நம் குரல்

சொற்கத்திகள்








சமீபத்திய சொற்கத்திச் சண்டைகள் எனக்குக் கீழ்க்கண்ட பிம்பத்தைத் தந்தன. 


கற்பனை நாற்காலிகள்


வெளியில் சுழன்று கொண்டிருக்கின்றன அவரவர் ஆசைக்கும் அதிகாரத்திற்கும் ஏற்ற அழகில் நாற்காலிகள்.
எவர் கண்களுக்கும் தென்படுவதில்லை மற்றவரின் நாற்காலிகள்
ஒன்றுடன் ஒன்று மோதும் போது மட்டும் தலைகுப்புற தரை தட்டி வீழ்கின்றன
அப்பொழுது அறியத் தந்தோம் நாற்காலியின் வண்ணங்கள்



*

கீழ்க்கண்ட வரிகளும் வன்முறை நிரம்பிய ஒரு தருணம் பற்றியது.


இரவு

இரத்தம் வாங்கிய வாளை
வசதியாக மறைக்கும்
ஓர் உறையாகிறது இரவு
உறைந்த இரத்தத்திட்டுகள்
பொருக்குத்தட்டி உதிர ஏதுவாகிறது
கவனமாய் வடிவமைத்திருந்த இதயத்தை
வன்மம் வகிர்ந்த வலியை
வாள் அதன் குளிர்ச்சியுடன் 
நினைவில் வைத்துக் கொள்கிறது
மெளனத்தின் பெருவிரல் அழுத்தத்தால்
எல்லாவற்றையும் அடக்குகிறது
வேகமாய் இயங்கிய வாள்களை
எல்லாம் உறைக்குள் செலுத்தமுடிகிறது
இரத்தக் கொதிப்புடைய வாள்முனை
உறையின் இருளை முட்டியதும்
முடங்கிப் போகிறது
அதன் கைப்பிடியில் பதிந்திருந்த ஆத்திரம்
கண்விழித்து இரவைத் துழாவுகிறது
வேட்டைக்கான மூர்க்கத்துடன்.


*




குட்டி ரேவதி

1 கருத்து:

ezhil சொன்னது…

நாற்காலிச் சண்டை அருமை...