நம் குரல்

அம்மாக்கள்




இந்நாளில் எல்லோரிடமும் நிரம்பி வழியும் தாய்ப்பாசம் என்பது ஒரு பழையமரபின் தொடர்ச்சியாகவே தொனிக்கிறது. குறிப்பாக, ஆண்களிடம் அது மிகையாகவே இருக்கிறது. 



தாய் என்பது பெரும்பான்மையான ஆண்களுக்கு, அவர்கள் அன்பின் அடிமை தான். எவ்வளவோ தாய்மார்கள் ஏழ்மையிலும் வாழ்வின் இருட்டறையிலும் நோயிலும் குமைந்து செத்துப்போயிருக்கின்றனர். மொழிபெயர்க்கவே முடியாத தனிமையும் பெருமூச்சுகளும் நிறைந்த குறுகிய அறையே அவர்களின் முழுநீளவாழ்வாகியிருக்கிறது. வெறும் பாசம் அவர்களுக்கு ஒரு போதும் மகிழ்ச்சி அளித்ததில்லை.

பசியை நீக்க எப்படி ஒரு முத்தம் போதுமானது.

தாய்மார்களும், "மகன்களை" ஆண்பால் இனமாகவே பார்த்து வளர்த்து, ஆண் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்ற மாதிரிகளையே உருவாக்கியிருக்கின்றனர். மனிதர்களை அல்ல.

மனைவி, தாய் என்பதை எதிரெதிராக நிறுத்திப் பார்க்கும் வாய்ப்புகளைப் பெரும்பான்மையான ஆண்கள் தமக்கு ஆதரவாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். அங்கே தாய்ப்பாசம், தன் மனைவிக்கு எதிரான ஆயுதமாக மாறி அவளைக்காயப்படுத்தப் பயன்படுகிறது.

ஆனால், கணவனை இழந்து, சிறிது பொருளாதாரபலம் வாய்த்து, தன் மகன் / மகளைச் சார்ந்திராது தனியாக வாழக்கிடைத்த தாய்மார்கள் என்னைப் பொறுத்தவரை, உண்மையிலேயே நல்வாழ்வு பெற்றவர்கள். தினந்தோறும் பதறிப்பதறி, காபி முதல் படுக்கை வரை தயார்செய்யவேண்டிய அவசியம் இருக்காது. இப்படியான வாழ்வு வாழக்கிடைத்தவர்கள், நீண்ட நாட்களுடன் ஆண்களின் தொல்லை இன்றி பேரமைதியுடன் வாழ்வதைப் பார்க்கிறேன்.

இளமையும் திருமணவாழ்வும் ஆண்களின் கைப்பிடிக்குள் இறுகிக்கிடந்திருக்க, முதுமை நோக்கி நகரும் போது அது அவர்களின் பிடியிலிருந்து நழுவக்கிடைத்த வாய்ப்பு எவ்வளவு சுகமானதாக இருகும் என்று விளக்கவேண்டியதில்லை.

மற்றபடி, தாய்ப்பாசம், தந்தைப்பாசம் எல்லாமும் வழிபாட்டுக்குரிய மரபுகளாகவே இருக்கிறதே அன்றி, அதன் அடிப்படையான புரிதல்களையும், பொறுப்புகளையும், தேவைகளையும் யாரும் உணர்ந்தால் போல் தெரியவில்லை. 

இந்தத்தேசத்தில், அம்மாக்கள் எப்பொழுதுமே பலியாடுகளுக்கு நிகரான குறியீடுகள். 

ஓயாத கண்ணீரும் கம்பலையும் அடிவயிற்றில் நிரந்தரமான அச்சமும் குடிகொண்ட கல்குகையும் கொண்ட அம்மாக்கள்!



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: