நம் குரல்

நம் இந்தியாவைத் தூய்மை செய்யமுடியுமா?


நல்ல திட்டம் தான். தூய்மையான இந்தியாவை உருவாக்குதல் என்பது இந்தியராகப் பிறந்தவர் எவருக்குமே உள்ளது தான்.
ஆனால், அது அவ்வளவு எளிதானது இல்லை என்று தோன்றுகிறது.


ஒரு முக்கியமான, முதன்மையான காரணம்: நம் இந்தியா இவ்வளவுக்குத் தூய்மையற்றும், அழுக்காகவும், கழிவறைகள் அசுத்தமாகவும் இருக்கக்காரணம், அதையெல்லாம் சுத்தம் செய்ய வேறொரு ஜாதி மக்கள் இருக்கிறார்கள் என்ற நமது அடிப்படையான ஜாதி நம்பிக்கையும் அது சார்ந்த சிந்தனைகளும்.

நாம் உபயோகித்து வெளியே வரும் கழிவறையைக் கூட, தூய்மையாக வைத்துக்கொள்வது நமது பொறுப்பில்லை என்று நம்பும் இந்தியா எப்படி தூய்மையாக முடியும்.

வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று வரும் எவரின் முதல் ஆதங்கமும் இது தான், இந்தியா தூய்மையாக இல்லை. அதுமட்டுமன்று, வந்த சில நாட்களிலேயே சோடா பாட்டில் உற்சாகம் போல பொங்கித்தீர்ப்பார்கள். அவ்வளவே.

ஆனால், இந்தியாவைத் தூய்மை செய்தல், என்பது தெருக்களை மட்டுமே சுத்தல் செய்தல் இல்லை. முதலில் நம் மனவெளியில் அது குறித்த அடிப்படையான சிந்தனைகள் உருவாகவேண்டும். நம் மனதில் விதைக்கப்பட்டிருக்கும் "தீண்டாமை" குறித்த, மனிதனை மனிதன் அருவெறுப்பாக நோக்கும் சிந்தனைகள் மாறவேண்டும்.

பின், அவரவர் வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். அவரவர் பயன்படுத்தும் கழிவறைகளை வீட்டின் கழிவறைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும்.

பின் தான், தெருக்களையும் பொதுவெளிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ளல் என்பது சாத்தியம். இது ஒரு தலைகீழ் முறை.

இந்தியாவைத் தூய்மையாக வைத்துக்கொள்ளல் என்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். காலங்காலமாக, ஊறிப்போன 'தூய்மை' என்பது குறித்த நம் சிந்தனைகளை அலசிப்பாருங்கள். அது முற்றிலும் பொதுத்தூய்மைக்கு எதிரானது, தவறானது.

இந்த நிலையில், தெருவிலிருந்து தூய்மையைத் தொடங்குதல் என்பது களைகளைப் பிடுங்காமல், நெற்பயிர்களைப் பிடுங்கி அவற்றை மட்டுமே பராமரிக்க முயல்வதில் ஈடுபடுவது என்பது வேடிக்கையானது.

நான் அழுத்தம் தரவிரும்புவது, நமது நாட்டின் தூய்மை, மனத்தீண்டாமையையும், உடல்தீண்டாமையையும், மனிதத்தீண்டாமையையும் களைவதில் தான் இருக்கிறது.

பின் பாருங்கள், இந்தியா எத்தகைய தூய்மையான நாடாக இருக்கப்போகிறது என்று!


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: