நம் குரல்

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 14












தமிழ்நதி - மிகுபசி கொண்ட உடல்மொழி

http://koodu.thamizhstudio.com/thodargal_14_15.php











குட்டி ரேவதி

முதல் பிரவேசம் - 'கவிதையின் ஒற்றைக்கயிறு'






எழுத்துலகிற்குள் முதல் பிரவேசம் என்பது, முதல் தொகுப்பை வெளியிட்டதாக இருக்கமுடியாது. முதல் படைப்பு பெற்ற பிரசுரமாகத்தான் இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில், தொகுப்புகளாய்ப் பதிப்பிப்பது என்பது சமீப காலங்களில் எவ்வளவு அதிகாரமும் வியாபாரமும் சார்ந்தது என்பதை நான் தெள்ளத்தெளிவாகவே உணர்ந்திருக்கிறேன். அதிலும், கவிதையை நூலாக வெளியிடுவதற்கும், அதை வைத்துத் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதற்குமென  நிறைய உத்திகளை எழுத்தாளர் கையாளவேண்டியது இருக்கலாம். அது ஒரு படைப்பாளியின் மனநிலைக்கு ஆரோக்கியமானது இல்லையே!






திருநெல்வேலியில், என்னுடைய கல்லூரிப்பருவம் அது. பாளையங்கோட்டையில், ஜங்ஷனில், டவுனில், ஹைகிரவுண்டில் என்று  இலக்கியம் தொடர்பான நிகழ்வுகள் எப்பொழுதும் ஏதேனும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். நான் வெறும் பார்வையாளராக மட்டுமே தொடர்ந்து
வனம்’ கவிதைத் தொகுப்பிற்கான திறனாய்வுக் கூட்டமொன்று சிறு  மொட்டைமாடிக் கூட்டமாய் நிகழ்ந்தது. அதில் முதல் முறையாக அந்நூலைப் பற்றிய சிறு கட்டுரையை எழுதி வாசித்தேன். இப்படியாகத் தான் கவிதையினுடான என் முடிச்சு விழுந்தது.






அத்தொகுப்பு, என் மொழியின் வெளி தேடி என்னை எனக்குள்ளேயே வேகமாய் உந்தித்தள்ளியது. கவிதை பற்றி அதுவரை இருந்த மதிப்பீடுகளை சிதிலம் செய்ததில் முக்கியமான பங்கை ஆற்றிய தொகுப்பு அது. அவரவர்க்கான மொழி உலகின் கதவுகள் வேறு வேறு என்பதை வெளிச்சப்படுத்திய தொகுப்பு. எழுதத்தொடங்கினேன். அப்பொழுது நான் பயின்று கொண்டிருந்த சித்தமருத்துவத்தின் பாடநூல்கள் எல்லாமும் வளமான சித்தர்கள் மொழியும் கருத்தும் ஊன்றிய நவீனக் கவிதையின் இன்னொரு செய்யுள் வடிவமாக விளங்கியதால், அதன் சொற்களும் கிளைச்சொற்களும் என்னுள் வேரூன்றின. தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.






அப்பொழுது ‘புது விசை’ இதழின் ஆசிரியராக இருந்த நண்பர், ச.தமிழ்ச்செல்வன், அவ்விதழுக்குச் சில கவிதைகள் அனுப்பும்படிக் கூறினார். அவ்விதழில் கொத்தாக என் கவிதைகள் பிரசுரமாயின. இன்றும் அவ்விதழின் அகண்ட பக்கங்களில் வெளியாகி இருந்த கவிதைகள் கண்களில் நினைவின் எழுச்சிகளாக எழுந்து நிற்கின்றன. அதையே எனக்கான முதன்மையான அங்கீகாரமாகக் கருதுகிறேன். அதற்குப் பின்பு, அங்கீகாரம் என்பது பெரும்பாலும் சுய மனித அதிகாரத்தினுடன்  தொடர்புடையதாக மாறிவிட்டதால் அதன் பின்பாக நிகழ்ந்த எதையுமே நான் அங்கீகாரமாகவோ நினைவு வைத்துக்கொள்வதற்கான விஷயமாகவோ கருதவில்லை.






முதல் தொகுப்பு என்பது எப்படி நிகழ்ந்தது என்பதை விட முதல் கவிதை பிரசுரம் தான் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் எழுதும் மனதிற்கு வீசமுடியும். கவிதை இலக்கியம் என்பது எந்த ஒரு சமூகத்திலுமே ஊசலாடும் ஓர் ஒற்றைக் கயிறு என்பதை நான் எழுத முயற்சித்த தொடக்கக் காலங்களிலேயே உணர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது  மிகவும் முக்கியமான விஷயம். இந்தப் புரிதல் எந்தவோர் அதிகாரத்திற்கும் எதிரான திசையிலேயே என்னை பயணிக்கத் தூண்டியது.   அம்மாதிரியான ஆளுமைகளையே  நான் தொடர்ந்து சந்தித்தேன். அவர்களுடைய படைப்புகளையே தேடிப்படித்தேன். அதற்குப் பின்பு மலிவான, ரசம் குறைந்த படைப்புகளின் மீதான நாட்டம் குறைந்தது. இன்னும் சொல்லப்போனால், முற்றுமாகத் துண்டிக்கப்பட்டது. இந்த விஷயம் தான்,  சிற்றிதழ் வெளியில் தொடர்ந்து இயங்குவதற்கான ஆரோக்கியத்தை இன்றும் எனக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். மைய நீரோட்டத்திலிருந்தும், விளம்பரக்கூடாரங்களிலிருந்தும் என்னை விலகி நிற்கவும் சொல்கிறது!




கவிதை என்பது வரிகளாலான ஒற்றைக் கயிறு. அது ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரி திரிந்து திரிந்து முறுகி உருவாகிறது. அது அவரவர் இரத்தத்தாலும் உணர்ச்சிகளாலும் அவர்கள் பிறந்து வந்த சமூகச் சூழலாலும் வளர்க்கப்பட்ட முறைகளாலும் குழந்தைப்பருவ நினைவுகளாலும் ஆனதொரு கலவையாகத் தான் ஆகிவருகிறது. என்றாலும் அதன் மலினங்களைத் தன்னைத் தானே உதறிச் சிதறி, விட்டு விலகி, முறுக்கேற்றிக் கொள்வது மிக மிக அவசியமென பிரமிள் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளுக்கும், அவரைப்பற்றிக் கேள்விப்படும், நிரூபிக்கப்படும்  விடயங்களுக்கும் உள்ள இடைவெளி உணர்த்தியது.






நான் எழுத வந்தபொழுது, புனைவு எழுதுவதில் அம்பை தீவிரமான ஒரு படைப்பாளியாகவும் பெண்களின் மன எழுச்சிக்கு உகந்தவராகவும் இருந்தார். அவர் தவிர, சில பெண்கள் புதுக்கவிதையின் பொதுவெளியில் ஆண்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தனர். அது, நவீன இலக்கியத்தின் ‘செவ்விலக்கியக் காலக்கட்டம்’ போல வரைமுறையற்ற கடும் விதிகள் எழுத்திலும், உரையாடல்களுக்கு இடையேயும், வெளியேயும் இருந்து கொண்டே இருந்தன. ஆனால், என்னை ஈர்த்த படைப்பாளிகள்  எல்லோருமே, சமூகத்தின் ஒப்பனைகளைச் சூடிக் கொள்ள மறுத்தவர்களாக இருந்தனர். தங்களை விளம்பரக்கண்ணாடிகளால் எதிரொளிக்க விரும்பாதவர்களாக இருந்தனர்.





அவர்கள் தாம் பிறந்து வந்த குடும்ப மூலம், சாதி, பிறந்து வந்த பால்நிலை, இதன் அடையாளங்கள் இவற்றைத் துறந்தவர்கள். அல்லது, துறக்கத்தீவிரமான முயற்சியையும் பயிற்சியையும் எடுத்தவர்கள்.  பிறப்பு அடிப்படையிலான எல்லா அடையாளங்களையும் எழுத்தின் கயிறு, நம்மையே தன் சாட்டையால் அடித்து அடித்து தோல் உரித்துக் கொள்ளச் செய்யவேண்டும். இந்தச் செயல்முறைகளில் ஈடுபட்ட, தொடர்ந்து ஈடுபட்ட படைப்பாளிகளின் படைப்புகளைத் தேடித்தேடித் தின்றேன் என்று தான் சொல்லவேண்டும். படைப்பாளிகளின் இந்தச் செயல்முறை, அவர்கள் பிறந்து வந்த குடும்பம், பெற்றோர், சாதி, பால் நிலை, மன இயல்பு, சுபாவம் எல்லாவற்றிலிருந்தும் படைப்பாளியைப் பிரித்து அறுத்து வருவதாகவும், கசடுகளாலான மனித வாழ்க்கையிலிருந்து எவரையும் உய்யச் செய்வதான மன எழுச்சியைத் தன்னகத்தே  பெருக்குவதாகவும் இருக்கிறது. இதுவே கவிதையின் ஒற்றைக் கயிறு மீது என்னையும் தொடர்ந்து தலைநிமிர்ந்து நடக்கத் தூண்டுகிறது, ஒரு கழைக்கூத்தாடியைப் போல்!







குட்டி ரேவதி


நன்றி: புத்தகம் பேசுது

ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 13





அனார் - குறிஞ்சியின் தலைவி

http://koodu.thamizhstudio.com/thodargal_14_14.php










குட்டி ரேவதி

குழந்தை இலக்கிய எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் கருத்துப்பட்டறை







‘காகிதப்படகின்’ பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இந்தப் பயிற்சிப்பட்டறை, காகிதப்படகின் முதல் கட்டப் பணி தான் என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். தொடர்ந்து நிறைய பணிகள் பின்னணியில் நடந்து கொண்டிருப்பதால் அவற்றின் விளைச்சல்களுடன் மீண்டும் வருகிறேன். 



இதன் பின்னால் பலரின் துடுப்பும் இயங்கிக் கொண்டிருப்பதை இந்த அறிவிப்பே விளக்கும். உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்! குழந்தை இலக்கிய படைப்பாக்கத்தில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள நீங்கள் எடுத்துக்கொள்ளும் தனிப்பட்ட இம்முயற்சி, தொலைந்து போன உங்கள் குழந்தைப்பருவத்தையும் மீட்டுத்தரலாம்!  யார் கண்டது?  அந்த ரகசிய உலகத்திற்குள் நீங்கள் பயணிக்க இந்தக் காகிதப்படகும் உதவலாம்!












குட்டி ரேவதி