நம் குரல்

புனைவு என்பது......

புனைவுகளுக்குப் பின் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

புனைவுகள் உண்மைகளை மெய்ப்பிப்பதற்காக, வருவதில்லை. பொய்களையும், கற்பனைகளையும் இட்டு நிரப்பவும் அவை முயற்சிப்பதில்லை. மனிதனாகக் கிடைத்த வாய்ப்பில், இந்தப் பிரபஞ்சத்தையும் சிந்தனைகளையும் எவ்வளவு தூரத்திற்கு நுரையீரல் வெடிக்க ஊதிப்பருக்கவைக்கமுடியும் என்பதில் தீவிரமாக இருக்கின்றன.

யதார்த்தத்தை அப்படியே கிழிப்பதிலோ, கீறல்கள் ஏற்படுத்துவதிலோ புனைவுகளுக்கு அக்கறை ஏதும் இல்லை. பட்டுத்துணியின் உராய்வில் சதை மீது பரவும் கணநேர மின்சாரம் போன்ற உணர்வைச் செயல்படுத்திச் செல்கின்றன. 
ஆகச்சிறந்த கதை என்று பிரசுரமாவதை எல்லாம், இதழ்களில் குப்பையாக்கிச் சாதிக்கும் தருணங்களில், மனித மனங்களின் உன்னதம் என்பவை யாதாக இருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

உன்னதம் என்றால், புனிதம் மட்டுமே இல்லை. அழுக்கையும் வலியையும் சீழையும் துயரநொதியையும் எந்தத் திறனால், ஒரு தனிமனிதன் சரியாகச் செரித்துக்கொள்ளமுடிகிறது என்பதுவும் தான். உன்னதம் என்றால் புனிதம் இல்லை. உடலின் அகநோக்கங்கள், பிரபஞ்சத்தின் எல்லைகளையும், காலமுடிவுகளையும், மனிதவரையறைகளையும் மீறியவை. தன்னையே, தன் உடல் வழியாகக் கடந்து செல்ல முடியும் வீரம். 

எங்கே இப்படி ஒரு புனைவு எது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

குட்டி ரேவதி

1 கருத்து:

Unknown சொன்னது…

Sirapana pagirvu .dhinam ore blog ezhutha vendum enbandhu en Anbana vendukol.nanri