நம் குரல்

பாலியல் அரசியல் கவிதை - 1





1. விறைத்த குறிகளாலான மாலை


விறைத்த குறிகளை அரிந்து வந்து
மாலைகளாக்கவேண்டும்
மைக்கின் முன்னால் காமிராவின் முன்னால் 
மக்கள் கூட்டத்தின் முன்னால்
போராளிப் பெண்கள் முழக்கமிடுகிறார்கள்
குழுமியிருக்கும் முதல்முறை போராளிப்பெண்கள்
சிரிக்கிறார்கள் கைதட்டுகிறார்கள் வரவேற்கிறார்கள்
பெண்களைப் பேசவிட்டு சற்று தள்ளி நின்று
வேடிக்கை பார்க்கும் ஆண்கள்
முழங்கும் பெண்களின் யோனிப்பாகங்களைப் பற்றி
கிசுகிசுக்கிறார்கள்
அகராதியின் கனதி கருதி
பதிவாகாமல் போன 
'தேவடியா!' போன்ற வார்த்தைகளை
உதடுகளால் சுகித்துப்பார்க்கின்றனர்
முதல்முறையாக பகிரங்கப்படாமலேயே பகிரங்கமாவது
பெண்ணுறுப்புகள் தான் 
சுரந்து கொண்டிருந்த பெண்ணுறுப்புகள்
சுரப்பு நின்று போயிருந்தன
ஆண்மைக்குறைவினால் பதற்றப்பற்றவன்
படுக்கையறையில் 
தன் வன்முறையை நிரூபிக்கமுடியாமல் தோற்றுப்போனதில்
கத்திகளால் கனவுகளைச் செதுக்கிக்கொண்டிருக்கிறான்
இரவின் சுவரெங்கும்
அவன் தோன்றிய யோனிக்குழிகள்
எவரிடம் இருந்தன அவளிடமே இருந்த போதும்
விரைகள் தோன்றி வந்த உடல்களிடம்
ஏன் அவள் இத்தகைய போரை நிகழ்த்தவேண்டியிருக்கிறது?


நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?



குட்டி ரேவதி

1 கருத்து:

Unknown சொன்னது…

Truth from a lip,which failed to close