நம் குரல்

வெப்பம்

வெயிலின் தடங்கள் அறைகளாகிச் சுவரறைந்த வீட்டில் இரு வேறு உடல்களாகித் தளும்பினோம். கட்டிலின் கீழ் மெல்லிய அழுத்தம் முனகுவதைச் சுவர்களால் காது பொத்திக் கொண்ட அறைகள். மீனாகி இயங்கினாய். எலும்புகளின் செங்கல்களால் தசைகளைப் பிணைத்தாய். நொறுங்கி அவை இடம்பெயர்ந்து கூவி இறக்கைகளை வீசி வெளியேறின ஜன்னல் வழியே. அறைகளை உடலென்று ஆக்கிய மாளிகை அது. தூண்களைப் பற்றி உத்திரமேறும் பார்வைகளின் தோட்டம். குருவிகள் கூடடைந்த கண்களும் நீருக்குள் பாசிகள் அலையும் குளமும் உனது. பசும்புல்வெளி மூர்ச்சையடைந்து களைத்திருந்த உனது முன்னுடல் எனக்குத் தீரமாகியது. நெஞ்சில் வளர்த்து வந்த என் தாலாட்டுப் பாடல்கள் அங்கே உன்னெஞ்சோடு முனகி அடங்கின. ஊடுருவிய மேகங்களை கோடையின் வெப்பம் உடலாகி இயங்கிய அறைகளின் தோல்மடிப்புகளைச் சுட்டது. சுட்டுக் கொண்டே இருந்தது. மெல்லிய கீறல் வழியாக வழிந்த உனது அருவியின் உக்கிரமோ உச்சி வரை மூழ்கடித்தது. உடலின் சமுத்திரம் தீராத அலைகளால் ஆர்ப்பரிப்பது என்று நீ முன்னமே சொல்லியிருந்ததால் கண்களைக் கலங்களாக்கி என் திசையைச் சேர்ந்தேன்.


குட்டி ரேவதி

நன்றி: உள்ளுறை

2 கருத்துகள்:

பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப நல்லாருக்குங்க.

Shangaran சொன்னது…

சொற்களை திறம்பட கையாண்டுள்ளீர்கள்...

நட்புடன்,
சங்கரன்
http://shangaran.wordpress.com