நம் குரல்

தோழி சந்திராவிற்குப் பரிசாக இரு கவிதைகள்


கரையேதுமில்லை


மீன்கள் அள்ளிய வலையாய்க் கடலை
கரையிழுத்து வந்த அதிகாலைப் பெண்டிர் நாம்


இரவின் ரகசியங்களைக் கிழிக்கும்  மூர்க்கத்துடன்
நம்மிருவரின்  கணக்கற்ற இயக்கங்களாலான உடல்களால்
இரவின் நீலவர்ணத்தை அளந்தவர்கள்  தோலுரித்தவர்கள் நாம்
ங்கே தந்திரங்கள் ஏதுமில்லை
கடலை அளக்க நீந்திய இரு மீன் குஞ்சுகளைப் போல
அளந்து நடக்கப்பணித்த கால்களைத் துறந்தோம்
நீந்தி நீந்திக் கரை  மறந்தோம்
ஆழக்கடலில் சூரியன் தெரிந்தது


மெலிந்த உதடால் மழைநீரின் ஒவ்வொரு துளியையும்
கவ்விச் சுவைத்த முத்துச்சிப்பியைப் போல்
உன் காமத்தின் பெருமழையைத் துளித்துளியாய்க் குடித்தேன்
உன் காதல் என்னிடம் மண்டியிட்டது
என் காதல் உன்னிடம் முறையிட்டது
எத்தனை முறை கரை எழுப்பினாலும்
அதை அழிக்கும் அலை வேகத்துடன் புரண்டெழுந்தது
கரையில் சூரியன் எழுந்தது



நம் காதலர்  தலைமீது
நாம் சவுட்டிய பாதங்களை
அவர்கள் தம் உள்ளங்கைகளில் வாங்கினார்கள்
பருகினார்கள் நம் காதலின் கன மழையை
கரையேறிக்கிடந்தோம் ஆழம் துளைத்த வாகையுடன்
மழை தீர்ந்து சிவப்பேறிய அதிகாலை
நமக்கு மேலே நீர்ப்பறவைகள் பறந்து போயின
பேரின்பக் கூவலிட்டு


மணமேடை ஏறி நின்று 
கருத்த திண்முலைகளைப் பரிசளிக்கத் தயாரானாய்
என் முத்தங்களால் தொடுத்திருந்த அம்மணமாலை
உதிர்த்து ஒவ்வொன்றையும் நட்சத்திரம் ஆக்குபவனுக்கு


ப்பொழுதும் உனக்காய் வானத்தை விரிப்பேன்
ன் மடியில் கடலலைகள் ஆர்ப்பரிக்க







கண்காட்சி


வீட்டின் கூரை மீது விரிந்த வேப்பமரம்
தங்க நிறப்பழங்கள் சொரிய
கோடைப்பகலில் உன்வீடு தீச்சட்டியாய் கனன்றது

அறைகளின் சுவர்களில் உலர்ந்த பூக்களென
பட்டாம்பூச்சிகள் ஒட்டியிருந்த வண்ணம் காட்டி 
பரவசம் கண்டாய்
நிழலின் தோகைகள் இருளென படர்ந்து
தாபங்கள் எழுந்த வேளை
தனிமையை நீருற்றி வளர்த்த உன் கண்கள்
வேகமாய் இன்னோர் அறைக்கு வாசல் திறந்தன

அறைகள் பெருகி
தாழுடன் தவிப்புடன் இறுகியிருந்தன
வீசும் வெக்கையை குயிலின் பூக்கள் பாடி ஆற்றின
கிளைகளின் பாதையில் பந்தயம் வென்ற
அணில்களின் சீழ்க்கைகள் தனிமையைக் களைத்தன
வீட்டின் அழகை நீ வியக்கும் போது
இரும்புக்குறி தீயாகச் சிவந்து
உடலின் தசைநார் புடைத்து எழுந்தன

வெக்கை வீறெடுத்திருக்க வீடு எப்படி என்றாய்
காதலியின் யோனியை கண் காட்சி ஆக்கியவனே!
வீடாகும் முன்னர் அது ஒரு பெருங்காடு
திக்குகளாய் விரிந்த இறக்கைகளுடன்
நாங்கள் வெறியாற்றிய குளிர் வனம் என்றேன்

உன்மீதே வழிந்திருந்த தோல்வியின்
திரவத்தைத் துடைத்துக்கொண்டாய்

வேம்பின் கவனம் நிழல் விரிந்த
பாறைகளாலான மொட்டை மாடியில்
நினைவுகளின் விசிறி அசைந்து
அவ்விடம் குளிர்ந்தது
வேப்பம்பூக்கள் ஒன்றிரண்டாய் உருண்டோடி
வீட்டினுள்ளே விளையாடின.



(தோழி சந்திரலேகாவின் பிறந்தநாள் பரிசாக…!)

3 கருத்துகள்:

vidivelli சொன்னது…

aththanaiyum nalla kavithai
valththukkal...

can you come my said?

T.K.Theeransamy,Kongutamilarkatchi சொன்னது…

இது உங்களின் கடந்தகால நினைவு அலைகளாக அல்லது கற்பனை அலைகளா!நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.தீரன்சின்னமலை-theeranchinnamalai.blogspot.com புலனாய்வு செய்தி ஊடகப்பதிவிற்காக டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி.

கவி அழகன் சொன்னது…

அழகு கவிதை