நம் குரல்

நான் அவதூறுகளைக் கையாளும் முறை!




வணக்கம். இப்படி ஒரு பதிவை நீண்ட நாளாகவே எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். இப்பொழுது எழுதுவது சரியாக இருக்கும் எனத்தோன்றுகிறது.

எழுத வந்தது முதலே கடும் அவதூறுகளைச் சந்தித்து வந்திருப்பவள் தான் நான் என்பதால் இப்பொழுது எதுவுமே என்னைப் பாதிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், கடந்து போகவும், அதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவும் போதுமான சமூகநிலையை நான் நன்கு உள்வாங்கியிருக்கிறேன்.

எனக்கு எந்த ஒரு சக படைப்பாளியின் அங்கீகாரமும், விருதும், பாராட்டும் தேவையே இல்லை.

எழுத்துத்துறையில் மட்டுமன்றி, தனிப்பட்ட விதத்திலும் படைப்பாளிகளின் தொடர்ந்த குறுக்கீடுகளால் எதிர்ப்புகளைச் சந்தித்துக்கொண்டே தான் இருக்கிறேன். இது எப்பொழுதாவது குறையும் அல்லது இல்லாமல் போகும் என்று நான் நினைக்கவில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் வாய்ப்பிருக்கிறது.

நாம் பெரிய படைப்பாளிகள் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் கூட, தம் எதிர்வினைகளாலும், அவதூறுகளாலும் தம் இயலாமையை, போதாமையை வெளிப்படுத்தித் தம் ஆளுமைச்சிதைவை எனக்குக் காட்டியுள்ளனர். பொதுச்சமூகத்தில் எழுத்தும் மொழியும் உணர்வாக அன்றி அறிவாக மாறுவதை வெளிப்படையாகப் பார்க்கிறோம். காலங்காலமாக, 'படைப்பாளி' என்ற டைட்டிலை தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த அதிகாரச்சுகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இவர்களின் மனம் ஒப்பவில்லை என்ற உண்மை தான் என்பதாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

பெண்கள் பன்னாட்டுப் படைப்பாளியாக மாறுவதையும், பன்னாட்டுத் தமிழர்களுடன் உரையாடக் கிடைக்கும் வாய்ப்பையும் வெறும் சலுகையாக, அல்லது ஒரு பாலினத்திற்கான பாரபட்சமாக எடுத்துக்கொள்வது அழகாகாது. அது உங்கள் மனதில் இயங்குவது. அது
அறிவாகாது. பள்ளிக்கல்வியைக் கூட இன்னும் எட்டாததாகும்.

எழுத வந்து பதினைந்து வருடங்களில், என் நூலை வெளிநாட்டுக்குக் கொண்டு சேர்க்கும் எந்தப்பெரிய பதிப்பகத்துடனும் சமரசம் செய்து கொண்டு என் நூலை கொண்டு வந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், என் நூல் வெளிநாடுகளுக்குச் சென்றதே இல்லை.
ஆகவே, இங்கிருக்கும் படைப்பாளிகள் பதட்டம் கொண்டு அவதூறு காட்டுவதெல்லாம் அவர்களின் பொறாமையை, நிலைகுலைவைத்தான் காட்டுகிறது.

இன்னும் அவதூறுகள் வரலாம், விமர்சனம் செய்யலாம். தொடர்ந்து செய்யுங்கள். என் படைப்புகளுடன், செயல்பாடுகளுடன் குறுக்கிடுங்கள். அதுவே, நீங்கள் செய்யவேண்டியது என்பது என் எதிர்பார்ப்பு. நாம் செய்யவேண்டியது, உங்களுக்கு மறுமொழி சொல்வதோ உங்கள் விமர்சனக்குரலுக்குப் பொருள்விளக்கம் கொடுப்பதோ இல்லை.

மாறாக, உங்கள் அவதூறுகளைகளை வழக்கம் போலக் கடந்து செல்வதே!

நன்றி.




குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: