நம் குரல்

பெருநகரப் பொழுதுகள்




அவனது உடலிலிருந்து ஊறும் மானுடத்திற்கான பேருவகை சொல்லி மாளாதது. ஆகவே தான் அவன் இரவு ஒவ்வொன்றையும் ஒரு பெரு நகரமாக்குகிறேன். தூங்கும் நகரைத் துளாவி வரும் துணிவார்ந்த வாகனங்களில் பாய்கிறேன். ரகசியங்களின் அறைகளைச் சூறையாடுகிறேன். எனது பருவ முதிர்ச்சிகளை அவன் சுவைக்காத போதும் நகரம் விழாக்கோலம் பூண்டு கொண்டேதானிருக்கிறது. சமுத்திரத்தின் கரையில் இருக்கும் அந்நகரம் ஒரு பாய்மரக்கப்பலைப் போல எப்பொழுதும் காத்திருக்கிறது அதிகாலை நீரிறங்கும் பேரவாவுடன். அலைகளைப் பின் தள்ளி தீ கனலும் தொலை தூரப்பரப்பில் நீந்தித் திளைத்திட. பின் அவன் வனப்பையெல்லாம் தொண்டைக்குள் அதக்கிக் கொண்டு கிளர்ந்தெழுகிறது நகரின் இரவு. மின்விளக்குகளின் மங்கிய பிரகாசங்களூடே ஆள்தடமற்ற தார்ச்சலையில் குதிரைச் சப்தங்கள் மட்டுமே கேட்கின்றன. பேருவகையின் பயனாய் பின்னொரு நாள் அணையாத பகலாகி துயிலறுக்கும் போது அவனையும் அப்பெருநகராக்கி ஆளலாம்.




குட்டி ரேவதி