நம் குரல்

சூல் - உயிருடலின் பேரற்புதமான பணி

சூல்
பாம்போடு பாம்பு பிணையும்
அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும்
வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும்
உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ
முட்டை மீது முட்டையடுக்கி அவயங்காக்கும்
மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு
உடல் விரித்து ஆனந்திக்கும்
உயிரிழுத்துப் போட்ட பின்னும்
கண் துஞ்சாமல் சூல் கொள்ளும்
பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும்
உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும்
ஆணொன்று விரட்டிப் புணர
உடலெல்லாம் கருக்கொள்ளும்
வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத்
தாய் மரிக்கும்
உடலின் சிறகடியில் நினைவு குவித்து
முட்டைகள் அவயம் காக்கும்
கண்ணில் புத்துயிரின் வெறி
நெஞ்சில் பெருஞ்சுவாசம்
நிலை தாங்கி நின்றக்கால் கரு காலாட்டும்
பூக்களின் மீது வண்ணாத்தியாய்க்
காற்றில் மிதக்கும்
கறையானின் புற்றுக்குள்
குஞ்சுகள் பொரியுமட்டும்
சீறிக் காவல் காக்கும்
இரத்தச் சகதியில் கால் எழும்பி நிற்பதற்காய்
ஈர நாவால் நக்கி நக்கி உயிர் கூட்டும்
மெல்ல நினைவின் கண் திறந்து
கடலுக்குள் பதுங்கும் முன்
கழுகொன்று கொத்திப் போகும்
திசைகள் அறியும்
கனவுகளடக்கி முட்டைகளாய் ஊதும்
நிலவொளியில் உடலைப் புரட்டி
உயிர்கொள்ளும் மீண்டும்.

2006 – ல் வெளியான ‘உடலின் கதவு’ கவிதைத் தொகுப்பில் பக்கம் 12- ல் இடம்பெற்றுள்ள ‘சூல்’ என்ற இக்கவிதை எப்பொழுது எழுதப்பட்டது என்று நன்றாக நினைவிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டையில் இருளர்களின் குடியிருப்பில் ஒரு மாதத்திற்கு மேலாகத் தங்க வேண்டியிருந்தது. அவர்கள் பாம்பு பிடிப்பதை நேரில் கண்டு ஆவணம் செய்யும் முயற்சி. பின் ரோமுலஸ் விட்டேகர் மற்றும் அவருடைய மாணவர்களுடன் இணைந்து இருளர்கள் பாம்பு பிடிப்பதற்கு என்ன விதமான நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர் என்ற ஆய்வுப் பயணம். தொடர்மழைக்குப் பின்பாக மழை ஓய்ந்திருந்த நாட்கள். பாம்புகள் வசிக்கும் இடங்களைத் தேடி கடப்பாரைகளால் அவற்றின் இடத்திற்கு அருகில் குழி வெட்டி அதனூடாக ஒரு பாதையை அவற்றின் உறைவிடத்திற்குக் கொண்டு போய் பாம்புகளை உருவியெடுத்து சாக்குப்பையில் போடுவார்கள். சாரைப்பாம்பு என்றாலும் கண்ணாடிவிரியன் என்றாலும் அவர்கள் கண்டறியும் நுட்பமான வழிமுறைகள் எந்தப் பாடப்புத்தகத்திலும் இல்லாதவை.
இருளர்களின் குடியிருப்பு நாய்கள், கோழிகள், ஆடுகள் என்று விதவிதமான உயிர்களால் சூழ்ந்திருக்கும். பக்கத்தில் உள்ள முந்திரிக்காடுகளுக்குச் சென்று அன்றைய மதிய உணவிற்காக ஒரு பெண் எலிகளைப் பிடித்து வருவார். தான் பிடித்த உடும்புடன் வெகுசாதாரணமாக ஓர் ஆள் நம்முன் கடந்து செல்வதைப் பார்க்க முடியும். பிடித்த பாம்பை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவென்று ஒருவர் பாம்பைக் கட்டி எடுத்துக் கொண்டு போவார். இது மாதிரியான காட்சிகள் அங்கு சர்வசாதாரணம்.

பேணுதல் என்பது அடிப்படை மனித குணமாக இருப்பதை உணர்வதற்கு இருளர்கள் பற்றிய ஆய்வு எனக்கு உதவியது என்று சொல்லவேண்டும். தாங்கள் பெற்ற குழந்தைகளைக் கூட தங்களிடமிருந்து தொலைதூரம் அனுப்ப மாட்டார்கள். தன் அன்பு தான் அவர்களைப் பேணும் ஆரோக்கியமான உணவு என்ற நம்பிக்கை தான் அவர்களின் மரபுக்குணம் என்று சொல்லலாம்.
சூலுறுதல் என்பதை பேணுதல் என்பதாகவே எல்லா உயிர்களும் அர்த்தப்படுத்திக் கொள்கின்றன. இது பெண் ஆண் இரண்டு பால்வகையினர்க்கும் பொதுவானது. எல்லா உயிர்களிலுமே இது பொதுவானது. உயிருடல் போன்ற பேரற்புதமான ஒர் உலகவிஷயம் கிடையாது. உயிர் வாழ்தலைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் போராடும் உயிர்களுக்கிடையே பிற உயிர்களைப் பேணுவதில் தன்னை கரைத்துக் கொள்ளும் உயிர்கள் மகத்தானவை இல்லையா? இது எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற கலந்திருக்கிறது. மஞ்சள் நிறத்தைப் பற்றிய ஒரு கவிதை எழுதச் சொன்னால் எப்படி சாத்தியமோ அதே போல் தான் இக்கவிதையும் சாத்தியப்பட்டது. அடர்ந்த குளிர் நாளொன்றில் எந்நேரமும் பாம்போ பிற விஷ உயிரோ தன்னொத்த உயிர்களைப் பேணும் பொருட்டு சஞ்சரிக்கும் முந்திரிக்காட்டின் இரவொன்றில் எழுதப்பட்டது.





குட்டி ரேவதி

2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல பதிவு மற்றும் பகிர்வு.வாழ்த்துக்கள். ரசித்தேன்.

குட்டி ரேவதி சொன்னது…

நன்றி, சரவணன். தொடர்ந்து வாசிக்கிறீர்கள்! மகிழ்ச்சி!!