நம் குரல்

பெண்ணைப் பற்றிய பாடல்



1. சிலசமயங்களில் மாலை நேரங்களில் நதியோரம், புதர்கள் அடர்ந்த இருளில், அவள் முகத்தை, நான் நேசித்த அந்தப்பெண்ணின் முகத்தை மீண்டும் பார்க்கிறேன். இப்பொழுது இறந்துவிட்டாள், என்னுடைய அந்தப்பெண்!


2. பல வருடங்களுக்கு முன்னால், அவளைப் பற்றி நான் ஏதும் அறியாத சமயங்களில் அவள் தான் என் எல்லாமுமாக இருந்தாள். ஆனால், எல்லாமும் கடந்து போகிறது.


3. அவள் என்னுள், வெளிறிய மஞ்சள் வானமும் அருமையான சோகத்தையும் உடைய குழிந்த மங்கோலியப் புல்வெளிகளின் ஜூனிப்பர் மரங்களைப் போன்று இருந்தாள்.


4. நதியருகே ஒரு கருப்புக்குடிசையில் நாங்கள் வாழ்ந்தோம். அவள் வெண்சருமத்தை கொசுக்கள் அடிக்கடி கொட்டின. நான் செய்தித்தாளை ஏழு முறைகள் வாசித்தேன் அல்லது உன்னுடைய கூந்தல் அழுக்கின் நிறத்தைக் கொண்டிருப்பதாகச் சொன்னேன். அல்லது, உனக்கு இதயமே இல்லை என்பதாக.


5. ஆனால், ஒரு நாள் குடிசையில் நான் என்னுடைய சட்டையை துவைத்துக்கொண்டிருந்த பொழுது, கதவருகே சென்று, வெளியேற விரும்பியவளாய் என்னைத் திரும்பிப்பார்த்தாள்.


6. களைப்படையும் வரை அவளை அடித்திருந்தவன் தான் சொன்னான், அவனது தேவதையென்றும்.


7. ‘நான் உன்னைக்காதலிக்கிறேன்’ என்றும் சொல்லியிருந்தவன், அவளை வெளியே கூட்டிச்சென்று, புன்னகைத்தவாறே வானத்தைப் பார்த்தான். வானிலையைப் பாராட்டிவிட்டு, அவளிடம் கைகுலுக்கினான்.


8. இப்பொழுது, அவள் வெளியே திறந்தவெளியில் இருந்தாள். குடிசையோ வெற்றுவெளியாய் இருந்தது. அவன் கதவைச் சாத்திவிட்டு, செய்தித்தாளுக்குப் பின்பாக உட்கார்ந்தான்.


9. அப்பொழுதிருந்தே நான் அவளைப் பார்க்கவில்லை. காலையில் திரும்ப வந்த பொழுது மூடப்பட்டிருந்த கதவைக் கண்டதால் அவளிடமிருந்துவந்த சிறு அழுகை மட்டுமே அவளைப் பற்றியதாக எஞ்சியிருந்தது.


10. இப்பொழுது, என் குடிசை வெறுப்பூட்டுவதாகிவிட்டது. செய்தித்தாள்கள் திணிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருக்கிறது, என் நெஞ்சம். மாலை நேரங்களில் நதியருகே புதரின் இருண்ட பகுதியில் படுத்து நினைத்துப்பார்க்கிறேன்.


11. காற்று அதன் கூந்தலில் புல்லின் வாசனையைப் பெற்றிருக்கிறது. சமாதானத்திற்காக முடிவிலாது கடவுளிடம் அழுது இறைஞ்சுகிறது, தண்ணீர். எனது நாக்கில் ஒரு கசப்பான சுவை இருக்கிறது.


பெர்டோல்ட் பிரக்ட்

மொழியாக்கம்: குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: