நம் குரல்

முலைகள் நான்கு

ஒரு சிறப்பான தருணத்திலும் உணர்ச்சிகளின் கலவையுடனும் எழுதப்பட்ட இக்கவிதை என்னுடன் அன்னியோன்யமான உறவில் இருந்த ஒரு பெண் தோழிக்கானது.



அவள் இப்பொழுது எந்த ஊரில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பது எனது இலட்சியமில்லை. உறவு என்பது காலக் கனதியை வரையிட்டு வளரும் என்பதை நான் ஏற்பதில்லை.


பல வருடங்கள் பழகினாலும் சிலரிடம் உணரவே இயலாத ஓர் எண்ணப்பெருவெளியுடன் முதல் சந்திப்பிலேயே நெருங்கியவள் என்பதால் அவள் உறவைத் தொடர்வதற்கான அத்தனை முயற்சிகளும் அபத்தமானவையாக முடியும் என்று எண்ணி விலகினேன்.


அவள் எதன் அழகையும் குலைத்ததில்லை. அதற்காக எந்த அதீதத்திற்கும் தயங்கியதுமில்லை. இந்த இரு பண்புகளுமே எங்கள் இருவருக்கும் போதுமானதாய் இருந்ததாய் உணர்ந்தேன்.


இதை கவிதைப்படுத்தும் முனைப்பும் இல்லை. அவளைப் பற்றிய எந்த ஒரு பதிவும் காகிதங்களை அர்த்தப்படுத்தும் என்பதால் எனக்கு இதை எழுதுவதில் எந்த மெனக்கெடலும் இல்லை.


இந்தக் கவிதையை வாசிக்க நேர்ந்தால் கூட, இது தன்னைப்பற்றியது என்பதை அவள் அறிவதற்கான எந்தக் குறியீடுகளும் இல்லாத கவிதை இது. ஆனால் பல அடுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது.


ஒரே ஓட்டத்தில் அடித்தல் திருத்தல் திருகுதல் இல்லாமல் எழுதப்பட்ட கவிதை என்பதும் நினைவில் இருக்கிறது.


பெண் – பெண் பாலிய உறவு தாய்க்கும் மகளுக்கும் இடையே கூட நுணுக்கமான தருணங்களால் செயல்படுகிறது. அது மலினத்தை எட்டாதவரை அது பாலிமையாகக் கருதப்படுவதில்லை.


அவள் தான் சொன்னாள்: ‘ஒருவரை எவ்வளவு விமர்சித்தாலும் அது அவரது புண்ணைப் பற்றியதாகவே இருக்கவேண்டுமென்று!’ தேவதேவனின் கவிதை வரியொன்று: ஈயை ஈயை நோகாதே. புண்ணை புண்ணைக் கவனி!


பாலிமை கடந்ததென்றாலும் பெண்-பெண் உறவு எவ்வளவுக்கெவ்வளவு சிக்கல் நிறைந்தது என்பதைப் பற்றி ஓர் ஆய்வே செய்யலாம். ஆணாதிக்கத் தத்துவச்சிந்தனைகளைத் தங்கள் மூளைகளில் கொடிபரவ விட்டதால் வந்த விளைவு இது என்று இன்றும் இன்னும் சப்பைக்கட்டிக் கொண்டிருக்கமுடியாது.


சமீபத்தில் ஓர் இலக்கியப் பதிப்பாளர் என்னிடம் ஒரு கட்டுரை எழுதிக்கேட்டிருக்கிறார். பெண்படைப்பாளிகள் விமர்சனங்களை அணுகும் உளவியல் பற்றி!


தன்னிலை குறித்த பாதுகாப்பின்மையை நினைவிற்கொண்டு, பிற பெண்களின் நிலையுடன் தன் நிலையை ஒப்பிட்டுப்பார்த்து, தன் இருப்பை உறுதி செய்து கொள்ள எதையும் செய்யத் துணியும் பெண்களாய் மாறிப்போகிறார்கள்.

எல்லோரும் ராஜவள்ளியைப் போல ஆகிவிட முடியாது. அவள் பெண்களை ஒரே கொடியில் பூத்த பல வகை மலர்கள் என்கிறாள்.

அவள் ஒரு தாமரைக்குளம்


உடலெங்கும் நீர்மொக்குகளுடன் அவள் எழும்பிவருகையில்
ஒரு மொக்கும் முறியாது நாவினால் பறித்துக்
கனிகளாக்கி உண்பேன்
நீரலை கரையேறிச் சறுக்குவதைப் போல
அவள் இதயத்தின் பெருஞ்சுவாசம்
மார்புகளின் மீது அலையெனப் புரண்டடங்கும்
உள்ளங்கைகளை அகலவிரித்து
இலையின் குழிவோடு உந்தியை விரித்துக்கொடுப்பாள்
ஒரு கிளி கவ்வியிருக்கும் கனியைப் போல
தன்னுடலைத் தானே
ஏந்திவந்து என்னிதழுக்குள் வழங்குவாள்
ஒருவரது பரவசத்தின் தேநீரை மற்றவர் குடித்துக் களிப்போம்
நிரம்பப் புகையும் கூந்தலுக்குள் மூழ்கி
திசை குழம்பி மூச்சுத்திணறி மீளுவேன் நான்
கால்தடங்களால் தரையெங்கும் கிளைத்துக்கிடந்தவள்
நீருக்குள் இறங்கியதோ
பாம்பின் சரவேகம்
மழையின் கனத்த தொடைகளுடன் ஓடிவந்து
பூச்சகதியாக்குவோம் ஒருவரையொருவர்
அவளது தேனடையைச் சுற்றிப் பறந்து
இரைச்சலிடும் என் மூச்சு
பின் விடியற்காலை தோறும்
முலைகள் நான்கும்
விரிந்த தாமரைகளாய் மிதந்து சிரிக்கும்.

குட்டி ரேவதி
’உடலின் கதவு’ (2006, கவிதைத்தொகுப்பு) பக்கம் 116.

2 கருத்துகள்:

Vinothini சொன்னது…

Beautiful poem. It expresses 'feelings' without pretension; I Iove the language, tone and mood. Regards,
Vinothini

குட்டி ரேவதி சொன்னது…

நன்றி, விநோதினி! நீண்ட நாளுக்குப் பிறகு உங்கள் எழுத்துக்களைக் காண்கிறேன். நலம் பேணுங்கள்!