நம் குரல்

பாசி படர்ந்த குளம்








 
நச்சு வாயு புரளும் நீரலைகளால்
பாசி படர்ந்த குளத்தின் அழகு பூத்துக்குலுங்குகிறது
நீந்திக் களைக்காத தலைப்பிரட்டைகள்
கரையேகித் தவளைகளாய்க் கத்துகின்றன
அடையாளச் சங்கமம் தான்
அக்குளமாக உருக்கொண்டு தியானிக்கிறது
புழுத்த அந்தரங்கங்களுடன்
அழகு என்று வியக்கப்பட்ட அக்குளம்
எவரும் கால்வைக்க முடியா வழுக்கல்களுடன்
குளிர்ந்த நீர்மையைக் கவனப்படுத்திய
அதன் புறமும் அகமும்
பலவீனர்களை உள்ளிழுத்துக் கொல்வது
வீட்டையே 
தம் யோனிகளின் வாயிலாய் திறப்பவரிடமிருந்து 
எம் வீட்டைப் பறிப்பதும்
எம் கருப்பிரதியைக் கருத்தரிக்கும் கலயத்தை
தம் அரண்மனையின் கழிவறையாக்கியவரிடமிருந்து
எம் யோனியைப் பறிப்பதும் அக்குளக்கரையில்
பேச்சாகிறது இரைச்சலாகிறது
எவர் சொன்னது மாதவிடாய்க்குருதி
அக்குளத்தின் நச்சுநீரினும்
ஒரு பிரச்சனையென்று
வரலாற்றின் பிழைகளால் ஆன எம் கருக்குடுவையை
சரித்திரப் புகழுடைய பிழையாக்கும் பொதுப்புத்தியும்
அக்குளத்தை அழகிய யோனியது! அழகிய யோனியது!
என்று அவதியில் துள்ளுகிறது
மழை இன்னும் இன்னும் அதன் மீதே பெய்யட்டும்
பாசி படர்ந்த குளம் நீர் நிறையத்தளும்பட்டும்
எப்பொழுதும் நாசியைக் குறுகுறுக்கும்
விஷநீரின் வாடையை
தூமையெனும் ஆசைக்காட்டும் குளக்கரையில்
ஒற்றைக்காலுடன் வெள்ளைக்கொக்குகள்
காத்திருக்கட்டும்
 


என்னுடல் நதியைத் தேடிப் பாயட்டும்!






குட்டி ரேவதி


சிறுகுறிப்பு: ஆண்டைச்சமூகப் பெண்ணியம் நோக்கிய விமர்சனக்கவிதை
நன்றி: கல்குதிரை

1 கருத்து:

santhanakrishnan சொன்னது…

என்னுடல் நதியைத் தேடிப் பாயட்டும்!

இந்த ஒற்றை வரி
பல தளங்களுக்கு
இட்டுச் செல்கிறது.

கல்குதிரை வருகிறதா?