நம் குரல்

இசைப்பாடல் தொகுப்பு!


இசைப்பாடல் தொகுப்பு!

இது இசைப்பாடல்தொகுப்புகளுக்கான (Album) காலம் போலும். இதுவரை ஐந்து ஆல்பங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளேன். 



'கர்நாடக இசை'க்கூட்டத்திற்கு வெளியே இருந்த சமூகத்தின் ஒரே மன உணவு, சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் திரை இசையாகத்தான் இருந்திருக்கிறது. 

நம் சமூகத்தைத் திரைஇசை பீடித்த அளவிற்கு வேறு கலை வடிவம் செய்திருக்குமா என்று தெரியவில்லை. பால்ய பருவத்தை நினைவூட்டவும் காதல் பருவத்தை வளமூட்டவும் நம் தத்துவ வெளிகளை நலப்படுத்தவும் 'திரை இசை', சினிமாவெளியிலிருந்து தொடர்ந்து உரையாடல் செய்திருக்கிறது. 

ஆனால், உயர்ந்ததாகக் கருதப்பட்ட 'கர்நாடக இசைக்கு' வெளியே நிறுத்தப்பட்ட 'திரை இசை', காலப்போக்கில் அதற்கு எதிரானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. சினிமா சம்பந்தப்பட்ட எதுவுமே தவறானதாகக் கருதப்பட்ட ஒரு காலத்தையும் நாம் கடந்திருக்கிறோம்.

இன்று நிறைய இளைஞர்கள், இசைப்பாடல் தொகுப்பு உருவாக்குவதில் ஈடுபடுகின்றனர். சமூக மையக் கருத்துகளை முதன்மையாக வைத்தும், சினிமா இலக்கணங்களுக்குள்ளும் கதைக்கட்டுகளுக்குள்ளும் அடங்காத உருவம் கொண்டும் பாடல்களை உருவாக்குகின்றனர்.

வெளிநாடுகளில் இத்தகைய பாடல்தொகுப்புகள் பெருவாரியாக உருவாகுவதற்குக் காரணம், இசை ஒரு பொது அறிவாகவும் கலைப்பழக்கமாகவும் இருப்பது தான். 

நம் நாட்டிலும் நாட்டுப்புற இசை பொதுச்சமூகத்தை நோக்கி நகர்தலும், நவீன இசை பரவலாகி சமூகமைய விடயங்களுக்குப் பயன்படுவதும் இனி தவிர்க்கமுடியாததாகும் என்று தோன்றுகிறது.



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: