நம் குரல்

பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவின் காணொளி






பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவின் காணொளி




சென்ற செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச் சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 6 தலித்துகள் கொல்லப்பட்டும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. குழு நடத்திய விசாரணையின் காணொளி:

361 டிகிரி இதழில் வெளியான என் கவிதைகள்



பொருள் ஊடகக் கவிதைகள்

1.  துப்பாக்கியின் இரும்புக்கால்கள்

அவர்கள் தம் துப்பாக்கியின் இரும்புக்கால்களால்
என் மீதங்களை எட்டி உதைத்து
இன்னும் என்னுயிர் மிஞ்சியிருக்கிறதோ
எனப் பரிசோதித்தப் பின்னும்
என் செவிகளில் அவர்கள் சொற்கள்
எதிரொலிக்கக் கேட்டேன்
கிணற்றில் விழுந்த கல் போல்
எங்கோ இருட்டுக்குள் துலங்கிக் கிடந்தது
ஏற்கெனவே மூளையைத் தாக்கியிருந்த ரவை
ஆமாம், சொற்களுக்கு வருவோம்!
எறிகற்கள் பூமி அதிர விழுந்தது போல
என் நனவிலியை உலுக்கி அடங்கின
அச்சொற்களின் திரட்சி
அவர்கள் இன்னுமொரு முறை
இரும்புக்குறிகளின் விசையழுத்தினால்
பீறிடும் ரவைகளைத்தாம் ஒத்திருந்தது
அகராதியின் அத்தனைச் சொற்களும்
அந்த இறுதிக்கணங்களில்தாம் உருவாகின்றன
என்றறிந்தேன்
அவை என் அற்புதமான உயிர் உறுப்புகளின் மீது
கவணெழுந்த கற்கள் போல் மோதி
அவை உயிர்தாங்கிக் கடந்து வந்த
எண்ணாயிரம் யோனிகளையும் அவை முகிழ்த்த
முலைகளையும்  நினைவுபடுத்தின
இன்னும் இப்பொழுதும் விழித்திருக்கும் நனவிலியை
அணைப்பதற்கு இன்னொரு ரவை அனுப்புங்கள்
என்று குரலெழுப்ப இயலாதபடிக்கு
எப்பொழுதோ என் உயிர் அடங்கியிருந்தது
தோழர்களே!
 




















2. பொத்தான்கள்

காதுகளின் துளைக்குள் பொருந்திய பொத்தான்கள்
ஒளி தெறிக்க மின்னுகின்றன
நீந்திய நிலையில் வடிவில் உறைந்து போன தங்கமீன்
சிகரெட்டுகளின் முன்முனைகளைப் போல கனல்கின்றன
எப்பொழுதில் பொத்தான் என்று அவன் கிள்ளி விளையாடும்
என்னுணர்ச்சி முலைக்காம்பாய் துருத்தியெழுகிறது
என்பதும் கண்டறியப்படாத அரசியல் பகடி
ஏதோ டிஸைனர் கணவான் பெண்ணின் முலைக்குமிழ்களை
ஆண் சட்டையின் மார்பில் பொத்தானாக்கி
அவளையே அணியச் செய்தான்
சட்டையின் பின்னே பூக்கத் தயாராயிருக்கும்
முலையின் மொக்குகளோ கூசிக்குறுகி
போலிமையின் வடுவாகிப் பொத்தான்களாயின
மது பகிரும் வேளையில் நீலத்தீயுடைய
அப்பெண்ணின் கண்கள் விலையுயர்ந்த வைரப்பொத்தான்களாய்
மங்கிய மின்சார ஒளி பரவிய அறையில் துலங்கின
சமையலறைப் பெண்கள் தம் பொத்தான்களை
கேஸ் ஸ்டவ் எரிய வைக்கும்
திருகுப்பொத்தான்களாக்கி  வைத்திருக்கின்றனர்
பஸ்ஸில்  ஏறிப்  பலவேலைக்குப் போகும் பெண்கள்
ஆயத்தப் பொத்தான்களை
ஆங்காங்கே மறைத்து வைத்திருக்கின்றனர்
உயிரோடு உயிர் இணைக்கும் கொப்பூழ் பொத்தானை உருவாக்க
தாயின் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டவளின் பொத்தான்
கிளைட்டோரிஸ் = பெண்முளையாகி இருக்கிறது
எவனொருவன் ஏது செய்தலுக்கும் வாகாய்
நான் என் பொத்தானை எங்கு வைத்திருக்கிறேன்
அவன் கண்டறிந்து சொன்னபோது
உடலின் துருத்தல்கள் எல்லாம் பொத்தான்களாய் எழுந்து நின்றன.












3. இசையடங்கிய ஏரி

செங்குருதி கசிந்து நதியாகா நாட்களில்
உடலுக்குள் விரிகிறது
இரத்தத்தின் ஏரி
உணர்ச்சிகளை பெருங்கயிற்றால் இறுகக்கட்டியதைப் போல
இரத்த நாளங்களில்  அதன் பேரிசைக்கோர்வை
அடங்கிப் போயிருக்கிறது
கூச்சல்கள் எனக்குமட்டுமாய்
மூலை முடுக்குகளில்  எலும்புகளின் கணுக்களில்
கடைக்கண்களில் வளைவு சுருண்ட இடுக்குகளில்
அலையடிக்காத கடலைப்போல முனகுகின்றன
சூன்யம் கவ்விய ஆகாயத்தை உடுத்திய
வேட்கையுற்ற மிருகமாய் அது
மூச்சடக்கிக் காத்திருக்கிறது 
திறந்து விடுகிறேன்  உடலை
செங்குதியின் பேராற்றை
சிறிய சிட்டுக்குருவிகள் பேராயிரம்
உடலைக் கிழித்துக்கொண்டு
பறந்து செல்கின்றன.
முழக்கத்தின் பேரதிர்வை கேட்டிலையோ எவரும்?
















  

4. கருப்பையின் சிறகுகள்

இரு புறமும் நீள விரிந்த இறக்கைகளுடன்
பூக்களை அலகில் ஏந்திப்பறந்த நிலையில் 
என் தாழிக்குள் வளர்ந்து வரும் அப்பறவை
உடலின் வீதியில்
சிறகடித்து உயரே எழுப்பும் பணி எனதானது
எழுந்து பறக்கையில்
கைகால்கள் விடைத்து நிற்க
வர்ணங்களின் புழுதியை எழுப்பும்
உடலெங்கும்
அதன் மண்டலம் எனைச் சூழ்ந்திருக்க
வானத்தைத் தன் நெடுஞ்சாலையாக்கி
விசையுற்ற அம்பைப் போல எனை இயக்கும்
மரங்களின் உச்சிகளில் அதன் சினைகளை
இறக்கும் போது நிலவு பிறந்து சிரிக்கும்
தேசங்களின் கனவுத் திரட்சிகளைக் கருக்கொண்ட
அதன் கூவல் நித்தம் நித்தம்
என் பருவகாலங்களை அலங்கரிக்கும்
நீலம் சூழ்ந்த அதன் கண்கள்
ஒரு மீனுக்குக் கடலைத் தந்தது.
 






குட்டி ரேவதி

நன்றி: 361 டிகிரி 

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்துகள் பலி: உண்மை அறியும் குழு அறிக்கை



                                                          21.09.2011
                                                          மதுரை
  



சென்ற செப்டம்பர் 11,2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச் சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு  மற்றும் தடியடியில் 6 தலித்துகள் கொல்லப்பட்டும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்முற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு என்று கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டது.
                        


உறுப்பினர்கள்
1.             பேரா. அ.மார்க்ஸ் மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.
2.             கோ. சுகுமாரன் மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR) புதுச்சேரி.
3.             வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுப். (NCHRO) – தமிழ்நாடு
4.             பேரா. ஜி.கே. ராமசாமி மக்கள் ஜனநாயக மன்றம் (People’s Democratic forum)
5.             வழக்கறிஞர் கார்த்திக் நவயான் தேசிய தலித் முன்னனி (National Dalit forum)  ஆந்திரபிரதேசம்.
6.             ரேனி அய்லின், கேரளா தேசிய ஒருங்கிணைப்பாளர் NCHRO
7.              பேரா. பா.கல்வி மணி மக்கள் கல்வி இயக்கம்,   திண்டிவனம்.
8.              வழக்கறிஞர் ரஜினி –PUHR  மதுரை
9.              பி.எஸ். ஹமீது –SDPI, தமிழ்நாடு
10.           பேரா.சே.கோச்சடை PUHR, காரைக்குடி
11.           ஏ. சையது ஹாலித், பாப்புலர் பரண்டு ஆப்                           இந்தியா,இராமநாதபுரம்
12.           மு.சிவகுருனாதன் PUHR, திருவாரூர்.
13.          கவிஞர் குட்டி ரேவதி ஆவணப்பட இயக்குனர், சென்னை
14.           முனைவர் பரமேஸ்வரி கவிஞர், காஞ்சிபுரம்
15.          கு.பழனிச்சாமி PUHR, மதுரை
16.          வழக்கறிஞர் முஹம்மது ஷூஹைப் ஷெரீப் NCHRO –கர்நாடகா
17.          வழக்கறிஞர் .தய்.கந்தசாமி- (PUHR), திருத்துறைப்பூண்டி
18.           தகட்டூர் ரவி (PUHR), கல்பாக்கம்

   
  இக்குழு செப்டம்பர் 19,20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, சுற்றுவட்ட கிராமங்கள், இராமநாதபுரம் மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களையும், அரசு அதிகாரிகளையும், பொது மக்களையும் சந்தித்து, விரிவாக அவர்களிடம் பேசி கருத்துகளையும் ஒலி-ஒளி நாடாக்களில் பதிவு செய்து கொண்டது. முதல் தகவல் அறிக்கைகள், காவலில் வைக்கப்பட்டோருடைய விவரங்கள் ஆகியவற்றையும் தொகுத்துக் கொண்டது.

               
                  பின்னணி

     பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம், முதலானவை சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள பகுதிகள். கடந்த 50 ஆண்டுகளாகவே இங்கு பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 1958 - இல் நடைபெற்ற முதுகளத்தூர் கலவரம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்போது கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரன் அப்பகுதி தேவேந்திர குல வேளாளர்களின் வணக்கத்திற்குறிய பெருந்தலைவராக உருப்பெற்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் எப்படி ஒரு திருவுருவாக உருப்பெற்றுள்ளாரோ அதே வடிவில் தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரன் உருவாகியுள்ளார்.
  
 

முத்துராமலிஙகத் தேவருடை குருபூசை  அவர்களது சமூகத்தவர்களால் அவரது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாடப் படுகிறது. தெய்வத்திருமகன் என அவர் வழிபடப்படுகிறார். இப்பகுதியில் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க பல்வேறு கிராமங்களில் வசிக்கிற தேவேந்திரர்கள் மத்தியில் ஏற்றப்பட்டுள்ள கல்வி முதலிய வளர்ச்சிகளின் விளைவாக  இம்மானுவேல் சேகரனின் காலம் தொடங்கி அமைப்பு ரீதியாக இவர்கள் ஒருங்குதிரள்வதும் ஒடுக்குமுறையை ஏற்காத மனநிலையும் தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் சுயமரியாதை போக்கு அதற்குறிய வகையில் வரலாறு உருவாக்கமும்  நடைபெற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை இதுகாறும் ஆதிக்கம் செய்து வந்த பிரிவினரும் அரசு எந்திரமும் சகித்துக் கொள்ளாத நிலையில் விளைவாக சமூக முரண்கள் கூர்மையடைகின்றன்.



ஒண்டிவீரன் என்கிற அருந்ததியர் இனத்து விடுதலை போராளியை பூலித்தேவன் என்கிற மன்னருக்கு சமமான மன்னராக வரலாறு எழுதுவதை தடுக்க வேண்டுமென நடராசன் (சசிகலா) முதலானோர் கூறிவருவதை இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும்.  கல்வி மற்றும் ஜனநாயக  உணர்வுகளின் வளர்ச்சியின் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை, ஆதிக்க சமூகமும் ஆதிக்க சமூகத்தின் மனநிலையயை பிரதிபலிக்கும் அரசும், ஏற்காததன் உச்சக்கட்ட வெளிப்பாடாகவே இந்த துப்பாக்கிச் சூடு அமைந்த்துள்ளது.



1987 முதல் தியாகி இம்மானுவேல் பேரவை என்கிற அமைப்பு இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை (செப்டம்பர் 11) கொண்டாடத் தொடங்குகிறது. ஆண்டுக்காண்டு கூடுகின்ற கூட்டத்தில் அளவும் அதிகரிக்கிறது. 1995-97இல் தென்மாவட்ட சாதிக் கலவரங்கள் ஏற்படுகின்றன.புதிய தமிழகம் கட்சியும் இங்கே வேர் பதித்து செயல்படத் தொடங்குகிறது. இப்பகுதியில் தேவேந்த்திரர்களின் முக்கியத் தலைவர்களாக ஜான் பாண்டியன் முதலானோர் உருப்பெருகின்றனர்.
 இதே காலகட்டத்தில் தேவர் குருபூஜை அரசே பங்கேற்று நடத்தக்கூடிய விழாவாக மாறுகிறது. 2007இல் தேவருடைய மறைவின் 50வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்திற்கு அருகில் வசித்துக்கொண்டிருந்த சுமார் 100 தேவேந்திரர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.அரசே முன்நின்று இதைச் செய்தது.



இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளும் இதே போல பெரிய அளவில் கொண்டாடப்படுவதை ஆதிக்க மனங்கள் ஏற்க மறுத்தன. தங்களைப் போலவே தேவேந்திர குலத்தினரும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை குருபூஜை என அழைப்பதையும் அவர்கள் ஏறக்கவில்லை. 2007 - ல் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு வன்முறையை தேவேந்திரர் மீது ஏவும் போக்கு நடந்துள்ளது. 2007 - ல் வின்சென்ட் என்பவரும் 2009 - ல் அறிவழகன் என்பவரும் சென்ற ஆண்டு (2010 ஆக்ஸ்ட் 30 அன்று) “குருபூஜைக்கு அணி திரள்வீர்என சுவரெழுத்துக்கள் எழுதிய கொந்தகை அரிகிருஷ்ணனும் ஆதிக்கச் சாதியினரால் கொலை செய்யப்பட்டனர்.


இந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேவேந்திரர்களின் கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத்தில் தேர்ந்த்தெடுக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான் பாண்டியனும் விடுதலையானார். இவையெல்லாம் தேவேந்திரர்கள் மத்தியில் ஒரு எழுச்சி வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு (2010) இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்ததும் 2010 அக்டோபர் 9 அன்று இம்மானுவேல் சேகரனின் உருவம் பொறித்த தபால்தலை வெளியிடப்பட்டதும் மிகுந்த எழுச்சியையும் நிறைந்த எதிர்பார்ப்புகளையும் தேவேந்திரர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. இதை மிகவும் வெறுப்புடனும் ஆதிக்க சாதியினர் பார்த்துவந்தனர். ஆப்ப நாடு மறவர் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் இவ்வாறு இம்மானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்குச் சமமாக மேலெழுந்து வருவதைத் தடுக்க வேண்டுமென கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்தப் பின்ன்ணியில்தான் செப்டம்பர் 09 - ம் தேதியன்று கமுதிக்கு அருகில் மண்டல மாணிக்கம் கிராமத்திற்கு அருகில் உள்ள பள்ளப்பச்சேரி எனும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திரர் குலச் சிறுவன் கொடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக தேவர் சாதியைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான் பாண்டியனும் திருப்பி அனுப்பப்பட்டார். இதே நேரத்தில் (செப்டம்பர் 7) அரசு போக்குவரத்துக் கழக பட்டியல் சாதி தொழிற் சங்கத்தினர் தேசியத்தலைவர் தெய்வத் திருமகனார்என இம்மானுவேல் சேகரனை விளித்து பிளக்ஸ் போர்டு ஒன்றை பரமக்குடி நகரத்தில் வைத்தனர். உடனடியாக இதை எதிர்த்து மறத்தமிழர் சேனை என்கிற அமைப்பும் தேவர் சாதியைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்.



தெய்வத்திருமகனார் என்ற பெயரை தேவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், இம்மானுவேல் சேகரனுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் கூறினர். இது அவர்களின் சட்டப்பூர்வமான உரிமை என்று கூறி பாதுகாப்பளித்திருக்க வேண்டிய ரெவினியூ நிர்வாகமும் காவல்துறையும் பட்டியல் சாதி அமைப்பினரை வரவழைத்து  அந்த பிளக்ஸ் போர்டிலுள்ள இவ்வார்த்தைகளை நீக்க வேண்டுமென வற்புறுத்தினர். அவர்களும் பணிந்து அச்சொற்களை நீக்கவும் செய்தனர். இது தேவேந்திரர்கள் மத்தியில் கடுங்கோபத்தை ஏற்படுத்தவே தெய்வத்திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விழித்து பல பிளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு மறுநாள் அவர்கள் நிறுவினர். இதைக்கண்டு ஆதிக்கச்சாதியினர் மட்டுமல்ல காவல்துறையையும் அரச நிர்வாகத்தையும் சேர்த்து ஆத்திரமடையச்செய்தது. பரமக்குடியில் உள்ள எந்த பிளக்ஸ் போர்ட் அச்சகமும் இது போன்ற பிளக்ஸ் போர்டுகளை அச்சிடக் கூடாதென தடுத்தனர்.



ந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே முரண்பாடு எழுந்து துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பலியாகவும் ஏராளமானோர் படுகாயமடையவும் நேரிட்டது.



   செப்டம்பர் 11 துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அறிந்த உண்மைகள்

01. துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி துப்பாக்கிச் சூட்டை        விடவும் கொடுமையான மொழியில் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா இரண்டு பொய் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அவை:


  1.முத்துராமலிங்கத்தேவரை இழிவு செய்து மண்டல மாணிக்கம் கிராமத்தில் சுவற்றில் எழுதியதாலே பழனிக்குமார் கொல்லப்பட்டான். இது உண்மையன்று. மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஊர். இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்ற தேவேந்திரகுல சிறுவர்கள் அச்சத்தின் காரணமான மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் மாணவர்களில் இவ்வாண்டு 23 பேர் டி.சி. பெற்று சென்றுள்ளனர். இக்கிராமத்திற்க்குள் தலித் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாகக் கூட உலவ முடியாத நிலையில் வேற்றூரில் படிக்கக்கூடிய 16 வயது சிறுவன் பழனிக்குமார் அங்கு சென்று ஏழரை அடி உயரத்தில் ஒரு சுவற்றில் தேவரை இழிவு செய்து எழுதினான் என்று சொல்வதை யாரும் ஏற்க இயலாது.
 

   2. ஜான் பாண்டியன் இந்த கிராமத்திற்கு படை திரட்டிச் சென்றதால் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி வந்தது என்பது முதல்வர் சொன்ன அடுத்த பொய்.
  


ஜான் பாண்டியனைப் பொறுத்த மட்டில் அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு பூப்புனித நீராட்டு விழாவிற்கு வருகிறார். இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அவர் செல்லக்கூடாதென இராமநாதபுரம் ஆட்சியர் தடையுத்தவு இட்டதை அறிந்து அவர் திரும்பவும் திருநெல்வேலி செல்கிறார். அப்போது அவர் கைது செயயப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிப்பள்ளியில் வைக்கப்படுகிறார். எவ்வகையிலும் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் உத்தரவுகளை மீறுவது என்கிற முனைப்பு ஜான் பாண்டியனிடம் இருக்கவில்லை என்பதே உண்மை. தடையை மீறி அவர் படைதிரட்டிச் சென்றதாக முதல்வர் கூறியுள்ளது அதிகாரிகளின் கூற்றை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது.




02. செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு முழுக்க முழுக்க காவல்துறையின் திட்டமிட்ட செயலாகச் தெரிகிறது. தேவேந்திரர்களின் ஓர் அடையாளத் திருவிழாவாக மாறிப்போன ஒரு நாளில், அஞ்சலி செலுத்த வந்த அவ்வினத்தலைவர் ஒருவரை தடுத்தது ஒரு முட்டாள்தனமான செயல் மட்டுமல்ல, கலவரத்தையும் தூண்டக்கூடிய செயலும் கூட. தவிரவும் தடுத்தவுடன் பணிந்து திரும்பிய வரை கைது செய்து, இது குறித்த செய்தி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மத்தியில் பரவ காரணாக இருந்தது. இன்னொரு மிகப்பெரிய வன்முறையைத் தூண்டும் செயலாக அன்று அமைந்திருந்தது.




03. டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், ஐந்து முக்கில் பொறுப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை அடையாறு காவல்துறை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அன்று தேவேந்திரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாடம் புட்டியே தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்து நின்றதாகவே தெரிகிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவை என்ற அமைப்பின் தலைவர் பூ.சந்திரபோஸ் அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் ஜான் பாண்டியனைக் கைது செய்தது நல்லதல்ல எனவும் அவரை விடுதலை செய்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிய போதுசட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம். முதலில் அவர்களைக் களைந்து போகச் சொல்லுங்கள் என்று சந்தீப் மிட்டல் கூறி எந்தவித சமாதானத்துக்கும் வாய்ப்பளிக்காமல் நடந்துகொண்டார்.



04. அன்று ஐந்து முக்கில் குவிக்கப்பட்ட காவல் துறையினரின் எண்ணிக்கை சுமார் 2000 என நேரில் பார்த்த பலரும் எங்களிடம் கூறினர். சாலை மறியலுக்கு அமர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 - இல் தொடங்கி 200 அல்லது 300 என்ற அளவிலேயே இருந்துள்ளது. கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து அவ்வழியே போக்குவரத்து தடைசெய்யப்பட்டது என்பதை ராமநாதபுரம் ஆட்சியர் அருண் ராயே எங்களிடம் ஒத்துக்கொண்டார். தவிரவும் அவ்வழியே இதர மக்கள் சென்று அஞச்லி செலுத்திவரவும் அவ்வழியே வந்த வாகனங்கள் சென்று வரவும் சாலை மறியலால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2000 ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் கூடியிருந்த 200 மக்களை அவர்கள் உண்மையிலேயே கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டிருந்தால் லேசான தடியடி அல்லது கண்ணீர்ப்புகையை பிரயோகித்துக் கலைத்திருக்கமுடியும். ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்றுள்ளனர், சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இருந்த காவல்துறையினர்.



05. செந்தில் வேலன் ஐ.பி.எஸ். ஏற்கனவே இதே பகுதியில் மாவட்டக் காவல்துறைக் கண்பாணிப்பாளராக இருந்தவர். அவர் இங்கு பணியாற்றிய போது இதே போல இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தவர்களை நியாயமற்ற முறையில் கைது செய்து (2008 செப் 11) தலித் விரோத அதிகாரி என்கின்ற பெயரை ஈட்டியவர். அடையாறில் இருந்த அவரை இங்கு கொண்டு வந்து அன்றைய தினத்தில் நிறுத்தியதும் உள்நோக்கம் கொண்டு செயல்பட்டதாகவே தெரிகிறது.



06. காவல்த்துறையின் வஜ்ரா வாகனத்தை மக்கள் எரித்தனர் என்று சொல்வதை நம்ப முடியவில்லை. ஐந்து முக்கில் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களை கலைப்பதற்காக கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காவல்துறையினர் மதுரை ராமநாதபுரம் சாலையில் நீள்வாக்கில் நின்றிருந்தனர். தடியடி மற்றும் துப்பக்கிச்சூடு நடத்தப்பட்டதுடன் மக்கள் எதிரே உள்ள முதுகுளத்தூர் சாலையில் ஓடுவது மட்டுமே சாத்தியமாக இருந்தது. இந்நிலையில் காவல்துறையினருக்கு பின்னால் வந்து நின்ற வஜ்ரா வாகனத்தை கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வதை நம்ப முடியாததாக உள்ளது.



07. துப்பாக்கிச்சூட்டின் போது அங்கு நின்று நெற்றிப்பொட்டில் குண்டடிப்பட்டு இன்று மதுரை அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணிக்கம் குண்டடிபட்டு இறந்தவரை தூக்கிச்சென்று காப்பாற்ற முயன்ற மணிநகர் அம்பேத்கர் மன்றச் செயலாளர் சுரேஷ், கடுமையாக அடிக்கப்பட்டு இன்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர் திரு.வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலரும் நம்மிடம் நேரில் கூறியதிலிருந்து, அன்று எந்த வித முன்னெச்சரிக்கையும் இன்றி தண்ணீர் பீச்சியடித்தல்,கண்ணீர் புகை பியோகம் முதலிய எதையும் செய்யாமல் திடீரென துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். மதுரையில் சிந்தாமணி அருகே அன்றே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களால் மதுரை அப்போலா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும் 19 வயதான டி.ஜெயபிரசாந்தும் அவ்வாறே கூறினான். துப்பாக்கிச்சூடு நடந்து நீண்ட நேரத்திற்குப்பிறகு தான் உள்துறை அமைச்சகத்தில் இருந்து வந்த செய்தி மூலமாகவே தான் அதை தெரிந்து கொன்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



08. துப்பாக்கிச்சூட்டையும் தடியடியையும் மேற்கொண்ட அதிகாரிகளும் கடும் தலித் விரோதப் போக்குடன் இருந்துள்ளனர். சாதியைச் சொல்லி இழிவாக பேசிய வண்ணமே அவர்களை அடித்தும் சுட்டும் வீழ்த்தியுள்ளதை எம்மிடம் பலரும் முறையிட்டனர். இது அரசு நிர்வாகத்தின் மேற்சாதி ஆதரவு மனப்பான்மையும் தலித் விரோதப் போக்கையும் தலித்துக்கள் என்றாலே கலவரம் செய்யக்கூடியவர்கள் என் மனநிலையுடன் அவர்கள் செயல்படுவதற்குச் சான்றாக உள்ளது.



09. துப்பாக்கிச்சூட்டில் 1.பல்லவராயனேந்த்ல் கணேசன்(55) 2. வீராம்பலைச்சேர்ந்த பன்னீர் செல்வம் (50) 3.மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் (19) 4.கீழ்க்கொடுமால்லூர் தீர்ப்புக்கனி(25) 5. காட்டுப் பரமக்குடியை சேர்ந்த முத்துக்குமார் (25) 6. காக்கனேந்ல் வெள்ளைச்சாமி (55) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். கணேசன்,வெள்ளைச்சாமி,ஜெயபால் ஆகிய மூவரின் இல்லத்திற்கு சென்று அவர்களது உறவினர்களைச் சந்தித்தோம் இவர்கள் அனைவருமே அந்த நேரத்தில் அங்கு வந்து சிக்கிக்கொண்டவர்களே அன்றி அஞ்சலி செலுத்தும் நோக்குடன் கூட வந்தவர்கள் அல்ல. கணேசன் தன் மகளின் திருமண அழைப்பிதழை விநியோகிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களைக் கலகம் செய்ய வந்தவர்கள் என்று காவல்துறை கூறுவதை ஏற்கவே முடியாது. பெரும்பாலான துப்பாக்கிச்சூடு இடுப்புக்கு மேலேயே நடத்தப்பட்டுள்ளது. மாணிக்கம் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டுள்ளார்.



10. சுடப்பட்டவர்களில் சிலர் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால்  காப்பாற்றப்பட்டிருக்கலாம். இன்று இறந்து போயுள்ள தீர்ப்புக்கனி உயிரிருக்கும் போதே பிணவறையில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளார்.           
        


பிணவறையில் உயிருடன் ஆட்கள் இருப்பதை அறிந்து புகார் செய்த பின் குமார் என்பவர் காப்பாற்றப்பட்டுள்ளார், தீர்ப்புக்கனி இறந்துள்ளார். தவிரவும் கொல்லப்பட்டவர்களில் குறைந்த பட்சம் இரண்டு பேரேனும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டு பின் சுடப்பட்டனர் என்ற அச்சம் பலருக்கு எழுந்துள்ளது. வெள்ளைச்சாமியின் உடலைக் கொண்டுவந்த காவல்துறையினர் அவரின் உடலை விரைவாக எரிக்கச்சொல்லி உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களும் அச்சத்தில் அவ்வாறே செய்துள்ளனர். அவரின் உடலில் குண்டுக்காயம் ஏதும் இல்லை என அவரின் உறவினர்கள் எமக்குத் தெரிவித்தனர். இறந்து போன ஜெயபாலனின் காலிலும் கூட துப்பாக்கிக் கட்டையால் அடித்து உடைத்ததற்கான காயம் இருந்ததாக அவரது மாமியார் குறிப்பிட்டார். இவையெல்லாம் மக்களின் சந்தேகம் உண்மை இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.



11. குண்டடி பட்டு இறந்துபோன ஜெயபால் மற்றும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயபிரசாந்த் ஆகியோரின் குண்டுக் காயம் முதுகுப் புறத்திலிருந்தே தொடங்குகிறது. அவர்கள் தப்பித்து ஓடும்போது காவல்துறையினர் சுட்டிருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது.



12. காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. நெற்றியில் குண்டடி பட்ட மாணிக்கம் மற்றும் ஜெயபிரசாந்த் ஆகியோர் இதை எம்மிடம் கூறினர். ஸ்கேன் எடுப்பது முதலான ஒவ்வொன்றிற்கும் ஜெயபிரசாந்திடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. வைகோ ஐயா தான் என் மகனின் உயிரைக் காப்பாற்றினார் என்று அவரது பெற்றோர் எம்மிடம் புலம்பினர். நீதிமன்றத்தை அணுகி இன்று மாணிக்கம், கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் மதுரை அப்போலோவில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.




துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்

01.                             சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமென்றாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல்துறை திட்டமிட்டு செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும் அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்குள் கைது செய்ய ஆட்களை கொடுங்கள் என மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்டப் பெண்கள் செப். - 18ம் தேதியன்று ஒரு போலீஸ் வேனில் வந்த காவல்துறையினர் மிரட்டினர் என்று எம்மிடம் கூறினர்.தவிரவும் மஃப்டியில் இருந்த போலீஸார் சீருடையில் இருந்த போலீசாரை நோக்கி கற்களை வீசுவது போல் பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாக எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்கமுடியாத நிலை உருவாகியுள்ளது. எஸ். காவனூரில் இருந்த, அடிபட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும் காவல்துறையே என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம்.



02.                             தொடக்கத்தில் இரவு நேரத்தில் இவ்வாறு கிராமங்களுக்குச் சென்று மிரட்டினோம் எனவும் பின்னர் அதை நிறுத்திக் கொண்டதாகவும் எம்மிடம் விரிவாக பேசிய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராய் கூறினார். ஆனால் மறுபடியும் வாகனங்களில் கல்வீச்சு நடந்ததால் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது எனவும் இனி அப்படி நடக்காது எனவும் அவர் எங்களிடம் குறிப்பிட்டார்.



03. 21 பேர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேறுயாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பலர் பிடித்து செல்லப்பட்டு அடித்துப் பின் விடப்பட்டுள்ளனர். மற்றபடி நகர்புறங்களில் 144 தடை உத்தரவு இருந்தாலும் பெரிய கெடுபிடிகள் இல்லை. எங்கள் குழு சென்று வருவதற்கும் மக்களைச் சந்திப்பதற்கும் பெரிய தடை எதுவும் இருக்கவில்லை எனினும் பெரிய அளவில் பரமக்குடி பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பதும் வருவோர் போவோர் அனைவரும் வீடியோவில் பதிவு செய்யப்படுவதும் முதலான நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரிய அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தச் செய்கின்றது.



04. இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மட்டும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000 கொடுக்கப்பட்டுள்ளது. பலர் அந்தத் தொகை எங்களுக்கு இன்னும் வந்துச் சேரவில்லை என எங்களிடம் குறிப்பிட்டனர். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பாக ரூ.1 லட்சமும் காங்கிரஸ் கட்சி ரூ 50,000 கொடுத்துள்ளனர்.



கோரிக்கைகள்:

01.                                  முதல்வர் ஜெயலலிதா துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி சட்டமன்றத்தில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் தலித் விரோதப் போக்குடனும், உயர்சாதி ஆதிக்க ஆதரவுபோக்குடனும் அது வெளிப்பட்டுள்ளது. இது தலித் மக்கள் மத்தியில் தமக்கு எந்த விதமான நீதியும் கிடைக்காது என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் ஜெயலலிதா தம் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து அதைத் திரும்ப பெற வேண்டும். அது பாரபட்சமற்ற தன்மையை காட்டும்.


02.                                  துப்பக்கிச் சூடு குறித்து அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை வெறும் கண் துடைப்பே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. பணியிலுள்ள நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.


03.                                  தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகளிடமே புலன் விசாரணையை அளித்திருப்பது கேளிக்குரியது, சி.பி.ஐ. விசாரணையை உயர் நீதிமன்றத்தின் மேற்ப்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.


04.                                  சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகிய காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்களின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வ்ழக்கு தொடர வேண்டும்.


05.                                  இறந்தவர்களின் குடும்பத்திற்கு வெறும் 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதை கேலிக்கூத்து என பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகையை 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கும் போது சத்துணவு உதவியாளர் என்பது போன்ற வேலைகள் அல்லாமல், வேறு நல்ல வேலைகள் அளிக்கப்பட வேண்டும்.


06.                                  காயமடைந்தவர்களுக்கு அவர்களது காயத்திற்கு தகுந்தாற்போல் குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.


07.                                  தலித் கிராமங்கள் பலவும் கடுமையாக அரசால் புறக்கணிக்கப்பட்ட நிலையை நாங்கள் நேரில் கண்டோம். எடுத்துக்காட்டாக, கொல்லப்பட்ட பழனிகுமார் பச்சேரி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏதுமில்லை. சாதி இறுக்கம் மிகுந்த மண்டலமாணிக்கம் ஊரின் வழியாகவே வெளியூர் செல்லக்கூடிய நிலை மாற்றப்பட்டு புறவழிச்சாலை அமைக்கப்ப வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அரசு இவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.


08.                                  மண்ட மாணிக்கம் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தலித் குழந்தைகள் மற்றுச்சான்றிதழ் பெற்று வெளியேறுவது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்த விசாரணை ஒன்றை மாவட்டக் கல்வி அலுவலரும் ஆதி திராவிட நலத்துறையும் உடனடியாக மேற்க்கொள்ள வேண்டும்.


09.                                  பரமக்குடி, ராமநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை,வருவாய்துறை,உளவுத்துறை ஆகியவற்றிலுள்ள அதிகாரிகளில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் தலித்துக்கள் எவ்வளவு பேர் என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும்.


10.                                  இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அல்லது பிறந்த நாளை அரசு அங்கீகரித்து விழா எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் உள்ள சாலை அகலப்படுத்தித் தூய்மைப்படுத்த வேண்டும்.


11.                                  அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் தலித் விரோதப் போக்கு ஆதிக்கச் சாதி ஆதரவுப் போக்கும் உள்ள நிலைக்கு எதிராக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். திருமதி.சிவகாமி அவர்கள், ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளராக இருந்த போது அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தலித் பிரச்சனைகளில் உணர்வூட்டுதல் பயிற்சியைத் தொடங்கினார். எனினும் அதுவிரைவில் நிறுத்தப்பட்டது. அரசு இதைத் தொடர வேண்டும். அருண் ராய் போன்ற இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடமே தலித் தலைவர்கள் என்றால் ரவுடிகள் என்பது போன்ற பார்வையும், ஆதிக்கச் சாதிக்குச் சமமாக அடித்தள மக்கள் உரிமை கோரும்போது அது சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் பொறுப்பற்ற செயல் என்பதாக கருதும் போக்கு இருப்பது கவலையளிக்கிறது.


12.                                  துப்பக்கிச்சூட்டை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. சாதிக்கட்சிகள் குறிப்பாக முக்குலத்தோர் சார்ந்த சாதிக்கட்சிகள் கண்டிக்காதது வருந்தத்தக்கது. துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டதை பயன்படுத்தியது குறித்து அழுத்தத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்க வேண்டும்.


13.                                  பாதிக்கப்பட்டோருக்காக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடி வரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பசுமலை, ரஜினி ஆகியோரை இக்குழு பாராட்டுகின்றது.



தொடர்பு முகவரி:
142, வடக்கு வெளி வீதி,
2ஆவது மாடி, யானைக்கல்,
மதுரை-1
அலைபேசி:9444120582, 9484971185.