நம் குரல்

உயர் ஜாதிக்காரி ஒருத்தி நகத்தோடு என் பறை நகம் மோதி..!






பிரமிளின் 'கலப்பு' எனும் கவிதை


1. கண்கள்

உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என் பறை நகம் மோதி
மனம் அதிர்ந்தது.

கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்

பிறந்தது ஒரு
புதுமின்னல்

ஜாதியின் 
கோடை மேவிப் பொழிந்தது
கருவூர்ப்புயல்.

(1972)


2. புகைகள்

உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என் பறை நகம் மோதி
ஊர் அதிர்ந்தது.

ஐயாயிர வருஷத்து
இரவு சிவந்து 
எரிந்தது என் சேரி -

புகைகள் கலந்து
இருண்டது இன்றென்
உதய நெருப்பு.

(1980)


பிரமிளின் இக்கவிதை சில நாட்களாக மனதில் உருண்டு கொண்டே இருக்கிறது. கவிதையின் முற்பகுதி 1972 -ல் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டாவது பகுதி, 1980 - ல் எழுதப்பட்டிருக்கிறது. 

சாதியின் கொடூரத்தையும் அதன் மீதான தன் எதிர்ப்புணர்வையும் கவித்துவப் பிம்பங்களாக்கும் அவருடைய முயற்சி எழுபதுகளிலேயே நடந்திருக்கிறது.

இக்கவிதை, 'இளவரசன்' வன்படுகொலைக்கு எதிரான எழுச்சியைக் கொண்டுள்ளது. சற்றும் நவீனத்தன்மை குறையாமலும், தற்காலப் பொருத்தப்பாடு கொண்டும் இருக்கிறது.

தொடர்ந்த பிரமிளுடைய கவிதைப் பதிவுகளை வாசித்தவர்களுக்குத் தெரியும்,  இலக்கியத்தளத்தில் எவ்வளவு தீவிரமாக சாதியப்பயிற்சிகள் இருந்திருக்கின்றன என்றும், அதை அவர் எவ்வாறு தொடர்ந்து எதிர்த்திருக்கிறார் என்றும்.

'ஜாதியின் கோடை மேவிப் பொழிந்தது கருவூர்ப்புயல்', 'ஐயாயிர வருஷத்து இரவு சிவந்து எரிந்தது என் சேரி' என்ற வரிகள் நம் சிந்தனைத்தளத்தில் தொடர்ந்து செயல்படக்கூடிய இயங்கியல் தன்மை கொண்டவை.

இலக்கிய வெளியில் இரண்டு விதமான சிந்தனைப் போக்குகள் தாம் இருக்கின்றன. ஒன்று, சனாதனச்சிந்தனையை வலியுறுத்தி இலக்கியம் என்று அறைகூவல் விடுப்பது. இரண்டு, அதற்கு முற்றிலுமான எதிர்த்திசையில், பிரமிளின் சாதி எதிர்ப்புச் சிந்தனையை ஒட்டி இயங்குவது. 

எவ்வளவு தான் நட்டமும் இழப்பும் என்றாலும் வெகுசிலரே இரண்டாமவதைத் தேர்ந்தெடுக்கும் துணிவைப் பெற்றிருக்கின்றனர். கருத்தியலை, இலக்கியமாக்கும் படைப்பாற்றல் கொண்டிருக்கின்றனர். உதாரணங்கள் வாசித்துத் தெளிந்து கொள்ளக்கூடியவையே.




குட்டி ரேவதி







கருத்துகள் இல்லை: