நம் குரல்

ஆண் உடல் ஒரு பிரமை





காதலுக்கு நிகரான மனித உணர்வேதும் இல்லை. அதிலும் காமத்தீவிரமுற்ற காதல் உன்னதமாகிறது. மனித வேட்கையின் ஒரு வடிவம் தான் காதல். வன்முறையின் மறு பக்கம் தான் காமம். கலையின் எழுச்சியெல்லாம் இத்தகைய காதல் காம வேட்கையிலிருந்து தான் பிறக்கிறது. பெண் ஆண் உடல் - மன பேதங்கள் காமத்தின் துல்லியமான கரையில் தான் உருவழிகின்றன. காதல் மகிழ்ச்சியானது இல்லை. காமம் சுகமானதும் இல்லை. என்றாலும் மனிதனை ஆதாரணைக்குள்ளாக்குவது இவை.


எத்தனை முறை இவ்வுடல் வழியாக அப்பேராறு பாய்ந்து செழிக்கிறதோ அத்தனைக்கு இது வளமுள்ள பூமியாகிறது என்று என்னை மீண்டும் மீண்டும் காமத்தால் ஆன காதலால் மகத்துவப்படுத்திக் கொள்கிறேன். ஒரு கவிதையில் இடம்பெறும் காதலினும் அடுத்த கவிதையில் கிளைக்கும் காதல் உயர்ந்து பறக்கிறதா என்பதை வைத்து என் விடுதலையை உறுதி செய்து கொள்கிறேன். எதிரி, இலட்சியம் ஆகியவற்றுக்கு நிகரான கசப்பான வார்த்தைகளே வெற்றியும் தோல்வியும். விடுதலை மட்டுமே உண்மையான மனநிலை.


காதலில்லா காமமா காமமில்லா காதலா வெற்று பட்டிமன்ற விவாதங்கள். இரண்டும் மூளையின் இரு புறத்தையும் அழுத்திக் கொள்கின்றன தருணத்தின் உத்திரவாதத்தைப் பொறுத்து. ஆனால் யார் உடலை வரலாறு மெளனமாய் வந்தழுத்துகிறது, யாருடலை கடந்த கால நிகழ்வுகளின் குற்றங்கள் வந்தழுத்துகின்றன என்பது தான் இருவரின் காதல் ஊடாட்டத்தின்போது விடுதலையைத் தீர்மானிக்கின்றது. ஆண் உடல் நினைவுகளை சேமித்து வைப்பதில்லை. பெண்ணுடலை வரலாறு விடுவதாயில்லை. அவள் உடலை அரசியலும் அன்றாட சம்பவங்களும் குறுக்கிட்டுக் கொண்டே இருக்க, ஆண் உடலை பெண் உடல் சந்தேகித்துக் கொண்டே இருக்கிறது. ஆண் உடல் பெண்ணின் பார்வையில் ஒரு பிரமை. அந்தப் பிரமை எழுப்பும் சந்தேகங்களின் பேரில் அவனது வார்த்தைகளை மட்டும் தனக்குள் மெளனமாய்ச் சுருட்டி வைத்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் சந்தேகத்தின் பேரில் தான்!


பெண்ணின் முழுமையான விடுதலை ஆண் உடலை நிராகரிக்குமா? பயன்படுத்திக் கொள்ளுமா? சித்திரவதை செய்யுமா? சீரழிக்குமா? இன்னும் பெண் உடல் அது குறித்த தீவிரமான கேள்விகளுடன் தாம் ஆண் உடலை அணுகுகிறது. பல ஆண் உடல்களுடனான அனுபவங்களுக்குப் பின்னும் ஒரே மாதிரியான உடலை அணுகிய ஆதங்கமே மேலிட, பெண் உடல் தன்னையே திரும்பிப்பார்க்கிறது. தன் உடல் போன்று இருக்கும் பிற உடல்களையும் ஆராய்கிறது. அனுபவிக்கிறது. வேறு வேறு வாய்ப்புகளைக் கையில் எடுத்துப் பரிசீலிக்கிறது. புத்தனும் இதையே நம்பினான்: ஆண் உடல் மீது பெண் உடல் கொள்ளும் வியப்பும் பெண் உடல் மீது ஆண் உடல் கொள்ளும் வியப்பும் தீராத இவ்வாழ்க்கையே விடுதலையின் தோற்றத்திற்கிடமானது என்று. எனில், இலட்சியக் காதல் பற்றிய சித்திரங்கள் எல்லாம் வெறும் பிரமையே.

பிரமை

உனது கண்களின் போதை

அகலப்பாய்ந்து

என்னுள் உதிரத்தின் பேரருவி

என்புக்குள் சீறிப்பாய

தீண்ட ருசிக்கும்

எனது பார்வைகள்

உன்னில் பதியனிடும்

வரலாற்றின் தண்டுகள்

உனது வார்த்தைகள்

என்னுள் நிரம்பி

மூலத்தில் மெளனமாய்ச்

சுருள்கின்றன

நீ மெளனத்தை

இரு துண்டுகளாகக் கிழித்து

என் மீதெல்லாம்

மழையடிக்கிறாய்

பின் இறுகிய தரையில்

ஒன்றிரண்டாய்

அதன் கனத்த துளிகள் வீழும் சப்தம்

நீண்ட நேரம்...

பருவத்தின் பின் பருவமாய்க்

காலம் இழுத்துச் செல்லும்போது

விடுதலைக்கான கதறல்

அழைத்து வந்தது என்னை

உனது வார்த்தைகள்

என்னுள் நிரம்பி

மூலத்தில் மெளனமாய்ச்

சுருள்கின்றன

குட்டி ரேவதி

(தனிமையின் ஆயிரம் இறக்கைகள், முதல் பதிப்பு: 2003, பனிக்குடம் பதிப்பகம்,

பக்கம்; 48)

ஆண் உடலை பிரமை என்று இக்கவிதையின் வழியாக உறுதிசெய்து கொண்டேன்.

1 கருத்து:

மதுரை சரவணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்