நம் குரல்

காமப்பாழி; கடவழி; படுகுழி; பெருவழி; இடைகழி!


தமிழில் மாதவிடாய் அனுபவங்கள் குறித்தப் பெண்களின் பார்வைகளே கூட ஆரோக்கியமானவையாக இல்லை. ஆண்களின் எழுத்துப்பதிவையும் சொல்வழக்கத்தையும் கேட்கவேண்டாம்.

ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன் அவர்களின் ஆவணப்படம் மட்டுமே அதை நடைமுறையில் உள்ள சமூகச்சிக்கலாய் முன்வைத்திருந்தது.

எழுத்தில் இதுவரை, ஓர் அரைகுறையான பார்வையாகவும், சமூகம் வழங்கிவந்த அபத்தங்களை ஒட்டிவந்ததாகவுமே இருந்துள்ளது.

சித்தமருத்துவத்தில், அது பெரும்பாடு என்று வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான, சித்தமருத்துவச்சொற்கள் ஆண்கள் சொல்வதற்கும் புழங்குவதற்கும் ஏற்றவகையிலும், சமூகக்கட்டுப்பாடுகளுக்கு இயைந்த முறையிலும் தான் உருவாக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் ஒரு திரையிடல் நிகழ்வில், புகழ்பெற்ற தமிழ்த்திரைப்பட வசனகர்த்தா, தன்னாலும் கெட்ட வார்த்தையை எழுத்தில் பயன்படுத்த முடியும் என்று காட்டுவதற்காக, 'தூமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்ததை, பிரீத்தம் அவர்கள் சுட்டிக்காட்டினார். அவ்வளவு தான் அவருக்கு மொழியறிவு என்று கடந்து போகவேண்டியிருந்தது.

உண்மையில், மனித இனத்தின் உயிர்வெளியை, விளைநிலத்தைக் குறிக்கும் உடலியங்கியலே மாத உதிரப்பெருக்கு. பெண்ணுடலின் கருநிலத்தை உழும் செயல்பாடாகவே அது நோக்கப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால், அது பெண்ணின் நொய்மையான கணங்களாகவும், இரக்கம் கோரும் சந்தர்ப்பமாகவுமே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெண் உடல் நலனின் ஒரு முக்கியமான குறியீடு.

உடலுக்கு ஊட்டமான உணவையும் உணர்வுகளையும் கொடுக்கவேண்டிய பருவக்கட்டாயத்தை வலியுறுத்தும் ஓர் அவசியம். உளச்சிக்கலுக்கு ஆளான பெண்ணின் உடலில் உதிரப்பெருக்கையும் அதுசார்ந்த சிக்கல்களையும் அந்தந்த மாதத்திற்கு ஏற்றாற்போல சிம்டங்களாக (குறிகுணங்களாக) காணமுடியும்.

பெண் உடலும் ஆண் உடலும் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் இயற்கையின் முதிர்ச்சி.
ஆனால், பெண்களின் உடல் பலவீனமாகவும், நொய்மையாகவும், அருவெறுப்பானதாகவும், இழிவாகவும், ஓர் அபாயமாகவும் பார்க்கும் வழக்கம் மதங்களின் ஆளுகையினாலும் சாதிக்கு ஏற்றாற்போன்ற வழக்கங்களினாலும் செய்யப்பட்ட முதன்மையான சூழ்ச்சி.

பெண் உடல் பற்றிய அறிவு கொண்டவர்கள், இரத்த ஊற்றின் மூலத்தையும் சுழற்சியையும் தொடர்ச்சியையும் தெளிவாக உணர்ந்துகொள்வர். அதை ஒரு கறையாகப் பார்க்கமாட்டார்கள்.

ஓர் இணையச்சுட்டியைப்பார்த்தேன். உதிரப்பெருக்கிற்கு எதிரான பார்வை பெண்களுக்கு இடையே நிலவுவதை கார்ட்டூன்களாக்கியது போல் இருந்தது. கீழே கொடுத்துள்ளேன்.

இதோ, பட்டினத்தார் பாடல் வரிகளைப் பாருங்கள். புகழ்ச்சொற்களின் வழியே ஓர் இழிவறிவு போல் இருக்கும்.
"காமப் பாழி; கருவிளை கழனி;
தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக் காமுக நாய்தான் என்றும்
இச்சித் திருக்கும் இடைகழி வாயில்;
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி;
புண் இது என்று புடவையை மூடி
உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்;
மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி;
நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி;
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி;
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்;
இத்தை நீங்கள் இனிது என வேண்டா;
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை"


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: