நம் குரல்

பாசி படர்ந்த குளம்








 
நச்சு வாயு புரளும் நீரலைகளால்
பாசி படர்ந்த குளத்தின் அழகு பூத்துக்குலுங்குகிறது
நீந்திக் களைக்காத தலைப்பிரட்டைகள்
கரையேகித் தவளைகளாய்க் கத்துகின்றன
அடையாளச் சங்கமம் தான்
அக்குளமாக உருக்கொண்டு தியானிக்கிறது
புழுத்த அந்தரங்கங்களுடன்
அழகு என்று வியக்கப்பட்ட அக்குளம்
எவரும் கால்வைக்க முடியா வழுக்கல்களுடன்
குளிர்ந்த நீர்மையைக் கவனப்படுத்திய
அதன் புறமும் அகமும்
பலவீனர்களை உள்ளிழுத்துக் கொல்வது
வீட்டையே 
தம் யோனிகளின் வாயிலாய் திறப்பவரிடமிருந்து 
எம் வீட்டைப் பறிப்பதும்
எம் கருப்பிரதியைக் கருத்தரிக்கும் கலயத்தை
தம் அரண்மனையின் கழிவறையாக்கியவரிடமிருந்து
எம் யோனியைப் பறிப்பதும் அக்குளக்கரையில்
பேச்சாகிறது இரைச்சலாகிறது
எவர் சொன்னது மாதவிடாய்க்குருதி
அக்குளத்தின் நச்சுநீரினும்
ஒரு பிரச்சனையென்று
வரலாற்றின் பிழைகளால் ஆன எம் கருக்குடுவையை
சரித்திரப் புகழுடைய பிழையாக்கும் பொதுப்புத்தியும்
அக்குளத்தை அழகிய யோனியது! அழகிய யோனியது!
என்று அவதியில் துள்ளுகிறது
மழை இன்னும் இன்னும் அதன் மீதே பெய்யட்டும்
பாசி படர்ந்த குளம் நீர் நிறையத்தளும்பட்டும்
எப்பொழுதும் நாசியைக் குறுகுறுக்கும்
விஷநீரின் வாடையை
தூமையெனும் ஆசைக்காட்டும் குளக்கரையில்
ஒற்றைக்காலுடன் வெள்ளைக்கொக்குகள்
காத்திருக்கட்டும்
 


என்னுடல் நதியைத் தேடிப் பாயட்டும்!






குட்டி ரேவதி


சிறுகுறிப்பு: ஆண்டைச்சமூகப் பெண்ணியம் நோக்கிய விமர்சனக்கவிதை
நன்றி: கல்குதிரை

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 10

சல்மா - ஒப்பந்தப் புன்னகைகள்







http://koodu.thamizhstudio.com/thodargal_14_10.php


குட்டி ரேவதி
நன்றி: தமிழ் ஸ்டுடியோ

'ஒரே தெப்பமாக நனைந்த தலை’யுடன் நகுலன்





எப்பொழுதுமே கூர்மையான தரிசனமும் தரிசனத்தின் வெளிச்சமும் தாங்காமல் சொற்களுக்குள் ஒளிந்து கொண்ட கவிஞர்களும் எனது ஞாபகத்தில் இறந்துபோய்விட்டதாகவே தோன்றுகிறார்கள். அவர்களை நிகழ்வாழ்வில் தேடிக்கண்டடைய முடிவதில்லை. சமூகத்தின் சம காலத்திற்குப் பொருந்தாத சட்டைகளுடன் உலவும் மனிதர்களாய் அவர்கள் அடையாளம் பெறாமல், சமூகக் கொதிநிலையைத் தாங்கவியலாமல் ஆவியாகிவிடுகின்றனர். மாறாக அவர்களின் கவிதைகள் உயிர்த்துடிப்புடன், சொற்களால் சுவாசித்த வண்ணம் புத்தகங்களால் தம்மை மூடிக்கொண்டு இயங்குகின்றன. கவிஞனின் மன்றாடல்களெல்லாம் சொற்கள் வழியாகவே என்றான பின், தனது உடலை எங்கேனும்  ஒளித்து வைத்துக்கொள்ள வேண்டியது தானே!

கவிதையின் மூதாதையருடன் ஓர் இளங்கவியின் இரத்த உறவு என்பது காலத்தின் பின்னேயே ஓடாமல் எதிர்த்திசையில் மூச்சிரைக்க ஓடுவதானது. ஒரு கவிஞரின் ஒற்றைப்புத்தகத்தை நிதமும் சுமந்து அதில் எல்லாச் சொற்களையும் மென்று ஆனால் எந்த ஒரு சொல்லையும் தொண்டைக்குழிக்குள் விழுங்கமுடியாமல் திணறும் அந்நினைவின் சுகவாசனையோடு திரியும் ஒரு சூலுற்ற பெண்ணைப் போல இளங்கவிகளை போதம் தந்து அலைக்கழிக்கும் மூதாதையரில் ஒருவர் நகுலன்.

பழமையின் எரு தின்று புதிய இலைக்கிளைப்புகளுடன் விழித்தெழும் மொழி, நவீனக் கணித வடிவெடுக்கிறது. அவரது கவிதைகளில். சொற்களை மெருகேற்றி அவற்றின் இடம் மாற்றி, கூட்டிணைப்பதெல்லாம் அனுபவவெளியில் காட்டும் அயராத உழைப்பின் விளைச்சலே. நவீனத்தைச் சொற்களின் குறியீடுகளால் இயங்கும் ஒரு புனைவாக ஆக்கும் வலிமை வேறெப்படி கைகூடும்?

‘நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப்பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை’
புலன்களின் கூருணர்வு மேலோங்கியிருக்கும் உடலாகவும், பின் வார்த்தைகள் மொத்தமும் சலித்த உடலாகவும் என உடலைப்புரட்டிப் புரட்டி உடலுடன் மீண்டும் சொற்களைக் கோர்க்கும் பணியை அனுதினமும் செய்த நகுலனிடம் நெடுவேனிலின் அகண்ட வெளியில் மூர்ச்சித்துத் தொலையும் கிழமனிதர்களின் அசையாமையும்  உண்டு. வெறும் சொல்விளையாட்டாய் ஓய்ந்துவிடும் கவிதை அனுபவத்தைத் தனிமனிதக்காட்சிவெளியாய் அவரவர்க்கேற்றவாறு விரித்துக்கொடுக்கும் ஒரு மரபின் சமுத்திரமும் அதில் நீந்தும் நவீனமும் ஓர் எளிமையான திறனன்று.


‘உள்ளப் பொந்துக்குள்ளே
பதுங்கியிருக்கும் ஒரு பச்சைக்கிளி அப்பா?’
சித்தர் மரபின் மூலச்சொற்களையும் படரொளியையும் இருளையும் எவரேனும் சுமந்து நிற்க வேண்டியிருக்கிறது, அதன் அத்துணை பாரத்தோடும், அது புறக்கணிக்கப்பட்ட பழியினோடும், சுமக்க நேர்ந்த குற்றவுணர்வின்றியும். ஒவ்வொரு நொடியும் சில ஒளி ஆண்டுகளாய் நீட்சியடைய அலாதி பொறுமையையும் கைகொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறே மரணம் வந்து கிள்ளி தலை சரியும் வரையிலும் கூட.


மரணம் என்பது வந்துவந்து போகும் ஒரு நிகழ்வாகவே அவரது எல்லா கவிதைகளிலும் தொனிக்கிறது.

‘ஒருவர்
சாவதும்
ஒருவர்
இருப்பதும்
வெறும் சாவு
என்பதை விட
இது
மிகவும் குரூரம்
இதைச் சொன்னதும்
சுசீலா தான்’
(குரூரம்)

சுசீலாவும் கூட நகுலனுடன் அவரது மீமெய்வெளியை ஆக்கிரமிக்கும் புனைவின் உருவே அன்றி காதலின் வரைவோலை அன்று.
‘நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை.’
சமூக ஓட்டோடு ஒட்ட விரும்பாமல் சகமனிதர்களை மனநோயுற்றவர்களாய் நோக்கி, அவர்களின் நொய்மையைத் தேர்ந்தெடுத்த அருஞ்சொற்களின் ஒற்றடத்தால் குணமாக்கும் கவிஞனே மனநோயாளியாய்ப் பார்க்கப்படும் விபரீதமெல்லாம் தின்ற சொற்களையே வாந்தியெடுக்கும் கவிஞர்கள் எனப்படுவோர் சமூகத்தின்தான் நிகழும்


‘அவ்வமயம்
நான் என்னையே
பிட்டுத்தின்றேன்.
அவ்வமயம்
நிழல்போல் வந்தபேய்கள்
அவைபோல் சென்றன’
(அஞ்சலி)


கவிஞன், தனது தனிமையில் தான் என்பது பல்லுருவமெடுக்கும் மனிதனாய், நிறைய உருக்களை அழிப்பதும், மற்றைய உருக்களை அலையவிடுவதும் எனச் சொல்லின் திராணியில் உயிர் செய்விக்கின்றான். நாய்களின் நிழல் அலையும் இரவைத் தாண்டி வெளியே வந்து திரும்பிப் பார்க்கையில் நகுலன், ‘ஒரே தெப்பமாக நனைந்த தலை’யுடன்!




குட்டி ரேவதி


பலமுறை மரித்துப்போன சாய்பாபா!






ஒரு வழியாக சத்ய சாய் பாபா இறந்த செய்தி இன்று எல்லோருக்கும் உறுதி செய்யப்பட்டது. கடவுளின் அவதாரமான ஒருவர் இறப்பது எனக்கும் வேதனையும் கவலையும் தரும் செய்தியாகத் தான் இருக்கிறது. அதற்குக் காரணம், என்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தோழியான ஸ்ரீதேவி தனது அடுத்த கடவுளை, தன் மெலிந்த உடலுக்கு உறுதுணையாக இருக்கும் இன்னொரு கடவுள் அவதாரத்தை எப்படித் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதே. அனுதினமும் விரதங்களும் சாய்பாபாவின் நாமத்தை பல இலட்சம் முறைகள் உச்சரிப்பதுமே போதுமானவை, தனது கவலைகள் தீர என்ற நம்பிக்கை உடைய அந்தப் பெண், பெண்களின் நவீனப் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்!



பகுத்தறிவுச் சிந்தனை மரபில் ஊறிய நம் மனத்தில் ஏன் இம்மாதிரியான நம்பிக்கைகள் உறைந்திருக்கின்றன என்ற கேள்விக்குப் பதிலை, இது போன்ற உதாரணங்களால் மட்டுமே முழுமையாக நாம் புரிந்து கொள்ள முடியாது. சாய்பாபா, நோய்வாய்ப்பாட்டு படுக்கையில் கிடந்த நொடி முதல் அவரது பக்தர்கள் தொடர்ந்து அவர் நலனுக்காகப் பிரார்த்தித்தனர். யாரிடம்? கடவுளிடம் எனில் எந்தக் கடவுளிடம்? எனில், சாய்பாபா கடவுளா, இல்லையா? கடவுளின் அவதாரம் என்றால், அவருக்குத் தன்னை நோய்வாய்ப்படாமல் காத்துக் கொள்ளும் ஞானம் வாய்க்கவில்லையா? மானிடப் பிறப்பில் வந்த கடவுளின் அவதாரம் என்றால், மற்ற மனிதரைப்போல நோய்வாய்ப்பட்டு மரித்துத்தானே ஆகவேண்டும்? லிங்கத்தை வரவழைக்கும் மந்திர தந்திரங்கள் மனித உடலைக் காப்பாற்ற உதவவில்லையா? தன் உடலுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை என்ற கூறியவரின் உடலுக்கு இன்று என்னவாயிற்று?  பொய்யும் புரட்டும் பொதிந்த தனிமனிதப் பிரசங்க வாழ்க்கையும் அதை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நிறுவனக்கட்டிடங்களும் அடுக்கடுக்கான கேள்விகளைக் கிளப்புகின்றன.



சாய்பாபா நல்லவேளை இறந்துவிட்டார். என் கவலையெல்லாம், அவரை நம்பித் தம் பொழுதுகளையும் சொத்துகளையும் ஆற்றல்களையும் விரயம் செய்யும் கோடானு கோடி மூடர்கள் இனி, எந்த மந்தையாக மாறுவார்கள் என்பதே. அதற்குள், எங்கேயோ அடுத்த அவதாரம் பிறக்கவில்லையா, என்ன? அவர் ஸ்படிக லிங்கத்தைப் போல, வேறு உருவப்படிமங்களை தன் தொண்டையிலிருந்தோ வேறு பள்ளங்களிலிருந்தோ எடுத்துக் கொடுத்தால், இம்மந்தை தலையாட்டி, கைகளைக் கொட்டி, அங்கே திசைதிரும்பிவிடும்தானே?



அரசியலும் மதமும் ஒருங்கிணையும் போதெல்லாம், ஒன்றோடொன்று கைகோர்த்துக் கொண்டு குடிமக்கள் நலனைப் புறக்கணிக்கிறது. எல்லா மாநில முதல்வர்களும் குடியாட்சி புரியத் தேவையான அருளாட்சி செய்த சாய்பாபா இன்று இல்லாமல் போனதை ஓர் அரசியல் விவகாரமாகவும் நாம் நோக்கவேண்டியிருக்கிறது. ஏனெனில், அரசியல் மதக் கூட்டணிகள்,  மக்களை மந்தையாக்கித் தன் ஆதாயங்களை நிதியாகவும் அதிகாரமாகவும் திரட்டியிருக்கிறது. காலந்தோறும், பகுத்தறிவுக்கெதிரான பாதைகள் கிளைப்பதும், அதைக் களையெடுக்கத் தீவிர பகுத்தறிவு இயக்கங்கள் முளைப்பதும், அரசு என்ற பெயரால் மதத்தின் போர்வையைப் போர்த்திக்கொண்டு, அவ்வியக்கங்கள் முறிக்கப்படுவதும் எனத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இது இந்த நூற்றாண்டில் மட்டுமே நிகழும் அவலம் அன்று. வரலாறு, சாய்பாபா இறந்ததை எழுதிவைத்துக் கொள்ளும். இயங்கும், பகுத்தறிவு விவாதங்களைக் கருத்திலோ, கணக்கிலோ அதன் பக்கங்கள் எழுதிக்கொள்ளாது. ஏனெனில், அரசின் கைகளில் தான் வரலாற்றை எழுதும் விரல்கள் இருக்கின்றன.



பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற சொற்களின் பொருட்களும் அர்த்தங்களும் அவற்றிற்கான நடைமுறைப்பழக்கங்களும் இன்றைய தலைமுறையிடையே சமூக வடிவங்களில் மீண்டும் புணரமைக்கப்பட  வேண்டும் அவசியத்தைத் தான் இம்மாதிரியான நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. நம் சிந்தனை மரபைச் செழுமையாக்க மேற்குறிப்பிட்ட, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற இரண்டு வார்த்தைகளை மையமாக்கிய அர்த்த விவாதமே போதுமானவை. தமிழ்ச் சிந்தனையென்று ஒன்றை வடிவமைக்க வேண்டுமென்றால், இவ்விரண்டு வார்த்தைகளை மட்டுமே மூலங்களாகவும் அளவுகோல்களாகவும் கொள்ளலாம். இந்தியப் புவியியல் பரப்பிலும், இந்தியத் தத்துவச்சிந்தனை என்ற கட்டமைப்பு இவ்விரண்டு வார்த்தைகளுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டுத் தான் பொது மக்களுக்கு ஆன்மீகமாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சி தான் சத்ய சாய்பாபாவும்! எனக்கென்னவோ, இம்மாதிரியான மனிதர்கள் தன் மரணம் உறுதியாக்கப்படும் முன்னே பலமுறை செத்துப்போனவர்கள் தான். பகுத்தறிவும், சுயமரியாதை உணர்வும் அற்ற ஒரு தனிமனிதன் வாழ்ந்தாலும் செத்துப் பிழைப்பவன் தான். அத்தகைய ஒருவனின் வேடம், முடிவுக்கு வந்தது. இனி, அதன் தொடர்ச்சியான அரசியல், நிறுவனக்காட்சிகளின் வேடங்கள் அரங்கேறுவதை வேறு வடிவில் பொதுமக்கள் தரிசிக்கலாம்!






குட்டி ரேவதி




ஒரு பெண், எழுத்தாளராவதற்கு என்னென்ன வேண்டும்?




இக்கேள்விக்குக் கடந்த காலத்தில் வேறுபட்ட பல எழுத்தாளர்கள் தம் அனுபவங்கள் வழியாக அளித்த பதில்களின் தொகுப்பை இங்கு பதிவு செய்கிறேன். இதில் எண்ணற்ற படைப்பாளிகள் கண்டறிந்த நூதனமான பாதைகளும் தீர்வுகளும் கூட இருக்கின்றன. அவரவர்க்கேயான முறைகளில் இதைக் கண்டறிந்திருக்கக் கூடும். அவரவர்க்கேயான தேவைகளும் கூட, எழுத்தில் தீவிரமாக ஈடுபடத் தூண்டியிருக்கின்றன. என்றாலும் நான் கீழே தொகுத்திருப்பவை, ஒரு சீரிய எழுத்தாளராகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு உதவக்கூடும்.



பல்வேறு கட்டங்களில் பெண்களின் எழுத்தை விட, அளிக்கப்பட்ட குறுக்கமானதொரு வாழ்க்கையில் தன் படைப்புப்பணியை எப்படி செழுமைப்படுத்திக் கொள்வது அல்லது தக்கவைத்துக் கொள்வது அல்லது தொடர்ந்து தீவிரப்படுத்திக் கொள்வது என்பது பெரிய விவாதமாகவே விரிந்திருக்கிறது.   பல்வேறுபட்ட பாத்திரங்களை ஏற்று இயங்குவது பெண்ணுக்கு அன்றாடமும் சவாலானதொரு செயல்பாடே. ஒரு பெண் தன்னை முழுநேர எழுத்தாளராக வைத்துக்கொள்வதற்கு என்னென்ன தேவை?


எழுதுவதற்கானதொரு மொழியும் அதில் புலமையும்

தனக்கேயானதொரு அறை (இயன்றால் ஒரு பூட்டு சாவியுடன்)

முழுமையான பொருளாதார விடுதலை

விட்டு விடுதலையாகி எழுத்தில் ஈடுபடுவதற்கான நம்பிக்கை

தன் உடல் மீது தனக்கேயான முழு உரிமை

ஊக்கமூட்டும் மரபார்ந்த வடிவங்களின் (இலக்கிய அமைப்புகள், சங்கங்கள், வாசகர் வட்டம், நூலகங்கள், விமர்சன மரபு) ஆதரவும், முன்மாதிரிகளும்.

தானும் ஒரு பலிகடாவாக மாறிப்போவதை மறுப்பதற்கான நெஞ்சுரம்

ஆர்ப்பாட்டமில்லாத வாழ்க்கைமுறையும் உடல் ஆரோக்கியமும்

இலட்சியங்களாலும் வெற்றிகளாலும் தன்னை வரையறுத்துக் கொள்ளாதிருத்தல்

தான் நம்பும், மானுட விடுதலைக்கான சித்தாந்தத்தில் எந்தத்தடையும் இல்லாது ஈடுபடுவதற்குத் தேவையான ஊக்கத்தைத் தனக்குத் தானே வளர்த்துக் கொள்ளல் 


அன்றாடமும் உழைப்பதற்கான இச்சை 

தனக்கே உரித்தான முறைகளில் தன்னை வரையறுத்துக்கொள்வதற்கும் தனக்குத் தானே கற்பித்துக் கொள்வதற்குமான தீர்மானம்

தனிக்காட்டில் இயங்கவேண்டியிருப்பதற்கான முன்னெச்சரிக்கையும் எந்த அற்பமான விமர்சனங்களுக்கும் செவிசாய்க்காது இருக்கும் கவனக்குவிப்பும்

இதையெல்லாம் எந்த வித பாதுகாப்பும் இல்லாத முறைகளில் இயக்குவதற்கும், நினைத்துப் பார்க்கவே சாத்தியமில்லாதவற்றை நினைப்பதற்கும், தான் வாசிக்க விரும்பியதொரு நூலையே தான் எழுதுவதற்கும் அவசியமான துணிவும் விருப்பமும்.

ஒட்டு மொத்தத்தில் தன் விடுதலையைத் தானே உருவாக்கிக் கொள்வதற்கான வேட்கையும் அதைச் சிதறாமல் கொண்டாடுவதற்கான பக்குவமும் நேர்மையும்.







குட்டி ரேவதி








‘மாதவிக்குட்டியின் கதைகள்’







மாதவிக்குட்டி என்கிற கமலா தாஸ் எழுதிய இருபத்தியிரண்டு சிறுகதைகள் மொழியாக்கம்  பெற்றிருந்த தொகுப்பைப் படித்தேன். உதயசங்கர், மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கிறது.


மிகையான ஆளுமையைக் கொண்டிருந்த எழுத்துப் பெண்ணான கமலாதாஸின் கவிதைகளை வாசித்தவர்கள் கண்டிப்பாக அவரது இச்சிறுகதைத் தொகுப்பையும் வாசிக்கவேண்டும். பெண்ணின் இருப்புக்கான வரையறுக்கப்பட்ட எல்லைகளையெல்லாம், அதனுள்ளே தன்னை நிலைநிறுத்தியவாறே தன் எல்லா சக்தியையும் ஒன்று திரட்டி விரிக்கும் முயற்சி கமலாதாஸினுடையது என்ற எண்ணத்தோன்றுகிறது, அவர் கதைகளைத் தொகுப்பாக வாசித்தப் பின்பு. அதுமட்டுமன்றி, தன் புறத்தோற்றமாக விரிந்த பிரமாண்டமான ஆளுமைக்கும் இக்கதைகள் வழியாக நேர்மையாக இருந்திருப்பதை உணரமுடியும்.


எழுத்தாளரும் வம்சி புக்ஸின் பதிப்பாளருமான கே.வி.ஷைலஜா, இந்நூலுக்குத் துல்லியமானதொரு முன்னுரையை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சிலவரிகளிலிருந்து தொடங்கி கமலாதாஸைத் தொடர்வது என்பது எவருக்கும் எளிதானதாக இருக்கும். ‘மெளனம் உடைபடும் சப்தத்தில் முற்றிலும் பேச்சினை இழந்து மெளனம் காத்த தமிழ்ச்சூழலை நானறிவேன்!’ என்ற வரி கடந்த கால இலக்கிய நெருக்கடிகளைத் தெளிவுபடுத்தியது.


பெண்ணின் உடலார்ந்த சொற்களையும் அரசியலையும் சகஜமாக ஏற்றுக்கொண்ட கேரளச்சூழலில், ‘முலைகள்’ கவிதைகளும் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து ஏற்கப்பட்டன. தமிழ்ச்சூழலில் நிலவியதோ, மெளனம் உடைபடும் சத்தத்தில் பேச்சினை இழந்த மெளனம்!


பெண்கள் பெரும்பான்மையான தம் நேரங்களில் அரூபமான உறவு வெளிகளில் தாம் நீந்திக்கொண்டிருக்கின்றனர். யதார்த்த உலகில் பிடிமானமற்றுப் போய், அந்த அரூப   உறவுகள் கலைந்து, கரைந்து,  இல்லாமல் போவதை இத்தொகுப்பில் நிறைய கதைகளின் தன்மையாய்,  அல்லது பெரும்பான்மையான கதைகளின் அடிப்படைத் தன்மையாய்க் காணலாம்.


ஒவ்வொரு கதையும் நீளமான அலங்காரங்களின்றி தன்னைப் பெண்ணாக்கிய கதையாகவோ, அல்லது தான் சந்தித்தப் பெண்ணின் கதையாகவோ, தொடங்கிய வேகத்தில் கதையை உக்கிரப்படுத்தி முடிகிறது.


பெண்ணின் பார்வையில் காதலன்,  தந்தை இருவருக்குமிடையே நிகழ்ந்த உருவப்பிழையைப் போலவே, ஆணின் பார்வையிலும் காதலி, மகள் என்ற உருவச்சிதைவு கொள்வதைக் கூடக் கதையின் நடையில் சென்று மொழியாக்குவது கமலாதாஸின் தன் முனைப்பின் தீவிரத்தினால் தான்.


சமூகம் வரையறுத்திருக்கும் பெண்மை – ஆண்மை வரையறைகளை உணரும் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் முறையே அதைக் கடக்கத் தலைப்படும்போதெல்லாம், தந்தை, கணவன், மகன், தாய் , மனைவி, மகள் இதுபோன்ற கதாபாத்திரக் கொள்கலனுக்குள் அதை அறியாத நிலையில் சென்று சிக்கிக்கொள்கின்றனர். பின், மாட்டிக்கொண்ட உடலையோ, தலையையோ, உறுப்பையோ விடுவிக்கமுடியாதபடிக்கு, கொள்கலனுக்குள் மாட்டிக்கொண்ட உறுப்பு நினைவுகளில் பூதாகரப்படுவதையும் உணரமுடிகிறது.


ஆனால், இதுவரை வெளிப்படுத்தமுடியாது அடக்கிவைத்திருந்த பெண்களின் துயரை வார்த்தைப்படுத்தவே ஒவ்வொரு கதையிலும் கமலாதாஸ், அத்தகைய பெண்களை இழுத்து வந்து பேசச்செய்கிறார்.     


‘கிழட்டு ஆடு’ என்ற கதையில், தன் நலன் நோக்காது கணவனுக்கும் மகன்களுக்கும் சமைத்துப் போடும் பெண், வயது முதிர அவள் ஒரு கிழட்டு ஆட்டைப்போன்று தோற்றமளிப்பதாகக் கூற, அவள் எல்லோரும் சென்ற பின், கண்ணாடியில் சென்று தன் முகத்தை உற்று நோக்குவதன் வேதனை குறையாத கதை. 


‘தண்டனை’ கதையில் ‘கல்யாணம் முடிஞ்சா தூங்கக்கூடாதா?’ என்று பாட்டியிடம் கேட்கும் புதிய மணப்பெண்ணின் கதை.


பெண்மனம் தன் வாழ்வில் தடுமாறும் இடங்களில் எல்லாம் கமலாதாஸின் கதை முளைத்து வருகிறது. புறக்கணித்து வைத்திருக்கும் நினைவுகளையும் நிகழ்வுகளையும் சீண்டி விடுகிறது. பிறகென்ன? வாழ்வின் முழுமைக்கான விழைவு தீராததாகிறது. 




குட்டி ரேவதி

கருணையும் கொலையும் (அருணாவின் வாழ்வை முன்வைத்து)






கருணைக் கொலை என்பது ஒரு விவாதமாகக் கிளம்பியிருக்கும் நிலையில் அதைப் பற்றிய சில கேள்விகளை அருணா சான்பாக் வாழ்வில் நடந்த சம்பவங்களுடன் இணைத்துப் பதில் தேடுவது விவாதத்தை இன்னும் தெளிவாக்கும். முப்பத்தியாறு வருடங்களுக்கு முன் அருணா, மும்பையின் கே.இ.எம் மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்தில் பணி புரிந்து வந்தார். ஆய்வுக்கூடத்தில் மருந்துப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தும் நாய்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அருணாவினுடையது. நாய்களுக்குக் கொடுக்கப்படும் உணவைக் களவாடியதற்காக அங்கு பணிபுரிந்த சோகன்லால் பார்த வால்மீகி என்ற வார்ட்பாயை அருணா தொடர்ந்து கண்டித்து வந்திருக்கிறார். இதனால், எரிச்சலடைந்த வால்மீகி, அருணாவை வல்லாங்கு செய்ததுடன், அவளை நாய்களைப் பிணைக்கும் இரும்புச் சங்கிலியால் கழுத்தை இறுக்கி, கடுமையாகத் தாக்கி இரத்தவெள்ளத்தில் விட்டுச் சென்றிருக்கிறான். நரம்பு மண்டலம் பலமாகத் தாக்கப்பட்டு பார்வையை இழந்ததுடன் பேசும் ஆற்றலையும் இழந்துவிட்டாள். அன்று மயக்க நிலையை அடைந்த அருணா இன்று வரை முப்பத்தாறு வருடங்களாகக் கோமா நிலையில் இருக்கிறார். ஆறுதலளிக்கும் விஷயம், அன்றிலிருந்து இன்று வரை அந்த மருத்துவமனை செவிலியரே அருணாவின் உடல்நலத்தைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துவருகின்றனர். வேதனையளிக்கும் விஷயம், அருணாவின் மீது பாலியல் வன்முறையைச் செயல்படுத்திய  சோகன்லால் பார்த வால்மீகி, வெறுமனே திருட்டுக்குற்றத்திற்கான தண்டனையை மட்டுமே அனுபவித்து மீண்டது.




இந்நிகழ்வைப் பின்புலமாக வைத்து சில சமூக அவலங்களைப் புரிந்து கொள்ளலாம். ஆண்கள் தங்கள் வன்மங்களையும் பழிவாங்கல்களையும் பெண்கள் மீது செலுத்தும் ஒரே வடிவம், வல்லாங்காவே இருக்கிறது. சென்ற வாரம் கூட, எழுபது வயது மூதாட்டி ஒருவர் சில இளைஞர்களால் வல்லாங்கு செய்யப்பட்டிருக்கிறார். ஆக, இளமையோ, வயதோ கூட ஒரு பொருட்டு இல்லை. ஆனால், பழிவாங்குவதற்கு ஆண்கள் தேர்ந்தெடுக்கும் வழி, வல்லாங்கு ஒன்றே. இது, கடந்த காலங்களில் தீவிரப்பட்டிருக்கிறது. சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை எல்லோரும் இந்நிலைக்கு தொடர்ந்து ஆளாகின்றனர். சமூகம்  ‘இழிவு’ என்று வரையறுக்கப்பட்டிருக்கும், தன்னுடன் இணக்கமான உறவில்லாத பிற ஆணுடனான பாலியல் உறவு என்பதே பெண்கள் மீது வலுக்கட்டாயமாகவும் முறையற்ற வடிவிலும் திணிக்கப்படுகின்றது. இச்செயல் தொடர்ந்து கொண்டிருப்பதும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் நம்மிடையே எந்நிலையில் இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.




முப்பத்தாறு வருடங்களாக, அம்மருத்துவமனையின் அக்கறையின் பராமரிப்பில் இருக்கும் அருணாவின் நிலை பொதுமக்கள் கவனத்திற்கு மீண்டும் வந்திருப்பது பிங்கி விரானி, அருணாவைப் பற்றிய ஒரு நூலை எழுதிய பின்பு தான்.  இவர், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்து, ‘பிட்டர் சாக்லேட்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூலை ஏற்கெனவே நான் வாசித்திருக்கிறேன். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த பல்வேறு முக்கியமான நிகழ்வுகளையும் விளக்கி, அதன் பின்னால் இயங்கும் மனித உளவியலையும் ஆராயும் நூல். இவற்றை வெறுமனே ஓர் அவலமாக எண்ணி, மறுத்து ஒதுக்கிவிட்டு, ஆனால் அதை ஒரு  குற்றமாகப் பார்க்காத உளவியலையும் விரிவாக அலசும் அருமையான, அவ்வகையான முதன்மையான நூல். இவரே  அருணாவின் வாழ்வைப் பற்றிய நூலையும் எழுதியிருக்கிறார். இவர், அருணாவைக் கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி வழக்கும் தொடுத்திருக்கிறார். ஆனால், கே.இ. எம். மருத்துவமனை நிர்வாகத்தினர் இதை மறுக்கிறார்கள். அருணா, கோமா நிலையில் இல்லை என்றும், சங்கீதத்தைக்கேட்கவும், மீனை உண்ணவும் விருப்பப்படுவதாகவும் கூறுகிறார்கள். என்றாலும் அவரது மூளை சுருங்கிப் போயிருப்பதாக, நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பான ஸ்கேனிங்கில் தெரிகிறது.




பிங்கி விரானி இந்நூலை எழுதுவதற்கான முயற்சியில் தொடர்ந்து சென்று அருணாவைச் சந்தித்திருக்கிறார். அருணாவிற்காக உணவுகள் எடுத்துச்சென்றும், அவளுடன் பாடியும் பேசியும் நேரங்கழித்தும் அவளைப் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார். தொடர்ந்து படுக்கையிலும் தனது அசைவுகள் எதையும் தானே நிர்வகிக்கும் நிலையையும் இழந்து விட்ட இவருக்கு கருணைக்கொலையை அனுமதிக்கவேண்டும் என்று இவர் உச்சநீதி மன்றத்தை அணுகியிருக்கிறார். இந்தியச்சட்டம் 21, கண்ணியத்துடன் ஒருவர் சாவதை அனுமதிக்கவில்லை, கண்ணியத்துடன் வாழ்வதற்கான சட்ட உரிமையை மட்டுமே அளிக்கிறது. இந்நிலையில், அவ்வாறாக, அருணா கருணைக் கொலை செய்யப்படுவதை சட்டம் அனுமதிக்கவில்லை என்கிறது, நீதிமன்றம். இதுகாறும், அம்மாதிரியான மதிப்புடைய பெருமையுடைய வாழ்வையா அருணா வாழ்ந்திருக்கிறார் என்ற தர்க்கப்பூர்வமான கேள்விகளுக்குச் சட்டத்தில் இடமில்லை போலும். ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் ஆய்வுக்கூடப் பெண்மணியாக இருந்த ஒருவர், திருட்டுக் குற்றத்தை எதிர்த்ததற்காக, வல்லாங்கு செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான நீதி வழங்கப்படாததும், அது ஒருவருக்கான சட்டப்பூர்வமான உரிமையாகப் பார்க்கப்படாததும் வாழ்வுரிமையாகப் பார்க்கப்படாத சமூகத்தில் சாவதற்கான உரிமையைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது.




மருத்துவ முடிவுகள் அருணாவின் இந்நிலையை, நிரந்தரத் தாவர நிலை என்று கூறுகிறது. காய்காய்கறியைப் போன்றதொரு தாவர உடலாய் அருணாவின் உடலை வைத்துக் கொண்டிருக்கும் நிலையை, பிங்கி விரானி கடுமையாக ஆட்சேபிக்கிறார். இந்நிலையை அருணா சுய உணர்வுடன் இருந்திருந்தால் அனுமதித்திருக்கவே மாட்டார். சுயமரியாதையுடன் வாழ விரும்பும் ஒருவர் இப்படி இலை தழையைப் போன்று வாழ்வதை, வாழ்க்கைக்கான கண்ணியமென்று கொள்ளக்கூடாது என்பது பிங்கி விரானியின் வாதம். இன்னொரு வாதம், மருத்துவமனையில் உள்ளவர்கள் அருணாவின் மீது காட்டும் அன்பை பிங்கிவிரானியின் கோரிக்கை, புறக்கணிப்பதாகும் என்று கூறுகிறது. மருத்துவமனையில் இருப்பவர்களே, பிங்கி விரானிக்கு எதிரானதொரு போராட்டத்தையும் நிகழ்த்தினர். பிறிதொரு வாதம், மதப்பூர்வமானதாயும், சம்பிரதாயமானதாயும் இருக்கிறது. அதாவது, கடவுள் அளித்த இந்த உடலுக்கு, மரணத்தை வழங்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்கிறது, கத்தோலிக்க மதச் சிந்தனையோர் சபை. இந்துமதச் சிந்தனையாளரோ, இந்தியச்சமூகம் அடிப்படையில் உணர்ச்சிப் பூர்வமானதொரு சமூகம் என்றும் ஒவ்வொருவருடைய வாழ்வும் முற்பிறப்பின் வினையால் தோன்றுகிறது. ஆகவே, இந்த வாழ்க்கையை இவ்வண்ணமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். இவ்வாறு பலவாறான விவாதங்களை முன்வைத்து அருணாவின் சுமை வளர்ந்துகொண்டே இருக்கிறது.  கடவுள் கொடுத்த மனித உடலை வல்லாங்கு செய்வதற்கு மட்டும் மனிதனுக்கு உரிமை இருக்கிறதா? அல்லது, அருணாவை வல்லாங்கு செய்யும் உரிமத்தை முன்பிறப்பிலேயே அந்த வார்ட்பாய் பெற்றுவந்தாரா? இந்தக்கேள்விகள் நம் நெஞ்சில் எழாமல் இல்லை.



ஆனால், அருணா விஷயத்தில் முன்மொழியப்படும் கருணைக்கொலை வேறு. முதியவர்களை அன்புடன் பராமரித்துக்கொள்ள முடியாமல் அவர்கள் மீது செயல்படுத்தும் கருணைக் கொலை என்பது வேறு. இக்கருணைக்கொலை என்பதே பொருத்தமற்ற இரண்டு வேறுபட்ட நோக்கங்களால் உருவானதாக இருக்கிறது. கருணை என்றாலே அது கிழங்கு வகைகளில் ஒன்று என்றாகி விட்டது என்ற அர்த்தத்தில் கிண்டலடிப்பார் புதுமைப் பித்தன். கொலைகளில் இரண்டு வகை உண்டு என்கிறது பெளத்தம். அதாவது, கொலை செய்யவேண்டும் என்ற இச்சையில் கொல்கிறோமா, அல்லது தேவை கருதி கொலை செய்கிறோமா என்று புலால் உண்ணுதலையும் மனிதனின் அவசியங்களின் பொருட்டு உயிர்களைக் கொல்லுதலையும் தெளிவாக்குகிறார் புத்தர். கருணைக் கொலை என்பதை பொது நிலையில் வைத்து விவாதிப்பது மனித நாகரிகத்தின் கொச்சையான தன்மைகளைத் தான் வெளிப்படுத்தும் என்பதால், சம்பந்தப்பட்டவரின் வாழ்நிலை, வேதனை போன்றவற்றைக் கொண்டு தான் இதைத் தீர்மானிக்கவேண்டும். கருணையும் கொலையும் பொருத்தமற்ற தருணங்களில் வெளிப்படுத்தப்படுவதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 



தொடர்ந்து பெண்கள் மீது செயல்படுத்தப்பட்டு வரும் வல்லாங்கை நிறுத்துவதற்கான சமூக உபகரணங்களை நாம் கண்டறிந்தே ஆகவேண்டும். திரைப்படங்களில், தொடர்ந்து கதைகளாக்கப்படும் ஓர் ஆணின் பழிவாங்கும் உணர்வும், அது எப்படி வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறது என்பதும், அதை வெற்றிகரமாக நிறைவேற்றுபவரே கதாநாயகன் என்றும் வழங்கப்படுவதே சமூகத்தின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும். ஆக, இது ஒரு சாதாரண வாழ்வில் இயங்கும் ஆணின் மனநிலையையும் பீடித்து இருக்கிறது. தனக்கு எதிராகக் குரலோ மறுப்போ காட்டும் ஒரு பெண்ணை, முடக்குவதற்கு பாலியல் வன்முறை தான் உற்ற ஆயுதம் என்பது தொடர்ந்து ஆண்களுக்கு சமூகம் போதித்து வரும்பொழுது அருணாவின் கோமா நிலையும் அவளுக்கு நிகழ்ந்ததும் பெண்களுக்கு எல்லாம் எச்சரிக்கையைத்தரும் ஒரு தொடர் உருவகமாக ஆகி நிற்கிறது.





குட்டி ரேவதி

நன்றி: அரும்பு

ஊசிகள்






எண்ணிக்கையற்ற முறைகள்
வன்கலவிக்கு உள்ளான மென்னுடலை
ஊசிகள் பொதியப்பட்டது என்றாள் நீலவேணி
ஒவ்வொரு கலவியும் ஊசியாகி
எலும்புக்குள்ளும் சதைகளுக்குள்ளும்
சென்று செருகிக் கொள்ளும் வரை அறியமுடியும்
பல்கடித்துத் தாங்கிக் கொண்டால்
வயிற்றில் தண்ணீர் சென்றிறங்கும் வழியை
உணர முடிவது போலவே
ஒரே நூலால் கோர்க்கப்பட்டவை போல
ஓர் ஒழுங்குக்குள் பொருந்தி உடலுக்குள்
சேகரமாவதை எண்ணிக்கொண்டே இருந்தாளாம்
உள் சென்றவை வெளிமீளும் வழியறியாததைப் போல
இரத்தத்தின் நதியில் போயிறங்கி
வேர்கொண்டன அவள் உடலெங்கும்
ஊசிகள் ஊன்நுழையும் சிறுயோனி துவாரத்தை
அதே ஊசிகளால் தைத்து அடைக்க இயன்ற போது
ஊசிகளின் எண்ணிக்கை இத்துடன் முற்றும் என்றாள்.







குட்டி ரேவதி
நன்றி: கணையாழி

‘கணையாழி மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி’

அடுப்பு எனும் கவிதையும் சொல்மயக்கமும்







அடுப்பு

ஒவ்வொரு முறையும் கிழவியின் பேச்சில்
அடுப்பு பற்றிய  அங்கலாய்ப்பே மிகையாய்
அப்படி ஒன்றும் பொங்கிப்போட
அவளுக்கென்றும் ஆளில்லை
ஆனாலும் அடுப்பின் சம்பவமே
அவளின் அலுப்பிலெல்லாம் புகையும்
‘அடுப்பில பூனை உறங்குது!’
‘அடுப்பு தான பொம்பிளைக்கு ஆற்றல் சாதனமாக்கும்!’
‘அடுப்பு ஊதறதுக்குப் புல்லாங்குழலு எதுக்கு?’
‘ஈர விறகுப்புகைச்சலில் அடுப்பிலே தீ ஏறாது!’
‘சூடுகண்ட பூனை அடுப்பங்கரையில சேருமா, என்ன?’
‘பிச்சைக்காரனுக்குப் பயந்து அடுப்பை மூட்டாமல் இருப்பேனா?’
‘அடுப்பு ஊதினா கண்ணுல தீப்பொறி விழத்தான செய்யும்?’
‘யார் மூட்டினாலும் அடுப்பு எரியத்தான் செய்யும்!’
‘அடுப்புல தீ எரிஞ்சா வயித்துப்பசி தீருமா?’
‘அடுப்புல நெருப்பில்லாம புகையுமா?’
வாதம் செய்தால் ஊதிப்பெரிதாக்குவாள்
அடுப்பின் நினைவுகளைக் கிண்டிக்கொண்டிருந்த கிழவி
மழையடங்கிய இரவில் ஒருநாள்
மரித்துத் தனியே எரிந்த போது தெரிந்தது
அடுப்பு என்று தன் கருப்பையைத் தான் கூறினாள் என்று.



சொற்களும் சொல்மயக்கங்களும் கலந்த சிக்கலான மொழியின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. பல சமயங்களில் நாம் என்ன நினைக்கிறோமோ அதையே அர்த்தப்படுத்தும் சொற்களை நாம் பயன்படுத்துவதில்லை. அல்லது, சொற்களின் அர்த்தத்தைப் பிறழ்வாகப் புரிந்து கொண்டு வேறு அர்த்தங்களுடன் நம்மை அணுகுகிறார்கள். ஒரே சொல்லை நீங்களும் நானும் வேறு வேறு அர்த்தத்தில் புழங்குகிறோம். ஆனால், நீங்கள் உங்களுடைய அர்த்தத்தின் ஒற்றைக் கயிற்றிலும் நான் என்னுடைய அர்த்தத்தின் ஒற்றைக் கயிற்றிலும் தொங்கிக்கொண்டிருக்க, இரண்டையும் ஒரே சொல்லாக்க அல்லது ஒரே அர்த்தமாக்க ஊசலாடுகிறோம். அல்லது ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் கவிதையிலும் பேச்சிலும் உரையாடலிலும் வேறு வேறு அர்த்தத்தில் பயன்படுத்தி அச்சொல்லின் வேறு காலத்தைச் சென்றடைந்திருக்கும் போது, அந்தச் சொல்லின் கற்கால அர்த்தத்துடனோ அல்லது வழமையான சலிக்கப்பட்ட அர்த்தத்துடனோ நீங்கள் அதே சொல்லை வேறு ஒரு சொல்லாக்கி என்னை நெருங்குகிறீர்கள், நான் வெறுமனே ஒரு கவிஞர் மட்டுமே என்பதை மறந்து போய்.


நாம் மொழியை அணுகவும் அதைக் கையாளவும் ஒரு நேரடியான முறையைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரே வழி, ஒருவரையொருவர் உணர்வு ரீதியாக அணுகுவதும், அதற்கு மொழியை ஒரு துணைக்கருவியாக மட்டுமே பயன்படுத்துவதும். சொற்கள் இவ்விடத்தில், நவீன அர்த்தத்தையும் தற்கால அரசியலையும் பெற்று பொலிவுறுகின்றன. சொற்கள், இங்கே தான் தம் சுமையை இறக்கி வைத்து இளைப்பாறுகின்றன. அனாவசியமான சொற்கள் நெஞ்சுக்கூட்டிற்குள் தணலாய்க் கனன்று கொண்டிருக்கவேண்டியதில்லை. உணர்வின் பிணைப்புகள், அச்சொற்களின் தீயை அணைக்க வல்லன. மொழியியலாளன், சொற்களுக்கு உணர்வை ஆணையிடட்டும். கவிஞரோ, உணர்வுகளிலிருந்து சொற்களை அவிழ்த்துவிடட்டும்.



’அடுப்பு’ கவிதை கணையாழியில் பிரசுரமாகியிருக்கிறது. மேற்குறிப்பிட்டிருக்கும்  சொல்மயக்கம் பெண்ணின் தரப்பில் கூடுதல் அர்த்தம் பெறுவதையும் அர்த்தம் அழிவதையும் சுட்ட முயன்றிருப்பாளாய் இருக்கும் அந்தக் கிழவி!



குட்டி ரேவதி
நன்றி: கணையாழி
  


கணையாழி இதழ் வெளியீடும் இலக்கியப்பண்பாடும்




கணையாழி மீண்டும் வரப்போகிறது என்றும் அதற்குப் படைப்புகள் தரமுடியுமா என்றும் அதன் ஆசிரியர் ம.ராசேந்திரன் அவர்கள் கேட்டார். இதழ்களுக்கென்றே சில கவிதைகளை எழுதி அனுப்பினேன். கடந்த சில வருட இணைய புரட்சிக்குப் பின்னும் இம்மாதிரி இதழ்களுக்குக் கவிதைகள் அனுப்பி, அவை பிரசுரமாகும் வரைக் காத்திருந்து, இதழ் வாங்கிப் பார்ப்பது உற்சாகத்தையும் பரவசத்தையும் ஒரு சேரத்தருகிறது. எழுத வந்த தொடக்கக் காலங்கள் இவ்வாறு ஒவ்வொரு இதழுக்கும் கவிதைகள் அனுப்பி அவை தொடர்ந்து பிரசுரமாவதை எதிர்பார்த்திருப்பேன். இவ்வாறான தொடர்ந்த முயற்சிக்குப் பின் ஒரு கவிதை தொகுப்புக்கான கவிதைகள் சேர்ந்ததும் பதிப்பாளரை அணுகி அவற்றை நூலாக்குவது தான் என் வழக்கமாக இருந்தது.



இம்மாதிரியான முறை, எழுதும் மனதுக்கு பள்ளிக்கூடக் காலங்களின் அதே மெனக்கெடல் உணர்வைத் தருகிறது. அதிலும் சீரிய இதழ்களுக்குக் கவிதைகள் எழுதுவது, அவ்விதழின் பிற படைப்புகள் பெறும் அடையாளங்களுக்கு இடையில் நம் கவிதைகள் இடம்பெறுவது நாம் முன்வைக்கும் சிந்தனைகள் வழி நாம் நிற்பதற்கான நெஞ்சுரத்தையும் அது குறித்த விசாரணைகளையும் தொடர்ந்து நமக்கு எழுப்பும். இது இன்னும் இன்னும் நமதென முன்மொழியும் சிந்தனையின் வழி நுணுகிய பயணத்தையும், ஒற்றையான நடையையும்  கூட மேற்கொள்ள ஊக்கப்படுத்தும். காலந்தோறும் கவிதையின் உருவம் தன் கைப்பிடித்து தனக்குள்ளே வளர்ந்து வரும் அனுபவத்தை சீரிய இதழ்ப்பணியில் தொடர்ந்து ஈடுபடுபவர்களால் உணரமுடியும்.



கணையாழி இதழ் வெளியீடு  மிகவும் தீவிரமானதொரு தொனியில் நிகழ்ந்தேறியது. முந்தைய தலைமுறை படைப்பாளிகள் இலக்கியம் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், படைப்புப்பணியில் இருந்த ஈடுபாட்டையும் வெளிப்படையாக உணரமுடிந்தது. இன்றைய இலக்கிய விழாக்கள் ஆர்ப்பாட்டங்களுடன் நடந்து நிறைவேறுவது வழக்கமாகிவிட்ட நிலையில், கணையாழி இதழ் வெளியீட்டு விழா முற்றிலும் மாறுபட்டிருந்தது. அடக்கமான உணர்வும் நெகிழ்ச்சியான அனுபவங்களும் அரங்கை நிறைத்தன. ஒவ்வோர் இதழும் இப்படியான பண்பாட்டுப் பாரம்பரியத்தைத் தான் வளர்த்தெடுக்க வேண்டுமோ என்றும் தோன்றியது. உரையாடல்களைத் தொடர்வும், படைப்பூக்கப்பணிக்குப் புத்துயிர்ப்பு அளிக்கவும் இத்தகைய பண்பாடு உதவும்!


அவ்விதழில் பிரசுரமான என் கவிதைகளில் ஒன்று, ‘அச்சு இயந்திரம்’!


அச்சு இயந்திரம்

சிறிது முறையான பயிற்சிக்குப் பின்பான
சில பிழைகளுக்குப் பின் தான்
நாம் தடதட தடவென்று மொழியத் தொடங்கினோம்
உணர்ச்சிகளின் ஏடுகளைத் துப்பத் தொடங்கினோம்
உடலின் முழக்கமே  மொழியாய்ப் பிறக்கும்
ஓலைகள் மீது நற நறவென்று கீறத்தொடங்கினோம்
வெள்ளைக்காகிதங்களென்று ஏதுமில்லை
நம் செங்குருதிக் கறைகளைத் தொடர்ந்து அச்சாக்கிய வண்ணமே
காலம் மீறி உடலை இயக்கினோம் எழுதினோம்
காலச்சக்கரங்களின் கீழ் அரைபடும் வேகத்தில்
நெரிபட்டன நம் குரலொலிகள் ஆனாலுமென்ன
நம் பெயரின் முத்திரை அழித்துப்
பிரதிகளைக் கேட்பவரிடம்
நம் கருவனத்தின் கறைகளால்
ஆக்கிக் கொடுப்போம் அசலான பிரதிகளை
பிரசவிப்போம் பித்தமேறிய பாடல்களை
அதிர்ச்சியுற்ற கூக்குரல்கள்
நம் யாக்கையின் காகிதங்களை மோதட்டும் பிளிறட்டும்
கிழிக்கட்டும் என்றாலும்
ஆக்கிக் கொடுப்போம் அசலான பிரதிகளை
அறிவுக்கு விலை பேசுவோரிடம்
நம் வேட்கையுற்ற உடல்களைப் பிரதிகளாக்கி
நாற்சந்திகளிலும் விதைத்து வருவோம்
சுவரொட்டிகளாய்ப் பூசிவருவோம்
காண்போர் முகம்வியர்க்க
குத்திய பச்சையாய் மையாய் 
துளைகளாய் தளும்புகளாய் காயங்களாய்
பிரதிகளாய்ப் பிரசவித்து ஓயோம் தாமே நாம்
கருப்பனுவல்களாய்க் காடொடுங்கிக் கிடந்து
காணாமல் போனவற்றை
காட்சிகளாக்கிச் செதுக்குவோம் எவர் நெஞ்சிலும்
காகிதத்தின் நெற்றியில்
நம் பெயர் அச்சாகியதா என
ஒருமுறை முதுகைப்புரட்டிப் பரிசோதித்தும் கொள்வோம்



குட்டி ரேவதி
நன்றி: ‘கணையாழி’ கலை இலக்கிய இதழ்

ஆலன் கின்ஸ்பெர்க்கின் ஊளை





சமீபத்தில் ஒரு பெண் கவிஞருக்கு அறிவிக்கப்பட்ட விருது அறிக்கையில், ’சித்தாந்த முகமூடிகள் எதையும் அவர் அணிந்து கொள்வதில்லை’ என்று எழுதப்பட்டிருந்தது. பெண்களோ இலக்கியவாதிகளோ சித்தாந்தம் எதையும் தன் சிந்தனையில் ஏற்றுக்கொள்ளக்கூடாது, அல்லது அவ்வாறான ஒன்றை உருவாக்கி விடக்கூடாது என்று சமூகம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது, பாருங்கள்!


புதியதோர் உலகம் என்பது புதியதொரு மனமாகத்தான் இருக்கமுடியும். மனிதர்கள் அவரவர் மனநிலைகளிலேயே ஆர்வமுற்று  அவரவரிலேயே தொலைந்து போனால் புதியதொரு மனமும் சாத்தியமில்லை, புதியதோர் உலகமும் சாத்தியமில்லை என்பது வில்லியம் பரோஸின் நிலைப்பாடு.  இதுவே கவிஞன் ஆலன் கின்ஸ்பெர்கின் வாதமுமாக இருந்தது. சிலதினங்களுக்கு முன் ‘Howl’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆலன் கின்ஸ்பெர்க்கின் ‘Howl’ என்ற மிகவும் பிரபலாமான, அதிகமும் விமர்சிக்கப்பட்ட கவிதையை அடிப்படையாகக்கொண்ட திரைப்படம். இந்தக்கவிதையை அவர் எழுதிய போது அது ஆபாச முத்திரைக் குத்தப்பட்டு தொடர் விசாரணைக்கு உள்ளானது. கின்ஸ்பெர்க் சுய பாலீர்ப்பு மிக்கவராய் இருந்தார். அதை வெளிப்படையாக வெளிப்படுத்தினார். 1950 – களில் அமெரிக்காவில் அது குற்றப்பூர்வமான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. ஆனால், கின்ஸ்பெர்க் அத்தகைய பாலுறவைத் தடையின்றி கொண்டாடினார்.


‘Howl’ கவிதையும் தடையிலாத  உக்கிரமான தொனியில் வெளிப்பட்ட நீள்கவிதை. இருண்ட தவிர்க்கப்பட்ட தயங்கிய உலகத்தைப் பட்டவர்த்தனமாக அதே சமயம் கவிதையின் உச்சபட்ச சாத்தியப்பாடுகளையும் மொழி வெளிப்பாட்டையும் இணைத்திருக்கும். கவிஞர்கள், பல சமயங்களில் கவிதை குறித்த அவநம்பிக்கைகளுடன் வாழப்பணிக்கப்பட்ட நம் சமூகத்தில், இக்கவிதையையும் அதைச் சூழ்ந்த எதிர்ப்பையும், கின்ஸ்பெர்க்கின் மனநிலையையும் புரிந்து கொள்வதும் பொருத்திப்பார்ப்பதும் மிகவும் கடினம். அத்திரைப்படம், ஒரே சமயத்தில் கவிதை வாசிப்பையும், நீதிமன்றத்தில் அக்கவிதை குறித்த விசாரணையையும், அக்கவிதையில் அவர் கையாண்டிருக்கும் படிமங்கள் அசைப்படமாக்கப்பட்டிருப்பதுடன், கவிஞனுடனான ஓர் அந்தரங்க உரையாடலையும் நிகழ்ந்த்தியிருக்கிறது. படம், அக்கவிதையின் பரப்பையும் அது சார்ந்த கவிஞனின் மனநிலையையும் விட்டு வெளியேறாது, கவிதையைப் போன்றே ஓர் உக்கிரமான வடிவமாகியிருக்கிறது.


2010 –ல் எடுக்கப்பட்ட இப்படம் ராப் எஃப்ஸ்டைன் மற்றும் ஜெஃப்ரி ஃப்ரீட்மென் ஆகியோரால் இயக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஒரு கவிதைப் பயிற்சிப்பட்டறையில் திரையிடுவதாகத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், முதல் வகுப்பிலேயே கவிதைக்கும் அப்பயிற்சியில் இடம்பெற்றிருந்த இலக்கிய ஆர்வலர்களுக்குமான  இடைவெளியை உணர்ந்த எனக்கு அதைத் திரையிடுவதற்கான தருணம் வாய்க்கவில்லை.  கவிதையை மற்ற இலக்கிய வடிவங்களுடன் சேர்த்திணைத்துப் பார்க்கும், அலட்சியப்படுத்தும் ஒரு தட்டையான சமூக வடிவில் கவிதை வெளிப்பாட்டுக்கான வெளிகளும், அதன் நோக்கங்களும் பயன்களும் குறித்த அக்கறையும் இருக்காது தானே! ‘il postino’ போலவே இந்தப்படமும் கவிதை என்றால் என்ன என்பதையும் அகக்கிடக்கையாகக் கொண்டிருக்கிறது. கின்ஸ்பெர்க்கின் நேர்காணல்களைத் தொடர்ந்து தேடி வாசித்து முடித்தேன். அவரது அக உலகத்தின் பெரும் பரப்பையும் தெளிவான வெளிச்சத்தையும் சிந்தனை ஆழத்தையும் கவி ஆளுமையையும் நேர்காணல்களில் தாம் உணரமுடியும். அவர் கவிதைகளுக்கு நிகரான சிந்தனைத் தளங்களைக் கொண்டிருக்கின்றன, அவரது நேர்காணல்கள். 


ஆலன் கின்ஸ்பெர்க், பால்நிலை வெளிப்பாட்டை வெளிப்படையாகச் சொன்னதைக் கொண்டு அவரை வெறுமனே ஒரு ப்ளேபாய் என்ற உருவிற்குள் நாம் அடைக்கமுடியாது. வாழ்வு முழுக்க வெவ்வேறு கவிஞர்களுடன் இணைந்து பல சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். புதிய சித்தாந்தங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவரவர்  கவித்துவத்தின் முழுமையை வெளிப்படுத்தும் பணி தான் முக்கியமானது என்பதை தன் செயல்பாடு தோறும் வலியுறுத்துகிறார். தனிமனித சமூக அக்கறையை கவித்துவமான பணியாக உருமாற்றுவதில் பலர் தோல்வியடைந்திருக்கிறார்கள். கின்ஸ்பெர்க், தான் ஓர் அரசியல் கவிஞர் என்று முத்திரைக்குத்தப்பட்ட போதெல்லாம் அதைக்கடுமையாக எதிர்ப்பதன் வழி இதை வென்றிருக்கிறார். அவர் கவிதையினை  வாசிக்கும் போதே எதிரொலிக்கும் சப்தத்தையும் சொற்கள் கொண்டிருப்பதைப் போல இருக்கும். ஒரு கூக்குரல் அதன் வரிகளின், அர்த்தங்களின் அடியில் தங்கியிருக்கும்.  புதிய சொற்கோர்வைகளும், வரிகளின் நீட்சிகளும் வாசித்து முடித்தப்பின்னும் அந்தச் சப்தத்தை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன.

குட்டி ரேவதி

ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப்பிரதிகள் - 8

உமா மகேஸ்வரி - பசுமையின் வரியைத் தனியாக எழுதும் ஒற்றைப்புல்







http://koodu.thamizhstudio.com/thodargal_14_8.php


நன்றி: கூடு;தமிழ் ஸ்டுடியோ


குட்டி ரேவதி