நம் குரல்

இன்று எழுத ஏதுமில்லை



செய்தித்தாளையோ எந்தவொரு வலைப்பதிவையோ வாசிக்காதிருந்தால் அன்றைய நாள் உறக்கத்தின் கனவில் வந்து போன காட்சி தெளிவான ஓவியமாய் விழியில் படிந்திருக்கிறது. மீண்டும் மீண்டும் அதை வண்ணம் தீட்டிப் பார்க்க முழுநாளும் போதவில்லை. அதற்குள் அடுத்த கனவு வந்து கவிகிறது. ஒரு பெரிய வனத்தை எனதாக்கிக் கொண்ட பாவனையில் அமைதியாக இருக்கிறேன். என் மூச்சு எனக்கே கேட்பது போல் சப்தமாக ஒலிக்கிறது. வம்புகளுடன் வார்த்தைகளில் திராவக எரிச்சல்களுடன் தோழிகள் இப்பொழுதெல்லாம் என் வாசல் வருவதில்லை என்பது மிகுந்த மனஅமைதியைத் தருகிறது. என் முகவரிக்கோ என் தொலைபேசிக்கோ எந்தவொரு அழைப்பும் வராததும் கூட இன்னும் என் தனிமையை முழுமை செய்யப் போதுமானவையாக இருக்கின்றன. புகழ்ச்சிகளுக்கு மயங்கிய வண்டுகளின் ரீங்காரம் காதுக்கு இரைச்சலாய் இருக்கிறது. ஆகவே விழாக்கூட்டங்கள் அலுப்பூட்டுகின்றன. உணர்ச்சிவெறியில் நரம்பு முறுக்கேறிய முயக்கங்களின் உச்சக்கட்டம் போலவே வாழ்வின் எல்லா தருணங்களையும் எடுத்துக் கொள்ளும் பெண்கள் பேசிப்பேசி ஓய்ந்து போகின்றனர். ஆண்களோ அது ஒரு புதிய மொழி போல புரிதலுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பதைக் கூட காட்டிக்கொள்ளாத ஒரு வன்மம் அவர்களின் தலையில் மூளையாக அமர்ந்திருக்கிறது.



செம்மொழி மாநாடு சீக்கிரம் முடிந்தால் பரவாயில்லை என்பதாய்ப் பேசிக்கொண்டிருந்தான் சூரியா. எனக்கென்னவோ கலைஞரைப் போலவே தமிழ்நாட்டில் எல்லா அறிவாளிகளும் இயங்கத் தொடங்கிவிட்டதாகத் தோன்றுகிறது. வலைப்பதிவுகளின் பக்கங்கள், சுயவிளம்பர மோகப் பலகைகளாக மாறியதில் எல்லோரின் புகைப்படமுகங்களும் அழிக்க முடியாமல் நினைவறையில் உறைந்திருக்கின்றன. கணினிக்குள் இப்படி ஓர் ஆவியுலகம் சாத்தியமாக முடியும் என்பது நாம் அறிந்தது தான். மனித மூளையின் வடிவமைப்பை ஏந்திய கணினிக்குள் இப்படியான வன்ம உலகம் தான் பிறக்க முடியும் போலும். வேகமாய் என் வலைப்பதிவின் ஜன்னலைத் திறந்து என் வானத்தின் தட்பவெப்பநிலையை அறிந்து கொண்டு மூடிவிடுகிறேன். இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் தான் நூல்களுக்குள் இமையாமல் விழித்திருக்கும் கவிஞர்களையெல்லாம் தேடிப்பிடித்து மொழிபெயர்க்கிறேன். தனது மனதின் வன்மங்களை தனக்குத் தானே வெல்ல அவர்கள் எடுத்த முயற்சிகள் கவிதைகளாக மலர்ந்திருப்பது பரவசம் தருகிறது.



உடலும் மனமும் ஒன்றொடொன்று ஒட்டாத சங்கடத்தை எந்தப் பாலியல் உறவும் தீர்ப்பதில்லை. உடலையும் மனதையும் தைக்கும் வேலையை அன்றாட வாசிப்புப் பணிகள் வழியாக முயன்றிருக்கிறேன். எத்தனை ஆயிரம் ஆண்களின் உடலை இட்டு நிரப்பினாலும் நிரம்பாதது என்னுடல் என்பது எனக்கு மறைமுகமான மகிழ்ச்சியைத் தான் தருகிறது. பெரிதினும் பெரிதான ஒரு மனோவெளியைக் கவிதை வழியாகத் தான் விரிக்கமுடிகிறது. கொக்கரிக்கும் சப்தங்கள் எழுத்துகளாகும் ஒரு காலத்தில் ஜோ டி குரூஸின் பண்பு என்பது ஓர் இலக்கியப் பட்டம். இதை யாரும் தனக்குத் தானே தந்துகொள்ள முடியாது என்றும் தோன்றுகிறது.



ஏற்கெனவே மனித வன்மங்கள் எல்லாம் யுத்தங்களாக நடந்தேறிவிட்ட பின்பு எந்தப் போரை இவர்கள் எதிர்க்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. வன்மத்தை மூன்றுவேளை உணவாகத் தின்பவர்கள் வைக்கம் முகம்மது பஷீரை வாசித்து தங்கள் வயிற்றுக் குன்மத்தைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வன்மங்கள் குன்மத்தைத் தான் உருவாக்கும், படைப்புகளை அல்ல, சந்திரா! படைப்பு புரட்சி சமூகமாற்றம் குறித்த இவர்களின் விவாதங்கள் கிச்சுகிச்சு மூட்டுவதாகத் தோன்றுகிறது. இவர்களின் மடமையை எண்ணி நகைப்பது இது கடைசி முறையன்று!



குட்டி ரேவதி

அகத்திணை - 3





இக்கோடைக்காலம் வேறுவேறு மாழ்பழ வகைகளின் வித்தியாசமான சுவைகளால் நிறைந்திருந்தது. அதிலும் ஹிமாம் பசந்த் பழத்தின் சுவைக்கும் மணத்திற்கும் கோடைக்காலங்களை எழுதித் தீர்க்கலாம்.


வீட்டிற்கு வேலைக்கு வரும் சந்தியா தினமும் தனது குடும்பத்தின் கண்ணீர் வற்றாத சோகக் கதைகளை பக்கம் பக்கமாகச் சொல்லி மாய்கிறாள். ஒரு நாளைக்கு எப்படியும் குறைந்தது நான்கு வீடுகளிலாவது வேலை செய்கிறாள். ஒரே பிரச்சனையின் வேறு வேறு முகங்கள் என ஒவ்வொரு வீட்டிற்கும் ஒதுக்கி வைத்திருப்பாள் போலும். மறுநாள் காலையில் மிகவும் உற்சாகமாயிருப்பாள்.



எழுதும் பொழுது மடிக்கணினியின் அருகில், நான் எழுதும் விஷயத்தின் உண்மையின் உருவம் வந்தமர்ந்து என்னை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது, அதன் ரசத்தை இழக்காமல் மரியாதையைக் குலைக்காமல் அழகைச் சிதைக்காமல் எழுதுகிறேனாவென்று. நான் அதற்கு அடங்கிப் போகிறேன்.



என்னைப் பொறுத்தவரை அரசியல் நிகழ்வுகள் தமது சுவாரசியங்களை இழந்து விட்டன. காரணங்களில் ஒன்று, தினம்தினம் செய்தித்தாள்களின் இடத்தை நிரப்பத் துடிக்கும் அவற்றின் வேட்கை. இரண்டு, கூட்டிக்கழித்துப் பார்த்தால் தென்படும், அரசியல் அதிகாரத்திற்கென மனித உறவுகள் நெய்யும் போலியான தற்காலிகமான புனைவுகள். மூன்று, என்ன தான் இந்த அரசின் கட்டங்களுக்குள் நகர்த்தப்படும் காய்கள்தாம் நாம் என்றாலும் நமது சுயசிந்தனைகளை இவை விலைக்கு வாங்க முடியாது எனும் தன்னம்பிக்கை.



என் எழுத்தின் வெளிக்குள்ளும் மழை பெய்யத் தொடங்கிவிட்டதை உணர்கிறேன். பூமியின் கருணை இது! இந்த முறை கோடையின் வதை எத்தனை முதியவர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்றிருக்குமோ? அப்படிக் காய்ந்தது வெயிலின் வானம் மூர்க்கமாய்.



லூயி புனுவலின் இறுதி சுவாசம் என் பையை நீண்ட நாட்களாக விருப்பீர்ப்பத்துடன் அடைத்துக் கொண்டிருக்கிறது. சா. தேவதாஸின் மொழி பெயர்ப்பு. கொஞ்சம் அவசரமான பதிப்போ என்று தோன்றினாலும் லூயி புனுவல் வழங்கும் அவருடைய உலகத்தின் நேர்மையும் மென்மையான அணுகுமுறையும் நம் எல்லோரையும் நமது வாழ்க்கையை எச்சரிக்கையுடன் அணுகத் தூண்டும்.



என்னை பெண்களே விமர்சிக்கும் பணியைத் தான் மீண்டும் மீண்டும் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் தம்மை பெண்ணாக ஒட்டுமொத்தப் பெண்களின் பிரக்ஞையாக பரந்த பிரபஞ்சத்தில் தமது கடமையாக எவ்வளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பதன் ஆழமும் அர்த்தமும் அப்பொழுது தான் வெளிப்படுகிறது. எதிர்மறையான குணாதிசயங்களுடன் அவர்கள் வெளிப்பட்டாலும் கூட. ஆண்களோ பெண்களை விமர்சிப்பதே இல்லை; அவதூறு செய்கிறார்கள்.



ஒவ்வொரு முறையும் தினப்படி வாழ்க்கையின் அலுப்பூட்டும் காலகட்டத்தைக் கடக்க நேரும் போதெல்லாம் ‘புது விசைஇதழை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை விரும்பி வாசித்து எழுவேன். அது தன்னில் இடம்பெறும் படைப்பு ஒவ்வொன்றின் வழியாகவும் ஒரு புதிய திசையைக் காட்டுகிறது.


என்னை நிறைய நதிகள் கடந்து போகின்றன. எப்பொழுதாவது தான் ஏதோ ஒரு நதியில் இறங்கி கால் நனைக்க விரும்புகிறேன். சிலவற்றில் மூழ்கி எழ.



குட்டி ரேவதி

மீன்தொட்டி




மென்னுதடுகள் பேசும் மீன்குஞ்சுகள்

வளையவரும் தொட்டியாய் இருந்தேன்

இரவு பகல் எழுச்சியுறும் கடலில்லை

பழம்பெரும் பாசிபடர்ந்த கூழாங்கற்களை

உருட்டிக் கொரித்தது குஞ்சின்பசி

குத்துயிர்க்கனவுகள் உடலை முட்டும்

உயிர்ப்பற்ற குமிழிகள் மேடுதட்டும்



ஓர் இரவும் அதனோடவியும் உம் ஆண்மையும்

கடலாக்கியது என்னை

சுவரை எட்டியுதைத்தன என்குஞ்சுகள்





குட்டி ரேவதி

தயவுசெய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்! - ஒரு கடிதம்





இக்கடிதத்தை சிலவாரங்களுக்கு முன்பே வலைப்பதிவில் எழுத எண்ணியிருந்தேன். இப்பொழுது தான் சமயம் வாய்த்தது. அன்பார்ந்த நேயர்களே! என் எழுத்துகளை தயவுசெய்து யாரும் படிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் மறைமுகமாக உங்களை வாசிக்க வைக்கும் தந்திரம் ஏதுமில்லை.


என் எழுத்தை பத்து வாசகர்களுக்கு மேல் படிப்பதை நான் விரும்பவில்லை. அத்தகைய எழுத்து குறித்த சந்தேகங்கள் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே இன்னும் ஆழ ஆழ வேரோடிக் கொண்டே இருக்கின்றன என்னுள். எண்ணிக்கை நிமித்தமான வாழ்க்கை எத்தகைய பேதலிப்பைத் தரும் என்பதை எல்லா வகையிலும் மேலும் மேலும் நான் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்.


என்னுடன் வதியும் மனோ கூட என் கவிதைகளை வாசித்திருக்கமாட்டார். அத்தகைய பாதுகாப்பை என் எழுத்துகளும் பெற்றிருக்கின்றன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவ்வளவு சொற்பமான இடத்தைத் தான் எழுத்து வாழ்க்கையில் கொண்டிருக்கிறது. மேலும் அதிகமானோர் வாசித்தால் என் எழுத்தில் ஏதோ குறையிருப்பதான ஒரு குற்ற உணர்வு என்னைத் தொற்றிக்கொள்ளும். ஆகவே, தயவு செய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்!




தமிழகத்தில் கவிதையை வாசித்தோ விவாதித்தோ வாழ்வதற்கான உரையாடலையும் இன்முகத்தன்மையையும் இலக்கிய அரசியல் இழந்து விட்ட நிலையில் என்னிடம் பராதிகள் ஏதும் இருக்கமுடியாது அல்லவா? எழுதிய கவிதையை வாசித்துக்காட்டி அதன் நுணுக்கங்களைப் பற்றி விரிவாக உரையாடுவதற்கான பெருந்தன்மைகள் அபூர்வமானவை.


நான் எனக்காக மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறேன். வலைப்பதிவு என்பதையும் ரகசியமான ஒரு நாட்குறிப்பேட்டைப் போன்றதொரு வெளியாக உணர்கிறேன். அத்தகைய அக உலகிற்கான பிரவேசங்கள் மிகக் குறைந்த நபர்களுக்கே சாத்தியமானது என்பதை நீங்கள் அறிந்ததில்லையா? என் எழுத்தின் இறுக்கத்தைத் தாண்டி செல்வதற்கான துணிவை எடுத்துக்கொள்வோருக்காக மட்டுமே நான் எழுத்தைத் திறந்துகொடுக்கிறேன்.


மெல்லிய குறட்டை சத்தங்கள் என் வரிகளுக்கிடையே ஒளிந்திருக்கக்கூடும். என் வாழ்வின் சுவாரசியங்கள் குறித்த சத்தியங்களை எழுத்தின் வழியாக செய்து கொள்ளவேண்டிய அவசியமில்லை தானே! அத்தகைய சத்தியங்கள் வேட்டைநாய்களுடையவை என்று ஒரு பழமொழி உண்டு. நான் நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். அதில் எழுதுவது என்பது என் தீவிரத்தை ஆற்றுப்படுத்தும் ஒரு பணி. நிறைய பயணம் செய்தல், வேறு வேறு உலகங்களை என் ஆழ் மனநிலைக்கும் உடல்நிலைக்கும் பரிச்சயப்படுத்திக்கொள்ளல் என...அதில் எழுத்தை மட்டுமே அதிகாரமயமாக்காமல் வைத்துக்கொள்ள முடியுமானால்... என் கவலைகள் எல்லாம் என் அக உலகம் பற்றியது தான். அதை எழுத்தில் கொண்டு வருவதற்கான மூர்க்கமும் ஆதங்கமும் எனக்கு இல்லவே இல்லை.



எந்தப் பட்டியலில் அடக்கினாலும் அடக்காவிட்டாலும் என் பெயர் காலத்தின் நதியில் மிதந்து செல்லும் ஒற்றைச் சருகு. எல்லாருடைய பெயரும் அப்படித்தானே?



வாசிக்க வாசிக்கத் தெவிட்டாத எழுத்தாக, இத்தனை வருடங்களுக்குமான ஊக்கத்தைத் தன்னகத்தே கொண்ட கவிதைகளாக இருப்பவை இளங்கோவடிகளின் வரிகள் மட்டுமே. நல்ல வேளையாக தன் பெயரை ஒரு குறியீடாக வைத்து அரசியல் செய்வதற்கான காலம் அவருக்கு இல்லை என்பது அவரின் கவிதை உலகத்திற்குள் பயணிக்க என்னை அனுமதிக்கிறது. எளிதாகவும் இருக்கிறது. கண்ணகியை கவிதை படைக்க ஒரு சாக்காகவே வைத்து தன் அறங்களைப் பயின்றிருக்கிறார். இன்று வரை அவர் இடம்பெற்ற பட்டியலில் வேறு எந்த எழுத்தாளர் பெயரும் இல்லை.



இன்னும் மிச்சம் இருக்கிறது என்னுடைய வாதம். பெண்ணாகப் பிறந்துவிட்டதாலேயே என்னைப் பெண் என்றும் அதற்கான நியமங்களையும் என் மீது சுமத்தாதீர்கள் என்பதே அது. நான் ஒரு பெண் மட்டுமே அல்ல. பெண் என்பது முதன்மையான சமூக அடையாளம் அவ்வளவே. வேறு அக புற சமூக அடையாளங்களும் எனக்கு உண்டு. ஆனால் பெண்ணின் இயலாமைகள் துயரங்கள் எல்லைகள் உச்சங்கள் இவற்றிற்கிடையேயான தொடர்புகள் பொருத்தப்பாடுகள் பற்றிய சிந்தனைகள் என்னிடம் தீராதவையாக இருக்கின்றன. ஆனால் என் வாழ்வில் சம்பந்தப்படாத நபரையோ பெண்ணையோ பற்றி விமர்சிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அவர்கள் என்னிடமிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றனர்.



இதை எழுதுவதற்கு முற்றிலும் காரணமான சத்தியாவின் கடிதத்திற்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். சத்தியா, தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல எனது தெரு எவர் வீட்டு வழியாகவும் நீள்வதில்லை என்பதால் அவர் கொடுத்திருக்கும் பட்டியலை திரும்பப்பெற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.



சத்தியா கவிதையின் வரலாற்றில் ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுவதா என்று அநியாயத்திற்குக் கவலைப்பட்டிருந்தார். கவிதையின் வெளி பொது. அல்லது தேவதேவன் சொல்வதைப் போல சொர்க்கம் அது.

தேவதேவனின் ‘அறுவடைகவிதை:

நீரில் தெரியும் நெற்கதிர்கள்

சொர்க்கத்தின் விளைச்சல்கள்

நாம் அதனை

நேரடியாய் அறுக்கமுடியாது.

அன்புடன்,

குட்டி ரேவதி

உடலுக்கே மண்





கூவிக் கூவிப் பெண்ணுடல் விற்கப்படும் தேசத்திலிருந்து வந்தவள் நான். பெண்ணென்ற என் ஒற்றை அடையாள முகமும் உனக்குப் போதாது என்றறிவேன். பிற அடையாளங்களும் உன்னால் வர்ணிக்கப்படுபவை. முலையின் அளவுகோல்கள், யோனியின் புனிதம், சருமத்தின் நிறம், வீடுறையும் தெரு, அப்பாவின் பூர்வீகம், என்னுடைய உடை நகை முரண் எல்லாமும். மண்ணை இயக்கும் துப்பாக்கிகளில் எதை நான் விரும்புகிறேன் என்ற அரசியலும். ‘விரைக்குறிகள்வடிவத்தில் தயாரிக்கப்பட்ட பொது நோக்குடையவை எல்லா ஆயுதங்களும். இதை அறியாதவள் அல்ல நான்.



பிரசவம் வளர்க்கிறேன் தினம் தினம் மண்ணைத் தின்று. மலம், மூத்திரம், உதிரம், விந்து நீர் சவைத்தூறிய மண் சுவைத்துத்தான் என்னுரிமைக்கருவைப் பேணுகிறேன். மண்ணுள் உறங்கும் என் அன்னையர், தந்தையர், மூதாதையர்களின் கொதிப்பான பிரக்ஞையால் என் பாதங்கள் கொப்புளிக்கின்றன. இப்படியாக மண்ணுக்கு அடியில் வேர்கொண்ட ரகசியங்களுடன் நீயறியாத சங்கேதங்களால் என்னால் பேசமுடியும். இது உனக்கு அதிர்ச்சியளிக்கலாம். யோனிக்குள் தம் அனுமதியின்றி நாக்கிறங்கிய அவமானத்தால் நாண்டுகொண்ட எம் தங்கையரும் அங்குதாம் உறங்குகின்றனர் என்பது உனக்குப் புதிய தகவல்.



என் கால்களை பதிந்தழுத்தி நடக்கும்பொழுது எலும்புகள் நொறுங்கும் சப்தங்களைக் கேட்கிறேன். வரலாற்றின் மாளிகைகளுக்குச் சல்லிகளானவை. ஆழம்வரை மண் சுமந்த உடல்பிதுங்கிக் குமிழிடும் உதிரச்சப்தமும். நெருப்புக்கு எரியூட்டப்படாமல் சூரியனுக்கு படுக்கையானவர்கள் உறங்கும் மண். வன்மம் சூப்பிய மாங்கொட்டைகளாய் எறியப்பட்ட யோனிகள் விருட்சங்களாய் எழும்பி நின்று கோடை வானிலையை மாற்றுகின்றன. நினைவுகளின் கைப்பாத்திகளில் நீர்ப்பாய்ச்சி வளர்க்கப்பட்ட மீன்குஞ்சுகளைப் போன்ற முலைகளோ சுடுகின்ற கரைக்கு ஏவப்பட்டதால் கண்விக்கித்து நிற்கின்றன. பாவம், மீன்களாகத் திட்டித்துவிடப்பட்டவை!



மண்ணை உண்டு வளரும் உடலில் பூக்கும் யோனிகளைத் தின்று வளர்கின்றன துப்பாக்கிக் குறிகள். படுத்தும் நின்றும் நிமிர்ந்தும் வான்நோக்கியும் விரைத்த அத்துப்பாக்கிகள் கண்டு கண்மூடிய எமதுடல்கள் மண்ணுக்குள் உறங்காது. உறங்கவே உறங்காது. பாதாளக்குகைகளாய் முனகும் கவிதைகளோ நம் குழந்தைகளுடையவை. பல தலைமுறைக் குழந்தைகள். இதழ்களுக்கிடையே நீவிர் ஆதுரமாய்ப் புகைத்துக் கற்பனைகளை எரிக்கும் சிகரெட் எனக்கென்னவோ யோனியின் மடல்களுக்கிடையே திணிக்கப்படும் துப்பாக்கி முனையையே நினைவூட்டும். இக்காட்சியை மட்டும் நினைவின் மின்னணுப் பலகையிலிருந்து நீக்கமுடிந்தால்...



இம்மண் எனது. உனது என்பதும் எனது. காதலனே, எனதுடலே நான். மண்ணில் வேர்களூன்றி நின்று கைகள் மலர்த்தும் தாவரமும் நான். மண்ணுக்கு மழை வேண்டும். மழையின் கூதிரில் குடைவிரித்து நிற்கும் வானம் நான். மண்ணுக்குச் சூரியன் வேண்டும். ஓயாத ஆலையென்ற எனதுடலால் உரக்கப்பாடும் விடுதலை யான். மண்ணுக்கு நான் வேண்டும். அடுக்கடுக்கான யோனிகளால் தலைமுறை உடலெனும் பூங்கொத்தேந்தி வரும் பெண் யான். உடல் மண்ணுக்கு இல்லை. என்னுடலுக்கே மண்.





குட்டி ரேவதி

மே 15 2010

(இக்கவிதை என் தோழி கோகிலவாணிக்குச் சமர்ப்பணம்)

4 மாதங்கள் 3 வாரங்கள் 2 நாட்கள்


ருமேனிய திரைப்படம்



4 மாதங்கள் 3 வாரங்கள் 2 நாட்கள் என்றொரு திரைப்படம். பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரே அறையில் வசிக்கும் இரு தோழியருக்கு இடையில் நடக்கும் கதை. கதை என்பது ஒரே நாளின் பகலில் தொடங்கி இரவில் முடிந்து விடுகிறது. கபிதாவின் கருவைக்கலைக்க அவளின் தோழியான ஒடிலியா ஒத்துழைப்பதும் அதற்காக நிறைய ஏற்பாடுகளைச் செய்வதுமென தொடங்குகிறது கதை. 1987 ன் ருமேனியாவில் கருக்கலைப்பு என்பது சட்ட விரோதமான செயல். அந்நிலையில் எவருக்கும் தெரியாமல் இந்த நடவடிக்கையில் இறங்கிய தோழியரைப் பதற்றமும் பயமும் தொற்றிக்கொள்கின்றன. கருக்கலைப்பு செய்வதற்கான தொகையையும் இவர்களால் சமாளிக்க இயலாமல் ஒடிலியா அவளின் காதலனிடம் கடன் வாங்குகிறாள். மேலும் அன்றைய ஒரு நாள் ஹோட்டலில் தங்குவதற்கான பொருள் தேவையையும் பணத்தேவையையும் மற்றவர்களிடமிருந்து பெறுகின்றனர். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்யும் ஓர் ஆளையும் நியமித்துக் கொள்கின்றனர். அவன், கபிதா கருவுற்றிருக்கும் காலம் தோழிகள் கூறியது போல 3 மாதங்கள் இல்லை, 4 மாதங்கள் 3 வாரங்கள் 2 நாட்கள் என்ற உண்மையைக் கண்டறிகிறான். அந்நிலையில் கருக்கலைப்பு செய்வது அபாயகரமானது என்று பின்வாங்குகிறான். அவன் கேட்கும் தொகையைக் கொடுப்பதாகக் கூறி அவனைச் சமாதானம் செய்கின்றனர். பின் அவன் கருக்கலைப்பிற்கான ஏற்பாட்டில் இறங்குகிறான். மருந்தூட்டப்பட்ட சலாகை ஒன்றை அவளின் கருவாய்க்குள் செலுத்தி, கரு வெளிப்படும் உணர்வு ஏற்படும் வரை அசையக்கூடாது என்று கூறிவிட்டுச் செல்கிறான்.



இதற்கிடையில் ஒடிலியா அவளது காதலனுடைய அம்மாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொள்வதாக உறுதியளித்திருக்கிறாள். ஆகவே கபிதாவை ஹோட்டல் அறையில் விட்டுவிட்டுச் செல்கிறாள். பிறந்த நாள் விழாவில் முழுமனதுடன் அவளால் கலந்துகொள்ள முடியவில்லை. அரைகுறை மனதுடன் ஈடுபடுகிறாள். மேலும் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மருத்துவர்களாய் இருக்கின்றனர். அவர்களின் உரையாடல் வேறு ஒடிலியாவைத் துன்புறுத்துகிறது. அங்கிருந்து கபிதாவினைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாள். இயலவில்லை. அவசரமாக ஹோட்டல் அறைக்குத் திரும்புகிறாள். அங்கு கபிதாவின் கரு வெளிப்பட்ட நிலையில் சுருண்டு படுத்திருக்கிறாள். பின் ஒடிலியா சிதைக்கப்பட்ட கருவை ஒரு துணியில் சுருட்டி எடுத்துக்கொண்டு தனது பையில் எடுத்துச் சென்று அப்புறப்படுத்துகிறாள். ஹோட்டலுக்குத் திரும்பும் ஒடிலியாவிடம் கபிதா கருவை என்ன செய்தாய் என்று கேட்கும்போது, ‘இனி நாம் அதைப் பற்றி எதுவுமே பேசிக்கொள்ளவேண்டாம் என்று கூறுவதுடன் படம் முடிகிறது.


இப்படம் ஒரு நேர்க்கோட்டுக்கதை. காமிராவைக் கையில் தூக்கிச் சுமந்து நகரும் தன்மையுடன் படம் பிடிக்கப்பட்ட காட்சியமைப்பு. எந்த வகையிலும் நேரடியாகத் தொனிக்காமல் அரசியலின் நுணுக்கமான சமூக ஊடாட்டங்களை விவரிக்கும் திரைக்கதை. நீள நீளக்காட்சிகள். இயல்பான உரையாடல். இதுவரையிலும் வேறு எந்தத் திரைப்படத்திலும் இத்தகைய உரையாடலைப் பார்த்ததில்லை, திரைக்கதையில் இணைத்தது இல்லை எனும் அளவிற்கு இயல்பான மிகை இல்லாத ரகசியமாகப் பதிவுசெய்யப்பட்டதைப் போன்ற உரையாடல்கள். நமது தமிழ்ப்படங்களில் என்றால் ‘வசனம்என்று டைட்டில் கார்டு போடுவோமே அது தான். சட்டத்திற்குப் புறம்பான ஆனால் மனித வாழ்விற்கு இயைபான ஒரு விஷயத்தை இரு பெண்கள் கையாள்வதில் உள்ள அச்சம் நிறைந்த பார்வையும் அவலத்தின் கடைநிலைக்கும் தம்மைக் கொண்டு செல்ல நேர்வதும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் கனிவும் கதையோடு நெய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஒடிலியா கபிதாவின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க நேர்வதும் அதற்கான மனித அறமும் தான் அவளை கபிதாவுக்கு ஆதரவாக இருக்கத் தூண்டுகிறது. இதை ஒடிலியா தனது காதலனுடான உரையாடலில் விவரிக்கிறாள். தான் கருவுற்றிருந்தால் அவன் என்ன செய்யக் கூடும் என்பதை விவாதமாக்குகிறாள்.


1987- ல் ருமேனிய கம்யூனிச கட்சியின் ஜனாதிபதியாக இருந்த நிகோலே செயுஸெஸ்குவின் ஆட்சியில் இருந்த அடக்குமுறையின் நுட்பமான பிரதிபலிப்பு தான் இப்படம் என்கிறார் இத்திரைப்படத்தின் இயக்குநர் கிறிஸ்டியன் முங்கியு. இந்தக் கதை யாரோ என்றோ இயக்குநரிடம் பகிர்ந்து கொண்ட ஒரு கதையின் இழை தான். மேலும் முடிவெடுக்கும் தருணங்களில் எல்லாம் மனிதர்கள் நடைமுறைக்கொத்த, தர்க்கப்பூர்வமான முடிவெடுப்பதில்லை என்பதையும் உச்சபட்சமாகவும் உடனடியாகவும் மனிதர்கள் என்ன செய்யக்கூடும் என்பதையும் மனதில் வைத்தே இக்கதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்தேன். இத்தகைய மனிதத்தன்மை தான் புனைவுக்கு வழிவகுக்கிறது என்கிறார். தீவிர கம்யூனிச அரசின் கீழ் செயல்பாட்டில் இருந்த கருக்கலைப்பு தடை என்பதன் விளைவுகள் நுட்பமில்லாமல் இருந்ததையும் அதே சமயம் அது சமூகத்தில் மறைமுகமான அச்சத்தை விளைவித்துக் கொண்டிருந்ததையும் கதையாக்க விழைந்திருக்கிறார். அது போலவே அவ்வாறான கருக்கலைப்பு இன்ன பிற சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனிதர்கள் அறம்சார்ந்த கேள்வியற்றவர்களாய் இருந்தது அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு ஏதுவாக இருந்ததே அன்றி பிரச்சனைகள் தீர்க்கவில்லை. 2007 ம் ஆண்டின் கேன் திரைப்படவிழாவில், ‘தங்கப்பனைவிருதை வென்ற இப்படம் ருமேனிய சினிமாவின் புதிய அலை என எல்லா விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. பார்வையாளர்களையும் திரைக்கதைக்கு உள்ளே இழுக்கும் நுட்பமான திரைக்கதை வடிவம் இவரது சிறப்புத்தன்மை எனப்படுகிறது. திரைப்படத்தின் கடைசிக்காட்சியில் ஒடிலியா தனது முகபாவனைகளுக்கிடையே பார்வையாளர்களை நோக்கித் திரும்புவதுடன் படம் முடிகிறது. அந்தக் கணத்தில் பார்வையாளர்கள் எல்லோருமே திரைக்கதைக்குள் வாரி உள்ளிழுக்கப்பட்டுவிடுகின்றனர். இது சினிமாவிற்கு முற்றிலும் புதிது.



குட்டி ரேவதி