நம் குரல்

புத்தகப்பட்டியலும் சூயிங் கம்மும்!




ஒருவழியாகப் புத்தகப்பட்டியல் இடுவதை முடித்து, எல்லோரும் வேறு பக்கம் திரும்பியாயிற்று. 

எவர் பட்டியலும் சமகாலச் சிந்தனைக்கு அல்லது வாசிப்பிற்குத் தேவையான நூல்களை முன்மொழியவில்லை.

படிக்க அவசியமான நூல்களில், இன்னும் அன்னா கரினீனாவும் வெண்ணிற இரவுகளும் மட்டுமே ஆக்கிரமித்து இருந்தன. சொல்லிச்சொல்லி, முக்கியமான நூல்களாக ஆகிப்போன முந்தைய தலைமுறை, தமிழ் இலக்கியவாதிகளின் நூல்களும் பெரிய அளவில் இடம்பிடித்திருந்தன.

முகநூலில் சமகால அரசியல் மற்றும் சமூகம் சார்ந்து தீவிரமாகப் பதிவுகள் இடுவோர் கூட, சாதிமறுப்பு, வேளாண்மை, சுற்றுசூழல், அணு உலை எதிர்ப்பு, பெண்ணியம், ஆணியம் என்று இயங்குவோர் கூட, தனக்குப் பிடித்த நூல்கள் பட்டியல் என்று வரும் பொழுது, தம் "முன்முடிவு" நூல் பட்டியலுடனேயே வந்திருந்தது வருத்தத்தை உண்டாக்கியது.

இன்றைய தலைமுறையின் கட்டுரை நூல்களும் சென்ற ஆண்டில் வெளிவந்திருந்த முக்கியமான நூல்களும் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

புரையோடிப்போன பழம்புனைவுகள் இன்றைய நம் வாழ்க்கைக்கு எதுவுமே வழங்குவதில்லை, சிறிய அளவு சொகுசைத் தவிர. மேலும், இந்த சொகுசை நம் சொந்த வாழ்வில் ஒரு பொழுதும் நாம் எட்ட முடிவதில்லை. காரணம், சமூக ரீதியாக, நாம் அந்த சொகுசுகளிலிருந்து புறந்தள்ளிவைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதால் தான் அவை நமக்கு சொகுசாகத் தெரிகிறது.

ஒவ்வொருவரின் புத்தகப்பட்டியலையும் வாசிக்கையில், எனக்கு சூயிங் கம்மை மெல்லுவது போன்ற உணர்வு ஏற்பட்டது!

என் கையில் சமீபத்தில் வெளியான சில நூல்கள் இருக்கின்றன. அவற்றைப் படித்துமுடித்திருக்கிறேன். தமிழின் மிகவும் இளம்தலைமுறையின் நூல்கள் அவை. புனைவோ மொழியோ சிந்தனையோ அரசியலோ அவற்றை ஊக்கத்துடன் முன்னகர்த்தும் தீவிரம் இந்த நூல்களில் இருக்கிறது.

ஒவ்வொன்றைப்பற்றியும் எழுத நிறைய இருக்கிறது.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: