நம் குரல்

சக்கரங்கள்


இனி எல்லாமும் முதலிலிருந்து தொடங்கப்படவேண்டும் இல்லையெனில் நிகரற்ற இவ்வாழ்வின் பெருங்கிணறு எந்நேரமும் தூர்ந்து போகலாம் கண்கூசும் வெயிலின் பதாகையின் கீழ் நிரந்தரமானதோர் ஒற்றைப் புறாவாகலாம் காட்டின் திக்கற்ற வெளியில் ஒரு மதம் கொண்ட யானையாகலாம் அவரற்ற உலகில் காலத்தை மெல்ல மெல்ல கொன்று தின்னும் கரையான் ஆகலாம் இரவழியாத பொழுதுகளால் என் வீடு வழிந்து நிறையலாம் மழை சாரை சாரையாய் கண்ணின் வீதிகளை நனைக்கலாம் புற்களின் மென்படுகையில் நுனிப்பாதங்களை ஊன்றியது போல் இனி எல்லாமும் முதலிலிருந்து தொடங்கப்படவேண்டும் ஆனால் ஏனோ தொடங்கப்பட்ட இடத்திலேயே நெடுஞ்சாலைகளை அரைக்கின்றன சக்கரங்கள்.

குட்டி ரேவதி