நம் குரல்

ஃபேஸ்புக் உறவுகளும் சலித்துப்போகும்!


அன்று விடியும் முன்னேயே அந்தப்பெண் என்னைத் தொலைபேசியில் அழைத்தாள்.
காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தன் கணவன் தன்னைப் பொருட்படுத்தாமல், பிற பெண் தோழியருடனேயே ஃபோன், சேட், ஃபேஸ்புக் என்று தன் முழுநேரத்தையும் கழிப்பதாகவும், தன் முகத்தையே பார்க்கப்பிடிக்கவில்லை என்று கூறுவதாகவும்,

ஆனால், தன் வருமானத்தை அவரது பயன்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்வதாகவும், மாதந்தோறும் வீட்டு வாடகை இன்னபிற செலவுகளைத் தானே ஏற்கவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாகவும் கூறினாள். இத்தனைக்கும் அது ஒரு காதல் திருமணம்.
ஆனால், இதுபோன்ற பிரச்சனைகளை நாம் கேட்பதும், பார்ப்பதும் முதல் முறை அல்ல.
சமூக வலைத்தளங்களின் தாக்கமும் புழக்கமும் அதிகரித்த பின்னர், ஆண்களுக்குப் பெண் தோழியரும், பெண்களுக்கு ஆண் தோழர்களும் இதுவரை எப்போதுமல்லாது கைக்கெட்டும் தூரத்தில் எளிதாகக் கிடைப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே.
பள்ளிகளில் பெண் - ஆண் பாலார் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தோருக்கும், தம் சகோதரிகளிடமே நெருக்கமாகப் பழக்கும் வாய்ப்பு கிட்டாதோருக்கும் ஃபேஸ்புக் மடை திறந்தாற் போலாகிவிட்டது. நாம் அத்தகைய இறுக்கமான காலத்திலிருந்து வெகுதூரம் நகர்ந்து வந்திருக்கிறோம்.

நீண்ட நாள் தான் விரும்பிய காதலியே சலித்துப் போகும் போது, இந்த ஃபேஸ்புக்கும் ஃபேஸ்புக் பெண்களும் நட்புகளும் கூடச் சலித்துப் போகும் இல்லையா?

ஃபேஸ்புக் உறவுகள், வீட்டில் இருப்போரை விட இனிமையாக இருப்பது போலத் தோன்றக்காரணம், அவர்களின் உடல் நலன், அன்றாட வாழ்வு, செலவுகளில் நாம் ஏதும் பொறுப்பேற்கவேண்டியதில்லை என்பதே.
பொறுப்பேற்கும் இடங்களில் இருந்து, ஆண்கள் தப்பிப்பதற்கு நவீன வாய்ப்பாக ஃபேஸ்புக்கும் ஆகிவிட்டது வெளிப்படையாகிறது.

தன் வீட்டில் தன் அம்மா, சகோதரியர், மனைவியுடன் கொஞ்சமும் நேரம் கழிக்காது, இந்தத் தற்காலிக இன்பத்திற்கு ஆட்பட்டு, வீட்டில் இருப்போரைப் புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம்.

ஏழெட்டு வருடங்கள் காதலித்து விரும்பிய பெண் மீது சலிப்பு ஏற்படுவது போன்ற தோற்றத்தைத் தரும் ஃபேஸ்புக் பெண்களும் உறவுப்புழக்கமும் கூட கூடிய விரைவில் சலிப்பைத் தரும். விர்ச்சுவல் வெளியில் எல்லாமும் மாயமாகிப் போகும். வெறுமை சூழும்.

இந்தச் சலிப்பை வெல்வதற்கு முதன்மையான வழி, நம்முடன் நேரடியான உறவிலும் தொடர்பிலும் இருப்போருக்கு முதலில் அன்பையும் அக்கறையையும் காட்டுவது அவசியம். அவர்களின் நல்வாழ்விற்குப் பொறுப்பேற்பது போன்ற இன்பமும் எழுச்சியும் ஏதுமில்லை.

காலம்செல்லச்செல்ல, 
சினிமாவில் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தவருக்கே, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துவைக்கும் கொடுமையான நிகழ்வு போலவே, காதலித்தவரையே கல்யாணம் செய்வதும் ஆகிவிடும் போலிருக்கிறது.

அந்தப் பெண்ணின் குரலில் இருந்த நிம்மதியின்மை என்னையும் தீவிரமாக ஆட்கொண்டிருக்கிறது. அதற்குப் பின், அந்தப்பெண்ணைத் தொடர்புகொள்ளமுடியவில்லை.

இந்தப்பெருநகரில் அவள், முதலில் தன் மீது அக்கறை கொண்டவளாக ஆகவேண்டுமென விரும்புகிறேன்.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: