நம் குரல்

கலைஞனும் வாழ்வும்









ராஜபார்ட் ரங்கதுரை படத்தை மட்டும் சமீபத்தில் மூன்று முறை பார்த்துவிட்டேன். மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கான நிறைய காரணங்களைப் படம் கொண்டிருக்கிறது. தூர்தர்ஷனில், குடியரசுதினத்திற்கு முந்தைய நாளும் ஒளிபரப்பினார்கள்.



நீங்களும் எப்பொழுதாவது பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.




மேடை நாடகப்பின்னணியைக் கொண்ட கதை என்று மட்டுமல்லாமல், சங்கரதாஸ் எனும் மேதை, புராண நாடகத்திலிருந்து விடுதலை எழுச்சி நாடகம் நோக்கி காலம் நேர்த்தியாக முன்னகர்ந்திருப்பது, கலையையும் வாழ்வையும் ஒருசேரத் தன் தோள்களில் தாங்கும் கலைஞன், எதன் பொருட்டும் துயர்தாங்கும் வல்லமையை இழக்காதிருக்கும் நாயகன், அவனது கர்வம், கம்பீரம், எந்த ஏழ்மையிலும் உருக்குலையாதிருத்தல், சிறிய மனிதக்கூட்டத்திற்கேனும் தனிமனிதனாகப் பொறுப்பு ஏற்கும் அக்கறையும் பக்குவமும் என்று கதாநாயகன் தன் ஆளுமையால் விரிந்து கொண்டே இருப்பதை இப்படத்தில் உணரமுடிகிறது.




சொல்லப்போனால், மேடைநாடகவரலாற்றின் போக்கையும் சிக்கல்களையும் சவால்களையும் சொல்லியபடியே ஒரு குடும்பக்கதையைச் சொல்லியதுடன் இல்லாமல், முதலாளி - தொழிலாளி வர்க்கமோதலையும் முன்வைத்திருப்பார்கள், இயக்குநரும் கதையாசிரியரும். 




புராண, அடிமைத்தனக்கதைகள் சொல்லிவந்த கலைஞர்கள், தம் கலை நலியத்தொடங்கும் போது,  அதன் காரணத்தை ஆய்ந்துணரும் இடம் வெகுசிறப்பான இடம்.  மக்கள் தமக்குத்தேவையான சமூகவிடயங்கள் கிடைக்காத ஒன்றிலிருந்து விலகிச்செல்வார்கள், என்று உணர்ந்து விடுதலை எழுச்சிக்கருத்துகளை நாடகங்கள் வழியாகச் சொல்லத்தொடங்குவது என்று அவ்விடத்திலிருந்து முடிவெடுப்பார், கதைநாயகன்.  உறவும் உற்றார் உறவினரும் கலைஞர்களைப் புறக்கணிக்கையில்,  கடைசியில் ஒடுக்கப்பட்ட மக்களே, நலிந்த கலைஞர்களுக்கு உதவமுன்வருவார்கள். பகத்சிங் நாடகம் மேடையேறும். 



நாமும் தனிமனிதரிலிருந்து நாட்டுணர்வாளராக மாறியிருப்போம்.



கதைத்தளத்தில், கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதைக் கூட மிகவும் நேர்த்தியான இடத்தில் நிறுத்தியிருப்பார். 





'அம்மம்மா, தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்' பாடல் தனிப்பட்டவிதத்தில் என்னை நெகிழச்செய்தது. 



பழிவாங்கல் உணர்வும், சகிப்புதன்மையற்ற குணங்களும் மட்டுமே கதாநாயகன் என்று சொல்லப்படுகிற காலகட்டத்தில், எந்தத்துயரையும் தாங்கும் வலுவும், கொடிய ஏழ்மையிலும் தன் உருசிதையாதிருக்கும் ஆளுமையும் கொண்ட கதாநயாகன் சிவாஜி மீது காதல் எழுகிறது.



அப்படியான மனிதவாழ்வுடன் தான் மனம் தன்னை இணைத்துப்பார்த்து உவகை கொள்கிறது. ஒரு சரியான சினிமா தான், நம் மனதில் எவ்வளவு விடயங்களைச் சாதித்துவிடுகிறது!





குட்டி ரேவதி

இந்தியாவின் 66வது குடியரசு நாள்





இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 66 வருடங்களாகின்றன.
என்றாலும் நாம் அம்பேத்கரின் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நோக்கிக் கொஞ்சமும் நெருங்கவில்லை.


நாட்டுப்பற்று, ஒருமைப்பாட்டினால் உருவாவது. ஒருமைப்பாடு உருவாக, மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகள் அகலவேண்டும். ஏற்றத்தாழ்வுகள், மதம், சாதி, பால் என அதிகார வேறுபாடுகளைக் கட்டாயப்படுத்தும் அமைப்புகளிலிருந்து உருவாகின்றன.

ஏற்றத்தாழ்வுகள் அகல, விடுதலை + சமத்துவம் + சகோதரத்துவம் நிறைந்த உணர்வுகள் குடிமக்களிடையே வலுப்படவேண்டும்.


சென்றவருடம், இந்தியா முழுவதும் தீபாவளியைக் கொண்டாடிக்கொண்டிருக்க, மகாராஷ்ட்ராவில், 'ஜவ்கடே கால்சா' என்ற கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 'சஞ்சய் ஜாதவ்' என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். உடல்கள் பல துண்டங்களாக வெட்டப்பட்டு ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள கிணற்றுக்குள் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
"இச்சம்பவம் குறித்து புகார் வராததால் நாங்கள் விசாரணை நடத்தவில்லை" என்று அங்கிருந்த காவல்துறையினர் கூறினர். இதன் பின்னணியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்கச் சாதியினரின் தொடர்பு இருப்பதாலேயே ஆளும் கட்சியும் காவல்துறையும் மெளனமாக இருந்தது.
இந்தியாவும், ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களும் கூட மெளனமாகத்தான் இருந்தோம்.


'"அடிமைகளுக்கும், ஆள்பவர்களுக்கும், சலுகை பெற்ற பிரிவினர்களுக்கும் இடையேயான வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேறு விதமாகச் சொன்னால் இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் கடைந்தெடுத்த சமூக விரோதிகளாக இருந்து வருகின்றனர்", என்ற அம்பேத்கரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
நாட்டின் குடியரசு, நாட்டுப்பற்று, அம்பேத்கரின் அரசியல் அமைப்பு, விடுதலை + சமத்துவம் + சகோதரத்துவம் இவற்றில் இருந்தெல்லாம் வெகுதூரத்தில் இருக்கிறோம்.
வெற்றுப்பெருமிதத்தை மிகையாக வெளிப்படுத்தி அதைக் குடியரசு தினமென்று கொண்டாடிக்கொள்கிறோம்.


குடியரசு என்றால் கொண்டாட்டம் மட்டுமே அன்று. நாட்டுப்பற்று கொண்டோர், விடுதலை + சமத்துவம் + சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படை நம்பிக்கைகளாகவும் நீதிகளாகவும் கொண்ட அரசியலமைப்பை உறுதிசெய்வது தான்.
கீழே காணும், இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாகப்பதிவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். எனக்கும் தான் இதில் விருப்பமில்லை. என்றாலும், இது தான் குடியரசுக்கும் வாழ்நிலைக்கும் இடையே உள்ள தூரம்.
தூரம் அறியாமல் எப்படி கொண்டாட்டத்திற்குப் போய்ச் சேருவது?


குட்டி ரேவதி

எத்தனை பெட் ரூம்கள் இருந்தாலென்ன!


இரு படுக்கையறைகள், மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகள் விற்பனைக்கு என்று விளம்பரங்கள் எப்பொழுதும் காதுகளில் விழுந்தவண்ணம் இருக்கின்றன.

நவீன சமையலறை, பூஜையறை, ஃபுல்லி ஃபர்னிஷ்டு லிவிங் ரூம், கழிவறை, குளியலறை, சன்னல், கதவு என்று அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.


எந்த விளம்பரமும், வீட்டில் மூச்சடைக்காது உயிர்வாழ நூலகம் அவசியம் என்று உணர்ந்து நூலக அலமாரியைக் குறிப்பிடுவதே இல்லை.

அப்படியே, மரங்களும் செடிகளும் கொண்ட தோட்டமும் அவசியம் என்று குறிப்பிடுவதில்லை.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது, விசாலமான அகண்ட வெளி. பரந்த வெளியில் குழந்தைகளை விட்டுப்பாருங்கள். அவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. உண்மையில் இத்தகைய பரந்த வெளிகளே, குழந்தைகளுக்கு நிறைந்த கற்பனையையும், தயக்கமற்ற படைப்புத்திறனையும் தருகின்றன.

சன்னல் வழியே அறைகளுக்குள் நீளும் மரக்கிளைகள் இல்லாமல், அதன் வழியே அணில்களும் குருவிகளும் வீட்டிற்குள் வந்துபோகாமல், சன்னலில் வந்து காகங்கள் அமர்ந்து காதடைக்கும் இரைச்சலுடன் கரையாமல் வீடென்ன வீடு!

ஆனால், இதையெல்லாம் யாரும் கருத்திற்கொண்டாற்போலில்லை. திரும்பும் திசையெல்லாம் சுவர்முட்டும் அறைகள் கொண்ட வீடுகள், எத்தனை இலட்சத்திற்கென்றாலும் அவை யாருக்குத்தான் வேண்டும்?

வீடுகள் தமக்குள் நுழையும் மனிதர்களுக்குக் காலாதீத உணர்வைத் தானே தரவேண்டும்!

இத்தகைய வீடுகள், மனிதர்களை உயிருடன் புதைக்கும் கல்லறைகள் இல்லையா?


குட்டி ரேவதி

மனிதர்கள் நாம் சுரணையற்றவர்கள் என்பதற்கு இதுவுமோர் உதாரணம்!


நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கும்போது, நிறைய பெண்கள் சென்ட்ரல் நிலையத்தின் தண்டவாளப்பாதையில் இறைந்து கிடந்த மனித மலத்தைக் கூடையில் அள்ளிக்கொண்டிருந்தனர்.

பொதுநிலையத்தில், ரயில் நிற்கும் போது, ரயிலின் கழிவறையை மக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

இது குறித்து, ஏற்கெனவே அறிவிப்புகள் இருந்தும், யாரோ தானே சிரமப்படுகிறார்கள் என்ற மனித எண்ணம் அது பற்றிய அக்கறையின்மையுடன் நடந்துகொள்கிறது.

இதனால், அந்தத் தண்டவாளத்தில் சேரும் மனிதக்கழிவை, பணியாளர்கள் தம் கைகளாலேயே அள்ளும் அவலநிலைக்குத் தள்ளுகிறோம்.

அதிலும் அவலம், எல்லா மக்களும் வசதியாக ரயிலிலிருந்து இறங்கிச்செல்ல, அவர்கள் முன்னிலையிலேயே பணியாளர்கள் மலம் அள்ளுதல் என்பது ஒரே காலத்தின் இரண்டு முரண்பட்ட காட்சிகளைக் காட்டுகிறது.

மனிதர்களாகிய நாம் இன்னும் எவ்வளவு கேவலமான ஒரு முறையை சுரணையற்றுப் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம், மனிதமானத்திற்கான மதிப்பைப் புறந்தள்ளுகிறோம் என்பதையும் குத்திக்காட்டுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டுமல்ல, இதர பொது ரயில் நிலையங்களிலும் இதைப் பின்பற்றுவது மனித உரிமையைக்காப்பதாகும்.

மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலநிலையை மாற்றுவதில் இது மிகச்சிறிய முயற்சியாக இருக்கும்.



குட்டி ரேவதி

பெருமாள் முருகனும் 'கருத்துசுதந்திரமும்' குறித்து சில கேள்விகள்!


1. முதல் விடயம், இந்துத்துவவாதிகளின் வரையறைகள்படிப் பார்த்தோமானால், பெருமாள் முருகனை விட மோசமாக, சமூகத்திற்கு நவீனத்தை ஊட்டியவர்கள் பட்டியலில் ஜெமோவும் சாருவும் எஸ்ராவும் அடங்குவார்கள். அதற்கு அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிலும் நிறைய பெயர்கள் பட்டியலில் அடங்கும். இவர்களை எல்லாம் ஊரைவிட்டுப் போகச்சொல்லாதது ஏன்?
அவர்களுக்கு என்றால் இரத்தம், நமக்கு என்றால் தக்காளிச்சட்னியா?

2. 'கருத்து சுதந்திரம்' என்றவார்த்தை, ஒரு தவறான பயன்பாடு. ஏனெனில், இந்தப்பிரச்சனை, விடுதலையான வெளிப்பாடு குறித்தது அல்லவே அல்ல. எதைச் சொல்லலாம், எதைச்சொல்லக்கூடாது என்பதில் இந்துத்துவவாதிகள் கொண்டிருக்கும் கட்டுப்பட்டித்தனம், அதற்கு அடங்கிப்போகும் இன்ன பிற படைப்பாளிகள். இன்னும் ஏன், நாம் 'கருத்து சுதந்திரம்' என்ற அபத்தமான வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்?

3. இப்பொழுது, பெருமாள் முருகனுக்கு ஆதரவாக, அணிதிரளும் படைப்பாளிகள் மீதே கூட எனக்கு சந்தேகமும் அவநம்பிக்கையும் எழுகிறது. சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல், இன்னொரு சமூகப்பிரச்சனையில் இவர்கள் தங்கள் அணிகளை மாற்றி நின்று இந்த எதிரிகளோடேயே கைகோர்த்து நின்று புகைப்படம் எடுத்து, படைப்புகளைப் பொய்யாகப் பாராட்டி, மாலையிட்டு, ஒருவருக்கொருவர் நட்பை உறுதிசெய்துகொள்வார்கள்.
இந்தக்கருத்தியல் சமரசவாதிகளை அடையாளம் கண்டு, இக்கணத்தில் நினைவில் கொண்டு இயங்குவது தான் இத்தகையத் தொடர்ப்பிரச்சனைக்குத் தீர்வாகும் இல்லையா?

4. இந்துத்துவ அடிப்படைவாதிகளின், அபத்தமான முறையீடுகள் தீவிரப்படும் இந்நாளில், நாமும் நம் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தவேண்டாமா?

5. இதில், 'சகிப்புத்தன்மை வேண்டும்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துதல், பிடித்தகருத்துகள், பிடிக்காத கருத்துகள் என்ற விவாத்தத்தை முன்வைத்தல் போன்றவை விவாதத்தைப் பொருந்தாத திசையில் திருப்புதல் ஆகும். இதுவும், அடிப்படையில், இந்துமதவாதவாதிகளுக்கு ஆதரவாக இருப்பது இல்லையா?
இப்படி விவாதங்களைத் திசைதிருப்புதல் மீண்டும் மீண்டும் அடிமைத்தனங்களைப் போற்றுதல் இல்லையா?
இவற்றை மொத்தமாகப் புரிந்து கொண்டு, துரை. குணா, ம.மு.கண்ணன், பெருமாள் முருகன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு நமது ஆதரவைத் தெரிவிப்பதும், நமது செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதுமே இந்தவிடயத்தைப்பொருத்து நேர்மையான அணுகுமுறையாகும்.

குட்டி ரேவதி

காமப்பாழி; கடவழி; படுகுழி; பெருவழி; இடைகழி!


தமிழில் மாதவிடாய் அனுபவங்கள் குறித்தப் பெண்களின் பார்வைகளே கூட ஆரோக்கியமானவையாக இல்லை. ஆண்களின் எழுத்துப்பதிவையும் சொல்வழக்கத்தையும் கேட்கவேண்டாம்.

ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன் அவர்களின் ஆவணப்படம் மட்டுமே அதை நடைமுறையில் உள்ள சமூகச்சிக்கலாய் முன்வைத்திருந்தது.

எழுத்தில் இதுவரை, ஓர் அரைகுறையான பார்வையாகவும், சமூகம் வழங்கிவந்த அபத்தங்களை ஒட்டிவந்ததாகவுமே இருந்துள்ளது.

சித்தமருத்துவத்தில், அது பெரும்பாடு என்று வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான, சித்தமருத்துவச்சொற்கள் ஆண்கள் சொல்வதற்கும் புழங்குவதற்கும் ஏற்றவகையிலும், சமூகக்கட்டுப்பாடுகளுக்கு இயைந்த முறையிலும் தான் உருவாக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் ஒரு திரையிடல் நிகழ்வில், புகழ்பெற்ற தமிழ்த்திரைப்பட வசனகர்த்தா, தன்னாலும் கெட்ட வார்த்தையை எழுத்தில் பயன்படுத்த முடியும் என்று காட்டுவதற்காக, 'தூமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்ததை, பிரீத்தம் அவர்கள் சுட்டிக்காட்டினார். அவ்வளவு தான் அவருக்கு மொழியறிவு என்று கடந்து போகவேண்டியிருந்தது.

உண்மையில், மனித இனத்தின் உயிர்வெளியை, விளைநிலத்தைக் குறிக்கும் உடலியங்கியலே மாத உதிரப்பெருக்கு. பெண்ணுடலின் கருநிலத்தை உழும் செயல்பாடாகவே அது நோக்கப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால், அது பெண்ணின் நொய்மையான கணங்களாகவும், இரக்கம் கோரும் சந்தர்ப்பமாகவுமே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெண் உடல் நலனின் ஒரு முக்கியமான குறியீடு.

உடலுக்கு ஊட்டமான உணவையும் உணர்வுகளையும் கொடுக்கவேண்டிய பருவக்கட்டாயத்தை வலியுறுத்தும் ஓர் அவசியம். உளச்சிக்கலுக்கு ஆளான பெண்ணின் உடலில் உதிரப்பெருக்கையும் அதுசார்ந்த சிக்கல்களையும் அந்தந்த மாதத்திற்கு ஏற்றாற்போல சிம்டங்களாக (குறிகுணங்களாக) காணமுடியும்.

பெண் உடலும் ஆண் உடலும் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் இயற்கையின் முதிர்ச்சி.
ஆனால், பெண்களின் உடல் பலவீனமாகவும், நொய்மையாகவும், அருவெறுப்பானதாகவும், இழிவாகவும், ஓர் அபாயமாகவும் பார்க்கும் வழக்கம் மதங்களின் ஆளுகையினாலும் சாதிக்கு ஏற்றாற்போன்ற வழக்கங்களினாலும் செய்யப்பட்ட முதன்மையான சூழ்ச்சி.

பெண் உடல் பற்றிய அறிவு கொண்டவர்கள், இரத்த ஊற்றின் மூலத்தையும் சுழற்சியையும் தொடர்ச்சியையும் தெளிவாக உணர்ந்துகொள்வர். அதை ஒரு கறையாகப் பார்க்கமாட்டார்கள்.

ஓர் இணையச்சுட்டியைப்பார்த்தேன். உதிரப்பெருக்கிற்கு எதிரான பார்வை பெண்களுக்கு இடையே நிலவுவதை கார்ட்டூன்களாக்கியது போல் இருந்தது. கீழே கொடுத்துள்ளேன்.

இதோ, பட்டினத்தார் பாடல் வரிகளைப் பாருங்கள். புகழ்ச்சொற்களின் வழியே ஓர் இழிவறிவு போல் இருக்கும்.
"காமப் பாழி; கருவிளை கழனி;
தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக் காமுக நாய்தான் என்றும்
இச்சித் திருக்கும் இடைகழி வாயில்;
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி;
புண் இது என்று புடவையை மூடி
உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்;
மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி;
நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி;
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி;
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்;
இத்தை நீங்கள் இனிது என வேண்டா;
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை"


குட்டி ரேவதி

Love in the time of Cholera


இது காப்ரியல் கார்சியா மார்க்வெசின் நாவல். இந்த நாவலை, இதே பெயரில் அப்படியே திரைப்படமும் ஆக்கியிருக்கிறார்கள்.
இத்திரைப்படம், மார்க்வெசின் நாவலின் தன்மையிலிருந்து, பல நூற்றாண்டு காலம் தூரத்தில் பின்தங்கி இருந்ததைப் போல இருந்தது.
என்றாலும், மார்க்வெஸ் தன் புனைவுகளுக்கு எடுத்துக்கொண்ட கதைக்களம் குறித்து எனக்கு எப்பொழுதுமே தனிப்பட்ட ஆர்வம் உண்டு.
பெண் - ஆண் தமக்கு இடையேயான காதலை, நீண்டகாலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளும் போராட்டமும் அதற்கான பயணங்களுமே மார்க்வெசின் முதன்மையான தேர்வாக இருந்திருக்கிறது.
ஏறத்தாழ, அவருடைய பெரும்பாலான கதைகள் இந்த விடயத்தை ஒட்டி இருந்ததாகவே உணர்கிறேன்.
Love in the time of Cholera - இந்தக்கதையில், ஐம்பத்து மூன்று வருடங்களாக ஒரு தன் காதலியைக் காதலிப்பவர் பற்றிய கதை.
காதலுக்கு, காலாதீதத்தையும் அதே சமயம் அந்த அகண்ட காலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ளும் தீவிர உணர்வெழுச்சியையும் கொடுப்பதில் மார்க்வெஸ் வல்லவர்.
நாவலாசிரியர்களிலேயே, இந்தப்பூமியின் காலஅட்டவணைக்குள் திணிக்காமல் காதலை நீட்சியடைய வைக்கும் திறன் கொண்டவர் என்றும் சொல்லலாம்.
அதே சமயம், உறவுகளிலேயே சமத்துவத்தைச் செயல்படுத்தக்கூடிய உறவு, காதல் தான் என்பதையும் இவருடைய அணுகுமுறையில் காணலாம்.
இப்படி, கதையின் வழியாக மனதைப் பீடிப்பதிலும் சில நாட்களுக்குத் தொடர்ந்து கனவுக்கான முதல் கற்பனைகளை வழங்குவதிலும் மார்க்வெஸ் தனித்தப்படைப்பாளியாக இருக்கிறார்.
புனைவு என்றால், யதார்த்தைக் கதையாகத் திரித்தல் அன்று; எழுத்தின் வழியாக, ஆகச்சிறந்த கற்பனையை வனைவதே புனைவு என்பதையும் இவர் நாவல் புலப்படுத்தும்.
'இண்டர்ஸ்டெல்லார்' படத்தில் ஒரு வசனம் வரும். 'காதல், மனிதனின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று' என்று.
இதற்கான அத்துணை முக்கியத்துவத்தையும் இந்தக்கதையில் உணரலாம்.
இத்திரைப்படம், மார்க்வெசின் நாவலின் தன்மையிலிருந்து, பல நூற்றாண்டு காலம் தூரம் பின்தங்கி இருந்ததைப்போல் இருக்கிறது.
ஆனால், காதலைச் சொல்லும் விதத்தில், மார்க்வெஸ், அடுத்த நூற்றாண்டு நவீன மனிதனுக்கும் கூட நெருக்கமானவராய் இருப்பார் என்று தோன்றுகிறது.

குட்டி ரேவதி

நட


நடந்த கால்கள் களைக்க
திசை அழியும் எல்லையிது


நட நட என்கின்றன கால்கள்
முள் உறுத்தும் வெளியிலும்

ஒட்டுமுகங்கள் நோக்கியும்
சலிக்காத ஒரு பொழுதும் இது

குளத்தில் கல்லெறிந்த வட்டங்கள்
எட்டும் மட்டும் விரிந்து கரைபோக

சேற்றில் அமிழ்ந்த காலை
எடுத்து வைத்து நகர்ந்திடு

காலைப்பற்றியிழுக்கும் சேறு
எல்லையிடும் வட்டங்கள்

வேர்க்கால்கள் விழுதிடும் முன்
ஊர்சேர ஊர்கின்றன கால்கள்

உள்ளத்தனிமை வெள்ளம் போல்வர
ஆற்றிலும் கால்கள் வீசும் கைகள்

ஊன் இளகி எலும்பு உருக்கும்
நோவையும் தீர்த்து நடந்திடு

கால்களை இயக்கிடு
வேறு கால்கள் உனக்காக நடந்திடா

நடநட என்கின்றன கால்கள்
சூடு கொப்புளிக்கும் பாலையிலும்.

குட்டி ரேவதி

'உன்னத இலக்கியம்' என்று ஏமாற்றிய அந்தக்காலம் மலையேறிப் போனது!


முன்பெல்லாம், ஒரு கவிதை அனுப்பிவிட்டு, அது இதழில் இடம்பெறும் ஆச்சரியத்திற்காகக் காத்திருக்கவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட நூலைத் தேடி, நூலகம் நூலகமாக அலையவேண்டியிருக்கும். இல்லை, அந்த நூலைப் பாதுகாத்து வைத்திருக்கும் நண்பரைத் தேடிச்சென்று அவரிடம் அந்த நூலைக் கடன் கேட்டு வாங்க வேண்டியிருக்கும். நூலை, நகல் எடுக்கலாம். அல்லது, சொந்தக்கையெழுத்தில் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.


பதிப்பாளர்களும் உடனே கிடைக்கமாட்டார்கள். ஒரு நூல் வரத்திற்காக, ஆறு மாதம் முதல் ஒரு வருட காலம் வரை காத்திருந்து நூலைப்பதிப்பில் பார்க்கவேண்டியிருக்கும்.

அந்தப் பொறுமையில், காத்திருத்தலில் அந்தக்காலத்திற்கான நியாயங்களும் இருந்தன.

ஆனால், இன்று வரை எந்த எழுத்தாளரின் படைப்பும் முன்னூறிலிருந்து ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாவதில்லை.

இதற்கும் அதிகமாய் விற்பனையாக, அந்த எழுத்தாளர் நிறைய சர்க்கஸ் வேலைகள் செய்யவேண்டியிருக்கிறது. பொதுஅரங்கில், தன்னுடைய கோமாளித்தனங்களைக் காட்சிப்படுத்தவேண்டியிருக்கிறது.

எல்லாவற்றையும் வேகவேகமாக நிகழ்த்திவிடும் அவசரகதிக்கு ஆட்பட்ட இலக்கியப்பழக்கத்திற்கு வந்துவிட்டனர் என்று தோன்றுகிறது
சிற்றிதழ் மரபின் தொடர்ச்சியாகவே எல்லாமும் சிந்திக்கப்பட்டு, படைப்பின் நேர்மை என்பதும் பார்க்கப்பட்டிருந்த நவீன இலக்கியச்சூழலில் இருந்த எல்லாம் இன்று காணாமல் போனது.

நூல் விற்கும் எண்ணிக்கைக்கும், எழுத்தின் தாக்கத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. பொதுமக்கள் ஒரு நுகர்வாளராக மட்டுமே இன்று இல்லை. பங்கேற்பாளராகவும், பயன்பாட்டாளராகவும் மாறியுள்ளனர். சமூகத்துடன் நேரடியாகக் குறுக்கிடாத படைப்பைக் கேள்வி எழுப்பும் அறிவுப்புலத்தைக் கொண்டிருக்கின்றனர்.

எழுத்து என்பதும் இலக்கியம் என்பதும் 'தூய்மை மற்றும் புனிதம் மற்றும் உன்னதம்' என்பதான வரையறைகளுக்குள் இயங்கியது போய், பொதுத்தளத்தில் வேகமாக இயங்கத் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறோம்.
கலைஞன், இலக்கியவாதி, சிற்றிதழ் இவற்றிற்கான கருதுகோள்கள் எல்லாம் மாறிவிட்டன.

புத்தகத்திருவிழாவைப் பயன்படுத்தி, முந்தைய கருதுகோள்களுக்குக் கட்டுப்பட்டு இயங்கியவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் கூட, சமீப காலங்களில் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டுள்ளனர்.

ஆனால், மேலை நாட்டு இலக்கியங்களின் உன்னதத்தைக் காட்டி, தாங்களும் உன்னத இலக்கியங்கள் படைப்பவர்கள் என்று தங்களுக்குத்தாங்களே பறைசாற்றிக்கொண்ட பிதாமகர்கள் கூட அம்பலமாகியிருக்கின்றனர்.

ஒடுக்குமுறை இலக்கியமும், அடிமை கருத்து இலக்கியமும் உன்னதஇலக்கியம் இல்லை என்பதை யாரும் கைகாட்டாமலேயே, விமர்சர்கள் தேவையில்லாமலேயே இன்று வாசகர்கள் உணர்ந்துள்ளனர்.
எழுத்து, வேறு திசை நோக்கி நடக்கவேண்டும். எந்தத்திசை என்பதைத் தீர்மானிப்பதில் இப்புத்தகத்திருவிழா, மாற்றுக்கருத்து இல்லாமல் ஒரு பண்பாட்டுக்கருவி என்பதை நாம் கூர்மையாக அறிந்துணரும் வாய்ப்பு.

நல்வாய்ப்பாக, புத்தகத்திருவிழா மீண்டும் நிகழ்கிறது. தொடர்ந்தும் நிகழ்கிறது. எழுத்தை உரசிப்பார்க்கவும், படைப்பாளிகளின் பக்குவம் நோக்கவும் உதவியாக இருக்கிறது.


குட்டி ரேவதி

கலைஞர்கள் எனப்படுவோர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!


தமிழில் தான் கலைஞர்கள் எனப்படுவோர், எந்தத் தன்மான உணர்வுமின்றி, பாலியல் வல்லுறவு செய்தோரை விருந்தினராய் அழைக்கலாம்.

கலைஞர்கள் எனப்படுவோர், பெண் படைப்பாளிகள் ஊடகங்களின் வெளிச்சத்திற்கும், ஊடகங்களுக்கும் இரையாகித்தான் படைப்பாளிகள் ஆகின்றனர் என்ற உண்மையை உலகம் அறியச்செய்திடுவார்கள்.

இந்தக்கலைஞர்கள் எனப்படுவோருக்கு, பெண்குழந்தைகளே இருப்பதில்லை.

நாளை உலகம், பெண்களான இவர்களுக்கு அளிக்கும் சவால்களையும் இக்கலைஞர்கள் எனப்படுவோர் அறிந்திடவேண்டிய அவசியமில்லை. இது ஒரு சிறப்புத்தகுதி.

கலைஞர்கள் எனப்படுவோர் எத்தனை மனைவியர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். காதலியரும். ஏனெனில் அவர்கள் கலைஞர்கள் எனப்படுவோர். எந்த ஒரு மனைவிக்கும் காதலிக்கும் அவர்கள் நலனுக்கும் இவர்கள் பொறுப்பேற்கவேண்டியதில்லை.
ஏன் தனக்கே கூடப்பொறுப்பேற்கவேண்டியதில்லை.

கலைஞர்கள் எனப்படுவோர் உழைக்கவேண்டியதே இல்லை. ஊர்சுற்றித்திரிந்து, மேடைகளில் பேசினாலே போதுமானது.

கலைஞர்கள் எனப்படுவோர் எந்த ஏற்றத்தாழ்வையும் பாராட்டலாம். ஏனெனில், இதுவே கலை எனப்படுவது.
கலைஞர்கள் எனப்படுவோர் ஒரு கவிதைத்தொகுப்பு வெளியிட்டுவிட்டாலும் போதுமானது. அது தாண்டிய விழிப்புணர்வும் நல்லிணக்கமும் அவசியமே இல்லை.

கலைஞர்கள் எனப்படுவோருக்கு மூட ரசிகர்களும் அவசியம். குருகுலமும் அவசியம். அடிமைகள் அவசியமோ அவசியம்.

கலைஞர்கள் எனப்படுவோர் கண்டிப்பாய், மதுவருந்துவதைப் பழக்கமாய்க் கொண்டிருக்கவேண்டும். சொந்தமாக உழைத்த பணத்திலிருந்தும் வாழ்ந்திடக்கூடாது. அடுத்தவர் பாக்கெட்டிலிருந்து பறித்த பணமாகத் தான் இருந்திடவேண்டும்.
ஏனெனில், பணம் ஒரு நல்லபொருள் அன்று.

கலைஞர்கள் எனப்படுவோர் குறிப்பாக, இந்துமதச்சிந்தனைகளைத் தான் முன்மொழிந்திட வேண்டும். ஏனெனில், அது தான் ஆண்களின் பாலியல் வல்லுறவை சபையிலோ, மேடையிலோ ஒரு குற்றமாக, ஆண்களின் ஓர் இழுக்காகக் கிஞ்சித்தும் சொல்வதில்லை. ஆண்மையின் இலட்சணமாகப் போற்றுகிறது.

கலைஞர்கள் எனப்படுவோர் ஆயிரம் பக்கங்களில் நூல்கள் வெளியிட்டாலே போதும். வேறு எந்த சிறப்பு நலனும், பயிற்சியும், ஒழுக்கமும் தேவையில்லை. சமூகத்தின் நன்னம்பிக்கையைப் பெறவேண்டியதில்லை.

கலைஞர்கள் எனப்படுவோர் கறுப்பாய் இருப்பவர் தவறானவர்தான் என்று சொல்லவும் அதிகாரம் பெற்றவர்.

கலைஞர்கள் எனப்படுவோர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எதற்கும், யாருக்கும் பொறுப்பேற்கவேண்டியதில்லை. அவர்கள் வாழ்வின், இந்தக்கணம் முக்கியம். மிக, மிக முக்கியம்.
ஏனெனில், அவர்கள் கலைஞர்கள் எனப்படுவோர்.


குட்டி ரேவதி

PK படமும் தமிழ்ப்படங்களும்



பிகே படம் 85 கோடியில் தயாரிக்கப்பட்டு 573 கோடி வசூலுடன் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் வாழ்க்கைமுறையையும் மதம், சாதி, ஏழ்மை அவலங்களையும் கூர்ந்து நோக்கி, அத்தகைய பார்வையில் எடுக்கப்பட்ட படங்கள் இயல்பாகவே வெற்றிபெற்றுள்ளன. அதில் ஸ்லம் டாக் மில்லியனரும் பிகே -யும் அடங்கும்.

கடவுள், மதம், மூடநம்பிக்கைகள் குறித்த நம் மக்களின் முன்முடிவுகளும், மரபணு வரை பதியவைக்கப்படும் முட்டாள்தனங்களும் மென்னய நகைச்சுவையுடன் பிகே படத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றன.

இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வந்து, ஏன் தமிழில் இப்படி படங்கள் எடுக்கப்படவில்லை என்று நண்பர் கேட்டார்.
இந்தப்படத்தில் பேசப்படும், மதம் மற்றும் கடவுள் குறித்து ஏற்கெனவே சென்ற நூற்றாண்டு முழுவதும் தீவிரமாக விவாதிக்கப்பட்ட நிலம் தான் நமது. உண்மையில், அந்தப்படத்தில் சொல்லப்படும் எல்லாமே நாம் முன்பே அறிந்த விடயங்கள் தாம். எதுமே புதியது அன்று.

என்றாலும், இந்தப்படத்தில், மதங்களின் மூடநம்பிக்கைகளால் அடிமைத்தனங்களால் ஈர்க்கப்பட்டு, பாழும் குழியில் விழுந்து கிடக்கும் மக்களைக் கைப்பிடித்து இழுக்கும் வகையில் சுவைப்படச்சொல்லியிருப்பதும் ஒரு வெகுசனக்கலைவடிவமாக மாற்றுவதில் அடைந்திருக்கும் வெற்றியுமே இப்படத்தின் சிறப்பு.

தமிழில், கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, சமூகவிடயங்கள் பேசும் நிறைய படங்கள் எடுக்கப்படுகின்றன. ஏற்கெனவே எடுக்கவும்பட்டிருக்கின்றன. இருந்தாலும், அவை 'கலை அனுபவமாக' மாறாமல் வெறும் பிரச்சார சினிமாவாகவே தங்கி விடுவதால் பரந்த மக்கள்கூட்டத்தின் மனதில் தங்காமல், வெற்றியும் அடையாமல் போகின்றன.

இது பெரிய குறைபாடு தான். உண்மையில், ஒரு கருத்து மக்களைச் சென்று சேரவேண்டுமானால், நம் செய்யவேண்டியது அது சார்ந்த கலையனுபவத்தை மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது தான். இதுவே ஒரு திரை இயக்குநனின் கடமை என்று நினைக்கிறேன்.
'மெட்ராஸ்' திரைப்படத்தின் வெற்றிக்கு, முதன்மையான காரணம் இதுவே.

நம்மிடம் இன்னொரு குறைபாடு, சமூகப்பிரச்சனை சார்ந்த படத்தை முன்வைத்தாலே, அது கலைவடிவம் இல்லை, அது ஓர் அரசியல் படம் என்று முற்றும் முழுதுமாகவே முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்துவிடுவது. இந்த இரண்டு முன்முடிவுகளையும் மாற்றிக்கொண்டால், நம் சினிமாவின் பயணமும் வேகமேடுத்ததாக வெற்றிபெற்றதாக இருக்கும்.

இன்னும் இன்னும், நாம் கொள்ளைப்படங்கள், கொலைப்படங்கள், கடத்தல் படங்கள், த்ரில்லர் படங்கள் எடுத்து இதுவே நம் மக்கள் விரும்புவது என்று நம்புகிறோம். உண்மையில், பிகே - வுக்கு அடுத்த நிலைப்படங்களை நம் இயக்குநர்களால் எடுக்க முடியும். ஆனால், நம் தேர்வு அவையாக இல்லை.

பிகே - படம், அது சொல்லிய விடயத்தில் தமிழ்ப்பார்வையாளர்களைப் பொறுத்தவரை அதன் தொடக்கநிலையிலேயே இருப்பதாக நம்புகிறேன். வாழ்வு மூலமாகவும் சிந்தனை மூலமாகவும் நாம் எப்பொழுதோ அந்தத் தொடக்கநிலைகளைக் கடந்துவந்துவிட்டோம். ஆனால், அதைக் கலையாக்கும் அரும்பணியில் ஈடுபடாமல் பின்தங்கியுள்ளோம் என்பதே நாம் உணரவேண்டியது.

குட்டி ரேவதி

பிரசவ அனுபவங்கள்


சித்த மருத்துவப்பட்டப்படிப்பின் நிறைவில் அரைவருட மருத்துவப்பயிற்சிக்காகத் தான் சென்னை வந்தேன். 1999. அதில் ஒரு மாதம், எந்த நவீனமருத்துவமனையிலும் நாங்கள் விரும்பிய பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்பு. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், பிரசவ வார்டில் பகலும் இரவும் என்ற பயிற்சியை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். சித்தமருத்துவத்திற்கான அரசின் ஆதரவும் நவீனச்சமூகத்தின் புரிதலும் மிகவும் அற்பமானது என்பதால், அப்பொழுது எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மிகவும் அருமையாகவும் முக்கியமாகவும் கருதினேன். அதன் ஒவ்வொரு அனுபவத்தையும் சேர்த்துக்கொள்ளத் துடித்தேன்.

அரும்பாக்கத்தில் நான் தனியே தங்கியிருந்த வீட்டிலிருந்து, தினமும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சென்று வரவேண்டும். அன்றைய நாட்கள், முறையற்ற காலஅட்டவணையைக் கொண்டிருந்தன. சென்னை இன்றைய பொழுதுகளை விட மெதுவாகவும் குறைந்த சலனங்களுடனும் நகர்ந்ததாக ஞாபகம்.

பிரசவ வார்டு முழுக்க, எப்பொழுதும் பெண்கள் வலியில் கதறியபடி இருப்பார்கள். அரைகுறை வளர்ச்சியில் தாயின் உடலுக்குள்ளேயே மரித்துப் போன சிசுக்களின் கருவழிப்புப் பணியும் நடக்கும். எப்பொழுதும் நொய்மையும் பதட்டமும் நீடிக்கும் மருத்துவப்பகுதியாக அது இருந்தது. ஒவ்வொரு முறை உடலுறவின் போதும் பெண்ணின் தொடையில் சிகரெட்டுகளால் சூடிட்ட வடுக்களைக் கொண்ட பெண்ணையும், நீண்ட காலம் குழந்தையில்லாமல் கருவுற்ற சிசுவும் கருவழிந்து போனநிலையில் தன் உயிருக்காகப் போராடிய பெண்ணையும், உடலெல்லாம் எலும்புகள் துருத்தி நிற்க வயிறு மட்டும் அளவுக்கதிகமாகப் புடைத்திருக்கும் வறுமை சூழ்ந்த பெண்களையும், பிரசவத்தின் பொழுது மரித்துப் போன பெண்களையும் அங்கு தான் கண்டேன். அதிக வலியில் பெண் கதறி அழும்போதோ, 'புருஷனுடன் படுக்கும்போது இனிச்சிது இல்ல, எப்ப என்ன கத்துற!' என்ற குரல் பின்னாலிருந்து கேட்கும்.

பெண் உடலின் வலிமையையும் அவலத்தையும் ஒருசேர 'பிரசவ வார்டில்' தான் உணரமுடியும். வார்டுக்கு வெளியே, குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் எல்லோரும் தோய்ந்துபோயிருக்க, உள்ளே தாய் வலி குறையும் நிம்மதியுணர்வில் ஆழ்ந்திடத்தொடங்கியிருப்பாள். சமீபத்தில், என் தோழியின் ஏழுமாதக் கருஉடலில் மருத்துவர்கள் ஊனம் கண்டறியக் கருவின் இயக்க நிலையைத் துண்டிக்கவேண்டியிருந்ததாகக் கூறினாள். அது அவளுக்கு மிகுந்த மனப்பேதலிப்பைக் கொடுத்ததாகக் கூறினாள். ஆனால், அது கிட்டத்தட்ட குழந்தையை ஈன்ற மனநிலைக்கே தன்னைக் கூட்டிச்சென்றதாகவும், கொடுமையான கனவுகள் பீடித்த உறக்கம் கொண்டதாகவும் கூறினாள்.

பெண் உடல், ஓர் இயந்திரம். சமூகப்பாத்திரம். தாய்மை, பெண்மை என்றெல்லாம் போற்றப்படும் பெண்ணின் உடல் கருவுறும்போது கொள்ளும் வளர்சிதை மாற்றங்களும், உருச்சிதைவும், சுமக்கும் அவலங்களும் நிறைய. இதில், பெண் வகிக்கும், ஏற்கும் சமூகப்பொறுப்பும், ஆளுமையும் கூட அதிகம். ஆனால், அதுவெல்லாம், கவனத்தில் கொள்ளப்படாது, சமூகத்தின் எல்லா தாழ்வான முறைகேடுகளையும் சுமக்கும் ஒரு பெண்ணாக அழுத்தப்படுவதும் இந்நிலையில் தான்.


குட்டி ரேவதி

ஃபேஸ்புக் உறவுகளும் சலித்துப்போகும்!


அன்று விடியும் முன்னேயே அந்தப்பெண் என்னைத் தொலைபேசியில் அழைத்தாள்.
காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தன் கணவன் தன்னைப் பொருட்படுத்தாமல், பிற பெண் தோழியருடனேயே ஃபோன், சேட், ஃபேஸ்புக் என்று தன் முழுநேரத்தையும் கழிப்பதாகவும், தன் முகத்தையே பார்க்கப்பிடிக்கவில்லை என்று கூறுவதாகவும்,

ஆனால், தன் வருமானத்தை அவரது பயன்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்வதாகவும், மாதந்தோறும் வீட்டு வாடகை இன்னபிற செலவுகளைத் தானே ஏற்கவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாகவும் கூறினாள். இத்தனைக்கும் அது ஒரு காதல் திருமணம்.
ஆனால், இதுபோன்ற பிரச்சனைகளை நாம் கேட்பதும், பார்ப்பதும் முதல் முறை அல்ல.
சமூக வலைத்தளங்களின் தாக்கமும் புழக்கமும் அதிகரித்த பின்னர், ஆண்களுக்குப் பெண் தோழியரும், பெண்களுக்கு ஆண் தோழர்களும் இதுவரை எப்போதுமல்லாது கைக்கெட்டும் தூரத்தில் எளிதாகக் கிடைப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே.
பள்ளிகளில் பெண் - ஆண் பாலார் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தோருக்கும், தம் சகோதரிகளிடமே நெருக்கமாகப் பழக்கும் வாய்ப்பு கிட்டாதோருக்கும் ஃபேஸ்புக் மடை திறந்தாற் போலாகிவிட்டது. நாம் அத்தகைய இறுக்கமான காலத்திலிருந்து வெகுதூரம் நகர்ந்து வந்திருக்கிறோம்.

நீண்ட நாள் தான் விரும்பிய காதலியே சலித்துப் போகும் போது, இந்த ஃபேஸ்புக்கும் ஃபேஸ்புக் பெண்களும் நட்புகளும் கூடச் சலித்துப் போகும் இல்லையா?

ஃபேஸ்புக் உறவுகள், வீட்டில் இருப்போரை விட இனிமையாக இருப்பது போலத் தோன்றக்காரணம், அவர்களின் உடல் நலன், அன்றாட வாழ்வு, செலவுகளில் நாம் ஏதும் பொறுப்பேற்கவேண்டியதில்லை என்பதே.
பொறுப்பேற்கும் இடங்களில் இருந்து, ஆண்கள் தப்பிப்பதற்கு நவீன வாய்ப்பாக ஃபேஸ்புக்கும் ஆகிவிட்டது வெளிப்படையாகிறது.

தன் வீட்டில் தன் அம்மா, சகோதரியர், மனைவியுடன் கொஞ்சமும் நேரம் கழிக்காது, இந்தத் தற்காலிக இன்பத்திற்கு ஆட்பட்டு, வீட்டில் இருப்போரைப் புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம்.

ஏழெட்டு வருடங்கள் காதலித்து விரும்பிய பெண் மீது சலிப்பு ஏற்படுவது போன்ற தோற்றத்தைத் தரும் ஃபேஸ்புக் பெண்களும் உறவுப்புழக்கமும் கூட கூடிய விரைவில் சலிப்பைத் தரும். விர்ச்சுவல் வெளியில் எல்லாமும் மாயமாகிப் போகும். வெறுமை சூழும்.

இந்தச் சலிப்பை வெல்வதற்கு முதன்மையான வழி, நம்முடன் நேரடியான உறவிலும் தொடர்பிலும் இருப்போருக்கு முதலில் அன்பையும் அக்கறையையும் காட்டுவது அவசியம். அவர்களின் நல்வாழ்விற்குப் பொறுப்பேற்பது போன்ற இன்பமும் எழுச்சியும் ஏதுமில்லை.

காலம்செல்லச்செல்ல, 
சினிமாவில் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தவருக்கே, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துவைக்கும் கொடுமையான நிகழ்வு போலவே, காதலித்தவரையே கல்யாணம் செய்வதும் ஆகிவிடும் போலிருக்கிறது.

அந்தப் பெண்ணின் குரலில் இருந்த நிம்மதியின்மை என்னையும் தீவிரமாக ஆட்கொண்டிருக்கிறது. அதற்குப் பின், அந்தப்பெண்ணைத் தொடர்புகொள்ளமுடியவில்லை.

இந்தப்பெருநகரில் அவள், முதலில் தன் மீது அக்கறை கொண்டவளாக ஆகவேண்டுமென விரும்புகிறேன்.

குட்டி ரேவதி

நாம் என்ன மாதிரியான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம்?


புற்றுநோய் கொண்ட என்னுடைய இரு நண்பர்கள் சந்தித்துக்கொண்டனர். 
இருவருமே நீண்ட நாள் மருத்துவத்திற்குப்பின் தேறி வரும் நிலையில் உள்ளவர்கள். 
ஒரு நண்பரின் நீண்ட நெடிய போராட்டத்தை நான் ஏற்கெனவே கண்ணுற்றிருக்கிறேன். 

இருவரும் அவரவர் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதுடன், தங்களின் தீவிர மன உறுதியையும் வெளிப்படுத்திக்கொண்டனர்.

அப்படி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, அவர்கள் இருவரும் இந்த உலகத்திலிருந்தே மிகவும் அன்னியப்பட்டு இருப்பது போலவும், தாளமுடியாத வலியையும் நோவையும் தன்னந்தனியே தாங்கிவந்த அயர்ச்சிக்குப் பின், உறுப்புகளின் சிதைவுக்குப் பின், கடுமையான உடல் மெலிவுக்குப் பின் தன்னையொத்த வலி கடந்த ஒருவரைக் கண்டு ஆறுதல் கூறி இளைப்பாறுவது போலவும் இருந்தது.
புற்றுநோய்க்கான நவீன மருத்துவமுறை கடுமையான வலியையும் தொடர் மருத்துவமுறையையும் கொண்டதால், அது அவர்களை அன்றாட வாழ்விலிருந்தும், 
நாம் பேசி, மகிழ்ந்து, சலித்துக்கொண்டிருக்கும் அபத்தங்களிலிருந்தும் வெகுதூரத்தில் நிறுத்தியிருந்தது.

அவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அன்பும் அக்கறையும் மிகவும் அரியது, நெகிழ்ச்சியைக் கொடுப்பது. 
நாம் கடந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்தக் காலகட்டத்தின் தன்மையையும், குறிப்பாய்ச் சொல்லும் புகைப்படம் போல அந்த நிகழ்வு அப்படியே மனதில் பதிந்தது.

இதுவே, இன்றைய காலத்தின் யதார்த்த முகம் என்றும் தோன்றுகிறது. நாம் என்ன மாதிரியான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்பதை அக்கம்பக்கம் திரும்பிப்பார்த்து உணரவேண்டியதும் உள்ளது.


குட்டி ரேவதி

2014 எதை விட்டுச்சென்றது!


எல்லோரும் 2014 - ன் சாதனைகள் என்று எதையெதையோ பட்டியலிடுகிறோம். வாங்கிய விருதுகள், எழுதிய படைப்புகள், வெற்றிகள், தொழில் முன்னேற்றம், வருமானம், வசதிகள் என்ற பட்டியல் உண்மையில் பொருளற்றவையாகவே தோன்றுகிறது.
உண்மையில், தத்துவார்த்தமாகவோ, உலகவாழ்விற்கு முற்றிலும் எதிரான அர்த்தத்திலோ இதை நான் சொல்லவில்லை.
இந்த உலகில் நல்வாழ்வு வாழ, முற்றிலும் அவசியமானது உடல்நலமே. முழுமையான உடல்நலனுக்காக நாம் எந்தெந்த வகையில் அக்கறை எடுத்துக்கொண்டோம், அதில் எந்த அளவிற்கு ஆரோக்கியமானவர்களாக முன்னேறி இருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

நல்ல உடல் நலன், நல்ல மனநலனைக்கொடுக்கும். நல்ல மனநலன், மேற்சொன்னவற்றையெல்லாம் கொடுக்கலாம், கொடுக்காமல் போனாலும், அதைப்பெரிதாகப் பாராட்டாமல் சுவைபட வாழ உதவலாம்.
சுற்றியிருக்கும் நண்பர்கள் உடல் நலன் பாதிக்கப்படும்போது, படும் துயர் இன்னொருவரால் பகிர்ந்து கொள்ளக்கூடமுடியாது. அவர்கள் துயருற, நாம் வெறுமனே வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டிய நிலை மிகவும் கொடுமையானது. இதுபோல, பல சந்தர்ப்பங்களை இந்த வருடம் நான் கடக்கவேண்டியிருந்தது.
இந்தியா போன்றதொரு நாட்டில், மனித உடல் + தட்பவெப்பநிலை + வாழ்வியலுக்கு ஏற்றாற்போல முன்னோர்கள் வகுத்தளித்த மருத்துவ முறைகளையும் சிந்தனைகளையும் தனிமனித வழக்கங்களையும் நாம் இன்று கார்ப்பரேட், நிறுவன மருத்துவர்களிடம் கையளித்து, மீண்டும் அவர்களிடமிருந்து மருத்துவத்தைப் பிச்சையெடுப்பவர்களாக மாறிவிட்டோம்.
எல்லாவகையான சமூகச்சிந்தனைகளிலும் குறுக்கிட்டு, நாம் அவசரமாக செயல்படுத்தவேண்டியது, நம்மை ஒட்டுமொத்தமாகத் தாக்கும் நவீன நோய்களை வெல்வது தான். போட்டி, பொறாமை, வெற்றிக்கான வெறி, அவசரகதியில் ஓடும் சலிப்பான வாழ்க்கை இவையெல்லாமே உடல்நலனுக்கு எதிரானவைகள். நோய்களை வரவழைப்பவை.
முன்பெல்லாம், பணக்காரர்களின் நோயாக மட்டுமே இருந்த சர்க்கரை நோய், பின் 9% என்று மாறியது. இப்பொழுது, 35% என்று ஆகியிருக்கிறது. இனக்கொல்லி நோய்போல் பரவி வருகிறது. பசுமைப்புரட்சியினால் விளைந்த அரிசியை எதிர்க்கவேண்டும், மறுக்கவேண்டும். மில்லினிய வாழ்வின் அவசரமான வேட்கைகளைத் தவிர்க்க வேண்டும். மருத்துவம் என்ற மனித அறிவை மீண்டும் எல்லோருக்குமான பொதுவுடமையாக்கவேண்டும்.
சென்றவருடம் விட்டுச்சென்ற ஆரோக்கியத்தின் அளவை நாம் உறுதி செய்துகொள்வோம். 2015 ம் ஆண்டு இது குறித்தப் பெரிய சவாலை நம் முன்வைத்திருக்கிறது. நோயற்ற உடலே, சென்ற வருடத்தின் மிச்சம், ரொக்கம், மூலதனம் எல்லாமே.


குட்டி ரேவதி