நம் குரல்

இன்று எழுத ஏதுமில்லை



செய்தித்தாளையோ எந்தவொரு வலைப்பதிவையோ வாசிக்காதிருந்தால் அன்றைய நாள் உறக்கத்தின் கனவில் வந்து போன காட்சி தெளிவான ஓவியமாய் விழியில் படிந்திருக்கிறது. மீண்டும் மீண்டும் அதை வண்ணம் தீட்டிப் பார்க்க முழுநாளும் போதவில்லை. அதற்குள் அடுத்த கனவு வந்து கவிகிறது. ஒரு பெரிய வனத்தை எனதாக்கிக் கொண்ட பாவனையில் அமைதியாக இருக்கிறேன். என் மூச்சு எனக்கே கேட்பது போல் சப்தமாக ஒலிக்கிறது. வம்புகளுடன் வார்த்தைகளில் திராவக எரிச்சல்களுடன் தோழிகள் இப்பொழுதெல்லாம் என் வாசல் வருவதில்லை என்பது மிகுந்த மனஅமைதியைத் தருகிறது. என் முகவரிக்கோ என் தொலைபேசிக்கோ எந்தவொரு அழைப்பும் வராததும் கூட இன்னும் என் தனிமையை முழுமை செய்யப் போதுமானவையாக இருக்கின்றன. புகழ்ச்சிகளுக்கு மயங்கிய வண்டுகளின் ரீங்காரம் காதுக்கு இரைச்சலாய் இருக்கிறது. ஆகவே விழாக்கூட்டங்கள் அலுப்பூட்டுகின்றன. உணர்ச்சிவெறியில் நரம்பு முறுக்கேறிய முயக்கங்களின் உச்சக்கட்டம் போலவே வாழ்வின் எல்லா தருணங்களையும் எடுத்துக் கொள்ளும் பெண்கள் பேசிப்பேசி ஓய்ந்து போகின்றனர். ஆண்களோ அது ஒரு புதிய மொழி போல புரிதலுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பதைக் கூட காட்டிக்கொள்ளாத ஒரு வன்மம் அவர்களின் தலையில் மூளையாக அமர்ந்திருக்கிறது.



செம்மொழி மாநாடு சீக்கிரம் முடிந்தால் பரவாயில்லை என்பதாய்ப் பேசிக்கொண்டிருந்தான் சூரியா. எனக்கென்னவோ கலைஞரைப் போலவே தமிழ்நாட்டில் எல்லா அறிவாளிகளும் இயங்கத் தொடங்கிவிட்டதாகத் தோன்றுகிறது. வலைப்பதிவுகளின் பக்கங்கள், சுயவிளம்பர மோகப் பலகைகளாக மாறியதில் எல்லோரின் புகைப்படமுகங்களும் அழிக்க முடியாமல் நினைவறையில் உறைந்திருக்கின்றன. கணினிக்குள் இப்படி ஓர் ஆவியுலகம் சாத்தியமாக முடியும் என்பது நாம் அறிந்தது தான். மனித மூளையின் வடிவமைப்பை ஏந்திய கணினிக்குள் இப்படியான வன்ம உலகம் தான் பிறக்க முடியும் போலும். வேகமாய் என் வலைப்பதிவின் ஜன்னலைத் திறந்து என் வானத்தின் தட்பவெப்பநிலையை அறிந்து கொண்டு மூடிவிடுகிறேன். இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் தான் நூல்களுக்குள் இமையாமல் விழித்திருக்கும் கவிஞர்களையெல்லாம் தேடிப்பிடித்து மொழிபெயர்க்கிறேன். தனது மனதின் வன்மங்களை தனக்குத் தானே வெல்ல அவர்கள் எடுத்த முயற்சிகள் கவிதைகளாக மலர்ந்திருப்பது பரவசம் தருகிறது.



உடலும் மனமும் ஒன்றொடொன்று ஒட்டாத சங்கடத்தை எந்தப் பாலியல் உறவும் தீர்ப்பதில்லை. உடலையும் மனதையும் தைக்கும் வேலையை அன்றாட வாசிப்புப் பணிகள் வழியாக முயன்றிருக்கிறேன். எத்தனை ஆயிரம் ஆண்களின் உடலை இட்டு நிரப்பினாலும் நிரம்பாதது என்னுடல் என்பது எனக்கு மறைமுகமான மகிழ்ச்சியைத் தான் தருகிறது. பெரிதினும் பெரிதான ஒரு மனோவெளியைக் கவிதை வழியாகத் தான் விரிக்கமுடிகிறது. கொக்கரிக்கும் சப்தங்கள் எழுத்துகளாகும் ஒரு காலத்தில் ஜோ டி குரூஸின் பண்பு என்பது ஓர் இலக்கியப் பட்டம். இதை யாரும் தனக்குத் தானே தந்துகொள்ள முடியாது என்றும் தோன்றுகிறது.



ஏற்கெனவே மனித வன்மங்கள் எல்லாம் யுத்தங்களாக நடந்தேறிவிட்ட பின்பு எந்தப் போரை இவர்கள் எதிர்க்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. வன்மத்தை மூன்றுவேளை உணவாகத் தின்பவர்கள் வைக்கம் முகம்மது பஷீரை வாசித்து தங்கள் வயிற்றுக் குன்மத்தைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வன்மங்கள் குன்மத்தைத் தான் உருவாக்கும், படைப்புகளை அல்ல, சந்திரா! படைப்பு புரட்சி சமூகமாற்றம் குறித்த இவர்களின் விவாதங்கள் கிச்சுகிச்சு மூட்டுவதாகத் தோன்றுகிறது. இவர்களின் மடமையை எண்ணி நகைப்பது இது கடைசி முறையன்று!



குட்டி ரேவதி

1 கருத்து:

Joelson சொன்னது…

உண்மை தான் தோழி