நம் குரல்

ஜாதியை ஒழிக்கும் வழி!


டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் "The Annihilation of Caste" நூல் மீண்டும் விவாதத்திற்கு வருகிறது.
இணை எழுத்தாளர் என்று எழுத்தாளர் அருந்ததிராயின் பெயர் போடப்பட்டு விற்கப்படுகிறது.
காலந்தோறும், ஒடுக்கப்பட்டவர்களின் அறிவாற்றலும் படைப்பாற்றலும் சூறையாடப்படுவதும் சுரண்டப்படுவதும் மறைக்கப்படுவதும் வழக்கம் தான்.
இன்னும் விட்டால், அம்பேத்கரின் போராட்டவரலாறு கூடத் தாங்கள் அறிந்ததே சரி என்று வாதிட்டு எழுதுவார்கள்.
என்றாலும், இந்நூல் விடயத்தில் இவ்வாறு நடக்கக்காரணம், இந்நூலை சமூகத்திற்குத் தேவைப்படும் அளவிற்கு நாம் பரவலாக இதை வழங்கவில்லை என்பது தான்.
அது பள்ளிப்பாடமாக இருக்கவேண்டிய மிகவும் அடிப்படையான சமூகவியல் நூல். சாதிச்சமூகம் என்ன மனநிலையுடன் இயங்கும், அது எப்படி மனிதர்களிடையே பிரிவினைகளை மட்டுமே ஆதரிக்கும் என அதில் அம்பேத்கர் முன் வைத்திருக்கிற தர்க்கமும் ஆய்வு விளக்கமும் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் போய்ச்சேரவேண்டியது.
இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கவேண்டிய நூல்.
கடந்த ஆண்டுகளில், கடந்த காலத்தில் எத்தனை இலக்கிய இயக்கங்கள், அமைப்புகள் இந்நூலை அச்சாக்கி வெளியிட்டு மக்களிடம் பரவலாக்கியுள்ளார்கள். எத்தனை படைப்பாளிகள் இதைப்பற்றிப்பேசி, எழுதியிருக்கிறார்கள். சாதி ஒழிப்பு பேசும் அமைப்புகள் கூட, இந்த நூலை ஒரு கள ஏடாகப் பயன்படுத்தியிருக்க முடியும்.
இந்நூலை அதிகமாக அச்சிட்டு வெளியிட்டது, 'தலித் முரசு' இதழ் மட்டுமே.
இவ்வாறு நமக்கான கருவூலத்தை நாமே செவ்வனே பயன்படுத்தத் தவறும்போது, இப்படியான சமூகத்தவறுகள் நடக்க நாமே வாய்ப்பாகிவிடுகிறோம் என்று தோன்றுகிறது.
நூலுக்கு ஒரு விலையை நிர்ணயிக்க முடியாதபடி, நாமே அந்தூலை சமூகமயப்படுத்தி, பொதுவுடமையாக்கவேண்டும்! இதுவே இம்மாதிரியான சூழ்ச்சிகளை வெல்லும் வழி!



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: