நம் குரல்

இவர்களால் ஆடுகளைத்தான் பலியிடமுடியும். சிங்கங்களை அல்ல - கலையும் அரசியலும்!




'எது கலை?' என்பதற்கான பதில், ஊடகங்களில் அதிகாரம் நிறைந்தவர்களாலேயே எப்பொழுதும் நிறுவப்படுகிறது என்பது புதிது அன்று.

அதிலும், குறுகிய அரசியல் பார்வைகளும், அதற்கான சனநாயக ஊடகங்களின் வாய்ப்பும் பெருகிவிட்ட நெருக்கடிக்கிடையில், 'நம் படைப்பு கலையே!' என்பதை வாதிடுவதற்கான வாய்ப்பும் மெளனமாகிவிடுகின்றது.
எங்கெங்கும் சாதியின் வலைகள் பின்னி இறுகிக்கிடக்கின்றன. எல்லோரின் கழுத்துகளையும் நெரிக்கின்றன. பாரபட்சமும், தான் விரும்பியதை முன்மொழிந்து அதையே ஆதரிப்பது என்ற அதிகாரமும் காலங்காலமாய் இருந்து வரும் கடைந்தெடுத்த சாதியமுறைகள்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கான கலைவடிவம் கூர்மையடையும் பொழுதெல்லாம் கலைத்துவிடுவதும் இவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.
எல்லா இயக்கங்களும் பாதைகளும் இறுகி நிறுவனமாகிப் போன பேனர்களாகிவிட்டன.
தனிமனிதர்களைப் பற்றிய முன் அபிப்ராயங்களும் நிறைந்து, அவர் குறித்த வெறுப்பே காய்களை நகர்த்தத்தூண்டுகின்றன.

இந்நிலையில், கலை என்பது அதிகாரம் நிறைந்தவர்களின் கைகளிலும் ஆதிக்கம் நிறைந்தவர்களின் கைகளிலும் தான், தன் இருப்பைப் பத்திரப்படுத்திக்கொள்வதாகக் காட்டிக்கொள்கிறது.
கலையின் விளக்கங்கள் உண்மையில் அங்கிருந்து எழுவது இல்லை. ஓரிடத்திலிருந்து நாளுக்கு நாள் நகர்ந்தும், மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளர்ந்தும், புதுக்கொள்கைகளுடன், திறந்த மனதுடன் புத்தாக்கம் செய்து கொள்பவர்களின் கைகளில் இருக்கின்றன.
அன்றாட நாட்களின் கனத்தில், தற்காலிகமான, அதிகார சொகுசுகளுக்கு எல்லாம் இரையாகிப்போகாமல் இருக்கவும், ஒற்றையாக நின்றாலும் நாம் சொல்லவரும் அரசியலின் கலைவடிவத்திற்கு நேர்மையாக இருக்கவும் மிகப்பெரிய துணிச்சலும் பலமும் வேண்டும்.
அம்பேத்கரின் கூற்றை இங்கே வலியுறுத்துகிறேன்: ஆடுகளைத் தான் பலியிடுவார்கள். சிங்கங்களை அல்ல. சிங்கங்களாய் இருப்போம், நண்பர்களே!



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: