நம் குரல்

பனிக்குடம் பதிப்பகமும் நூறு பெண்ணியநூல்களும்!





தமிழ்நவீன இலக்கியத்தின், தொடக்கக்காலத்தில் பெண் எழுத்திற்கு இருந்த எதிர்ப்பும் காழ்ப்பும் கடுமையானது. இன்றும் நிலைமை முற்றிலும் மாறவில்லை என்றாலும், முன்பு இருந்த அளவிற்கு மோசமாக இல்லை.

தமிழகத்தின் சமூக, அரசியல் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு பெண்ணியத்தையும், பெண்ணுரிமையையும் அணுக ஒரு பதிப்பகமும், நூறு பெண்ணிய நூல்களும் என்ற திட்டத்தை முன்னெடுப்பது அவசியம் என்று உணர்ந்தபொழுது தான் பனிக்குடம் பதிப்பகம் உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற மிதிலாவும் நந்தமிழ் நங்கையும் இணைந்து செயல்பட்டனர்.

பதிப்பகத்தின் முக்கியமான படைப்புகளாக உருவானவை, தமிழ்நதியின் சூரியன் தனித்தலையும் பகல் என்ற கவிதைத்தொகுப்பு மற்றும் பஹீமா ஜஹான் மற்றும் அனார் போன்ற பெண் ஆளுமைகளின் கவிதைத்தொகுப்புகளும் தொடர்ந்து அவர்களின் படைப்புச்செயல்பாடுகளும். இவர்கள் தம் மொழியாலும் கவிதையின் வீர்யத்தாலும் மொழிநடையின் போக்கை உண்மையாகவே மாற்றினார்கள். தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். 

எமிலி டிக்கின்சன் கவிதை நூலும் வெளிவந்தது. சாதி, பெண், உடல் மூன்றையும் இணைத்துப் புரிந்துகொள்ளும் கருத்தாகச் சிந்தனை குறித்த 'உடலரசியல்' என்ற நூல் சிவகாமி அவர்களால் எழுதப்பட்டது. 

பட்டியலில் இருந்த பிற நூல்கள்:

சிமோன் தி போவாவின், இரண்டாம் பாலினம் என்ற நூலின் முழு மொழிபெயர்ப்பையும் கொண்டு வருவதாக இருந்தது. மொழிபெயர்ப்பு நிறைவை எய்தி தயாராக இருந்தது.

சில்வியா ப்ளாத்தின் கவிதைகள் மொழி பெயர்ப்பு நூல்.

சர்மிளா ரேகே மற்றும் உமா சக்ரவர்த்தி போன்ற பெண்ணியலாளர்கள் எழுதியுள்ள இந்தியப்பெண்ணியம் குறித்த நூல்கள்.

லாரா முல்வியின் பெண்ணிய திரைக்கருத்தாக்கம் குறித்த நூல்.

பெண்களின் நாட்டுப்புறப்படைப்பாற்றல் குறித்த நூல்.

சாவித்ரி பாய் பூலேவின் செயல்பணி குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்.

இந்தியப்பெண்களுக்கு சாதி இல்லை, அது ஆண்களால் தரப்பட்டது என்பதை உணர்த்தும் அறிவியல் பூர்வமான முழுமையான ஆய்வு நூல்.

பழங்குடிப்பெண்களிடம் காணப்படும் பெண் உடல் பற்றிய சிந்தனையும், மண்ணுரிமை நம்பிக்கைகளும்.

என்றாலும், 'பனிக்குடம்' பதிப்பகத்தின் திட்டம் என்பது, அடிப்படையில் தொடர்ந்து பெண்ணிய நூல்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பது. 

காலந்தோறும் பரிணாமம் பெறும் கருத்தாக்கச்சிந்தனைகளுக்கு ஏற்ற நூல்களைப் பதிப்பதன் வழி, பெண்ணியச் சிந்தனையை இலக்கியவெளியிலும் சமூக வெளியிலும் கொஞ்சம் கொஞ்சமாக, அதே சமயம் நிலையான தீவிரத்துடன் ஏற்படுத்த முடிவதற்கான நம்பிக்கையை விதைப்பதே. அதே சமயம் நிலையான தீவிரத்துடன் பெண்ணியச்சிந்தனை வெளியை உருவாக்கமுடியும்.

இன்றும் அந்த இடம் வெற்றிடமாகவே உள்ளது. இன்றும் பதிப்பாளர்களுக்கு, பெண் இலக்கியவாதிகளை, படைப்பாளிகளை நல்ல சன்மானம் கொடுத்து படைப்புகளை வாங்கிப் பதிப்பிக்கும் துணிவில்லை என்று தான் சொல்லவேண்டும். இதற்குக் காரணம், ஒருவேளை, சுயபாதுகாப்பின்மை உணர்வோ என்று கூடத் தோன்றும்.

உண்மையிலேயே, பெரியார் தன் நூல்கள் வழியாகச் செய்தது போல பெண்ணியம் தொடர்ந்து எழுதப்படுவதும், பதிப்பிக்கப்படுவதும், பரப்பப்படுவதும் ஒரு பதிப்பகத்தின் தேவையைக் கோரும் அளவிற்குப் பிரமாண்டமானது. 

ஒட்டுமொத்த பெண் எழுத்தாளர்களையும் நல்ல சன்மானம் கொடுத்து அவர்களின் படைப்பாற்றலை சமூகத்திற்குப் பயன்படுத்துக்கொள்ளும் வழியும் இருக்கிறது. மேலை நாடுகள் இவ்விடயத்தில் பெருமளவு முன்னேறியிருக்கிறார்கள்.

ஒரு நல்ல பதிப்பாசிரியர், இதன் பொருள் உணர்ந்த பதிப்பாசிரியர், முதலீடு செய்யக்கூடிய பதிப்பாசிரியர் மிகுந்த தனித்துவமும் வேகமும் கொண்டியங்கக்கூடிய பதிப்பகம் ஒன்றை உருவாக்கிச் செயல்படுத்தலாம்.

ஏனெனில், இன்றும் தொடக்க நிலையிலே இருக்கும் பெண்ணியப்பிரச்சனைகள், சாதிய பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் நாளொரு வண்ணத்துடன் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தடுத்து நிறுத்த, விழிப்புணர்வை ஏற்படுத்த 'புற்றீசல்கள் போல' நூல்களே தேவை.

அந்த இடம் வெற்றிடமாகவே உள்ளது.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: