நம் குரல்

உண்மையான முத்தப்போராட்டம் எப்படி இருக்கவேண்டும்?



நான் முத்தங்களுக்கு எதிரானவள் இல்லை. பகிரங்கப் பொதுவெளி முத்தங்களும் வரவேற்கப்படவேண்டியவையே. 
பொதுவெளியில், கத்திக்குத்தும் வன்முறையும்  எல்லா ஊடகங்களாலும் தீவிரமாக விதைக்கப்படும் இக்காலக்கட்டத்தில், முத்தம் என்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு சனநாயக அடையாளம்.

பொதுவெளி முத்தங்கள் அவசியமே.

ஆனால், போராட்டங்களை எப்படிக் கட்டமைக்கவேண்டும் என்பதில் இந்திய அளவில் நமக்கான பெரிய படிப்பினைகள் இருக்கின்றன.

முத்தப்போராட்டம், நிர்வாணப்போராட்டம், அரைநிர்வாணப்போராட்டம் என்பவை எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றன. புரட்சிகரமானவை போல் தான் இருக்கின்றன. ஆனால், நீண்ட கால அடிப்படையில் நமக்கு எந்த உரிமைகளையும் இவை பெற்றுத்தராது.  ஒரு முத்தத்தையும் கூட உரிமையாகப் பெற்றுத்தராது. காரணம், இவை எல்லாம் வெறும்  'எதிர்வினைப்' போராட்டங்கள் மட்டுமே. பதிலுக்குப் பதில் போராட்டங்களே. 

உண்மையில் போராட்டங்கள் என்றால், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மீனவப்பெண்களின் போராட்டம், மணிப்பூர் பெண்களின் நிர்வாணப்போராட்டம், இரோம் ஷர்மிளாவின் போராட்டம், அற்புதம் அம்மாளின் போராட்டம் போன்று இந்தியாவின் ஒடுக்குமுறை, மதவாதம், சாதிய அமைப்பு, சமூக அமைப்பு போன்றவற்றின் அடித்தளங்கள் அறிந்த போராட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கவேண்டும்.

என்னதான் பொதுவெளியில் முத்தங்களுக்காகப் போராடினாலும், நாம் இப்பொழுது போராடுவது போல் போராடினால் நீண்ட கால லட்சியத்தில் 'பொதுவெளி முத்தங்களை',  மனித உரிமையின் அடிப்படையான ஒரு விடயமாகக் கூட பெறமுடியாது.

நிர்பயாவுக்கான போராட்டம், 'பெண்கள் மீதான பாலியல் வன்முறை' குறித்த எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அது ஒரு தனிப்பெண்ணுக்கான போராட்டமாகவே சுருங்கிப் போனது. 

அதுபோலவும், இதுவும் ஒரு மேம்போக்கான போராட்டவடிவமாகவே இருக்கும்.

இது இந்துத்துவ பெண் - ஆண் பால் இடைவெளியை அகலப்படுத்தும் நோக்கத்திற்கு எதிரான போராட்டம் என்று வாதிடுவோர்களே கூட, இந்துப்புராணங்களையும் அது சார்ந்த படைப்புகளையும், எழுத்தாளர்களையும் கடுமையாக ஆதரிக்கும் மனநிலையும் இங்கே தான் இருக்கிறது. 
அத்தகைய படைப்புகளையும் அதை எழுதும் படைப்பாளிகளையும் விட, இத்தகைய  "இரண்டுங்கெட்டான மனநிலை" கொண்ட போராளிகள் தான் சமூகத்தில் ஆபத்தானவர்கள்.

உறுதியான திட்டங்களும் நோக்கங்களும் கொண்டு போராடுபவர்கள் நிலைத்தப் போராட்ட வடிவங்களைக் கொண்டிருக்கின்றனர். 
தொடர்ந்து நின்றும், உட்கார்ந்தும், நடந்தும் விடாப்பிடியாகப் பிடிவாதமாகப் போராடுகிறார்கள். 
அவர்கள், அவ்வப்பொழுதான உரிமைகளுக்காகவும், போராளி அடையாளங்களுக்காகவும் மட்டுமே போராடுவதில்லை.

அவ்வகையில் பார்த்தால், இன்று உண்மையில் மனித உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள் எல்லாம் நீண்டகாலத்திட்டத்தை இலட்சியமாகக் கொண்டும், அடிப்படையான சமூக அமைப்பின் ஒடுக்குமுறைகளுடன் எந்த சமரசமும் கொள்ளாமலும் இருக்கின்றன.

மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.

நான் முத்தங்களுக்கு எதிரானவள் இல்லை. பகிரங்கப் பொதுவெளி முத்தங்களும் வரவேற்கப்படவேண்டியவையே. 

என் கவிதைகள் எங்கும் முத்தங்கள் இறைந்து கிடக்கின்றன.

ஆனால், பொதுவெளி முத்தங்களை சட்டப்பூர்வமான மனித உரிமையாக்க, மதவாதத்தை கடுமையாக எதிர்க்கவேண்டும். அதிலும், இந்துமதவாதத்தைத் தகர்க்கவேண்டும். 

இப்பொழுதைய போராட்டமுறை, நோக்கத்தை நீர்த்துப்போகச்செய்யும். ஒரு முத்தத்தையும் வழங்கமுடியாது.  வேடிக்கை பார்க்கலாம்.



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: