நம் குரல்

கவிதைகளின் குளம்படி!

ஸர்மிளா ஸெய்யித்தின் 'சிறகு முளைத்த பெண்' கவிதைத்தொகுப்பு பற்றி... தமிழ் ஆழிக்கு எழுதியது.




1990 -களில் தமிழ் நாட்டில் பெண் கவிதை வீர்யம் பெற்றதற்கு பெருமளவில் காரணமாக இருந்தவை ஈழத்திலிருந்து வந்த பெண்களின் அரசியல் கவிதைகள். அவர்கள் தாம்   தம் 'உடலை' முதன்முதலாக இலக்கியத்தின் பேசு பொருளாக ஆக்கினர். அவர்கள் உடல் மீது செலுத்தப்பட்ட அதிகார வன்முறையையும் போர்ச்சூழலையும் வெகு யதார்த்தமாக கவிதைகளில் பிம்பப்படுத்தினர். அந்தக் கவிதைச்  செயல்பாட்டின் உத்வேகம் தான், தமிழகத்தின் பெண் கவிதை மொழியையும் கூட பீடித்தது. அது வரை ஆண் மொழியில் வெறும் வர்ணனைகளாகவும் உள்ளீடற்ற கூடுகளாகவுமே இடம்பெற்று வந்த பெண் உடல், பெண்கள் கவிதைகளில் அவர்களின் அரசியல் பொருளுடன், சமூக வேட்கையுடனும் வெளிப்பட்டது. இந்தப் பத்தாண்டுகளில் பொதுவெளியில் பெண் உடல் என்பது பேசுபொருளாக மாறுவதற்கு பெண்களின் இந்நீண்ட இலக்கியப் பயணம் தேவைப்பட்டது. அதே சமயம்,பெண் உடல் பற்றி வெளிப்படையாகப் பேசிப்புழங்குவதற்குத் தேவையான வார்த்தைகளும்  பெருமளவில் இக்கவிதைகளாலேயே  சமூகத்திற்குப் வழங்கப்பட்டன. இன்று தமிழ்ப் 'பெண் உடல்' பெரிய அரசியல் பிம்பத்தைக் கொண்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



ஸர்மிளா ஸெய்யித்தின் 'சிறகு முளைத்த பெண்' கவிதைத் தொகுப்பு மேற்சொன்ன வழியிலேயே தன் சிந்தனைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. 'நீ இல்லாத இரவு என் கழுத்தை நெரிக்கிறது', என்று தன் காமத்தைப் பேசுவதிலாகட்டும், 'குளம்புகள் கற்களில் மோத அதோ எம் கலவியைக் களவில் பார்த்த புரவிகள் தேரை இழுத்துக்கொண்டு விரைந்தோடி வருவதைப் பார்', என பெண் மீதான சமூகக் கண்காணித்தலைப் பேசுவதிலாகட்டும்,  'நான் மழை. ஆட்டுத்தொழுவத்திலும் வீழ்வேன். அரசமாளிகையிலும் வீழ்வேன். என்னைக் கண்டு ஒதுங்கியேயாகனும். ஆளுநர் அரசாங்கத்தலவர் அனைவரும் குடைபிடித்தாகனும் எனக்கு. நான் மழை. வேறுபாடின்றி நனைப்பேன்' என எளிமையான முறையில் தன் உரிமைப் போரை நிகழ்த்துவதிலாகட்டும் ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதைகள்  சமூகப்பார்வையின் வெளிச்சம் பெறுகிறது. சிந்தனையின் நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் ஓடும் குதிரையில் பயணிக்கும் ஒரு பெண்ணின் தனி முழக்கம் போல, தனி சாட்சியங்கள் போல ஸர்மிளா ஸெய்யித்தின்  கவிதைகள் இத்தொகுப்பு முழுக்க உருக்கொண்டிருக்கின்றன.  பெண்கள் இதுவரையிலும் பேசாத தம் உணர்வுகளை நேர்மையைப் பேசுமிடத்து ஸர்மிளா மிகுந்த கவனம் கொள்ளத் துணிந்திருக்கிறார். தமிழ்ப் பெண்ணிலக்கிய வரலாற்றின் அரசியலை முற்றும் அறிந்த ஒரு கவிஞரின் மன எழுச்சி தான் அவரைக் கவிதை காலகட்டத்தின் அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதை மொழியும் குரலும் அத்தகையதோர் எழுச்சியைத் தன்னுள் கொள்வதன் வழியாக பெண் கவிதையின் அரசியலை கூர்மைப்படுத்தமுடியும் என்று நம்புகிறேன்!





குட்டி ரேவதி

1 கருத்து:

Together Women Rise சொன்னது…

நன்றி தோழி.... மிக்க மகிழ்ச்சியும் அன்பும்.