நம் குரல்

இரு குறுங்கதைகள்

முட்டுச்சந்து

மழை தூறிக்கொண்டிருந்தது. புங்கமரங்களின் பூக்கள் உதிர்ந்து மரத்தின் காலடியில் கோலமிட்டிருந்தன.

கக்கன்புரத்தின் நான்கு வீடுகளில் பெருக்கித் துலக்கிப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த வெள்ளையம்மா, மழையைப் பற்றிய அசிரத்தையின்றி தூறலினூடே நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அவளின் நாற்பது வயது மகன் கால்கள் ஒன்றையொன்றுப் பின்னித் தள்ளாட அவளைக் கெஞ்சியவாறே தொடர்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது அவன் தலை காற்றில் உருள்வதைப் போலிருந்தது.

‘ஒரு இருபது ரூபா கொடும்மா!

‘இருபது ரூபா கொடு!

‘கொடுக்கப்போறீயா இல்லியா?

அவன் கெஞ்சக் கெஞ்ச, என் கிட்ட இல்ல’, என்று பிடிவாதமாய் மறுத்தவாறே நடந்தாள் வெள்ளையம்மா. ஒரு முட்டுச் சந்துக்கு வந்ததும் எதிரிலிருந்த குத்துச்சுவரைப்பார்த்து விறைப்பாகக் கையைக் கட்டிக் கொன்று நின்று விட்டாள்.

அருகில் வந்த மகன் தரையில் கிடந்த ஒரு விறகுக் கட்டையை எடுத்து,

‘இப்ப காசு கொடுக்கப் போறியா இல்ல..?

என்று கட்டையை ஓங்க, வெள்ளையம்மாள் தன் முந்தானை முடிச்சை உருவி அவிழ்க்கத் தொடங்கினாள்.



அணில்

ஒரு பெரிய அரசமரம். பகற்பொழுதுகளில் அம்மரத்தில் ஏறித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது ஓர் அணில். கீச் கீச் சப்தம்.

பொழுது இரவாகும் போதெல்லாம் அதைக் காணாத மஞ்சுப்பாப்பா,

‘அம்மா, அந்த அணில் எங்க போயிருக்கு?என்று கேட்க,

இரவானதும் நிலாவுக்குள்ள போயிரும் என்று அம்மா பதிலளித்தாள்.

அப்பொழுதுதான் முழு நிலாவிற்குள் அணில் உறங்குவதைப் பார்த்தாள் மஞ்சுப்பாப்பா.

பின்பொரு நாள் நிலாவையும் காணாதபோது சோகமுற்றாள் மஞ்சுப்பாப்பா.

அந்தி வீசிய காற்றில் அம்மரம் அசைந்தாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மரத்தின் உச்சாணிக் கொம்பின் அருகில் நிலாவின் வெள்ளி நுழைவாயில்

வானத்திற்குத் திறந்திருந்தது.

அம்மரத்தின் கிளையிலிருந்து அணில் துள்ளி எழுந்து நிலாவிற்குள் குதித்தது.

மஞ்சுப்பாப்பா நிலாவிற்குள் தானும் போகவேண்டும் என்று எண்ணியவாறே தூங்கப்போனாள்.



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: