நம் குரல்

ஆண் எழுத்தாளர்களின் 'பெண்' பற்றிய பாலியல் வர்ணனைகள்!





ஒரு டி.வி. நிகழ்ச்சிக்காக, ஆண் எழுத்தாளர்கள், தம் எழுத்துகளில் பெண்களை எப்படி வர்ணனை செய்திருக்கிறார்கள் என்று ஆய்வு செய்ய நேர்ந்தது. பெரும்பாலான மூத்த எழுத்தாளர்களுக்குப் பெண்கள் மீது எந்த நன்மதிப்பும் இருக்கவில்லை. 

சமூகத்தின் அடித்தட்டிலிருந்து எழுந்து வந்த படைப்பாளிகள் இயல்பாகவே தம் சமூகத்தின் பெண்களின் உழைப்பின் மீதும், உடல் ஆற்றல் மீதும் அபரிமிதமான பரிவும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்ததையும் உணரமுடிந்தது. 

இளம் எழுத்தாளர்களைப் பொருத்தவரை, பெண்களின் உடல் தான் கவனத்திற்குரியதாக இருக்கிறதே ஒழிய, அவர்களின் குணமோ, ஆற்றலோ, ஆளுமையோ கவர்வதில்லை.  இதில், இன்னும் பரவலாக ஆய்வு செய்ய விரும்புகிறேன்.

எல்லாவகையிலும் பஷீர் தான் உயர்ந்து நிற்கிறார். பெண்களின் மீதான தன் காமத்தை வெளிப்படுத்துவதிலாகட்டும், அவர்களைப் பற்றிய பாலியல் வர்ணனையைத் துல்லியமாக எழுதுவதில் ஆகட்டும், அவர் எழுத்தில் எந்த அளவுக்கு வெளிப்படையான உணர்வுகள் இருக்கிறதோ,  அந்த அளவிற்கு அவர்கள் மீதான உண்மையான அன்பினொடு பதிவாகிறது. அதனால் அந்த வகையில் 'வர்ணனை' என்பது ஆபாசமாவதில்லை. 

பிற எழுத்தாளர்களுக்கு அடிமனதில் பெண்கள் மீது  இயல்பாகவே இருக்கும் வெறுப்பும், முறையீடுகளும் கலந்து தான் 'வர்ணனை' ஆகிறது. அதனால் நேரடியாக 'ஆபாசமான' ஒன்றாகவும், அருவருப்பூட்டுவதாகவும் இருக்கிறது. 

பெண்களின் மீது உண்மையான ஈர்ப்பைக் கொண்டவர்கள் வரிசையில், ப.சிங்காரம், ஜி.நாகராஜன், தேவதேவனையும் சேர்த்துக்கொள்ளலாம். 

மேலும் தலித் எழுச்சிக்குப் பின் தான் பெண்கள் உடலாற்றல், உடல் உழைப்பு என்பதின் மீது படைப்பாளிகளுக்குக் கொஞ்சமேனும் மரியாதை எழுந்துள்ளதையும் உணரமுடிகிறது. 

இதையெல்லாம் தவிர்த்து, பெண்களை ஓர் எதிர் வகை மிருக இனமாகவும், வெறுமனே சடப்பொருளாகவும் தான் எல்லோரும் வர்ணித்துள்ளனர். 




குட்டி ரேவதி



கருத்துகள் இல்லை: