நம் குரல்

“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.





* ஜிஷாவின் வல்லுறவு கொலைக்குப் பின், எங்கெங்கும் பெரும் அரற்றலாய் இருக்கிறது. ஆங்காங்கே, நண்பர்கள் ஃபேஸ்புக் பதிவுகளில், "இப்பொழுது இந்தப் பெண்ணியவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?" என்று கேட்கின்றனர். ஒரு நண்பர் வேடிக்கையாக, 'ஓ, அவர்களா? பெண்ணியவாதிகளே பெண்ணியவாதிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர், என்று பதில் இட்டிருந்தார்.

* 'ஜிஷா', தலித் என்பதால் பொதுச்சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே, இந்தியப் பெண்ணியவாதிகளும், ஊடகங்களும் கூட வேடிக்கை பார்ப்பதுடன் கடந்தும் செல்கின்றனர்.
* நிர்பயா விடயத்தில் ஒருங்கிணைந்தது, போல் இதில் பெண் சமூகம் ஒருங்கிணைய சாத்தியமில்லை. அதில் வன்முறையை நிகழ்த்தியவர்கள் ஒடுக்கப்பட்ட ஆண்கள் என்பதால் தண்டனையைப் பெற்றுத்தருவதில், ஒடுக்கப்பட்ட ஆண்கள் மீதான வெறுப்பைச் செயல்படுத்துவதில் பெண்கள் வெற்றி கொண்டார்கள் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

* ஜிஷாவின் படுகொலையில் மட்டுமல்ல, சமீபத்திய சாதிஆணவப்படுகொலையாகட்டும், பள்ளி மாணவிகள் படுகொலையாகட்டும், எல்லா படுகொலைகளிலுமே வன்முறையை நிகழ்த்தும் விதத்தில், கரும்பை நுழைப்பது, முலைகளை அறுப்பது, குடலை உருவுவது என்று 'படுகொலை' ஒரு கேளிக்கையாவதை உணரமுடிகிறது. ஃபேஸ்புக்கில் நாம் எப்படி அவதூறுகள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதில் சுவாரசியம் பெறுகிறோமோ அது போலவே.

* ஜிஷாவின் வன்கொலையில் எவ்வளவு காட்டுக்கத்தல் கத்தினாலும் நீதி என்பது ஒரு பிஸ்கெட் துண்டுக்குத் தான் சமானம். நிர்பயாவின் விடயத்தில் இல்லாத, பெரும் அமைதி நிலவும் இந்த நேரத்திலேனும் பெண்ணியவாதிகள் எல்லாம் பார்ப்பனீயமயமாகிவிட்டதை உண்மையான போராளிச்சமூகம் உணரவேண்டும்.
* பார்ப்பனீய பெண்ணியவாதிகள், காலங்காலமாக பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் 'பெர்சனல்' ஆதாயங்களைக் காரணமாக வைத்து, 'பிரித்துவிடுவது' ஒன்றே அவர்கள் ஆகச்செய்யும் சிறந்த வேலை, கலை. அப்படி பிரித்து வைத்திருந்தால் தான் இவர்களின் பார்ப்பன அடையாளங்களை, அதிகாரங்களை, அங்கீகாரங்களை இழக்காமல் இருக்கமுடியும். இது தான் அவர்கள் முன்வைக்கும் 'பெண்ணியம்'.

*பெண்கள் ஒருங்கிணைந்தால், பார்ப்பனீய பெண்ணியவாதிகள், தங்களின் சாதிய அங்கீகாரத்தை இழக்கவேண்டியிருக்கும் என்பதால் அவர்கள் பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ( இவை தாண்டி, பார்ப்பனச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் தங்களை அப்படி உணராத, தம் அடையாளங்களை தொடர்ந்து மறுக்கும் பெண்கள் யாரேனும் உண்டா, இங்கே)

* அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின், அதாவது சமூகத்தின் சாதிய விழிப்புணர்வின் மறு தூண்டலுக்குப்பின், இந்தியாவின் எந்த மூலையிலுமே பெண்கள் இயக்கத்தைக் கட்டைமைக்க முடியவில்லை. இது ஆய்வுப்பூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது. எங்கெங்கு பெண்கள் இயக்கம் தோன்றினாலும், அங்கே சாதி அதிகாரப் பெண்கள் நுழைந்து சாதிமறுப்பு அமைப்புகளை 'ப்ளேட்' போட்டு கத்தரிக்கவே செய்திருக்கிறார்கள்.
* 'தலித்' என்றால், சாதிப்படிநிலைகளில் சேராது. ஒடுக்கப்பட்டவர்கள் என்றே பொருள். ஆனால், சமீபத்தில், பார்ப்பனீயச் சிந்தனைச் சாய்வால், மெல்ல, மெல்ல 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது.

* இந்த சாதிமயப்போக்கால், ஏற்கெனவே, 'தலித்' சமூகத்தின் மீதான வன்முறைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாதி ஆதிக்க சமூகம், 'தலித் சாதிப்' பிரச்சனைகளை, வன்முறைகளை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவே தூண்டும்.
* 'சாதி ஒழிப்பு' நூலில், அம்பேத்கர் இரண்டு முக்கியமான விடயங்களை முன் வைக்கிறார். ஒன்று: அகமணமுறையிலிருந்து விடுபடுதல். இரண்டாவது: இந்த நாட்டின் நீதிமுறை என்பது பார்ப்பனீய நீதிமுறை என்பதை உணர்ந்து அதை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடருதல்.

* “எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - என்று கதறுகிறார், ஜிஷாவின் தாய். இந்திய நீதிமுறை ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதியை ஒரு பொழுதும் வழங்கியதில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
* இப்பொழுது, 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது. சாதியத்தின் ஸ்பெஷல் தன்மை என்னவென்றால், நம் வீட்டில் வன்முறைகள் நிகழாத வரை, எல்லாமே நமக்கு வேடிக்கை என்ற குணாதிசயம் தான். யாரும் 'மூச்' விடமாட்டார்கள்.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: