக்கண்
எனக்குக் கிடைக்கும்
சில வேளை பொருட்கள் நடுவில் தடித்தும்
வட்டமாயும் தெரியக்கூடும்
நான் விளையாடும் கண்ணாடிக் குண்டுகள் ஊடே
உற்றுப் பார்த்திருக்கிறேன்
அவை உலகத்தை வினோதமாய்க் காட்டும்

நான் கேள்விப்பட்டேன்
ஒன்பது மாதக் குழந்தை ஒன்றும்
ஒற்றைக் கண்ணை இழந்த்தாக

என்னைச் சுட்ட ராணுவ வீரன் தான்
தன்னை உற்றுப் பார்க்கும்
சின்னஞ்சிறுமிகளைத் தேடும்
ஒரு ராணுவ வீரன் தான்-
அவளையும் சுட்டானோ என்று
எனக்கு யோசனையாக இருக்கிறது

நானோ வளர்ந்தவள்
கிட்டத்தட்ட நாலு வயது
போதிய அளவு நான்
வாழ்க்கையைப் பார்த்துள்ளேன்
ஆனால் அவளோ சின்னக் குழந்தை
எதுவும் அறியாச் சின்னக் குழந்தை



-இது ஹனான் மிக்காயில் அஷ்ஹாவி என்ற பலஸ்தீனப் பெண்கவிஞரின் கவிதை.
இக்கவிதையின் பின் குறிப்பு இதோ:
றஷா ஹெவ்சிய்யே 1988 மார்ச் மாதத்தில் ஒரு கண்ணை இழந்தாள். இஸ்ரேல் வீரன் ஒருவன் றப்பர் குண்டுகளால் சுட்ட போது அவள் கண்ணை இழக்க நேர்ந்தது. அச்சமயம் றமல்லாவுக்கு அண்மையில் உள்ள அல்-பிறெஹ் என்ற ஊரில் தன் பாட்டியின் வீட்டு மாடியில் றஷா நின்று கொண்டிருந்தாள். அச்சமயம் அதே போன்று வேறு இரண்டு குழந்தைகளும் (இருவரும் 9 மாத வயது உடையவர்கள்) ஒவ்வொரு கண்ணை இழந்தனர். இன்ரிபதா இயக்கத்தின் ஏழாவது மாதத் தொடக்கத்தில் சுமார் 40 பேர் இதே போல் பாதிக்கப்பட்டனர்.


ஒரு வித்தியாசமான பார்வைக் கோணத்தில் அஷ்ஹாவி இக்கவிதையைச் செதுக்கியுள்ளார். இராணுவ பயங்கரவாதத்தின் அவலத்தை ஒரு நிகழ்வின் வழியாகச் சொல்லும் போது அது வெறுமனே நிகழ்வைப் பற்றிய வர்ணனையாக இல்லாமல் அதன் காட்சி வெளிக்குள் நுழைவது அதன் அவலத்தை இன்னும் நுட்பமாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
குறிப்பாக,
‘ஆப்பிள் பழத்தின் ஒரு பாதியை மட்டும்’

‘என் மூடிய கண்களால் இவ்வளவு தெளிவாக
அவனைப் பார்க்க முடியுமென்றால்
எங்கள் தலைகளுக்குள்ளே
நாம் இழக்கும் கண்களை ஈடு செய்ய
இன்னும் ஒரு சோடிக் கண்கள் உள்ளன போலும்’

‘சில வேளை பொருட்கள் நடுவில் தடித்தும்
வட்டமாயும் தெரியக்கூடும்
நான் விளையாடும் கண்ணாடிக் குண்டுகள் ஊடே
உற்றுப் பார்த்திருக்கிறேன்’

போன்ற வரிகளின் ஊடாக கண்ணின், பார்வையின் விஞ்ஞானப் பரிமாணம் சித்திரம் பெற்றுத் தொடர்கிறது. நகை முரணாயும் யதார்த்தமாயும் காயத்தை விடுவிக்கும் இவரது சொற்கள் காயமுற்று ஒற்றைக்கண் பறிபோன நான்கு வயது குழந்தை கண்ட, காணும், காண்பதாய் கற்பனை செய்து கொள்ளும் உலகமாகிறது. வெளிப்படையான அல்லது மேலோட்டமான எதிர்ப்புணர்விலோ காட்சிச் சித்திரத்திலோ கவிதை உயிர்கொள்வதில்லை. மாறாக, உணர்வின் அடியாழங்களுக்குள் நீந்தும் திடகாத்திரமான பயணத்தை மேற்கொள்ளும் கவிஞரால் தான் கவிதைக்கு உயிர் தர முடிகிறது.

பல சமயங்களில் கவிஞர்கள் உணர்வுகளின் மோலோட்டமான ஒழுக்குகளோடு மட்டுமே பயணித்துவிட்டு கவிதையை எழுதும் போது அது வெறுமனே ஓர் அதிகாரத்தை எதிர்க்கும் பிரச்சாரமாக மட்டுமே முடிந்து விடுகிறது. இடையறாத உணர்வுகளின் பெருக்கத்தில் நீச்சலடித்து அகவெளி காணுவோரின் கவிதைகளில் இம்மாதிரியான மாயாஜாலங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இக்கவிஞர்கள் ஆகவே கவிதைகளைப் படைப்பதில் சோர்ந்து போவதேயில்லை.

நிகழ்வுக்கும் அனுபவத்திற்கும் இடையில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தினாலும் நிகழ்வையும் அனுபவத்தையும் விட இக்கவிதையில் கவிஞர் பயன்படுத்தும் ஒப்புமைகள் மிகுதியான அதிர்ச்சியை அளிக்கின்றன. அதே சமயம் அவ்வதிர்ச்சி என்றென்றும் அழியாயதாய் பொதியப்பட்டு காலந்தோறும் இடந்தோறும் படிக்குந்தோறும் துல்லியமாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் வழங்குவதாயும் வடிக்கப்பட்டுள்ளது.


இப்பொழுது மீண்டும் இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள்.




நன்றி: ‘அடையாளம்’ வெளியீடு


குட்டி ரேவதி

பரு

தழல் மேனி கட்டியணைத்து ஒரு கணமும் ஆசுவாசமாய்
அன்பை தின்னாதோரெல்லாம் உடலை ஒரு பருவாய் எண்ணி,
ஓடியோடி கண்ணாடி முன் நின்று கிள்ளிப்பார்க்கும் அருவருப்பாய்
ரகசியமாய் அவதியுறுகின்றனர்.

அல்லது
காடெல்லாம் களிப்போடு ஓடி வெறிகொண்டு திமிறும் நதியாய்
இரவுக்குள் தலைதெறிக்க இன்னோருடலை முத்தமிட்டு
வேகத்துடன் வாயிற்படியில் காசுவைத்து திரும்பிப்பாராது காலையைத்தொடுவர்




குட்டி ரேவதி

கண்ணீர்

அந்த அறை கொந்தளித்தது
தரையிலிருந்து எழும்பிய காற்று நெளிய
திரைகளை விரித்த பின்னும்
ஒளி சீறிக்கசிந்து
அலைகள் எழும்பியடங்கிய வண்ணம்
கரையில் எவருமிலாததாய் அறை
உறைந்த நாற்காலிகள்
வியர்த்து ஒழுகின
அந்தரத்தில் பறவைகளற்ற
ஓர் இறுக்கமான வானத்தை
எவ்வளவு நேரம் சுமப்பது?
பின்னொரு மழையை அழைத்தேன்
அறை குளிர




குட்டி ரேவதி

கவிதைக்கான பண்பாட்டு வெளி

சென்னையின் பண்பாட்டு வெளிகள் பற்றிய ஒரு விவாதத்தையும் கூட்டத்தையும் நிகழ்த்தியது சென்னை மாக்ஸ் முல்லர் பவன். எப்பொழுதேனும் இப்படிக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஒரு மன நிறைவோடு திரும்ப முடிவது ஆச்சரியமான விஷயம் தான். எட்டு உறுப்பினர் கொண்ட குழுவின் விவாதம் மூன்று மணி நேரம் நீடித்தது. ஆங்கிலத்தில் எழுதும் தமிழ்க் கவிஞர்களும், நாடக இயக்குநர்களும், கட்டிடக்கலைஞர்களும் என தமிழர்களும் ஜெர்மானியர்களுமாக இருந்த அக்கூட்டத்தில் தொடங்கிய விவாதம் இரவு உணவின் போதும் நீடித்தது.


பண்பாட்டு வெளி என்பது சென்னையில் நீங்கள் உங்கள் கலை அடையாளங்களையும் வெளிப்பாடுகளையும் நிகழ்த்துவதற்கான வெளி என்ற அர்த்தத்திலே தொடங்கியது. கவிதை வாசிப்பதற்கான வெளி என்பதைக் கண்டடைய சென்னையில் கவிஞர்களின் முயற்சிகள் எந்தெந்த வடிவில் இருக்கின்றன என்பதாகவும் அரசின் ஆளுகைக்குள் எப்படி அவை சிதைவுற்றும் பொருந்தா வடிவம் கொண்டும் எழுகின்றன என்பதும் என்னுடைய விவாதப் பொருளாக இருந்தது. நகரத்தின் மையத்திலிருந்து புறப்பட்டு தொலைதூர வெளிகளுக்கு இலக்கிய நுகர்வுக்காகச் செல்லும் இலக்கியவாதிகள் தம் சுயப்பிரச்சனைகளால் எப்படி இலக்கிய விவாதம் என்பது ஒரு பண்பாட்டு வெளியைக் கண்டடையாமலேயே போகிறது என்பதும் அதன் உட்பொருள். வேறுவேறு கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்நிகழ்வுகளின் போதாமை என்பதை கவிதை குறித்த நம் சமூகத்தின் அவமதிப்பைச் சுட்டுவதாகவே உணர்ந்தேன். சில சமயங்களில் பிரபல புத்தகக் கடைகளிலும் நவீன உணவகங்களிலும் காபிக் கடைகளிலும் நிகழ்த்தப்பட்ட கவிதை வாசிப்புகள் கூட அந்தந்த சூழலுக்குப் பழக்கமான ஓசைகளுடன் கரைந்து போயின.




கவிதையை எழுதுவதும் அக்கவிதையை பிறிதொரு கவிஞருக்கு வாசித்துக்காட்டுவதும் அதன் இயலில் உட்புகுந்து திளைத்து அதன் சிக்கல்களைக் களைவதுமான அனுபவத்திற்காக நான் மிகவும் ஏங்கியிருக்கிறேன். என்றாலும் தமிழகத்தில் கவிதை என்பது ஒரு மலிவான, நடுவாந்திரமான இலக்கிய வகையாக திரிபுற்று அரசியல் நாற்காலிகளுக்குக் கால்களாகி நிற்கின்றது. அவ்வண்ணமே அதிகாரத்தின் இருக்கையைப் பிடிக்கவும் ஏதுவாகிறது. இந்நிலையில் வெகுஜனப் புலத்திலிருந்து விலகி நின்று எல்லாவற்றையும் உள்வாங்கும் மனோபாவமே செவ்வியதொரு கவிஞனின் மனோபாவமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதற்கு நிறைய மூத்த கவிஞர்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் படைப்பாக்கத் தீவிரமும் எனக்கு உந்துசக்திகளாக இருக்கின்றன.


கவிதை வாசிப்பு இன்று எல்லா இலக்கிய அரசியல் நிகழ்வுகளிலும் கட்டாயமான ஒரு நிகழ்வாக இருப்பதே அதைக் காயடிக்கும் விஷயமாக மாறுவதையும் உணரமுடிகிறது. கவிதையை வாசித்தல் என்பது அது நிகழும் வெளிக்கேற்ற அர்த்தங்களை எடுப்பதாகவும் உணர்கிறேன். இந்நிலையில் அரசியல் கூட்டங்களின் கவியரங்கங்கள் துதிபாடல்களாக வார்த்தைத் தோரணங்களாக தொங்குகின்றன. கவிதையியல் என்பது ஒரு விவாதமாகவும் உரையாடலாகவும் எழும்பாத சமூகத்தில் இப்படி கவிதை என்பதும் கவிஞர் என்பவரும் மலிந்த அர்ததங்களோடு தான் அணுகப்படுவர் என்றும் எண்ணுகிறேன்.



சமீபத்தில் ‘உள்ளுறை’ என்ற கவிதை இதழை வாசிக்க நேர்ந்தது. கவிதையியல் குறித்த தொடக்கப்புள்ளிகளை அதில் பதிவு செய்துள்ளதைக் கண்டு மிகவும் உற்சாகமானேன். அதில் இடம்பெற்றிருந்த கவிதையியல் பற்றிய சீரிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஒரு பெரிய அனுபவத்தையும் இன்னும் இன்னும் மைய நீரோட்டத்திலிருந்து விலகி எழுத வேண்டும் என்ற உந்துதலையும் தந்தன. கவிதையின் அகழாய்வு தீராதது என்பதும் உறுதியாயிற்று. அந்த இதழைத் தேடிப்படித்துப் பாருங்களேன். எனது அபிமானத்திற்கு உகந்த கால. சுப்ரமணியனும் மோகன ரவிச்சந்திரனும் அதன் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்கள். இந்த இதழின் வழியாகக் கூட கவிதைக்கான ஒரு புதிய பண்பாட்டு வெளி விரிவதாக நான் உற்சாகமாகிறேன்.








குட்டி ரேவதி

கருவறை

கருவறையின் இருட்டில்
ஒளிர்கிறது எரியும் தனிமை
தீண்டா இருளும்
தனித்து விட்ட சடங்கும்
பின்னிரவு நேரமும்
மூழ்கடிக்கும் நிசப்தத்தில்
பீடத்தோடு தரித்தது வேர் ஆணி
பூமிக்கிழுத்த நின்றமேனி கனத்தில்
எதிரில் வந்து நின்றோனின்
கண்ணொளி வாயில் தாண்டி இழுக்க
கரம் பற்றி கருவறை கடக்க நினைத்தேன்
அவனோ என்னோடு நிலைப்பானில்லை
என்னையும் அவனோடு அழைப்பானில்லை
இரவிலும் சூரிய பீடம் வேகிறது
தொடை பிளந்து வழிகிறது
தேக்கி வைத்த சினக்குருதி
‘கருவறைக்குள் முளைக்காதே
கண் திறந்து சிசுவே
தெய்வமற்றுப் போகட்டும் இக்கருவறை’யென்று
நிலை வாயில் தாண்டினேன்
கருவறையைச் சூன்யமாக்கி





குட்டி ரேவதி

பாலாற்றின் மீது நடந்தோம்









பாலாறு, ஒரு விதவையின் வெள்ளைப்புடவையைப் போல உலர்ந்து வறண்டிருந்தது. இந்த உவமானம் இன்றைய தேதிக்குப் பழமையானது. ஆனால் தொன்மையான ஆற்றைக்குறிக்க இந்த உவமையைப் பயன்படுத்துவதில் தவறில்லை. பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்கம், முக்கூடல் அருகே ஒரு பிரச்சார நடை பயணம் ஒன்றை மேற்கொள்வது என்று முடிவு செய்திருந்தது. முக்கூடலிலிருந்து வாலாஜாபாத் நோக்கி நடந்து செல்வது என ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. 8.8.09 அன்று மாலை ஏறத்தாழ இருநூறு பேர் நடக்கத் தொடங்கினோம். அப்பொழுதும் உச்சி வெயில் தான். தலையில் கழுத்தில் உடலில் வியர்வையாய்க் காய்ந்தது. கோஷங்கள் நிகழ்கால இயற்கை அரசியல், தமிழக அரசியல், பாலாற்று விஷயத்தில் இந்தியா மற்றும் அண்டை மாநிலங்களின் அரசியல் என எல்லாம் கலந்தன. உற்சாகமான வேகத்துடன் ஏழெட்டுக் காவல்காரர்கள் உடன் வர நடக்கத் தொடங்கினோம். சிறிது தொலைவு சென்றதும் பிரச்சாரத்தில் இருந்த ஒருவர் காவல்காரரிடம் சொல்லிப் பார்த்தார், ‘ஐயா, இந்த வெயிலில் இவ்வளவு தொலைவு நீங்களும் ஏன் சிரமப்பட்டு நடக்க வேண்டாம்’. ஆனால் அவர் இன்னும் வேடிக்கையாக, ‘எனக்கு சர்க்கரை வியாதி, ஐயா. நடைப்பயிற்சி வேணுமின்னு டாக்டர் சொல்லியிருக்காரு. அதனால இப்படி நடந்தாத் தான் உண்டு.’




முக்கூடல் அருகே மணல் கொள்ளையர்கள் இன்னும் ஆற்றை அதன் மற்ற பகுதிகளைப் போல தோண்டியிருக்கவில்லை. அங்கு 18 அடியிலேயே கழிமண் இருப்பதாலும் பெருமணலாய் இருப்பதாலும் அவர்கள் இன்னும் அந்த ’சமூக நலப் பணி’யைத் தொடங்கியிருக்கவில்லை. வழியெங்கும் ஆயிரம் வருடங்களாய் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஆற்றில் அதன் நீரோட்டத்துடன் ஓடி ஓடிக் களித்த கூழாங்கற்களையும் சேகரித்துக் கொண்டே நடந்தேன். அந்தக் கற்களில் கூட ஆற்றின் வருடம் எழுதப்பட்டிருந்த்தைப் போல பழமையாய் ஒரு பறவையின் முட்டையை நினைவுப்படுத்துவதாயும் இருந்தன. அந்த ஆற்றில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளும் எங்கள் பின்னால் வெகு தூரத்திற்கு நடந்து வந்தன. எதிரில் வானம் மாலையின் தோரணங்களைக் நிகழ்த்தத் தொடங்கியிருந்தது. ஒளித்தூண்கள் வடக்கு தெற்கென தூரிகையால் வரைந்ததைப் போல இருபுறமும் சரிந்து வீழ்ந்தன. மெல்ல மெல்ல மேகங்களும் கூடின. வாலாஜாபாத்தை சென்று சேர்ந்த போது தூறல் கனத்தத் துளிகளாயிருந்தது.



இன்றைய நாளின் அதிகாலையில் எந்த ஊரைத் தொட்டாலும் கணவனும் மனைவியுமாக, அல்லது ஆணும் பெண்ணும் தனித்தனியாக மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் நடைப் பயிற்சியை மேற்கொள்வதைப் பார்க்கலாம். நடைப் பயிற்சி இதயத்திற்கு ஊக்கமும் மனதிற்கு உற்சாகமும் தரவல்லது. ஆனால் இம்மாதிரியான நடைப் பயணத்தின் கொடையை என்னென்பது? பரந்த வானத்தின் கீழே அகண்ட மணற்பரப்பின் மேலே நடந்து செல்வது. நூற்றுக்கணக்கான வேறுபட்ட வயதினர் ஒன்றாக இணைந்து இதில் ஈடுபடுவது. ஒரே நோக்கத்திற்காக ஒரே திசையை நோக்கி பயணிப்பதும் அந்நோக்கம் பற்றிய பாடல்களை பாடிக்கொண்டே செல்வதும், ஒருவித கூட்டுணர்வை எல்லோர் மனதிலும் கிளர்த்துகிறது. பறவைகள் இருபுறமும் வானத்தை அவ்வப்போது அளந்தன. ஆனால் ஆற்றில் நீந்திச் செல்வதற்குப் பதிலாக நடந்து செல்கிறோம். என்னவொரு கொடுமை!



ஆறுகள் மனித மனத்திற்கான லயத்தைக் கூட்டுபவை. ஆறுகள் மட்டுமன்று. எல்லாவிதமான நீர்நிலைகளும் அவ்விதமான இசைவை மனதிற்கு ஊட்டக் கூட்டியவை. இம்மாதிரியான வறண்ட பாழ்வெளிகள் அவற்றின் குணாம்சங்களையே மனத்திலும் வாழ்க்கையிலும் விதைக்கின்றன. ஆகவே தாம் ஆற்றங்கரை ஒத்த நாகரிகங்கள் மனித பரிணாமத்தை வளர்த்தெடுப்பதாய் இருந்தன, இன்றும் இருக்கின்றன. ஆறுகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத மனித சமூகம் வயிற்றை அறுத்துப் பேறு பார்ப்பது தான். மனிதர்கள் நீர்நிலைகள் பற்றிய நினைவுகளில் தாம் தமது பால்யத்தை வளர்த்தெடுத்திருக்கின்றனர். . ‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’. ஆறில்லாமல் போகும் போது அந்த ஆற்றைச் சார்ந்து வாழ்ந்த ஒட்டு மொத்த குமுகத்தின் வளமும் தூர்ந்து போகிறது. வாழ்வியலின் அழகியல் அழிந்து போகிறது. இயற்கையுடனான தனது பிணைப்பை அறுத்துக் கொள்கிறது. மனித மனமும் மற்ற உயிர்களின் இயக்கமும் தறிகெட்டுப் போகின்றன.


ஆற்றில் நடந்து செல்கையில் ஆங்காங்கே தவளைகள் சிறு குமிழிகளாய் கண்மிதக்க நீந்திக்கொண்டிருக்கும் குட்டைகள் தென்பட்டன. வேலிக்காத்தான் செடிகளும் எருக்குப் புதர்களும் கருவேல முள்மரங்களும் ஆற்றை ஆக்கிரமித்திருந்தன. மாடுகள் மேய்ந்த குளம்படிகள் பதிந்து ஆற்றின் பரப்பெங்கும் வரைபடங்களை ஏற்படுத்தியிருந்தன. எல்லாவற்றையும் மீறி ஒரு சூன்யம் அவ்விடமெங்கும் பரவி குரலற்றுக் கதறிக் கொண்டிருந்தது. ஆற்றின் நீர்ப்பெருக்கைக் கொண்டாடும் ஆடிப்பெருக்கை இந்த வறண்ட ஆற்றின் மத்தியில் கொண்டாடியிருந்தனர், கரையோரத்தில் வதியும் சில இருளர் பழங்குடியினர். வருடந்தோறும் ஆடிப்பெருக்கிற்கு காவிரியை வேடிக்கைப் பார்க்கச் செல்லும் நதியின் காதலி நான். காவிரி பார்க்கப் பார்க்கத் தீராத புத்துயிர்ப்பை அளிக்கும் அழகு கொண்டது. பாலாறு, அந்தக் காட்சி சித்திரத்திற்கு முற்றிலும் எதிராயிருந்தது. ஒரு தாயின் வயிற்றின் மீது நடந்து செல்வது போல இருந்தது.



காஞ்சி அமுதனும் சமூகச் செயல்பாட்டு இயக்கத்தின் துரையும் ஏற்கெனவே இந்தத் தொலைவை நடந்து சென்று நடை பயணத்தில் ஈடுபடும் மற்றவர்களாலும் நடக்க இயலுமா என சோதித்துப் பார்த்திருந்தனர். ஆற்றின் மணல் அலை காலை உள்ளுக்குள் இழுத்துச் சிரமப்படுத்துகிறது. வழியில் சில மணல் மேடுகளை ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. என்றாலும் ஓர் இயக்கம் முளை விட்டிருப்பதன் அடையாளமாக இருந்தது. மண்ணை கொள்ளையடிக்கும் அரச இயந்திரம் பாலாற்றைக் காத்திட என்ன செய்து விடப்போகிறது? மக்கள் தாம் திரண்டெழ வேண்டும்.

குட்டி ரேவதி

ஒரு பெண்ணியவாதியாக இயங்குவதென்பது...








பெண்ணியம் எனும் இயக்கத்துறை ஒரு தீவைப் போலவே இருந்தது. பெண்ணுரிமைக்கான இயக்கங்கள் முளைவிட்ட தொடக்கத்தில் அதற்கான சமூகத் தேவையை உணராமல் அதை விமர்சித்துப் பேசவே ஆங்காங்கே குழுக்கள் எழும்பின. பெண்ணுரிமைக்காகப் போராடுவதை தனது முழுநேரப் பணியாக எடுத்துக் கொள்பவர்களும் அகதிகளைப் போலவே இருக்க நேர்ந்தது. எவரோடும் தொடர்புப் படுத்திக் கொள்ள முடியாமல், எவரோடும் பொருந்த முடியாமல் ஆனால் தாம் தமது பயணப் பாதையாக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அர்ப்பணிப்போடு எப்பொழுதும் போலவே தொடர நேர்ந்தது. உலகெங்கும் அங்கும் இங்குமாய் சிலர் ஓயாது இயங்கியதன் பேரிலேயே பெண்ணியம் என்பது ஓர் இயக்கமாகியது.



ஆனால் எல்லா பெண்களுக்கும் பொதுவானதொரு சாலையை பெண்ணியப் பாதையாக கட்டமைக்க முடிவதில்லை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் சமூகப் பின்புலமும் வெவ்வேறான அதிகார அடுக்கில் எழுப்பப் பட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். பெண்ணியத்தின் முழுப் பரிமாணம் என்பதே கூட பெண்ணியச் சிந்தனையை வேறுவேறு களங்களில் அதாவது, கலை, இலக்கியம், அரசியல், வரலாறு மற்றும் பண்பாடுகளில் நின்று இயக்கும் போது தான் சாத்தியம் . பணியிடங்களில் பெண்ணுக்கு விடுதலையின் சூத்திரங்களாய் சொல்லப் படுபவை, ‘இல்லத்தரசி’களாய் இருப்பவர்களின் விடுதலைக்குப் பொருந்தாமலும், உதவாமலும் போகலாம் என்பது என் தொடர்ந்த பணியில் நான் கண்டறிந்தவை. மேலும் பெண்ணின் விடுதலைக்கு அவள் கல்வியோ, பொருளாதார பலமோ கூட போதவில்லை. அவள் தன் ஆளுமையை கண்டறிந்து அதன் வழி செல்லவேண்டியிருக்கிறது. பெண்கள் பன்முகங்கள் எடுக்க வேண்டிய உலகில் பெண்ணின் ஆற்றாமைக்கும் அறியாமைக்கும் எவரும் பொறுப்பேற்க வேண்டிய அவசியமுமில்லை. அத்தகைய வாழ்க்கைப் பயணம் ஒரு தனிமைப் பயணமாக இருக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்துமில்லை. சமூகத்தின் அடுக்குகளின் இடுக்குகளில் வேரூன்றியிருக்கும் அதிகார முளைகளைப் பற்றி அறியாமல் பெண்ணுக்குப் புறவயமான தீர்வுகளை மட்டுமே வழங்கிவிடுவது, அவளுக்கு மட்டுமே கிட்டும் தற்காலிகமான பலனே அன்றி அது அவளொட்டிய சமூகத்திற்கான விடுதலையாக இருக்காது. ஆனால் இப்பொழுது அவள் வாழும் நிலத்தினுடன் அவள் வரலாற்றையும் பண்பாட்டையும் இணைத்துப் பார்க்கையில் அவள் மீதான ஒடுக்கு முறையின் வடிவங்களை மிகத் துல்லியமாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ள முடிகிறது.



பெண் இன்றைய காலத்தின் எல்லைகளை எந்த அளவுக்கு அனுபவிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறாள் என்று கேள்வி எழுப்பும் அதே நேரத்தில் எவ்வாறெல்லாம் அவற்றைத் தொடர்வதற்கான பிரயத்தனங்களை அவளும் எடுக்கிறாள் என்பதும் முக்கியமான விஷயமாகிறது. அதற்கு ஆண்மைய எதிர்ப்பாளர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆணின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் இருப்பையும் மட்டுமே ஊக்கப்படுத்தும் சமூக அலகுகளான திருமணம், மதம், குடும்பம், சாதி ஆகியவற்றையும் தொடர்ந்து எதிர்த்தலும் அவற்றின் இறுக்கத்தைத் தளர்த்தப் போராடுவதும் அவற்றை மறு கட்டமைப்பு செய்வதும் மிகமிக அவசியம். ஏனெனில் தன் சுய வாழ்க்கையும் கட்டுண்டு கிடக்கும் திருமணம், குடும்பம் இன்ன பிறவற்றிலிருந்து கொண்டே தான் அந்த சமூக அலகுகளை விமர்சிக்க வேண்டியிருக்கிறது. தொடக்கத்தில் ஆண்களைப் பட்டவர்த்தனமாக நேரடியாக எதிர்த்த பெண்ணியவாதிகளும் பின்பு ஆண்களோடு நிகர் நின்று போராடத் துணிந்தனர்.



ஆண்கள், பெண்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முனையும் போதெல்லாம் இயற்கையை விடவும் உயர்ந்தவர்கள் என்றும் நிரூபிக்க முயல்கிறார்கள். ஆகவே பெண்களே சூழலியல் போராளிகளாகவும் ஆனார்கள். இன்று பெரும்பாலான சூழலிய இயக்கங்கள் பெண்களால் தொடங்கப்பட்டு இயக்கப்படுபவை. அந்தந்த சூழலுக்கு ஏற்ற இயக்கங்களைக் கட்டமைப்பவர்களாக உலகெங்கும் இருப்பதும் பெண்களே. இவர்கள் இதை தங்களின் சொந்த, அன்றாட வாழ்க்கையுடன் தங்களின் குடும்பம், தனிப்பட்ட தனது இலட்சியம், தனது அலுவலகப் பணி என எல்லா இடங்களிலும் தனது ஆளுமையை செதுக்கிக் கொள்வதற்கும் தனது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கும் செய்கிறார்கள். இத்தகைய பிராந்திய அளவிலான உரிமைப் போராட்டங்களும் சிறிய அளவிலான கிளர்ச்சிகளுமே மிக அடிப்படையான பெண்ணுரிமைகளைப் பெறுவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தந்துள்ளன.



பெண்ணியவாதிகள் ஆண் வெறுப்பாளர்களாகப் பார்க்கப்பட்ட தொடக்கக் கால தொல்லைகளெல்லாம் உதிர்ந்து இன்று பெண்ணும் ஆணும் பொது நோக்கத்துடன் ஒரே தெருவில் நின்று போராடத் தலைப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமென்பது ஆணின் செழுமையான வாழ்க்கைக்கும் ஏற்றது என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது.

ஒரு பெண்ணியவாதியாக இயங்குவதென்பது,

‘தூக்கியெறியப்படாத ஒரு கேள்வி’*யுடன் தொடங்குகிறது. அதுமட்டுமன்றி,

சமூகத்தில் பலவிதமான பரிமாணங்களை தனக்கென நிலைநிறுத்த வேண்டியிருப்பது.

பொதுவெளியையும் அந்தரங்க வெளியையும் எப்பொழுதும் இணைத்தே அணுகுவது.

பெண் – ஆண் மனதில் இயங்கும் ஒடுக்குமுறைகளை, அடக்கு முறைகளைக் களையும் வண்ணம் சமூக அலகுகளை வடிவமைப்பது

சலிப்பூட்டும் நடுவாந்திரமான அழகியலுக்கு எதிரான அழகியலை உருவாக்கவேண்டியிருப்பது.

புவியியலுக்கு ஏற்ற பெண்ணுரிமைகளை சம்பாதிப்பதும் தன்னையொத்தோருக்குப் பெற்றுத் தருவதும்.

இடைவிடாமல் சுய சிந்தனையின் வழியில் அரசியலின் குறுக்கீடுகளற்று பயணிப்பது.

வரலாற்றை மறு வாசிப்பு செய்வது.

பண்பாடு என்பது மானுடத்தின் பண்புகளை மேன்மைப்படுத்துவதற்கே என்றறிந்து உழைப்பது.

தொடர்ந்து அறிவுத் துறையிலும் படைப்பாக்க வெளியிலும் பங்கெடுத்துக் கொண்டு தான் கண்டடைந்ததைப் பாரபட்சமற்று பகிர்ந்து கொள்வது.



* ஈழக்கவிஞர் சிவரமணியின் கவிதை வரி.






குட்டி ரேவதி

சுடும் பாதங்கள்






புத்தனுக்கும் சுடும் பாதங்கள்

ஆலங்கிளைக்கூந்தலை அள்ளி முடிந்த குவேனி
சிம்மத்தை மோகித்து தேசம் மாறி அலைந்தாள்
அவள் விதைத்த மகவோ
அச்சிம்மத்தையே இரையாக்கி
சுக்கானிழந்த கப்பலாய் திசை களைத்தான்

பாதங்களின் திசையழித்து நோக்கழித்து
காடெரித்து மரம் தின்று இன்றும்
விழி மிதித்து குழந்தைகளையும் சவைத்து
மாங்கொட்டை சூப்பி எரிந்த மண்வெளியாய்
மிதக்கச்செய்கிறான் நிலப்பிண்டத்தை

உடல் பாளங்களாக வெடித்து
கண்ணீர் திரளும் எம்முடல் நிலத்தில்
நடந்தேகச்சொல்லுங்கள் அவனை
கதிர்காமத்துறையும் கடவுளையும்
மாற்றிக்கொண்டு

புத்தனுக்கும் சுடும் பாதங்கள்






குட்டி ரேவதி

வெயிலென உதிரும் கொன்றைப்பூக்கள்


நாம் சந்தித்து இரு வருடங்களிருக்கும். உனது முகம் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவிலிருந்து அதன் செழுமையை இழந்ததை நான் உணர்ந்து கொண்டுதானிருந்தேன். உனது காதையொட்டிய நரைமுடிகள் இன்னும் பழுத்திருக்கலாம். நடை அசைவுகள் மாறியிருக்கலாம். குறுகிய மெலிந்த உடல் எனது நினைவுகளில் காலாகாலங்களில் நான் உன்னைப்பற்றிக்கொண்டிருந்த நினைவுகளுக்கேற்றவாறு தன்மைகள் மாறிக்கொண்டிருந்தது. இன்றும் ஆனால் உன் நினைவின் வழியாக தரும் ஆதூரம் தேய்ந்து போகாமல் இருப்பது வியப்பில்லை. எல்லாம் தனிமனிதனாக தன்னை தினந்தோறும் தேற்றிக்கொள்வதற்கு இப்பிரபஞ்சம் அளிக்கும் பயிற்சியும் விழிப்பும் என நான் அறிவேன்.


காலம் வேகமாய் நகர்வது குறித்த எனது புரிதலுக்கு அடிப்படையாக இருப்பது நாம் தான். உன்னை சந்தித்து இருவருடங்களாகிவிட்டன. பல மாதங்கள் தொடர்ச்சியாக நாமே நம்மை மறந்தே போய்விடுகிறோம். வியப்புமில்லை. அதிர்ச்சியுமில்லை. வெயில் மழை புழுக்கம் வியர்வை வெறுப்பு சோர்வு தப்பித்தல் என நம்மை பருவங்கள் கடத்திக்கொண்டே செல்கின்றன. ஒருவரிடமிருந்து ஒருவரை தூரத்திற்கு அல்ல. மிக அருகினில். நெருக்கடியான தருணங்களில் இறுக்கிக்கொள்ளும் ஆசைகள் மெலெழுந்தவாறு நுரைத்து அப்படியே தணிந்து நீர்த்தும் போய்விடும்.


எவருக்கும் புரியும் படியாக சொல்வது கடினமாகத்தான் இருக்கும். உடலை இணைக்காத உறவில் எவருக்கும் நம்பிக்கை இல்லை. உடலை ஒரு முகமூடியாக எல்லோரும் வைத்துக்கொள்வது நகைப்பானது. ஆனால் உடல் தன்னை ஒரு கனவுக்குப்போல திறந்த வெளியாக மாற்றிக்கொள்கிறது. நாம் ஒருவரையொருவர் தொட்டது கூட இல்லை. உடலோடு பேச்சை இழைத்து இழைத்துப்பார்த்ததுமில்லை. ஒருவருக்கொருவர் பரிமாறவென்று வைத்திருக்கும் சொற்கள் பூக்களைப்போல இந்த உடலிலிருந்து உதிரும் வரை காத்திருப்போம். பிறகு பேசிக்கொள்வோம். நதியின் கரைகளைப்பற்றிக்கொண்டிருக்கும் பருத்த மரங்களின் வேர்களைப்போல தடித்து புடைத்துப்போயிருக்கிறது நமது நம்பிக்கை. நாம் இதற்கு மேல் பேசாமல் கூட போகலாம். ஏனெனில் இரவின் மீது கவியும் நட்சத்திரங்களை நோக்கி நான் உனக்காக எதையும் சேமித்து வைப்பதேயில்லை.


பழகும்வரை தாம் தேநீர்க் கோப்பைகள் குறித்த எச்சில் பட்டுவிடக்கூடாது எனும் தெளிவான வரையறைகள், உரையாடல்களுக்கிடையிலும் உயர்ந்து எழும்பிய வண்ணம். பின் அசப்பில் இரு கோப்பைகளும் தமது பருமனை இழந்து மற்றொன்றோடு கலந்து கை எந்த கோப்பையையும் தேடிச்சென்று தொண்டையை நனைத்துக்கொள்ளும் படியாக கரைந்து விடும். அப்படித்தான் இன்று தோழியின் கோப்பைத் தேநீரை எடுத்துப்பருகினேன்.


நினைவைத் துழாவிப்பார்த்தால் உன்னைப்பற்றிய எல்லாமே அரைபட்டு அரைபட்டு மாவாகிப் பறந்து போயின. நீ எங்கேனும் உயிரொன்றுடன் இலங்குகிறாயா என்பதும் சந்தேகம் தான். சிறுமைகளை நினைவில் ஏந்திக்கொள்ளும் பழக்கத்தைத் தவிர்க்க ஒருவரையொருவர் தவிர்க்கத்தொடங்கி ஒரு பெரிய இடைவெளி உறவை விலக்கிவைத்தது. இதுவரை உறங்கி விழிக்கக் கண்ட மேற்கூரைகள் எல்லாம் காலத்தை இறுகிப்போகச் செய்த உணர்வுகளுடன் உயரம் எம்பியவை. அப்பொழுதெல்லாம் மேற்கூரையைப்போல வண்ண வண்ண காலைகளாக விடிந்து பரவசப்படுத்திப்பார்க்கிறது ஆழமாய் வேரோடி அடர்ந்திருக்கும் உனது பார்வை. நம் பார்வைகள் இரண்டும் ஒன்றோடொன்று விரிந்து தழுவி கிளைபரப்பி சூழலைக்கணக்கில் கொண்டு பிரிந்து வளைவுகளுடன் ஓர் அடர்ந்த காடாகியது.


சரியாகச்சொன்னால் மூன்றுமுறை கூட நாம் தொடர்ந்து சந்தித்திருப்போம் என்று கூறமுடியாது. சந்திப்புகளின் எல்லைகளை தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் நம்மை அண்டி இருப்பவருக்குத்தான் அதிகமாய் இருக்கிறது. முழுநாளும் காலை முதல் மாலை வரை எத்தனை நாட்கள் விரயமாய் கழிந்திருக்கின்றன. சூரியன் உதயமாகி ஏறுவதைப் பார்த்திருக்கமாட்டோம். வெளியே சென்று சாலைகளின் நிகழ்வுகளைக் கடக்காமல் வீட்டிலே சோம்பலாய் மெத்தையில் புரண்டு புரண்டு நினைவுகள் கூரைகளை இடித்து இடித்துக் களைத்துப் போகும்வரை தொடர்ந்து நெஞ்சம் முனகிக் கொண்டேயிருந்திருக்கும். காகமோ குருவியோ ஒற்றையாய் வந்து ஜன்னல் கம்பியை சில முறைகள் அலகால் கொத்திப் பார்த்து விழி விரைக்க உட்கார்ந்து போயிருக்கும். இரவும் தீவிரமாய்ச் சுழலும் மின்விசிறியின் கீழே வியர்வை உடையை ஈரப்படுத்தப் படுத்துக் கிடந்திருப்போம்.


நெஞ்சை அடைத்துக்கொண்டிருக்கும் குரல்கள் சொற்களற்றவை. அர்த்தங்களுமற்றவை. விரைத்துப்போன இமைகள் கருவேல முட்கள் என்பதெல்லாம் பழைய உவமானங்கள். நினைவுகள் தகரப்பலகையைபோல நெஞ்சை ஆக்கி இரும்பு ஆணியால் கீறிக்கீறிப் பார்ப்பவை. சரி போகட்டும்.

இன்று நீ அழைத்துவிட்டாய். உனது பயணங்கள் எங்கிருந்து எங்கு என வர்ணனை தொனிக்க விவரித்தாய். நான் கேட்டுக்கொண்டிருந்தேன், எனது பயணங்களின் மென்சிறகுகள் துளிர் விட்ட வண்ணம். உச்சி வெயிலில் கதவடைத்திருந்த, நூற்றாண்டுகள் கடந்த கோயிலின் வாசலில் உறங்கிக்கிடந்த கதையும் சொன்னாய். இருவர் தலைமீதும் கொன்றைப் பூக்கள் தூறலாய்க் கொட்டும் நான் கண்ட கனவை மீண்டும் நீ அழைக்கும் போது நான் சொல்ல மறந்து போகலாம்.


குட்டி ரேவதி

திரைக்கதையும் கதைசொல்லலும்




பூமியின் மீது பல்லாயிரம் வருடங்களாகக் கதை சொல்லுதல் என்பது ஒரு கலையாக இருந்தாலும் வாழ்க்கையின் நவீனத்துக்கு ஏற்றாற்போன்றும் அப்பொழுது பீடித்திருக்கும் அரசியலுக்கு ஏற்பவும் சொல்லப்படும் ஊடகத்திற்கு ஏற்பவும் கதை சொல்லப்படும் முறை மாறிக் கொண்டே இருக்கிறது. இலக்கியத்தின் உச்சபட்ச தகுதியான கதை சொல்லும் திறன் என்பது குகை ஓவியம் போன்ற கலை வடிவங்களை எப்பொழுதோ பற்றிக் கொண்டன என்றாலும், என்னை சுவாரசியப் படுத்துவதென்பது திரைப்படத்தில் ஒரு கதை, சொல்லப்படும் முறையாலும் நுட்பத்தாலும் பெரிய அளவில் வேறுபடுவதால் தான் இன்றைய உலகையே திரைப்படம் என்னும் காட்சி ஊடகம் வெகுஜனத்தை ஆட்டுவிக்கிறது. காலந்தோறும் வளர்ச்சியுறும் நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை தன்னுள் வாங்கிக் கொண்டு திரைப்படம் என்பது கதை சொல்லலை இன்னும் இன்னும் சுவாரசியப்படுத்துகிறது. அத்துடன் சொல்லப்படுவது ஒரே கதையென்றாலும் வேறு வேறு நுட்பமான அதன் வெளிகளையும் காட்சிப்படுத்துகிறது. அல்லது மிகுதியான கற்பனை வெளிகளுக்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.


மேற்சொன்ன அத்துணை விஷயங்களையும் கீஸ்லோவ்ஸ்கியின் மூன்று நிறங்கள் -சிவப்பு என்ற திரைப்படத்தைப் பார்க்கும் போது நுகரலாம். அதை எப்படியும் பத்து தடவைக்கு மேலாக ஒரு பாடத்தைப் படிப்பது போலவே நுணுக்கமாய் கவனித்திருக்கிறேன். கதையில் மூன்று வித்தியாசமான கதைப்பின்னல்கள் ஒன்றின் மீது ஒன்றாய் படரும்படி, ஒன்றோடொன்று பொருந்தும் படி, ஒன்றுக்குள் மற்றொன்று அடங்கி விடும்படியான திரைக்கதை. படத்தின் முழுக்கதையையும் இந்தப் பத்திக்குள் சொல்வது மிகக் கடினம். ஒரு முறை பார்த்துவிட்டால் பார்த்தவர்கள் அனைவரும் ஒரு தளத்திலிருந்து கதைப் பின்னல்களை விவரித்துப் பேசுவது என்பது எளிதாக இருக்கும். அதனினும், மனித சிந்தனைக்கு கதைசொல்லல் முறையை தெளிவாக்கும் பயிற்சியாகவும் இருக்கும். படத்தில் இடம்பெறும் மூன்று முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று நேரடியாகப் படத்தில் இடம்பெறுவதில்லை. தொலைபேசி வழியாகக் கேட்கப்படும் குரலாகவே பதிவாகிறது. என்றாலும் மூன்று கதாபாத்திரங்களும் ஒன்றின் சாயலை மற்றொன்று ஏற்கும் படியாக சொல்லப்பட்டிருப்பது திரைக்கதை வடிவத்திற்கேயான சிறப்பியல்பு எனலாம். எந்தக் காட்சியில் அந்தக் கதாபாத்திரங்கள் மற்ற கதாபாத்திரத்தின் சாயலை ஏற்கின்றது, அல்லது இழக்கின்றது என்பதை படத்தைத் துல்லியமாகப் பார்ப்பவர் கண்டுபிடித்துவிட முடியும்.


அதே மாதிரி ஒரே சமயத்தில் படத்தின் முதிய கதாபாத்திரமும், இடம் பெறும் இளம் கதாபாத்திரமும் ஒரே கதாபாத்திரத்தின் முதிய, இளம் கதாபாத்திரங்களாக எண்ணத் தோன்றும் படியான திரைக்கதையாகவும் இருக்கிறது. ஒரு நேர்க்கோட்டுக் கதை மரபிலிருந்து திடச் சிக்கலான கதை சொல்லலையும் அதன் வழி அரசியலையும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கீஸ்லோவ்ஸ்கி. அத்திரைப் படத்தில் கதை மேற்கொள்ளும் மனித உளவியல், உறவுகள், அன்பு பற்றிய அணுகுமுறைகளைப் பற்றி திரைக்கதைக்கு நிகரான அளவுக்கு செறிவாக விவாதிப்பதற்கும் விஷயங்கள் இருப்பினும் என்னை மிகக் கவர்ந்தது அத்திரைப்படத்தில் ஆளப்பட்டுள்ள கதை சொல்லல் உத்தி தான். இம்மாதிரியான கதை சொல்லல் முறையால் மனவெளி விரிவடைவதோடு மனிதனின் ஆழ்மனச்சிக்கலை ஒத்த பின்னலான அமைப்பையே கொண்ட இக்கதை, அம்மனச்சிக்கலை அவிழ்க்கவும் செய்கின்றது.


நேர்க்கோட்டுக் கதையிலிருந்து கதையின் கட்டமைப்பை மாற்றியமைக்க உள்ளார்ந்த பயிற்சியும் வாழ்வியலை அயராது விசாரிக்கும் பார்வையும் அவசியப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களின் குறைபாடுகள் என்பது எனக்கு இவையாகவே தோன்றுகின்றன. கதையை அணுகும் முறைகளால் பல சமயங்களில் வெற்றி கொள்ளும் திரைப்படங்களே கூட சமூக்கத்தை அரைகுறையாக உள்வாங்கிக் கொண்ட பார்வையால் பார்வையாளர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தமிழ் மொழியில் கதை சொல்லும் மரபு, இத்தகைய தட்டையானதாய் இருந்ததில்லை. சிலப்பதிகாரம் தனது காவியத் தன்மையில் இன்றும் வெற்றி கொள்வதற்கு காரணம் அதன் சித்திரக் கட்டமைப்பே. மேலும் பூடகமாகச் சொல்லல், ஒன்றைச் சொல்லி தொடர்புடையதைச் சொல்லாதிருத்தல், பார்வையாளரின் அனுமானங்களுக்கும் கற்பனைகளுக்கும் பெரும்பாலான உரையாடல்களை விட்டு விடுதல், அவர்களின் கற்பனை வெளியை கதை நகருந்தோறும் வளமாக்கிக் கொண்டே கதையை நகர்த்தல், வார்த்தைகளைக் குறைத்த பாணிகளையும் சைகைகளையும் குறிப்புகளையும் கொண்டிருத்தல் போன்ற நுட்பங்களைக் கொண்டு இயங்கும் கதை மரபு நமது.


இன்றும் நாட்டுப்புறக் கதை சொல்லிகள் இந்த நுட்பங்களை இழக்காமல் இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் கதையின் மையக் கதாபாத்திரங்கள் ஒரே சமயத்தில் பல கதாபாத்திரங்களாக மாறுவது என்பது கதை கேட்பவனை நுட்பமான உளவியல் வெளிக்குள் அழைத்துச் செல்வதற்கான உத்தியே. மனித உடலின் இயற்பியல் எல்லையை இயன்ற வரை விரிப்பதும் மானுடத்தின் அசாத்திய சாத்தியங்களைப் பற்றிய அக்கறையோடு இயங்குவதும் நாட்டுப்புறக் கதைகளின் சிறப்பியல்புகள். இக்கதைகள் உருவாக்கித் தரும் வெளியிலேயே அம்மனிதர்கள் தொடர்ந்து அன்றாடம் இயங்குவதும், வாழ்வதும்கூட உண்டு, கதையிலிருந்து வெளியே வர விருப்பமின்றி!



குட்டி ரேவதி

ரகசியம்: தொண்டையில் சிக்கிய முள்





அன்பார்ந்த தோழிகளே, வாழும் கலை பற்றி நிறைய மனிதர்கள் வகுப்பெடுக்கும் காலக்கட்டதில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண்களோடு பெண்களும் சரிசமமாய் முட்டி மோதி வாழும் வாழ்க்கையில் நாமும் பங்கு கொண்டவர்களாய் மாறிவிட்டோம். நாமே தீர்மானிக்கும் முன்பு பந்தய மைதானத்தின் கோடிட்ட பாதைகளில் நமது கால்கள் தலை தட்ட ஓட வேண்டியிருப்பதை நாம் தீர்மானிக்க வில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஓடத்தொடங்கிய பின்பு நாம் ஓட்டத்தை நிறுத்த முடியாது போலிருக்கிறது. பின்னே ஓடி வந்து கொண்டிருப்பவர் நம் மீது எகிறி விழுந்து நாமும் விழுந்து பல்லுடைக்க இயலாது என்பதால் மட்டுமன்று. வாழ்க்கை நம்மை ஒருபொழுதும் பார்வையாளர்களாய் மட்டுமே வைத்திருப்பதில்லை. பக்கத்து வீட்டுப் பெண்ணுடனோ, தூரத்தில் தன் ஆற்றாமையால் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுடனோ நமது பந்தயம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.



எனது தோழி ஒருத்தியை அவள் கணவர் அடிப்பதாக புண்பட்ட மனதுடன் என்னிடம் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டாள். அவளை சிறு பருவத்திலிருந்தே நான் அறிவேன். என் கண்களுக்கு போராளி என்று நானே கற்பிதம் செய்து கொண்ட எல்லா குணாம்சங்களும் வீர தீரங்களும் கொண்டவள். என்று, எப்படி, இப்படியானாள் என்று எனது மூளையைக் கசக்கித் தேய்த்தேன். வாழ்க்கை அவளையும் சோதித்துப் பார்க்கிறது என்ற மூட நம்பிக்கை என் பிடரியில் இருந்து கதறிக் கொண்டே இருக்கிறது. அவள் தன் காதலனுக்குத் தன்னை முழுதுமாய் ஒப்படைத்து விட்டாள்.அதாவது தன்னைப் பற்றிய அத்துணை ரகசியங்களையும். தோழியரே, மனதின் மூலையில் பசுமையாய் அடர்ந்து, நினைக்குந்தோறும் எல்லையிலா களிப்பை ஊறச்செய்து கொண்டிருப்பதே ரகசியம். அவள் தன் பழைய உறவுகளைப் பற்றி, தனது அதீதமான பால்ய நம்பிக்கைகளைப் பற்றி கணவனிடம் பகிர்ந்து கொண்டேயிருந்திருக்கிறாள். ஆண்களின் ரகசியங்கள் அதிகார விழைவுக்கானவை. அவை ஒரு பொழுதும் பெருஞ்சபையில் நுகர்வுப் பொருள் இல்லை. ஏனெனில் அதன் வழியாகத் தானே அவர்கள் தம் ஆளுமையைக் கட்டமைக்கின்றனர். ஆனால் பெண்ணின் இரகசியங்கள் அரசியலாகுபவை. வியாபாரச் சந்தையில் அவற்றுக்கு விலை அதிகம்.



நமது அந்தரங்க உறவுகளை எவரிடமாவது பகிரப் போய் அதன் விளைவுகள் நாம் எதிர்பாராத திசையிலிருந்து வரும் போது கூனிக்குறுகிப் போவீர்கள். காரணம் அந்த உறவிற்கு நீங்கள் அளித்த வந்த மதிப்புகள் கரைந்து போய் அழுகிய முடை நாற்றத்துடன் அவை வெளிவரும். காலங்களால் அடித்துச் செல்லப் படவே உறவுகள் என்பதை அவை உணர்த்தும். மரணமும் முறிந்து போகும் உறவுகளும் முழுமையான நம்பிக்கையுடன் எந்த நபரையும் அணுகுவதற்கு மனத்தடையாக இருக்கின்றன.



உறவைக் கட்டியெழுப்ப வித்தியாசமான அரசியல்கள் உண்டு, நமது சமூகத்தில். கணவனிடம் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் வித்தியாசமானவை என்பதை என் தோழி உணர்ந்திருக்கவில்லை போலும். காதல் கணவருடன் கருத்தொருமிக்கும் வழி தன் பழைய காதலையும் பகிர்ந்து கொள்வது என்று புரிந்துகொண்டாள் போலும். ஒரு தோழி இவ்வாறு தனது காதலனைப் பற்றி இன்னொரு தோழியிடம் பகிர்ந்து கொண்டதோடு அவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்கள் உறவு திடமாவதைச் சகியாத இவள் சிக்கலான மனப் போராட்டத்திற்கு ஆட்பட்டாள். தோழியிடம் உறவைத் தொடர்ந்தாள். காதலனைத் துண்டித்தாள். இன்றும் ரகசியங்கள் மூவர் வழியிலும் பேணப்படுகின்றன. மூவருக்கும் காயங்கள் தொடர்கின்றன.
சமூகப் போக்குகளுக்கு ஏற்றவாறு ரகசியங்கள் உருவாவதில்லை என்று சொல்ல வருகின்றேன். அவை எதிர்த் திசையிலிருந்து கிளம்புகின்றன. அந்த ரகசியங்களை எவரும் மதிப்பதில்லை. உங்கள் மனோ வெளியில் ரகசியங்களாயிருக்கும் வரையிலுமே அவை பொன் முட்டைகள். அதன் மென் சூடான வயிற்றை ஒரு போதும் பிறரிடம் பகிர வேண்டிய சொற்களால் கிழிக்காதீர்கள். அவை பருவத்திற்கு ஒப்ப கருத்தரிக்கட்டுமே.



குட்டி ரேவதி

கொல்வோம் அரசனை - 2




காதற்ற ஊசிகள்






வேறெப்போதையும்விட உரையாடலின் போது ஒரு தனி மனிதனின் ஆளுமையும் உள்நோக்கங்களும் எளிதில் புரிந்து விடுகின்றன. ஒரு பேராசிரியர் தனது வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் அவர் சென்ற தேசங்களின் நிலவெளிகள் விரியும்படியான கதைகளையெல்லாம் சொல்லி முடித்தப் பின்பு மேலை நாடுகளின் ஆய்வு முறைகளையும் பல்கலைக்கழகங்களையும் பற்றிப்பேசினார். அங்குள்ள மாணவர்கள் படிக்கும் போது மிகுந்த ஆய்வுமனப்பான்மையுடன் இயங்குவதாகவும் படித்து வெளியேறியதும் அவர்களின் அடிப்படைச் சிந்தனையாக இன உணர்வு பீடித்துக்கொள்கிறது என்றும் கூறினார். வெள்ளையின மக்கள் கறுப்பின மக்கள் மீது காட்டும் வெறுப்புணர்வை அநியாயத்துக்குக் கடிந்து கொண்டார். இத்துடன் அவர் முடித்திருந்தாரென்றால் அவரைப்பற்றிய எனது எண்ணம் மாறியிருக்காது. தொடர்ந்து அவர் பேசியது அவரது ஆசிரியப்புலமையை எடுத்தியம்புவதாகவே இருந்தது. இந்தியாவில் சாதிக்கொடுமையென்றெல்லாம் ஏதுமில்லை. அநியாயத்துக்குக் கூப்பாடு போடுகிறார்கள். வேலைப் பாகுபாட்டின் வடிவத்தை சாதிப்பாடுபாடு என்று திரிக்கிறார்கள். நாயர் சமூகத்தைச்சேர்ந்த அவரின் மனக்கொதிப்பு பிரிட்டிஷார் மீது திரும்பி, அவர்களின் துப்பாக்கியால் எப்படி கூட்டம் கூட்டமாக நாயர்களை அவர்கள் கொன்று போட்டனர் எனப் புலம்பிக் கொண்டே வந்தார்.


ஒரே நெடுஞ்சாலையை மட்டும் கொண்டதன்று வரலாறு என்பது. பல கிளைச் சாலைகளையும் பல ஒரு வழிப்பாதைகளையும் கொண்டும் அவை பயணிக்கின்றன. ஆகவே அவர் அறியாத வரலாற்றையும் அவர் அறிய விரும்பாத வரலாற்றையும் நானும் என்னைப்போல பலரும் அறிய முயல வேண்டியிருக்கிறது. இருளடைந்த பக்கங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சவேண்டியிருக்கிறது. அவர் மீது மிகுந்த இரக்கம் ஏற்பட்டதுடன் நீங்கள் பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது என்று எடுத்துச்சொல்லவெண்டியிருந்தது.

மேலை நாட்டு கறுப்பின மக்களின் மீது அபரிமிதமான கரிசனம் காட்டும் அவருக்கு தமது நாயர் மக்களை, சாதி வன்மத்துடனும் அதிகாரத்துடனும் இயங்கிய அவர்களை பிரிட்டாஷார் கோபித்துக்கொண்டது எரிச்சலாக இருக்கிறது. இந்தியாவின் வர்ண பேதத்தை வேலைப்பகிர்வுக்கான ஏற்பாடு என்று தனது அறியாமையை வெளிப்படுத்தும் துணிவைத் தருகிறது. மலம் அள்ளும் வேலையை இவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் விட்டது பிரிட்டாஷார்களின் கோழைத்தனத்தைக் காட்டுகிறது.


தமிழகத்தில் பல சுற்று உரையாடல்களும் பிரச்சாரங்களும் ஏற்பட்ட பின்பும் சாதிச்சட்டகத்தின் துலங்காத பக்கங்கள் இன்னும் நிறைய இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை. அரசியலிலும் இலக்கியத்திலும் வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் அதன் விரிவான செயல்பாடுகளை எடுத்துப் பேசுவற்கான இயந்திரங்கள் செயலிழந்து போய்விட்டதாகவே தோன்றுகிறது. அரசியல் தளத்தின் மூர்க்கமான சக்கரங்களால் அரைபடும் நுண்ணிய உறுப்புகளுடைய வரலாறு பற்றி எவருக்குமே எந்த கவலையுமே இல்லை.





தமிழகத்தின் அரசியல் வரலாறு பற்றிய புத்தகங்கள் கொண்டிருக்கும் நுண்ணிய மெளன இடைவெளிகள் காட்சிகளாகப் புரிந்து கொள்ள முடியாதவை. மேலும் தோற்றவர்களின் வரலாறுகளுக்கு அரசியலில் இடமில்லை என்பதும் கண்கூடு. இந்நிலையில் அரசு உருவாக்கத்தைக் கண்டு எள்ளி நகையாடாமல் இருக்கமுடியவில்லை. நுண்ணிய பிணக்குகளும் சுணக்கங்களும் கொடிய நஞ்சை நாளுக்கு நாள் இரத்தில் கலக்கும் பண்பாட்டின் விளைவுகள் அல்லாமல் வேறென்ன?


வரலாறு என்பது அரசுடையதும் அரசினைக் காபந்து செய்தவர்களைப் பற்றியதுமாக இருக்கிறது. பேணப்படும் போற்றப்படும் இலக்கியங்களும் அவ்வாறே. மற்றெல்லா சமூகத்தினரும் அரசின் உருவாக்கத்தில் கொள்ளும் பங்கேற்புகள் நேரடியானவை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு விலங்குகளைப்போன்ற இடம் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. அடக்கமுடியாத ஆத்திரங்கள் எல்லாம் அரசனோடும் அரசோடும் நெருக்கமான உறவு கொண்டோருக்கு மட்டுமே இருக்கிறது. அந்த ஆத்திரமும் அரசாங்க அதிகாரத்தில் தனக்கான பங்கு குறித்த சுயநலத்தோடும் பேராசையோடும் எழுந்த குரலாக இருக்கிறது.


தமிழக அரசியல் வீழ்ச்சி காலந்தோறும் ஒரு சீரிய வகையினால் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தத்துவச்செறிவு அற்ற ஒரு அரசு நிறுவப்படுவதும் காலப்பொருத்தமற்ற பாங்குகளுடன் அந்த அரசு இயங்குவதும் அந்த வீழ்ச்சியை நிலைப்படுத்துகின்றது. பிராமணிய எதிர்ப்பை தனது ஒரு நீண்ட கால அரசியல் இலட்சியமாகக் கொண்டிருந்த தமிழகத்தில் இன்று கெட்டிப்பட்டுபோயிருப்பது இடைநிலை சாதிகளின் அதிகாரமயமாக்கமே. சாதி ஒழிப்பு என்பது வெறும் கண்துடைப்பு என்பது புரிந்து விட்டது. பிராமணிய ஆதிக்கம் இவர்களுக்கு எரிச்சலைக்கொடுத்தது அவ்வகையான வன்கொடுமையை தான் இழைக்கும் அதிகாரம் தனக்கு இல்லாமல் போனதால்தான் என்பது வெளிப்படையாகிறது. இந்நிலையில் ஓர் அரசன் மிக எளிதாக முளைத்து விடமுடிகிறது. அவனால் மேற்சொன்ன பேராசிரியரைப்போல தனது அறியாமையைக் காலந்தோறும் கொண்டாடியதைப் போலவே கொண்டாட முடிகிறது. அவர்களின் உரையாடல்களில் எப்பொழுதும் ஒரு புனைவு கைகால்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அது தன்னை அரசனின் சேவகனாக இந்த மண்ணின் மைந்தனாக நாட்டுப்பற்று உடையவனாக அப்படி இருப்பது வெறுமனே ஒரு பழக்கமாக வெளிப்படுத்திக் கொள்கிறது.
இருள் முற்றிப்போன காலங்களையெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உயிர்ப்பான சிந்தனையாலும் பூமியில் புதையுண்ட வேர்களாகவும் எதிர்கொண்டு தங்களைத் தற்காத்துக்கொண்டிருக்கின்றனர். நியாயமாக அரசனைக்கொல்லும் அதிகாரமும் அரசனாகும் அதிகாரமும் இவர்களுக்கு கிடைக்கவேண்டும். இளைத்த அரசர்களாக ஆகிவிட்டனர் அதிகாரவர்க்கத்தினர். அவர்களின் வரலாறும் அரசியலும் பண்பாடும் உரையாடலும் தந்திரங்களால் மலிந்து அவர்கள் நசுங்கிய பிளாஸ்டிக் பொம்மைகளாக இருக்கின்றனர். அவர்களின் உரையாடலில் விரவிக்கிடக்கும் பூடகங்களும் வெளிப்படையான சாமார்த்தியங்களும் தன்னளவில் தான் ஓர் அரசனாகப் பரிணமிப்பதிலேயே இருக்கிறது. அதற்கான எந்த ஒரு தகுதியையும் பண்பாட்டையும் தாம் பெற்றிராமல் அரசியல் வித்தகர்களாக தங்களை மாற்றிக்கொள்ளும் சூழ்ச்சி தொடந்து கொண்டேயிருக்கிறது.
நாம் வேகவேகமாக உரையாடலின் போக்குகளை மாற்றிக் கொள்ளவே வேண்டியிருக்கிறது. நமது சொற்ப வெற்றியால் ஆதிக்க அதிகாரத்தை நாம் கழுத்தைப் பிடித்து நெறித்துவிட்டதாகக் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். அவர்களின் மெளனம் நம்மை அவ்வாறு ஆற்றுப்படுத்துகிறது. ஆனால் அவர்கள் தங்களின் உரையாடல்களை சதிகளாக மாற்றிக்கொண்டார்கள். வரலாற்றின் நுணுக்கங்களைத்தேடிப்பிடித்து புனைவுகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அவை கடந்த கால அரசர்களின் வரலாறுகளாக இருக்கின்றன. அந்த அரசர்களின் பராக்கிரமங்களை வல்லமைகளை மீண்டும் ஒருமுறை எழுதிவைக்கத் துடிக்கிறார்கள். அதே அரசர்களின் இடங்களில் தங்களை அமரவைத்துப் பார்த்து எல்லோரின் கழுத்தையும் தாமும் நெறித்துப்பார்க்கும் கற்பனைத்திறன் அவர்களிடம் மிகுதியாக இருக்கிறது. ஒரு வரலாற்றுக் கல்வெட்டையும் கல்தூணையும்கூட அவர்கள் விடுவதாயில்லை. அவற்றின் இடுக்குகளுக்கிடையே ஏதேனும் அரசன் ஒளிந்திருக்கின்றானா எனத் தேடிப்பார்க்கின்றனர். இப்படியாக அவர்கள் தங்களை உறக்கமில்லாமல் வைத்துக்கொள்கின்றனர். இவ்வாறு தேடியலையும் காலக்கட்டத்தில் அவர்களுக்கு உணவுப்பற்றாக்குறையே ஏற்படுவதில்லை.


ஒரு நாட்டின் பருவத்தைத்தீர்மானிப்பவனாக அரசன் இருக்க வேண்டியதில்லை. மக்களின் பண்பாடும் சமூக எழுச்சியுமே அதைத் தீர்மானிக்கின்றது என்பதையும் அரசனுக்கு நாம் உணர்த்தவேண்டியிருக்கிறது. ஒடுக்குமுறையை செயல்படுத்தும் ஆண்மை மட்டுமே ஓர் அரசை நிறுவப் போதுமானதென்ற கற்பனை நொறுக்கப்படவேண்டும். அந்த ஆண்மையைக் கட்டமைக்கும் அரச சாதனம் பெரும்பாலும் வரலாற்றிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. அந்த வரலாற்றினால் இன்றைய இந்த மண் உயிர்த்திருக்கவில்லை என்பதை வரலாறாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆண்மையைக் கொன்று பார்க்கலாம் அதற்கு. ஒரு தற்காலிக நெருக்கடியையேனும் அதற்கு கொடுக்கமுடியுமெனில் அது வெற்றி தான். புலம் பெயர்ந்த இலங்கைக்கவிஞர் பானுபாரதியின் கவிதை அதைச்செய்ய முடியுமென சொல்கிறது.



எருமையின் முதுகுதோலில் துளையிட்டு
உட்புகுந்த மழைத்துளிபோல்
எனது வார்த்தைகள்
உனது ஆண்மைக்குள் புகுந்து குடைகிறதென்பதை
நீ தூக்கம் தொலைந்து
இரவுகளை
புகை வளையங்களால் நிரப்பிக்கொள்வதிலிருந்து
புரிந்து கொள்ள முடிகின்றது
எறிகணையின் வலிமையோடு
எறியப்படும் உனதொவ்வொரு வார்த்தைகளும்
தோற்றுப்போய் விழுகின்றன நேர்மை வயப்படாத்தினால்


வானம் நீலமென்கிறாய்
கடல் உப்பென்கிறாய்
முத்தம் இனிப்பென்கிறாய்
வியர்வை சூடென்கிறாய்
விந்து குளிரென்கிறாய்
ஆண்மை அதுவே, அதற்கே அனைத்துமென்கிறாய்

நல்லது
போதனைக்கு நன்றி
ஆண்மை அரியாசனத்திலிருந்து இறங்கிவர
நீ மறுக்கும் ஒவ்வொரு கணமும்
கலவியின் உச்சநிலையில் சோர்ந்து சூம்பிக்கிடக்கும்
ஆண்குறியின் நிலைக்கொப்பானதாயிருக்கிறது

வோட்கா நிரப்பப்பட்ட
உனது கண்ணாடிக்குவளையில்
எலுமிச்சைச்சீவல்கள்
எனது கனவுகளோடு வாழ்வும்
கரைந்து போனதேன் என்ற
எனதொரு கேள்விக்கு உன்னிடமும் விடையில்லை
உன்னைப்படைத்த
உன்னப்பனின் ஆண்மையிடமும்
விடையிருக்கப்போவதில்லை


அம்மிக்கல்லில் அடித்து நொறுக்கப்படும்
சிதறு தேங்காய்போல்
உனதாண்மை நொறுக்கப்படும்போது
வோட்காவிலும் பியரிலும்
கரைந்துபோன கணங்களிலிருந்து
எனக்கான பதில் கண்டடையக்கூடும்

அல்லது
இரத்தமும் வியர்வையும் தெறித்துச்சிதற
ஆண்மையை
அறுத்தெறியும் திராணியுண்டாயின்
வா பேசுவோம்
சுதந்திரமான வார்த்தைகளின் அக்களிப்போடு



குட்டி ரேவதி





நன்றி: உன்னதம் இதழ்

கொல்வோம் அரசனை 1


செங்கோல் தரும் வலி


அரசனின் உருவகங்கள் பூமியில் பெருகிக்கொண்டேயிருக்கின்றன. அவை ஏற்கெனவே இலங்கிய அரசர்களின் பிரதிகளாயோ அல்லது அந்த அரசர்களின் பிரதிகளை தோற்கடிக்கும் நகல்களாயோ துலக்கம் பெறுகின்றன. அரசர்களின் குணநலன்களைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் பெரிய வித்தியாசமிருப்பதில்லை.

வரலாற்றிலும் வாழ்க்கையிலும் அத்தகைய அரசர்களின் உருவகங்களைக் கண்டடையும் முயற்சியையும், அவற்றை விமர்சிக்கும் பண்பாடும், யதார்த்தம் மீறுகையில் அவ்வுருவகங்களைக் களையும் தீரமும் தேவைப்படுவதை புறந்தள்ள முடியாது. ஏனெனில் அரசர்கள் மாய்ந்தாலும் காலங்களுக்குப் பின்னும் அவர்களை அழிக்க முடிவதில்லை. அவர்களின் கொடுஞ்செயல்கள் உறக்கம் பெறுவதில்லை. பூமியின் அதிகார சட்டகத்தில் அரசர்கள் அறையப்பட்ட ஆணிகளாய் ஆகிவிடுகின்றனர்.

வரலாற்றில் முன்னோக்கி நகர்ந்தாலும் பின்னோக்கிச் சென்றாலும் அரசன் எனும் அதிகார பிம்பம் எங்கெங்கும் எதிரொளியாய் நெளிந்து கொண்டிருக்கும். அதிகாரப் பூர்வமான பேரரசுகள் எல்லாமே வீரத்தாலும் தந்திரத்தாலும் பலத்தாலும் வெல்லக்கூடிய ஓர் ஆணால் உருவாக்கப்பட்டதாகவே நமக்குக் கதைகளும் வரலாறுகளும் வழங்கப் படுகின்றன. அத்தகைய ஓர் ஆணே அரசன் எனப்படுகிறான். ஆனால் பேரரசின் எல்லா அறைகளிலும் பாதைகளிலும் மூலை முடுக்குகளிலும் வாசற்படிகளிலும் ஜன்னல் வெளிகளிலும் பெண்கள் இருந்து கொண்டே இருந்தனர் என்றாலும் அரசன் எனும் பிம்பமே காலந்தோறும் உருவாக்கப்பட்டதும் நிறுவப்பட்டதும். பின்னும் அத்தகைய பிம்பங்களுக்கு வார்ப்புகளாகிப் போவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.


அரசன் எனப்படுவோன் இங்கே ஒரு நாட்டை சிற்றரசை பேரரசை ஆட்சி செய்வோனாக மட்டுமில்லை. பலவீனமான மக்கள் குழுமத்தை இன்னும் ஒடுக்கும் அதட்டி சிறுமைப்படுத்தும் ஒரு செங்கோலைக் கொண்டிருப்பவனாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவனுக்கு விதவிதமான எல்லைகள் உண்டு. ஒரு நாட்டின் பூகோளத்தின் வரவெல்லை மட்டுமேயன்றி ஒரு குறிப்பிட்ட பண்புக்கு இயங்கு சக்தியாக இருக்கும் மக்கள் குழுமமே கூட அவனது வரவெல்லை என்றாலும் அவன் செலுத்தும் ஆட்சி சாதாரண பலம் கொண்டதன்று. பல நிலைகளில் நோக்கும்போது ஒரு பெண்ணின் மனவெல்லை கூட அவன் பேராட்சி செய்ய வரைவெல்லையாகிவிடும்.

எனில் அரசன் என்போன் உருவாகும் அரசியலை மானுட வரலாற்றின் வழியாக ஊடுருவிக் கண்டடைய வேண்டியிருக்கிறது. அரசன் சார்ந்த சமூகத்தின் குற்றங்கள் எனப்படுபவை அரசனின் அன்றாட வழக்கங்களாயும் மக்களுக்கு அவை தண்டனைகளைப் பெற்றுத்தரும். குற்றவுணர்வை விடாது கிளறிக்கொண்டேயிருக்கும் அசம்பாவிதங்களாகவும் மாறிவிடுகின்றன. அரசனை வரையறுப்பதென்பது தடித்த சப்தங்களுடன் அதிரும் ஆதிக்கக் காலணிகள், எவரோடும் சமதையற்ற அரியணை, இயல்பான உடல் அசைவுகள் வெட்டி நீக்கப்பட்ட தோரணைகள். தலைக்குக் கனமேற்றும் கிரீடம், எல்லோரையும் பொம்மையைப் போல ஆட்டுவிக்கும் செங்கொல் இவற்றுடனான அதிகாரத்திற்கான விசையை உடலாகக் கொண்டிருக்கும் ஒரு மனித உயிர் என்பது.

இப்படியான அரசன் வரலாறு முழுமையும் ஓர் ஆணாகவே இருந்ததன் பொறாமையேதும் நமக்கில்லை. ஆனால் அவன் அதன் வழியாக செதுக்கிக்கொண்ட ஆண் எனும் சமூக உயிரி, ஆணாதிக்கம், அதிகாரம், அரசியல், ஆட்சியெல்லை என்பவை முற்றிலும் பெண்ணினத்துக்கும் நலிந்தோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் எதிராக இருந்து கொண்டேயிருக்கிறது. அடிப்படையில் இப்படியான பேரரசுகளும் பேரரசர்களும் உருவாக பெண்களின் இரக்கமும் உழைப்பும் ஆற்றலும் மிகுந்த பேராசையுடன் குடிக்கப்பட்டிருக்கிறது. அரசர்களின் மறு உற்பத்திக்கு பெண்கள் தாதிகளாக இருக்கப் பணிக்கப்படுகின்றனர். ஆதிக்கம் செலுத்துவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். பேரரசின் விரிவாக்கங்களுக்கு பெண்களின் ஆளுமைகளைச் சிதைப்பது என்பது ஒரு தொற்று நோயாக இருந்து கொண்டேயிருக்கிறது.

இத்தகைய பேரரசு உருவாக்கத்தாலும் அவற்றின் விரிவாக்கத்தாலும் பல வருடங்களாகத் தொடர்ந்து ஒரே வேலையைச் செய்து கொண்டிருக்கும் ஒற்றைப் படித்தான பெண்களாக நமது மூதாதைப் பெண்கள் மாற வேண்டியிருந்தது. அது குறித்த அவமானத்தையும் ஆற்றாமையையும் சுமக்க வேண்டியிருந்தது. ஓர் அரசனின் மறு உற்பத்திப் பணிக்கெனவும் பாலியல் ஆதிக்கத்தை நிரூபிக்கவும் பெண்களைத் தொடர்ந்து வழங்குவது என்பது கூட அவனது பேரரசின் அதிகாரத்தை மறு உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றே. 1788-ல் ஆஸ்திரேலியாவுக்கு கப்பலில் நாடு கடத்தப்பட்ட முன்னூற்றுக்கும் மேலான பெண்கைதிகள் கரையிறங்கும்போது அவர்கள் அனைவரும் ஆண்களின் நுகர்வுக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படும் விபச்சாரிகளாகவே அணுகப்பட்டனர். அவர்கள் காலிறங்கிய காலனி முழுதும் ஒரு விபச்சார விடுதியாகவே மாறியது. பெண்ணின் விருப்பத்திற்கு எதிரான பாலியல் நடவடிக்கையை இங்கே நாம் விபச்சாரம் என்றே கூறுவோம். ஏற்கெனவே நாடு கடத்தப்பட்ட பெண்கைதிகள் என்ற நிலையிலும் விபச்சாரிகள் என்ற நிலையிலும் இரண்டடுக்கு அதிகார நசிவிற்கும் இழிவிற்கும் பெண்கள் உள்ளாவதை உணர இயலும்.



இவ்வாறு பெண் என்பவள் பேரரசனின் மனைவியாக இருந்தாலும் ஒரு கடைநிலை குடிமகனின் மனைவியாக இருந்தாலும் இரண்டு எதிரெதிர் அதிகார நிலையிலிருக்கும் ஆண்களுக்குமே பெண் என்பவள் கையகப்படுத்தப்படும் ஓர் உயிர்ப்பொருள். அதன் மீது தான் மேலதிகமான உரிமை கொள்ள முடியும் தனது அதிகாரத்தைச் செலுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து வேறுபட்ட சமூக உறவு நிலைகளை மேற்கொண்டு அதாவது தந்தை, கணவன், அதிகாரி, தலைவன், அரசன் என அதிகார நிர்வாகத்தை எடுத்துக் கொள்கிறான். ஓர் அரசன் என்போனும் தந்தை என்போனும் ஆணே என்றாலும் இருவருமே பெண் மீது செலுத்தும் அதிகார முறைகளும் அதன் தொழில் நுட்பமும் வேறு வேறானது என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது தான் முழுமையான சமூக மாற்றம் சாத்தியமாகும்.


பெண்ணினத்தை மிதமிஞ்சிய அளவுக்குப் போகிக்கும் பேரரசு வர்க்கமும் அவ்வினத்தின் மீது தமது அதிகாரக் குறியீடுகளாலும் ஆதிக்கக் கருவிகளாலும் வெறுப்பையும் உமிழ்ந்து கொண்டேயிருக்கின்றது. தனது பாலியல் நுகர்வுக்கும், இச்சைக்கும் பலியாகும் பெண்ணை வேசி என்று இழிவு அடையாளம் தருவதும் செவ்வியல் பெண் பிம்பங்களை அவர்கள் வாழ்ந்த காலங்களோடு தொடர்புப்படுத்தி நோக்காது தம் குடிப் பெண்கள் மீது திணிப்பதும் அரசனின் ஆதிக்க சூழ்ச்சிகளாக இருக்கின்றன. அந்த செவ்வியல் பெண்பிம்பங்களே மிகுதியும் போலிமைகளால், அரசனின் கற்பிதங்களால் செதுக்கப்பட்டவளாயிருப்பாள்.


இலங்கைக் கவிஞர் அனாரின் ‘உரித்தில்லாத காட்டின் அரசன்’ எனும் கவிதை அரசனின் கவர்ச்சியான பிம்பத்தையும் அதற்கு இரையாகும் பெண்ணின் பிம்பத்தையும் எதிர் வைத்துப் பேசுகிறது.
”மலைகளுக்கப்பால்
சூரியனுக்குப் பதிலாக நீ எழுந்து
வளர்கிறாய்
பனிமூடிய முகடுகளை
விலக்கி அமர்ந்திருக்கிறாய்
கடும் பச்சை நிற, சுருண்ட தலைகளுடன்
அடர்ந்திருக்கிறது என் காதல் காடு
காட்டின் அரசனாகப் பிரகடனப்படுத்தி
ஒளிர்வுக்கிரணங்களால் நுனி வேர்வரை ஊடுருவி
தழுவிச் சிலிர்க்க வைத்து ஆட்சி செய்கிறாய்
வளைந்த பாதைகளில் நதியைப் போல இறங்கி உருள்கிறேன்
உன்னிடம் இறக்கைகள் இருக்கின்றன
எல்லா இடுக்குகளிலும்
என்னைக் கவ்விப் பறக்கிறாய்
காடு முழுவதிலும் மேய்கின்றன
நம் கவிதைகள்
உள் நுழைந்தவனின்
பிரகாசமும் பாடலும்
ரகசியப் பூட்டுக்களை திறக்கின்றன
இனி
அரசன் கீறிவிட்ட காயங்கள்
என் காடெங்கும் பூப்பெய்யும்
கமழும் அஸ்தமனம் வரை”

இக்கவிதையில் பேசும் பெண்ணின் குரல் காதலால் கவ்வப்பட்ட பெண்ணினுடையது மட்டுமன்று. தன் மீது ஆளுகை செய்யும் ஆணின் கவர்ச்சியை இயற்கை மீது ஏற்றிக்கூறும் நுட்பமும் மிக்கது. இங்கு அரசன், தன்னை அரசனாகவே பிரகடனப்படுத்திக் கொள்வதோடு அத்தகைய ஆட்சிக்கான எல்லா அம்சங்களையும் கூட தன்னகத்தே கொண்டிருக்கிறான்.
’கொல்வோம் அரசனை’ என்ற இக்கட்டுரைப் பயணத்தில், நாம் சிக்குண்டுள்ள அரசனின் கொடுங்கனவுகளிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள தொடர்ந்து முயலலாம். ஏனெனில் நமது சமகாலமும் சமவாழ்வும் கூட அரசனின் பிம்பங்களால் சூறையாடப் பட்டிருக்கின்றன. மேலும் தனது வாரிசுகளை அப்பிம்பத்தின் வார்ப்புகளாகவும் ஆக்கிக் கொள்கிறான் அந்த அரசன்.

அரியணையைச் சூடேற்றுகின்றன அவனது பிட்டங்கள். அவனது சூதாட்டங்களில் இடையறாது வெட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன நமது கனவுகள். நலிந்த, ஆதிக்கச் சுமைகளுக்குக் கீழே அழுந்திய மனிதனை மரணப்படுக்கையில் உறங்கச் சொல்கின்றன அவனது அறிக்கைகள். அவனது செங்கோல் தரும் வலி அளவிலாதது.




குட்டி ரேவதி

நன்றி: உன்னதம் இதழ்

கவிதையினும் ஆயுதம் இல்லை





ஒன்பது வருடங்களாகத் தமிழில் கவிதையெழுதி வரும் எனக்கு, இன்றும் ஒரு கவிதையை எழுதி முடிக்கையில் ஈடேறும் இன்பத்தினும் எதுவும் பெரிதில்லை. ஆனால் சில பல சோதனைகளை தமிழகத்தில் கவிதையெழுதுவோர் சந்திக்கத்தான் இருந்தது. அவையெவையுமே கவிதையியலின்பாற்பட்டது அன்று என்பது ஒரு கொடுங்கனவு. ஆகவே அக்கவிதை எழுச்சி முழுமையான ஓர் அரசியல் செயல்பாடாக மாற முடியாமல் போனது இலக்கிய சாபமே. ஆனால் இன்றும் கவிதையை ஓயாமல் சிந்தித்தும் கவித்துவ உணர்வில் தோய்ந்தும் வாழ்ந்தும் எழுதியும் கொண்டிருக்கும் கவிஞர்கள் மைய நீரோட்டத்திற்கு வருவதேயில்லை. புகழின் வெளிச்சம் அவர்களுக்கு ஒரு பொழுதும் சூரியனாவதில்லை. அத்தகையவர்களுடனான எனது உறவு இன்று வரை தொடர்வதாலோ என்னவோ கவிதையைப் பற்றிய எனது அபிப்ராயங்கள் இன்னும் ஆழமாகிக் கொண்டேயிருக்கின்றன. கவிதையை அன்றாட இயக்கமாக மாற்றிக்கொண்டவர்களின் கவிதைகள் தம்முள் ஒரு பேராற்றையும் நீர்ச்சுழலையும் ஒரு சேரக்கொண்டிருக்கின்றன.

தமிழ்ப் பெண் கவிதையைப் பலவாறான திசைகளிலிருந்து அணுகி விமர்சித்து ஓய்ந்த காலங்களில் அதுவரை அவை பேசி வந்த அரசியலையும் பெண்மொழியையும் கையிலெடுத்துக்கொண்டதுடன் அவற்றின் நுட்பத்தையும் விரிவையும் பேசத்தொடங்கியவை ஈழப் பெண்களின் கவிதைகள் தாம். ஈழப் பெண் கவிதையென்றால், இன்று அந்தப்போர் வெக்கை மூண்ட நிலத்திலிருந்து எழுதுவோரும், புலம் பெயர்ந்து வேறுவேறு நிலங்களில் வாழ நேர்ந்தாலும் தாய்மொழியை தாய் நிலமாக உணர்ந்து எழுதுவோருமென எல்லோரையும் தாம் குறிப்பிடுகிறேன். வெறுமனே அவை துக்கப்புலம்பலாக இல்லாமல் அரசியலை பேசும் தெளிவோடும் கவிதை வடிவை அழகுற ஆயுதமாக மாற்றும் வல்லமையோடும் உருவாகி வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் தமிழகப் பெண்கவிதையின் நீட்சியாகவும், அவை தொட முடியாமல் போன கவித்துவ உச்சத்தையும் தமிழின் ஈழச்சுவையையும் அதன் அரசியலையும் கலந்து அளித்து கொண்டிருப்பதும் ஒரு கவித்துவ வெறி நிறைந்த அனுபவம்.

இனவாதத்தால் சிதறுண்டு உலகெங்கும் விரவிக்கிடக்கும் தமிழினத்தின் ஒட்டு மொத்தக் குரலாக ஒலிப்பது இன்று ஈழப்பெண் கவிதைகளே. வேறு வேறு அரசியல் விஷயங்களைப் பேசும் போது கூட, நுட்பமான கருத்தியலை பேச முடியாத அளவிற்கு முன் அபிப்ராயங்களையும் அவை சார்ந்த வெறுப்பையும் உக்கிரத்தையும் கொண்டு இயங்கும் மனித மனத்திலிருந்து விலகியிருக்கும் இவர்களின் கவித்துவ மனம், புரையோடியிருக்கும் புண்ணுக்குச் சொற்களால் மருந்திட்டு ஆற்றுவதாக உள்ளது. அவை நவீனமும் வடிவமும் அழகும் குன்றாமல் ஓர் அரசியல் போரைத் தங்கள் கவிதைகள் வழியாக நடத்தத் தொடங்கியிருக்கின்றன. கருத்தியல் - அரசியல் நுட்பங்களையும் தவறவிடுவதில்லை. துப்பாக்கிக்கு அடிபணிவதில்லை. தாய் நிலத்தை நிதந்தோறும் முத்தமிடும் கவிதைகளாக வடிவெடுக்கின்றன.

ஈழப் பெண் கவிதை, செல்வி-சிவரமணியின் கவிதையின் விழியாக எனக்கு அறிமுகம். சிவரமணியின், ’தூக்கியெறியப்பட முடியாத கேள்வியை’த் தொடங்கி தூக்கியெறிய முடியாத கவிதைகள் ஈழப் புலத்திலிருந்து வந்த வண்ணம் இருந்தன. பின்பு பனிக்குடம் பதிப்பகத்திற்காக ஃபஹீமா ஜஹான் மற்றும் தமிழ்நதியின் கவிதைத் தொகுப்புகளை தொகுக்கும் வாய்ப்பு கிட்டியது. கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் நின்றியங்கும் ஓர் இலக்கிய அமைப்பிற்காக எனது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண்ராமன் அவர்களுடன் இணைந்து தமிழ்ப் பெண் கவிதையின் நவீனக்குரலை தொகுக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது பரவலாகவும் ஒருமுனைப்பட்டும் ஈழக்கவிதைகளைத் தொடர்ந்து வாசித்தேன். நிலவும் போர்ச் சூழலில், பதைபதைக்கும் மனித இதயத்திற்கு நம்பிக்கையையும் தெளிவையும் வழங்கக்கூடிய குரலை அவை கொண்டிருந்ததோடன்றி முழுமையும் அரசியல் கவிதைகளாகவும் கவிதையியலின் நவீனத்தோடும் அவை இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை உணர முடிந்தது. ஓர் இனத்தின் மொழி கவிதை வழியாகவே புதுப்பிக்கப்படுகிறது என்று நம்புகிறேன்.


அனாரின் சமீபத்திய தொகுப்பான ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பில் இரண்டு விதமான கவிதைகள் சுழன்று கொண்டிருக்கின்றன. காதலும் அவற்றின் கனிவும் கசியும் கவிதைகளும் போருக்கு மத்தியில் உயிர்வாழத் தகித்துக் கொண்டிருக்கும் கவிதைகளும் நிரம்பியிருக்கின்றன. சிமோன்தி மற்றும் தில்லையின் கவிதைகளை ஊடறு இணைய இதழில் கண்டடைந்தேன். அவர்களின் கவிதைகளில் நவீனம் பீடிக்கப்பட்ட பெண்ணுடலும் மரபார்ந்த ஒடுக்குமுறை வடிவங்களும் இசைவோடு கவிதையாகியுள்ளன. கவிதை எனும் இலக்கிய வடிவம், தனக்கு மறுக்கப்பட்ட ஒரு நிலவெளியையே தனக்குள் சுமந்து செல்லமுடியும் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் அதைப் பெண்கள் தாம் தமது மொழியால் சுமந்து கொண்டிருக்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்துமில்லை.
ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் பல்முனைகளிலும் வடிவெடுக்க வேண்டிய போராட்டமென்று நான் அங்கலாய்த்துக் கொள்வதுண்டு. வெறுமனே ஓர் இயக்கத்தின் போராட்டமாக மட்டுமன்றி எல்லா சமூக அரசியல் பண்பாட்டு இலக்கிய வடிவங்களிலும் அவை முகிழ்க்க வேண்டிய தேவையிருக்கின்றது. போராட்டத்தின் பன்முகத்தன்மை தான் விடுதலையை ஈட்டித்தரும் சாத்தியமிக்கது. குறிப்பாக, நாவல், சிறுகதை போன்ற புனைவிலக்கிய வடிவங்களுக்கு இடையே கவிதை ஓர் ஆரம்ப நிலை இலக்கிய வடிவமாகவே கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், கவிதை எத்தைகையதோர் ஓர் இலக்கிய ஆயுதமாக மாற முடியும் என்பதை ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகளை கூர்ந்து அவதானிக்கையில் தான் புலப்படும். இந்தச் சிறிய பத்தி நம்மையெல்லாம் அக்கவிதைகளை வாசிக்கச் செய்வதற்கான ஓர் ஆயத்தமே.




குட்டி ரேவதி

புறமுதுகு



வெயில் விறைத்திருக்கும் உச்சிவேளையிலிருந்து
இலையொன்று சுழன்று மாலைக்குள் ஒதுங்குகிறது

காரில் நகரத்தெருக்களைக் கடக்கையில்
அவசரமாய் ஓடி மறைகிறது
பழைய காதலின் புறமுதுகுப்பிம்பம்

அது அவனாயிருக்கலாம்
பேராச்சியின் உடலில்
மதர்த்துக்கிடக்கும் காமப்பூக்களை
முகர்ந்து பார்த்தவன்

பிறகொரு நாள் அவனைச் சந்திக்க நேரலாம்
தனது மூளைக்குள் நெளியும் நினைவுப் புழுக்களை
நசுக்குவது எப்படியென எப்படியும்
அவன் ஆலோசனை கேட்கலாம்

அல்லது
உறங்கவிடாது
கண்களுக்குள் கள்ளிச்செடிகளை வளர்க்கும்
தோட்டக்காரனாய் அவன் இருந்ததை
நான் இடித்துக் காட்டலாம்

உஷ்ணமுட்கள்
வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன


குட்டி ரேவதி

ஈழத்தமிழர்களை நோக்கி நீட்டப்பட்ட மதத்துப்பாக்கி - 2




ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வடிவில் மதம் என்பது பெரும் ஆயுத வடிவமாகவும் அரசியல் வெளிப்பாடாகவும் இருந்துள்ளது. ஏன் பெரிய போர்களுக்குக் கூட காரணமாக இருந்திருக்கிறது. இந்தப் பத்திகள் வழியாக இலங்கையைப் பொறுத்தவரை எப்படி மதம் அரசியல் ஆதிக்கம் மிக்கதாக உள்ளது என்பதை ஒரு பகுத்தாய்வு செய்ய விரும்புகிறேன். இன்று ஈழப்போராட்டம் அடைந்துள்ள நிலைக்கான காரணங்களை அறிவதற்கான ஒரு சிறிய மீளாய்வு இது. இதுபோலவே மொழிப்போர், தொன்ம ஆதாரங்கள், தமிழக அரசியல், இந்திய அரசின் நிலைப்பாடு, சிங்கள அரசின் தந்திர நடவடிக்கைகள் என பல திசைகளிலிருந்து இவ்வினவொழிப்பு நடந்தேறியதற்கான ஆய்வையேனும் நாம் செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். வெறுமனே உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இப்பிரச்சனையை அணுகிவிட முடியுமென்றோ, சிங்கள அரசு மற்றும் அதற்கு உதவியாக இருக்கும் நாடுகளின் சூழ்ச்சித்திறன்களை வெல்ல முடியுமென்றோ நான் நினைக்கவில்லை. ஈழத்திற்கு ஆதரவாக இனவாதத்திற்கு எதிராக உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் உண்மையில் நடந்து கொண்டிருப்பது என்ன என்பதை ஒரு சிலரேனும் கருத்தியல் ரீதியாகப் பகுத்தாய வேண்டியிருக்கிறது.


மதம் என்பது தனிமனிதனுக்கானது; அரசியலுக்கானது அன்று. அரசியலும் மக்களுக்கானதே அன்றி மதத்தின் ஆதாயத்துக்கானது அன்று. ஆனால், இலங்கையில் சிங்கள-பெளத்த பிணைப்பு என்பது 1972ம் ஆண்டிலிருந்தே இலங்கையின் அரசியல் சட்ட அமைப்பில் சிறப்பான மரியாதைகளைப் பெற்றுவந்துள்ளது. இதனால் தாம் இலங்கையின் எல்லா பெளத்தமத சங்கங்களும் அரசியல் சட்ட அமைப்பினூடாகவே அரசியல் செயற்பாடு மேற்கொள்வதற்கு ஏதுவானது. 1986-ம் ஆண்டு, இருபதுக்கும் மேலான பெளத்த அமைப்புகள் இணைந்து ”தாய்நாட்டுப் பாதுகாப்புப் படை” என்பதை உருவாக்கின. இந்த அமைப்பின் பெயரிலேயே அது என்ன நோக்கத்திற்கானது என்பது புலனாகும். அந்த நாடு, அவர்களுக்கான தாய்நாடு என்பதான அர்த்தம் கொள்கிறது. இவர்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்துச் செல்வதற்கான ஒரு பெருவழியாக இந்த அமைப்பு இருந்தது. இவர்கள் எல்லோரும் ஓர் அமைப்பாக ஒன்றிணைந்தது இனரீதியான மாகாண சபைத்தீர்வினை எதிர்ப்பதற்காகவே.


இந்த அமைப்பு 1986-ல் வெளியிட்ட அறிக்கை இவர்களின் உள்நோக்கங்களையும் அந்த அறிக்கையில் அவர்கள் பிரயோகித்த வார்த்தைகள் அடிப்படையான அவர்களின் எதிர்ப்புணர்வையும் பட்டவர்த்தனமாக்குகின்றன. சர்வதேச அளவில் மற்ற நாடுகளின் தலையீட்டையும் சமாதானப் பேச்சுவார்த்தையையும் ’நமது தாய்நாட்டைப் பிரிப்பதற்கான சூழ்ச்சி’ என்று முறையிட்டனர். அதுமட்டுமல்லாது இந்த மாகாண சபைத்தீர்வு கூட ’நாட்டைத்துண்டாடும்’ சதி என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டனர். அவர்கள் ஈழ இனவாதத்தையும் ’ஈழக் கொலைகார வாதம்’ என்றே குறிப்பிடுகின்றனர். அம்மண்ணின் அடிப்படையான உரிமைகள் சம அளவில் கொடுக்கப்படாதிருந்த நிலையில், மேற்குறிப்பிட்ட, ’ஈழக் கொலைகார வாதம்’ என்ற சுட்டுதலுடன் அந்நாட்டின் எல்லா வளங்களும் சமமாக ஏற்கெனவே பிரித்தளிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடுவதும் நகைப்புக்குரியது. மேலும் அந்த அறிக்கையில் தமிழர்களின் நிலையினை குறிப்பிடும் எந்தக் கருத்து வாதமும் இல்லை.
மாகாண சபைத்தீர்வை அவர்கள் எதிர்ப்பதற்காகக் கூறிய காரணங்கள் இரண்டு: ஒன்று, அது ஒரு தேசத்துரோக நடவடிக்கை. மற்றொன்று, அது ஓர் ஈழக் கொலைகார வாதம். மேலும் தாய்நாட்டுப் பாதுகாப்புப் படை, தங்கள் இலட்சியங்களாக வலியுறுத்தும் இறையாண்மை என்பதும் ஒற்றுமை என்பதும் அதற்கான இலச்சினைகளும் அர்த்தப்படுத்துவது, பெளத்தத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்று பட்டிருக்க வேண்டும் என்பதே. அவர்களின் இறையாண்மை என்பது கூட முழு அதிகாரமும் பெளத்தத் தலைமையை மையமாக்கியதாக இருக்கவேண்டும் என்பதே. இந்தக் கட்டத்திலிருந்தே தொடர்ந்து அத்தாய்நாட்டுப் பாதுகாப்புப் படைக்கு ஆதரவான பிரச்சாரங்களையும் போரட்டங்களையும் ஓர் இராணுவம் போலவே பெளத்த சங்கத்தினர் செயல்படுத்தி வந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் சிங்கள அரசே கூட இந்த பெளத்த அமைப்பின் ஆதரவைக் கோரிப்பெற வேண்டிய தேவை இருந்துவந்துள்ளது.



தா.பா.ப-வின் இரண்டாவது அறிக்கை அவ்வியக்கத்தினை நிர்வகிக்கும் முறையைக் குறித்ததாக இருக்கிறது. மூன்றாவது அறிக்கையின் வழியாக அவர்கள் சிங்கள அரசு, தமிழீழ வாதிகளுடன் பேச்சு வார்த்தைக்குச் செல்வதையே கூட கண்டித்தனர். ஏக சத்தா, அதாவது; ஒரு குடையின் கீழ்’ என்ற சிங்கள–பெளத்த மேலாதிக்கத்தீன் கீழ் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கூறியது மூன்றாவது அறிக்கை. ஆனால் இந்த ’ஒற்றுமை’ என்பதும் ‘இறையாண்மை’ என்பதும் ஒரு மாய வாதத்தைப் பேச்சளவில் குறிப்பிடும் சொற்களே. அல்லது அவற்றிற்கான அர்த்தங்கள், ’எங்களின் கீழ் நின்று செயல்படுங்கள் என்பதே’. மேலும், மரபார்ந்த ஒற்றுமை, இறையாண்மை போன்றவற்றை வேண்டும் தேசத்தின் கொடியும் பாடப்படும் தேசிய கீதமும் சிங்கள இனத்தினை மட்டுமே நாட்டோடு இணைத்துப்பார்ப்பதாக இருந்தது. (இது இன்னொரு விவாதத்திற்கானது.) ஆக, கருத்தியல் அளவில், உடல், பொருள் அல்லது எல்லா இருப்பு சார்ந்த அளவிலும் இனவாதத்தை மக்களிடம் தொடர்ந்து திணித்துக் கொண்டே இருந்தனர். 1980-களில் நிகழ்ந்த இவை தாம் இன்று இனவாதம் இத்தகைய பேருரு எடுப்பதற்கு பெரிய அளவில் அடிப்படையாகவும் அரசியல் காரணியாகவும் இருந்து வந்துள்ளன.


பெளத்தமத சங்கங்களின் இத்தகைய அரசியல் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருப்பது அவர்களின் அதிகார விழைவும் அதிகாரத்தின் மீது இருக்கும் பேராசையுமே. ஏற்கெனவே அவர்களின் சங்கங்களுக்குள்ளேயே இம்மாதிரியான, அதிகார கட்டமைப்பிற்கான நடவடிக்கைகளுக்குப் பெருத்த முக்கியத்துவம் இருந்து வந்திருக்கின்றது. அவற்றில் சொத்துக்களைச் சேகரிப்பதும், உடைமைகள் தலைமுறைகளூடே வழிவழியாகச் சென்று சேர்வதைக் கண்காணிப்பதும் முதன்மையானவையாகும். மண்ணின் மீதான அதிகார ஈர்ப்பை அவர்கள் பெளத்த சங்கங்களிலிருந்தே உருவாக்கிக்கொள்கின்றனர். சொல்லப்போனால் பெளத்த குருமார்களே அந்நாட்டை ஆள்கின்றனர். என்றென்றும் ஆள விரும்புகின்றனர். உண்மையில் பெளத்தம் சொல்லும் அறத் தத்துவங்களுக்கும் அவர்களுக்கும் எந்த வகையான பொருத்தப்பாடும் இல்லை.




குட்டி ரேவதி