நம் குரல்

கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடவுளை இல்லாமல் ஆக்கினேன்


எல்லாம் அறிந்தவனான ரோஹித்தும் அந்த நீலக்கயிற்றின் சுருக்கில் தலையை இறுக்கிக் கொண்டான் நட்சத்திரங்களைக் கண்களிலிருந்து உதிர்த்துவிட முடிவெடுத்தவன் சில நட்சத்திரங்களைத் தந்து போகப் போராடினான் செட்டைகளைத் தன் மீதே மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டான் உடலுக்கும் இதயத்திற்கும் இடையே பயணம் தூரமாகிப் போக அவன் சூரியனைத் தன் தலைமீதே சுமந்து நடந்தான் விடுதலையின் பதாகை வானமாகி மேலே எழும்பிக் கொண்டேயிருந்தது
ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு அவன் கனவுக்கோட்டை எதையும் வாங்கவிரும்பவில்லை புதிய வீடும் சாளரங்களும் கட்டவிரும்பவில்லை கடனும் பசியும் சில நூல்களும் அவன் தனக்கான கூரையைத் தேடினான் உயரமான கூரைக்கு ஏறிப்போக ஏணியைத் தேடினான் ஏணியின் மீதேறும்போதெல்லாம் கூரை மேலெழும்பிச் சென்றது எழும்பி மேலே சென்று கொண்டே இருந்தது ஏணியின் தேவையின்றி கூரையின் கீழ் வாழ்ந்தவர்கள் அவனுக்கு ஏணி அவசியமற்றது என்றனர் ஏணியைப் பறித்து மடித்து உடைத்தனர்
கூரை உடையவர்களுக்கு ஏணி அவசியப்படாதவர்களுக்கு கடவுள் எதுக்கென அவனை இல்லாமல் ஆக்கினேன்
(ரோஹித் வெமூலாவிற்கு)
குட்டி ரேவதி


* (சென்னையில் சனவரி 24, 2016 அன்று, Pranjya ஒருங்கிணைத்திருந்த Zero Apologies கவிதை வாசிப்பு நிகழ்வில் வாசிக்கப்பட்டது.)

நட


நடந்த கால்கள் களைக்க
திசை அழியும் எல்லையிது


நட நட என்கின்றன கால்கள்
முள் உறுத்தும் வெளியிலும்

ஒட்டுமுகங்கள் நோக்கியும்
சலிக்காத ஒரு பொழுதும் இது

குளத்தில் கல்லெறிந்த வட்டங்கள்
எட்டும் மட்டும் விரிந்து கரைபோக

சேற்றில் அமிழ்ந்த காலை
எடுத்து வைத்து நகர்ந்திடு

காலைப்பற்றியிழுக்கும் சேறு
எல்லையிடும் வட்டங்கள்

வேர்க்கால்கள் விழுதிடும் முன்
ஊர்சேர ஊர்கின்றன கால்கள்

உள்ளத்தனிமை வெள்ளம் போல்வர
ஆற்றிலும் கால்கள் வீசும் கைகள்

ஊன் இளகி எலும்பு உருக்கும்
நோவையும் தீர்த்து நடந்திடு

கால்களை இயக்கிடு
வேறு கால்கள் உனக்காக நடந்திடா

நடநட என்கின்றன கால்கள்
சூடு கொப்புளிக்கும் பாலையிலும்.

குட்டி ரேவதி

என் நூல்கள்!




1. "நிறைய அறைகள் உள்ள வீடு", சிறுகதைத் தொகுப்பு, முதல் பதிப்பு, 2013, பாதரசம் பதிப்பகம்

2. "அகவன் மகள்", கவிதைகள், முதல் பதிப்பு, 2013, புது எழுத்து பதிப்பகம்

3. "இடிந்த கரை", கவிதைகள், முதல் பதிப்பு, 2012; ஆதி பதிப்பகம்.

4. "ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகள்", தமிழ் நவீனப்பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த மீளாய்வுக் கட்டுரைகள், முதல் பதிப்பு, 2011, நாதன் பதிப்பகம்.

5. "முத்தத்தின் அலகு", ஆசிரியர் எழுதிய காதல் கவிதைகள், முதல் பதிப்பு 2011, ஆழி பப்ளிஷர்ஸ்.

6. "நிழல் வலைக்கண்ணிகள்", சாதியையும் பாலியலையும் ஆராயும் பெண்ணியக் கட்டுரைகள், முதல் பதிப்பு, 2011, வம்சி புக்ஸ்.

7. "மாமத யானை", கவிதைகள், முதல் பதிப்பு, 2011, வம்சி புக்ஸ்.

8. "முள்ளிவாய்க்காலுக்குப் பின்", ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த கவிஞர்களின் ஈழ இனப்படுகொலை பற்றிய நினைவுக்கவிதைகள், முதல் பதிப்பு, 2011, ஆழி பப்ளிஷர்ஸ்.

9. "காலத்தைச் செரிக்கும் வித்தை", தமிழ்ப் பெண்ணிய விவாதங்களை முன்வைக்கும் கட்டுரைகள், முதல் பதிப்பு, 2010, ஆழி பப்ளிஷர்ஸ்.

10. "யானுமிட்ட தீ", கவிதைகள், முதல் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.

11. "உடலின் கதவு", கவிதைகள், முதல் பதிப்பு, 2006, பனிக்குடம் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்

12. "தனிமையின் ஆயிரம் இறக்கைகள்", கவிதைகள், முதல் பதிப்பு, 2003, பனிக்குடம் பதிப்பகம்; இரண்டாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.

13. " முலைகள்". கவிதைகள், முதல் பதிப்பு, 2002, தமிழினி வெளியீடு, இரண்டாம் பதிப்பு, 2003, பனிக்குடம் பதிப்பகம்; மூன்றாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.

14. "பூனையைப் போல அலையும் வெளிச்சம்", கவிதைகள், முதல் பதிப்பு, 2000, தமிழினி வெளியீடு; இரண்டாம் பதிப்பு, 2003, பனிக்குடம் பதிப்பகம்; மூன்றாம் பதிப்பு, 2011, அடையாளம் பதிப்பகம்.




குட்டி ரேவதி

கவிதைகளைப் புரிந்துகொள்ள முயல்பவர்களுக்கு!



கவிதைகளைப் புரிந்துகொள்ள முயல்பவர்கள், புதிதாய் எழுத வரும் கவிஞர்களின் கவிதைகள் வரை தேடித்தேடி தொடர்ந்து வாசிக்கவேண்டும்.

கவிதைகள் புரியாமல் போவதற்கு முதல் காரணம், நீங்கள் இன்னும் கவிதை வாசிக்கப்போதுமான மொழி அறிவைப் பெறவில்லை என்பது தான்.

கவிதைகளுக்குள்ளே, சங்கம், சித்தம், கலப்பு, சனாதனம், நவீனம், பெண்மொழி, ஒடுக்கப்பட்டோர் மொழி, நாட்டுப்புற மொழி, ஈழம் என காலந்தோறும் நிலந்தோறும் தோலுரித்து வளர்ந்த 'மொழியின் பருவம்' அடர்ந்து இருக்கிறது.

கவிதைகளை வாசிக்க அறிந்து கொள்ளல் என்பது, மொழியின் வெவ்வேறு காலத்தையும் அறிந்திருத்தல் என்பதாகத்தான் அர்த்தம்.

புரியாமல் போகும் பட்சத்தில் அக்கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்தல் அவசியம். அப்பொழுது, அடிமனதில் தடதடக்கும் அந்தக்கவிதையின் மொழி லயம், கவிதை புரிவதற்கு உதவக்கூடும்.

சில சமயங்களில், கவிதையின் தலைப்பையும் கவிதையையும் கூட்டித்தொடர்புபடுத்திப் பார்க்கும்போது, கவிதை என்ன சொல்ல வருகிறது எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
முற்றுப்புள்ளிகள், அரைப்புள்ளிகள், காற்புள்ளிகள் வாசிப்பை இடறி, நவீனக்கவிதை மொழியையும் பொருளையும் உணரமுடியாமல் தடுக்கும் வேகத்தடைகள். ஆகவே, தான் செய்யுள் வடிவம் நவீனம் அடையும் போது இவற்றையெல்லாம் இழந்தது என்று நினைக்கிறேன். என்றாலும், கவிதைகளுக்குள் இவையெல்லாம் ஒளிந்து மறைந்து இருப்பதையும் உணரமுடியும்.
கற்பனையின் விடுதலையும் சிந்தனையின் விடுதலைப்பூர்வமான பயனமும் தான் கவிதையின் இலக்கு. கவிஞர் எழுதாத நோக்கத்தையும், அர்த்தத்தையும் கூட நுட்மாக வாசிக்கும் வாசகனும், உருப்பெருக்கிக் கண்ணாடி வழி நோக்கும் விமர்சகரும் கண்டறிந்துவிட முடியும். இது, கவிதைக்குக் கூடுதல் சிறப்பே.

ஒவ்வொருவரும் உறக்கத்தில் காணும் கனவினைப் போல அவரவரால் அர்த்தம் பெறும், 'மொழி அடுக்கு' தான் கவிதை.

ஃபேஸ்புக்கில், நகைச்சுவை துணுக்குகளையும், வரி மடிப்புகளையும், உரைநடை அங்கதங்களையும் கவிதை எனும் பெயரில் பதிவிடும் போது, கவிதையின் நல்லதொரு வாசகர், சிரித்துவிட்டு அதைக் கடந்து போகமுடியும்.

மேலும், "ஜர்னலிஸ" மொழியைத் தாண்டவிரும்பாதோர் மற்றும் தட்டையான ரசனையுடையவர்கள், ஒரு கவிதை புரியவில்லை என்று சொல்லும் போது அந்தக் கவிதை ஒன்றும் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.

கவிதை அந்தந்தக்காலத்தில் கருக்கொண்டு பொரிந்து முட்டையிலிருந்து வெளியேறி சிறகு விரிக்கும் பறவை. பறவையின் சிறகசைப்புக்கு ஈடுகொடுத்துப்பறக்கும் வலுப்பெற்றோர், தன் மனித வாழ்க்கையை உணர்ந்து வாழ்கிறார் என்று பொருள்.

ஊடகங்களும் மொண்ணையான சிந்தனையுடையோரும் அழகியல் உணர்வற்றோரும் கவிதை கடினமானது, புரியாதது என்றே சொல்லிச்சொல்லி கவிதையைப் புறக்கணித்துவிட்டார்கள்.

கவிதையைப் போல தனிமனிதனின் இதயத்திற்கு நெருக்கமான கலை வடிவம் ஏதுமில்லை!





குட்டி ரேவதி

பாலியல் அரசியல் கவிதை - 3





3. தட்டாமாலை


என் உடலை ஒவ்வொருமுறையும் காலியாக்குகிறேன்
மதுவின் சேகரத்தில் சுழலத் தொடங்கும் போதெல்லாம்
உடலை உனக்குள் கவிழ்க்கிறேன்
உடலுக்குள் மீண்டும் மதுவின் சுரப்பு அமிழ்தத்தின் வேலை
நாளங்களில் அதன் பாய்ச்சல் 
வேட்கையுடன் உன்னைத் தேடி 
உடலை உனக்குள் கவிழ்க்கிறேன்
நீ மதுவைப் பருக மட்டுமே இயன்றவன்

தட்டாமாலை சுழலும் உடலில் கைகோர்க்கத்
தயங்கியவனிடம்
மது வேலை செய்வதில்லை வெறும் கண்ணீரைப் போன்றதே
அமிழ்தச் சுவையுடையது பெண்ணின் மதுவும்
கைகோர்த்துக் கொள் மதுவின் வெப்பம் உன்னிலும் பரவி
நீயும் சுழலுவாய்
மெல்ல நீயும் நானும் தரையிலிருந்து உயருவோம்
உறுப்புகள் ஒன்றையொன்று கவ்விக் கொள்ள
அனுமதிப்போம்
மதுவின் ஊற்று அடர்ந்து வேகமாய்ச் சுரக்கும் கணத்தில்
நீ பருகும் வேகமும் உன் பவளவாய்ச் சிவப்பும்
கொள்ளை கொள்ளும்  காட்சியாகும்

நீ மது தேடி வீதிகளில் அலையும் 
ஒரு மகா குடிகாரன்
தாடைகளில் வளர்ந்த புல்வெளியிலும் 
மார்புகளில் மண்டிய புதர்களிலும்
தேடி அலைந்து கிடைக்காமல் போனதன்
சோகங்கள் பூத்துக் கிடந்து சருகாகும்
நூலாம்படை படரும்

மதுவைக் குடிக்க அலைபவன் நீ
மது சுரக்கும் உடல் அற்றவன் நீ
மதுக் குடுவைகளும் பானைகளும் தாழிகளும்
தேடித் தேடி ஒவ்வொரு உடலாய்த் தேடி
தோற்றுப் போவாய் நீ
அதற்கு ஒரு யோனி செய்யவேண்டும்
அதுவே மதுக்குடுவை மதுவின் தாழி
மதுவின் கடல்


குட்டி ரேவதி

பாலியல் அரசியல் கவிதை - 2

2. ஃபக்கிங் என்ற பிசினெஸ்




ஃபக்கிங் என்ற பிசினெஸ்
ஆண்கள் பெண் பாலியல் உறுப்பை
எரிச்சலுறுத்தும் ஒரு திராவக வார்த்தை
அல்லது
மனித இனத்துக்கே
ஃபக்கிங்கை கேடுகெட்டதாக அறிய வைக்கும்
ஒரு விடாமுயற்சியுடைய பிசினெஸ்
அப்படி ஒன்றும் அவர்கள் ஃபக்கிங் செய்யாமல் 
இருப்பதில்லை
காலையும் மாலையும் இரவும் கற்பனையிலும்
எந்த வயதுப் பெண் என்றாலும் அவளைக் கீழே வீழ்த்தி
நவ நாகரீகக் குளிர்பானத்தைக் குப்பியிலிருந்து
பருகிய சுகத்தை அடைவது போல
எளிதாகக் கடந்து செல்வார்கள் 
மனம் குமட்டும் ஒரு காட்சியை 
ஆற்றிக்கொள்ளுவது போல
கழிந்து விட்டு நகர்ந்து செல்வது போல
ஃபக்கிங் செய்யும் தொழில் நுட்பமே ஆண்மை 
எனப்படுவது
அவர்கள் செய்வதையே அவர்கள் எள்ளுகிறார்கள்
என்று கொள்ள முடியாது
பெண்ணின் மலர் போன்ற உறுப்புடன்
சம்பந்தப்பட்டது என்பதால்
ஃபக்கிங் என்பது ஒரு கெட்ட வார்த்தையாகும்
தகுதியைப் பெற்றது

 ஃபக்கிங் என்ற வார்த்தைகளை 
உதிர்க்கும் ஆணின் பிஸினசையே 
பெண்களும் ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்
என்று அறிய ஆர்வமாக இருக்கிறேன்
எங்கெங்கும் ஃபக்கிங் என்ற சொல்
எதிரொலித்த போது
இருபாலின் உறுப்புகளையும் ஏலமிட்டது


ஏலங்களுக்குப் பெறப்படும் இவ்வுறுப்புகள்
இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில்
ஃபக்கிங் என்பது பிசினெஸாகும்
இயந்திரமே எல்லாவற்றையும் செய்வதில்

மனிதவிலங்கு பூரித்துப்போகலாம்


குட்டி ரேவதி

கவிதையும் அவமானங்களும்



எப்படியோ இப்பொழுதும் கவிதை தான் காப்பாற்றி விட்டது.

அருகே அருகே நகர்ந்து வந்து என்னைச் சுவைத்துப் பார்க்கத் திட்டமிருந்த, ரத்தச்சுவை கேட்கும் பிடாரிகளிடம் இருந்து மொழியின் வேட்கை தான் விரட்டியது.

கைக்கு எட்டாத தூரம் செல்லும் வித்தையைக் கவிதை தான் கொடுக்கிறது.

கவிதையிடமிருந்து, மனிதனின் மூளைச்சுவரின் மடிப்புகளில் கூட எந்த நஞ்சையும் மறைத்து வைக்கமுடியாது. பூஞ்சையைப் போல்
அது தன்னையே கொல்லும், என்னையே கொல்லும் என்று சொல்லும் அன்பைக் கவிதை மட்டுமே தந்துவிடுகிறது.

தனிமை தான் எவ்வளவு பாதுகாப்பானது. கண் முன்னே பரத்தி அடுக்கப்பட்டிருந்த எந்தப்புதியப் புத்தகமும்
ஈர்க்காத படிக்கு தனிமையின் பெருங்காட்சி கண்களை நிரப்பிக் கொண்டே இருக்கிறது.

யார் என்னை தம் அன்பின் செம்புக்குள் நிறைத்து வைத்து 'இது தான் நீ, இது மட்டுமே நீ' என்று சொல்வதில்
நான் பூரித்துப் போக முடியும்.

அன்பின் உச்சம் என்று சொல்லிய மறு கணம் எப்படி அவமானத்தைத் தந்து போகிறார்கள். 

அய்யோ, தப்பித்தேன். கவிதை, பிச்சைக்கார உடையில் இருக்கும் என்னை, மனதில் மேகங்கள் போல எண்ணங்கள் பறந்து கொண்டிருக்கும் என்னை கடலுக்குள் இழுத்துச் செல்கிறது.

நான் அலையாகக் கொந்தளிக்கச் செய்கிறது. கரையையும் இடிக்கக் கற்பிக்கிறது.

அவமானம். எல்லாமும் கையில் தந்ததாய்க் காட்டிக் கொண்ட பின், கடைசியாய் பரிசளிக்கப்படுவது ஓர் அவமானம். கவிதை அப்படிச் செய்வதே இல்லை. உச்சம். உச்சத்தின் பரவசம். இது மட்டுமே கவிதைக்குத் தெரியும். கவிதைக்குத் தெரிந்தது எல்லாம் இதுவே.

இலைகளை உதிர்த்து உதிர்த்து துளிர்க்கும் சுரவேகம், கவிதை தந்தது. உங்கள் காலடி நிழல் உங்களுக்கே. அதில் என்னையும் தங்கச் சொல்லுதல் என்னை அவமானம் செய்யும்.

கவிதை பெரிய குடை. அதில் நீயும் அடங்குவாய். நானும் நிற்பேன். எல்லை என்று ஏதும் இல்லை. அடுத்தடுத்த கணத்திற்கு இழுத்துச் செல்லும் நாயின் விளையாட்டு, கவிதையிடம் உண்டு.

மனிதர்கள் போல், 'இவ்வளவு தான் உனக்கு, எனும் அவமானம் செய்தல் இல்லை அதனிடம்'. நான் நாயையும் சொல்கிறேன். கவிதையைத் தான் சொன்னேன்.

எப்படியோ, இப்பொழுதும் ஒரு முறை தப்பித்தேன். எவரிடமும் சிக்காமல் கவிதை கிணற்றிலிருந்து ஒரு வாளி வழியாக என்னை இறைத்து வெளியே கொட்டியது. நான் பாய்ந்தோடி பயிர்களைக் கண்டேன்.

இதோ ஓடுகிறேன், வரப்பின் வழியே, வாய்க்கால் வழியே, கண்டபடியெல்லாம் தாறுமாறாக.



குட்டி ரேவதி




'இடிந்த கரை' நூல் குறித்த மதிப்புரை - நறுமுகை தேவி






ஒருமுறை கூட்டத்திற்காக வெளியூர் சென்றிருந்தேன்..கூட்டம் முடிந்தவுடன் என்னை வழியனுப்பி வைக்க ஒரு பிரபல எழுத்தாளர்,நண்பர் வந்திருந்தார்..மிகவும் சீரியஸ் ரைட்டர் என்று அறியப்பட்டவர் அவர்.நாங்கள் ரயிலடியில் பேசிக்கொண்டே காத்திருந்த போது வேறு இரயில்கள் எங்களைக் கடந்து சென்றன.ஒரு குழந்தையைப் போல வெகு குதூகலத்துடன் அவர் அதை ரசித்துப் பார்த்தார்..அவர் ரசிப்பதை,அவரின் குதூகலத்தை நான் வெகுவாக ரசித்தேன்.அவர் சொன்னார்..இந்த நிலம் அதிர்கிறது இல்லையா?அப்பாரயில் எத்தனை முறை பார்த்தாலும் பிரமிப்பா இருக்குதில்ல?அப்போது அவரிடம் ஒரு சீரியஸையும் என்னால் பார்க்க முடியவில்லை..ஆனால் அவர் அவருக்கு உண்மையாகத்தான் இருந்தார்.பேசினார்..அது தான் மனித மனம்..அதே போலத்தான் கடல்..
கடல் அசையுமா?அசையும்../கடல் அசைக்குமா?அசைக்கும்../கடல் நனையுமா/நனையும்…../கடல் நனைக்குமா?நனைக்கும்…/கடல் நகருமா?நகரும்..

ஆம்..கடல் நகரும்..நகர்ந்து நகர்ந்து வந்து குட்டி ரேவதி மாதிரியான தனக்குப் பிடித்தவர்களின் எழுத்தில் ஒளிந்து கொள்ளும்..தன்னை வெளிக்காட்டிக் கொண்டால் மீண்டும் அழைத்துப் போய் விடுவார்கள் என்ற அச்சத்தில் அது கவிதைகளுக்குள் ஒளிந்து வாழும்

எத்தனை வர்ணனைகளுக்கோ,எத்தனையோ எழுத்தாளர்களின் பேனா மையினுள்ளோ அலையடித்த கடல் தான் இது..ஆனாலும்,தன் அத்துணை அந்தரங்கத்தையும் நேர்மையாகச் சொல்லும் பதிவுகளுக்குள் சென்று அடைக்கலமாகி விடுவதில் தான் அது தன் வாழ்வாதாரத்தைக் காண்கிறது..
தேவதையென்றோ.அரக்கியென்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள் அதற்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை..அது தான் குட்டிரேவதி..போகிற போக்கில் பூ உதிர்த்து விட்டுப் போகிற பூமரமல்ல அவளது எழுத்துகள்..அது தேவைக்கேற்பப் பூத்துக் காய்க்கிற கனிமரம்..
காதல்,காமம்.அரசு,மக்கள்,போராட்டங்கள்,திருநங்கைகளின் நிலை எனப் பரவலான விரிந்த மற்றும் செறிந்த பார்வையுடன் அகன்றகடலென விரிகிறது இத்தொகுப்பு.

இவருடைய இந்த இடிந்தகரை தொகுப்புக்குக்குள் சென்று திரும்பும்  யாவரும் முழுக்க முழுக்க கடலின் உவர்நீரில் மூழ்கி தொப்பல் தொப்பலாக நனைந்து விடுவார்கள் என்றால் அது மிகையில்லை.
 கடலில் நனைந்து,விளையாடி,கரையில் நண்டுகளோடு கூட ஓடி,சிப்பி பொறுக்கி,கட்டுமரமேறி,மீன்கள் பிடித்து,கலங்கரை விளக்கின் வெளிச்சப்புள்ளியில் நகர்ந்து, யாரையும் ஒரு நெய்தல் நிலத்து மனிதர்களாக்குகின்றன இக்கவிதைகள் .

.நெய்தலின் பூச்சூடி,நெய்தலின் அதிகாலையில் அவள் காதலனுக்காகக் காத்திருந்த வேளையிலே தான் அரசர்களின் ஆணைகளுக்கேற்ப அவளுக்கான நிலத்தைப் பறித்து அவளை,அவளின் காதலனை தேசத் துரோகியாக்கி  நாடகமாடுகிறது அதே அரசு எனும் இயந்திரம்
மார்க்கச்சைகளில் கடல் மணல் நிறைகிறது/யோனிகளில் பூக்கள் வளர்கின்றன/உடலிலோ உப்பு பூத்து நீறெனச் சேர்கிறது/ஒரு கடலையே குடித்து விட்டவளிடம்/ஒரு கை நிரள்ளி இது தான் கடல் எனாதே/உடலுக்குள் ஒரு கடலையே நிரப்பிச் சுமப்பவளிடம்/ஒரு சூரியன் ஒரு குளிர் நிலவு வந்து சேர்ந்த பெரு நதிகள்/எல்லாம் இருக்கின்றன

இங்கிருந்து துவங்குகிறது குட்டி ரேவதியின் இடிந்தகரைக்கான கவிதைப் போராட்டம்..
அணு உலை தொடர்பான கவிதைகளும்,அது குறித்த போராட்டங்களின் செய்திகளும் செறிவாய் அடர்ந்திருக்கின்றன.இந்தப்போராட்டத்தில் பெண்களின் உணர்வும்,தீவிரமும் வார்த்தைகளில் சொல்லி நிரப்ப முடியாத அளவுக்கான ஆழமானவை என்பதை இவரது கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன..தொகுப்பு முழுவதும் விதவிதமான உணர்வுகளின் கலவையாகவே மிளிர்கின்றது.பெண்ணுடலை ஒரு கடலாகவே விரித்துப் பார்க்கும் ரேவதியின் பல வரிகள் மிகவும் பளிச்!பளிச்!
கடலை இழந்த சங்கு போல-என்ற கவிதையில் ஒரு வரி/கடலை உடலுக்குள் சுமந்து திரியும் பெண்ணுக்கு/குரல் வளர்வதில்லை/சொற்களை அவள் வளர்ப்பதில்லை.” மிக மிக அழகான வரிகளாகத் தோன்றிற்று எனக்கு.
அரசாங்கத்தை மக்கள் மீதான அதன் அலட்சியத்தைக் கடுமையான வார்த்தைகளால் சுட்டுகிறார் அவர்.’தமிழகத்தைத் தேசம் என்கிறோம் நாங்கள் என்ற கவிதையில்கொலைகளை ஒத்திகை பார்க்கும் அரசுச் சமூகம்/எங்கள் பிள்ளைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்/லத்திகளால் வரைபடத்தைத் தெளிவாக வரைந்து விட முடியும் என்று நம்புகிற ஓர் அரசுஎன்கிறார்.
அரசியின் சாட்டை என்ற கவிதையில்,அரசியாகப்பட்டவள் சூன்யக்காரியைப் போல நடந்து கொள்பவள் என்று துவங்கிவன்மத்தை சாக்லேட்டுக் கட்டிகளாக்கித்/ தோழியுடன் தின்று ருசித்த வனவாசக் காலங்களிலும் கூட /தன் கண்களில் மண்டிய சூன்யத்திலிருந்து மீள/அவள் கற்றுக் கொண்டதேயில்லைஎன்கிற வரிகளை வாசிக்கிற போது சமகால அரசியலும் உடன்பிறவாத் தோழிகளும் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை..

ரேவதியின் கவிதைகள் முழுதும் கடுமையான அரசியல் விமர்சனத்தை உள்ளடக்கியே இருக்கின்றன.கூடங்குளம் விவகாரம் துவங்கிய நாள் முதலாய் இன்றுவரை நடை பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்கள் பற்றிய விவரிப்பும்,அரசு இயந்திரம் அதை ஒடுக்க மேற் கொள்ளும் அத்தனை தகிடு தத்தங்களையும் இக்கவிதைகள் அறம் பிறளாமல் பேசுகின்றன.

அரசியல் சாராத கவிதைகள் அல்லது அரசியல் இல்லாத கவிதைகள் இருக்க முடியாது..ஒவ்வொரு படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒரு அரசியல் சார்ந்தே இருக்கவேண்டும்.அவ்விதத்தில் பார்த்தால் ரேவதியின் அரசியல் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கான ஆதரவுக் குரலாக ஒலிக்கின்றது.மக்களுக்குத் துரோகம் செய்யும் மக்களாட்சி முறையில் ஏற்பட்டுள்ள அவலத்தினை,அரசுகளின் ஆதிக்க மனோபாவத்தை அது கடுமையாகச் சாடுகின்றது.
எங்களுக்காகப் போராடிய ஆண்களின் காயங்களை/முத்தமிட்டு அவர்களை எம் கண்ணீரின் சேலைகளுக்குள்ளே/அணைத்துக் கொள்ளவும் அறிந்து கொண்டோம்/………………………..குடிசைகளில் ஒளித்து வைத்திருந்த காதலை/இதயத்தில் புதைத்துக் கொள்ளவும்/கற்றுக் கொண்டோம்-என்று போராட்டக்களத்தில் மிளிர்கின்ற கிராமியக் காதல் சொல்கிறார்..


கடலுக்குள் இறங்கி நடந்தவனைப் போலவே தான் இவனும் என்றாலும் இவன் கிறிஸ்து அல்ல.கிறிஸ்து அல்லவே அல்ல/கடலில் மூழ்கிய நிலவின் வட்டத்தைக் கால்களால் கலைத்தனர்/அதன் புனிதப் பாதையைத் தம் நடையால் அழித்தனர்/ என்று சொல்லுவதன் மூலம் மக்கள் போராட்டங்களை/அப்போராட்டங்களை வழிநடத்துபவர்களை வெறும் புனிதர்களாக்கிக் கடந்து போகிறவர்களை உலுக்குகிறார்.அவர்களைப் புனிதர்களாக்கி நீங்கள் தப்பித்துப் போகாதீர்கள்.உங்கள் கடமையைச் செய்யத்தவறாதீர்கள் என்கிறார்.


நாம் வாழும் பூமியில்,சொந்த நாட்டில்,சொந்த ஊரில் அந்நியர்களாக்கப்படுவது எவ்வளவு கொடுமையான விசயம் தெரியுமா?நம் கண்ணெதிரே நாம் வாழ்ந்த மண் நம்மிடமிருந்து களவாடப்படுவதும்,அதைக் கை பிசைந்து வேடிக்கை பார்க்க நேர்வதும் ஆறாத ரணம்.அதிலும் கடலும்,அதைச் சார்ந்த தொழிலும் உள்ள மக்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது காலவரையறையற்ற முறையில் இப்போராட்டத்தை நீட்டித்திருப்பது இந்திய வரலாற்றில் முதல்முறை மட்டுமல்ல யாராலும் மாற்றவே முடியாத நிதர்சனமான உண்மை.நீரால் வேலியமைத்து,நீர்சூழ நின்று தொடரும் இப்போராட்டத்தின் மிக முக்கிய குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் எந்தவொரு அரசியல் கட்சியும் இப்போராத்திற்குத் தலைமை வகிக்கவில்லை என்பதே..சமீபமாக நாட்டில் அதிகரித்து வரும் மக்களின் தன்னெழுச்சியான பல போராட்டங்களில் இடிந்தகரைப் போராட்டம் எல்லாத்தரப்புகளையும் சற்றே மிரளச்செய்திருக்கிறது என்றால் அது  மிகையில்லை எனலாம்.இந்த முறை இப்போராட்டங்களில் பெண்கலின் எண்ணிக்கையும்,பங்கேற்பும்,தீவிர அர்ப்பணிப்பும் மிக முக்கியமான ஒன்றாகவே கருத்தப்படுகிறது.பெண்வழிச் சமூகமாக,தாய்வழிச் சமூகமாக இருந்த காலமும்,கொற்றவை என்னும் பெண் தய்வ வழிபாடும் நினைவில் வருகின்றன.போராடக்களத்தில் பல பெண்கள் எல்லோருமே கொற்றவையாகப் பரிணமிக்கின்றனர்..இதை அழகாகச் சொல்லுகின்றது 
இவரது கொற்றவை கவிதை 
அதேபோல்,
ரேவதியின் காதல் பேசும் சில கவிதைகள் நம்மை மலைப்புக்குள்ளாக்குகின்றது.மழை பெய்கிறது என்ற கவிதையில்கழிகளில் அசையாமல் நிற்கும் கொக்குகளின் வேதனை மீதும் பெய்கிறது/இரக்கமற்ற பிரிவைக்கொடுக்கும் இரவின் நிலவிலிருந்து/குளிரால் வதைக்கப் பெய்கிறது/எம் மர்ம உறுப்புகளை குளிர் தன் கைகளால் தொட முயலும் இவ்விரவினில் உறங்காத என் கனவுகள் மீது பெய்கிறது/ஆண் என்று எவரும் அற்ற கற்பனைகள் இல்லாத/என் கண்களிலிருந்து பெய்கிறது/ -இதில்  ஆண் என்று எவரும் அற்ற கற்பனைகள் இல்லாத/என் கண்களிலிருந்து பெய்கிறது என்ற வரியை நான் மிக உச்சமாகக் கொண்டாடுகிறேன்..

ஆண்மை பெண்மைக்கு ஏங்குகின்றது.பெண்மை ஆண்மைக்கு ஏங்குகின்றது.மென்மை என்பது திண்மைக்கும்,திண்மை என்பது மென்மைக்கும் தவிக்கின்றது.இதுவே உலகியலின் உயிரியலை இயக்குகின்றது.ஒரு அலட்சியப் போக்கில் காதலைச் சொல்லி விட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கச் செய்ய அதுவே போதுமானதாக இருக்கிறது.ரேவதியின் எழுத்துகளில் அதைப் பார்க்க முடிகிறது..

ஒரு கவிதையில் சொல்கிறார்-புவி ஈர்ப்புவிசையை இழந்து விட்ட இருவரும் பூவைப் போலச் சுழன்றோம் வெளியில்/நிர்வாணம் ஒன்றையொன்று பார்த்து/அகம் மலர்ந்து கொண்டது/விலகிச் சென்றதும்/வெட்கித்துத் துணியைத் தின்றதுஅழகான வரிகள்..தேன் கூடு,ஆடை போன்ற கவிதையில் உண்மையிலேயே காமரசம் சொட்டுகிறது.

திருநங்கைகள் பற்றிய கவிதைகள் மனதின் ஆழம் பார்ப்பவை.மாயக்குதிரை,உன்னிடம் உண்டா ஒர் அரண்மனை,அரைப் பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள் என்ற கவிதைகள் பாலினத்திரிபும்,அதன் அவஸ்தையும் பேசுவன.அடன் வலியை நம்மை உணர வைக்கின்றது.@(வாசிக்கஅரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்)

இப்படி,கலவையாக இருக்கிறது இத்தொகுப்பு.ஆனாலும்,அதில் அதிகமாக இடிந்தகரையும்,அதன்போராட்ட மக்களும்,கடலும் மட்டுமே அலையாடிக்கொண்டிருக்கிறார்கள் நம் மனமெங்கும்….



நறுமுகை தேவி

அவள் ஒரு பெருங்கானகம்



மரங்கள் கிளைத்த பெருவெளியை வானமாகக் கொண்ட
அவள் ஒரு பெருங்கானகம்
தேனீக்கள் மொய்க்கும் இரைச்சலில் அடைந்தொழுகும்
மதுக்கலயத்தின் மலைமுகடுகள்

அடங்காக் காதலின் பேரருவி அலையென வந்து வீழ
மண்பரப்பில் படர்ந்து கிடக்கும் பசியகொடி
உடலின் படம் திமிர்ந்தெழும் சீரிய பாம்பின் பொலிவு
ஓயாமல் எழுதிக் கலையும் ஒளிக்கோலம்

அவள் தவிப்புகள் வேரேன பாய்ச்சல் எடுத்து
பூமியின் நீரோட்டம் அறியும்
பச்சிலைகள் பட்டாம்பூச்சிச்சிறகுகளுடன்
படபடக்கும்
ஒரு பேரருவியின் கருணையைச் சேலை இழுத்து வந்து
நிலம் சேர்க்கும் கடல் தேடிப் போகும்

நீவிர் பெண்ணென்று அழைக்கும் அவளுடைய
அத்தனை சொற்களும் பலிக்கும் மாமழையென
அணையாத நெருப்புடைய எந்த ஒற்றைச் சொல்லும்
உம்மைச் சபித்துச் சாம்பலாக்கும்

ஏனெனில் அவளிடம் மட்டுமே
கனியின் விதை பிளந்து
உள்ளே உறங்கும் மரத்தை விழித்தெழச்செய்யும்
பருவங்கள் அடர்ந்த யோனியென்று ஒன்று உண்டு

அணையாத நெருப்புடைய எந்த ஒற்றைச் சொல்லும்
உம்மைச் சபித்துச் சாம்பலாக்கும்
ஏனெனில் அவளிடமே யோனியென்று ஒன்று உண்டு



குட்டி ரேவதி

இந்தக் காதல்







இந்தக் காதல்
இவ்வளவு வன்முறையான
இவ்வளவு மென்மையான
இவ்வளவு மிருதுவான
இவ்வளவு நம்பிக்கையிழந்த
இந்தக் காதல்
பகல் பொழுதைப் போல் அழகாக
வானிலை மோசமாக இருக்கும் போது
மோசமாக இருக்கும்
அந்த வானிலை போன்ற
இவ்வளவு நிஜமான இந்தக் காதல்
இவ்வளவு அழகான இந்தக் காதல்
இவ்வளவு மகிழ்ச்சியான
ஆனந்தமான
மேலும் இவ்வளவு பரிதாபமானதுமான
இந்தக் காதல்
இருட்டிலுள்ள குழந்தை போல் பயந்து நடுங்கியும்
ஆனாலும் இரவின் மத்தியிலும்
நிதானமிழக்காத மனிதனைப் போல்
தன்னைப் பற்றிய ஒரு நிச்சயத்துடன்
மற்றவர்களைப் பயமுறுத்திய
அவர்களைப் பேசவைத்த
வெளிறச் செய்த இந்தக் காதல்
நாம் கண்காணித்தோம் என்பதால்
கண்காணிக்கப்பட்ட இந்தக் காதல்
துரத்தப்பட்ட புண்படுத்தப்பட்ட தொடரப்பட்ட
முடிக்கப்பட்ட மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட
இந்தக் காதல்
நாம் அதைத்
துரத்திப் புண்படுத்தி தொடர்ந்து முடிந்து மறுத்து
மறந்தோம் என்பதால்
இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதுடன்
முழுமையாக ஒளிர்ந்து கொண்டிருக்கும்
இந்தக் காதல் முழுமையாக
உன்னுடையது
என்னுடையது
எப்போதும் புதுமையான ஒன்றாக
இருந்து கொண்டிருப்பதோடு அல்லாமல்
மாறாதது
ஒரு தாவரத்தைப் போல் அவ்வளவு நிஜம்
ஒரு பறவையைப் போல் அவ்வளவு துடிப்பு
கோடைக்காலத்தைப்போல் அவ்வளவு
சூடானது அவ்வளவு உயிர்த்திருப்பது
நாம் இருவரும்
போகலாம் திரும்பிவரலாம்
மறந்துவிடலாம்
மீண்டும் உறங்கிப் போகலாம்
விழித்துக் கொள்ளலாம் அல்லலுறலாம்
மூப்படையலாம் 
சாவைப் பற்றிக் கனவுகாணலாம்
விழிப்புடன் இருக்கலாம் புன்னகைக்கலாம்
சிரிக்கலாம்
பின்னர் இளமையும் அடையலாம்
அங்கேயே நின்றுவிடுகிறது நம் காதல்
கழுதையைப் போல் பிடிவாதமாக
ஆசையைப் போல் துடிப்பாக
ஞாபகத்தைப் போல் கொடியதாக
மனக்குறைகளைப் போல் முட்டாள்தனமானதாக
நினைவுகளைப் போல் மென்மையாக
பளிங்கைப் போல் குளிர்ச்சியாக
பகல் பொழுதைப் போல் அழகாக
குழந்தையைப் போல் மிருதுவாக
புன்னகையுடன் நம்மைப் பார்க்கிறது
ஒன்றும் சொல்லாமல் நம்முடன் பேசுகிறது
நான் அதைக் கேட்கிறேன் நடுங்கியபடியே
கத்துகிறேன்
உனக்காகக் கத்துகிறேன்
எனக்காகக் கத்துகிறேன்
தயவுசெய்து கேட்கிறேன்
எனக்காகவும் உனக்காகவும்
ஒருவரையொருவர் நேசிக்கும் 
நேசித்த அனைவருக்காகவும்
ஆம், நான் உன்னிடம் கத்துகிறேன்
உனக்காக எனக்காக எனக்குத் தெரிந்திராத
மற்ற அனைவருக்காகவும்
அங்கேயே இரு
எங்கு இருக்கிறாயோ
அங்கேயே 
முன்பு எங்கு இருந்தாயோ
அங்கேயே 
அசையாதே
போய்விடாதே
காதல் வயப்பட்டிருந்த நாங்கள்
உன்னை மறந்துவிட்டோம்
எங்களை நீ மறந்து விடாதே
உன்னை விட்டால் இப்பூமியில் எங்களுக்கு
யாருமில்லை
எங்களை உறைந்து போக விட்டுவிடாதே
மிகத் தொலைவிலும் எப்போதும்
எங்கிருந்தாலும்
இருக்கிறாய் என்று தெரிவி
காலந்தாழ்ந்து ஒரு வனத்தின் மூலையில்
நினைவில் கானகத்திலிருந்து 
திடீரென்று வெளிப்படு
எங்களுக்குக் கரம் நீட்டு
எங்களைக் காப்பாற்று.



ழாக் ப்ரெவர்
பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம்  வெ. ஶ்ரீராம்

'சொற்கள்' என்னும் கவிதை நூலிலிருந்து
க்ரியா வெளியீடு



நிலவின் பேரொளி




வானத்தின் பெருவெளியைப் 
பயணித்துத் தீராத ஒற்றை நிலவே 
தீரத்தின் குறியீடு நீ நிலாவே
நீ நிறைத்து வைத்திருக்கும் மெளனம்

இசையின் துல்லியத்துடன்
என்னுள் இறங்குகிறது
நம்மிடையே எவ்வளவு அகண்ட
காலமும் வாழ்வும்
உன் பேரழகில் மதி தெளியும்
மதி அழியும் மதி உயிர்க்கும்
என் ஒரே எதிரொளி நீ
நீர் நழுவும் விரிந்த நதியின்
ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு
சத்தமில்லாமல் நீந்துகிறாய்
எத்தனை காலத்தின் ரகசியங்களும்
நினைவுகளும் தின்று தீர்த்த பின்னும்
பறவையின் சிறகசையும் நகர்வில்
இன்னும் பயணம் தொடர்கிறாய்
இன்று என் மிக அருகில் என் எதிரொளி
பேரொளியுடன்!






குட்டி ரேவதி

உடலை விட்டு எப்படி வெளியேறுவது?




பகல் இரவு என்றில்லாது
எலும்பின் மஜ்ஜையும் நிணம் பாய்ந்த வெளிகளும் கூட
ஒவ்வொரு கணமும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன
கனவுகளின் பெருவெளிகளாய் சிதறிக்கிடந்த அங்கங்களை 
வாரிச்சுருட்டி அள்ளி எடுக்கவே
நூறாண்டுகள் ஆயிற்று
இவ்விடம் இக்கணம் என்னிடம் மிச்சமிருப்பது
இவ்வுடல் மட்டுமே நீ கூட உடனில்லை
புழுக்கள் நெளியும் சிந்தனை வெளியை விசிறி விசிறி
தின்றுக் கொழுத்தப் புழுக்களிடமிருந்து
எலும்புகளின் திட மிச்சங்களைப் பொறுக்கி எடுப்பதற்கே
வாழ்வின் வறண்ட பாலைகளையும் பாறைகளையும்
கடக்க வேண்டியிருந்தது
மொழியைத் துலக்கித் தான் கண்கள் என்றும்
செய்து கொள்ளமுடிந்தது
கங்குகள் விரித்த பாதைகள் எங்கும்
வரலாற்றின் பொதிகளைச் சுமந்து வந்திருக்கிறேன்
இன்னும் இன்றும் கூட
யாக்கை என்பது வாக்கிற்கும் உன் தீண்டலுக்கும்
வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கருவறைச் சிற்பம்
நீ உருவி எடுத்த பின்னும் உன் குறியை மறந்து
சிந்தித்துக் கொண்டிருக்கும் கலையைச் 
செய்து கொண்டிருக்கும் உடல்
உன்னுடன் வெளிகளுக்கிடையே
வேகமாய்ப் பயணித்தும் கொண்டிருக்கும்
நீ நினைப்பது போல உடல் சொற்பமுமன்று 
நான் நினைத்திருப்பது போல
அது அற்புதமுமன்று
அற்பங்களால் கட்டியெழுப்பப்பட்ட உடலை
இன்னது இதுவென சுட்டிக்காட்ட நான் மட்டுமே 
எஞ்சியிருக்கிறேன்
என் காலடியில் உடலை எறிந்து விட்டு எட்டப் போ
அல்ல அதற்கு உன் யாக்கையை அறிமுகப்படுத்து
உன்னால் இப்பொழுது இயலாது என நான் அறிவேன்
இன்னும் உனக்கும் ஒரு நூறு ஆண்டுகளேனும் ஆகும்
ஆகட்டும் அதற்குள் என் உடலுக்கு
சில நூறு வானங்களையேனும் விரிக்க வேண்டும்


குட்டி ரேவதி

கதம்பம்











உடலெல்லாம் கதம்ப மணம் வீச
யார் வந்து தழுவிச் சென்றார்
இரவின் கடும் இருட்டின் கரையிலும்
பொழுதற்ற வேளையிலும்
யார் வந்து தொடுகிறார்
மணம் கவ்விய பெரு நீரோட்டத்தில்
உடல் குழைந்து சாகும் வேளை
யாரும் ஏதும் சொல்லிலார்
நரம்புகள் தோறும் பெருவெள்ளம் பாய
செஞ்சந்தனம் குளிர
யார் வந்து அணைக்கிறார்
காலமென்ற வேதனையைக்
மண்குடமதில் நீராக்கி 
கணக்கில்லாமல் சுமக்கும் போது
யார் வந்து கை மாற்றுவார்
கண்ணிலார் காதிலார் மனமிலார்
எண்ணிலார் இம்மண்ணிலே
ஒன்றாகக் குழுமிடவே
யார் வித்தை செய்திட்டார்
உடல் என்ற பூக்குடலை
வாட வாட நிறைக்கவே
யார் விரித்தார் இப்பூவனத்தை
உடலெல்லாம் கதம்ப மணம் வீச
யார் வந்து போகிறார்.






குட்டி ரேவதி

'மாமத யானை' கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை 

குறியீட்டுக் கவிதைகள்








1.
தாமரை மலர் நீட்டம்

தடாகத்தில் கண்ணகியின் உடல்
ஒரு செந்தாமரையாகித் தவிக்கக் கண்டாள்
காமத்தின் நீர் மட்டம் உயர உயர
தன் தாமரையின் ஒற்றைக்காலில் நின்ற
தவ வேளையும் உயரக்கண்டாள்
சேற்றின் வேகாத மண்ணில் நின்று தவித்த
தன் தாளாத இலை உடலை
அந்நீரில் விரித்து சூரியன் பரவக் கொடுத்தாள்
சூரியனோ அவளைக் காணாமல் கடக்கிறது
தணலாய்த் தகித்தது உள்ளும் புறமும்
நீர்த்தடாகம் அவளைச் சுற்றிப்
பெருகிக் கொண்டே இருந்தது
தன் இலையுடல் நோவும் கனத்த மலராகத்
தான் இருப்பதை அவள் விரும்பாமலும் இல்லை
சுற்றிப் பறக்கும் தேனீக்களுக்குத் தேன் கொடுக்க
விரியும் தன் முகத்தை முத்தமிட்டு முத்தமிட்டுச்
சிரிக்கின்றன தேனீக்கள்
தடாகம் தரை தங்காமல் கரையெட்டித் தளும்ப,
மலருடன் வாடும் முன் எனைக் கொய்யச் சொல்லுங்கள்
இல்லை, தடாகத்தைக் கடந்து போகும் சூரியனைக்
கண நேரம் என்னில் பரவச்சொல்லுங்கள்
எனக்கூவுகிறாள் விடிகாலைப் பொழுதுகளில்.




  
2.
இனி வேட்டை என்முறை

அது ஒரு வேட்டையின் கணம் என்று
சொல்லத் தேவையில்லை
அவன் என்னுடல் நிலத்தின் மேலிருந்தான்
அவன் எடையின் அழுத்தமும்
மூச்சின் விசைக்கும் கீழிருந்தேன்
நானங்கே நரம்புகளால் நாண் இழுத்த வேகத்தில்
அவன் மல்லாந்து எதிரே விழுந்தான்
இப்பொழுது வேட்டையின் என் முறை
நான் அவனை மூர்ச்சிக்கச் செய்தேன்
அம்புகள் தீர்ந்து போயிருந்த  அம்பாரியில்
மூர்ச்சிக்கச் செய்யும் முத்தங்களின் கனிகளுடன்
நிணம் பெய்யும் வானத்தைப் போல  இருந்தேன்
ஒரு மிருகமாய் மாற்றி அவனைத் தூக்கிச்சுமந்து
வனத்தைச் சுற்றி வந்தேன்
இனி இறைச்சியின்றி ஒரு கணமும்
என் வேட்கை தணியாது


 



3.
மதுத்தாழி

என் உடலொரு மதுத்தாழி
நுரைத்த மதுவை விளிம்பின் தருணம் வரை
நிறைத்து வைத்திருப்பவள்

தேனடையாய்த் தொங்கும் நிலவினும்
கனம் நிறைந்த அதன் போதத்தைத்
தூக்கிச் சுமக்கும் இனிய பருவம் என் இரவு

மரத்தின் தேகத்தில் தனியே தொங்கும்
அணிலின் நீண்ட நேர காத்திருப்பில்
என் மதுத்தாழி நிறையும்

தாழிக்குள் அடைந்து கிடக்கும் ஆழியை
குடிக்க முடியாதெனும் திகைப்பில்
அணில் நீண்ட நேரம் தனியே தலைகீழே

மதுத்தாழி நிறையட்டும்
போதையை ஏற்றிக்கொள்ள முடியாத அணில்
தலைகீழே தொங்கட்டும்

உருவத்தை ஒரு பகையாக்கி
அணில் எனைப் பார்த்தவண்ணமே
மண் கிடந்ததொரு கொட்டையை எடுத்துக்
கொறித்துக் கொண்டிருக்கிறது







4.

விதை முளையும் யோனி

விதையுடன் கூடிய சிறு செடியொன்று
யோனியில் முளைத்து வந்த அம்முத்திரையை*
வரலாறு தன் அகண்ட பூமியின் வயிற்றிலிருந்து
எமக்கு எடுத்துக் காட்டியது எதேச்சையானது அன்று
சூரியன் தன் பழுக்கக் கொதித்த நரைத்த கரங்களை
வரலாற்றின் மண் கிளறி நம் காட்சிக்கு
ஒரு சித்திரம் வரைந்து கொடுக்கிறது
அதைத் தொடரச் சொல்கிறது
மறைதொனியில் இச்சிக்கிறது நம் தேடலை
காலத்தின் பாதையைத் திறந்து கொடுக்கிறது
இன்னும் உறையாத இரத்தத்தை
அது தன்னில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது
இன்னொரு நாளை எப்படித் தொடங்குவது
என்று அந்தக் காட்சி நினைவுறுத்துகிறது
சூரியனை நிதம் தின்று செரிக்கும் கலை கற்ற
தாவரத்தைப் பிரசவிக்கும்
பலமுலைப் பெண்கள் நாமென்று
 
தன் இரு கைகளால் தொடைகளின் இடுக்கிலிருந்து
அத்தாவரத்தைப் பெயர்த்துத் தனியே எடுக்க

அவள் கைகளில் சிரிக்கிறது ஒற்றைச்செடி.




சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரை வடிவம்





  
5.
அணிலாகி நின்ற மரம்

அதிகாலை மரத்தில் தன் குரல் சப்தத்தை
கிளையெங்கும் பூத்துக்குலுங்கும் பூக்களாக்கிய
அணில் ஒரு மழையால் அடங்கியது

வானம் தன் இசையை ஒரு பெருமழையாக்க
பூக்களை உதிர்த்த கிளையிலும் இலையிலும்
வந்து தங்கியது நீரின் குரல்

அணிலாகி நின்ற மரத்தில்
எப்பொழுது பூக்கள் மீண்டும் குலுங்குமென
எல்லோரும் காத்திருக்க
சுள்ளென்று வெயில் வந்து மர உச்சியில் அமர,
காலம் ஒரு மரமாய் நின்றது

பூக்களற்ற மரம்
மதிய வேளையின் சாபம்.





  
  
6.

சோழிகள் ஆக்கிய உடல்

உருட்டிவிடப்பட்ட சோழிகளால் ஆன
இப்பெருஉடலின் நற்சோழிகள் உமது
நீவிர் உருட்டி விளையாட
உருண்டோடி விளையாடும் நண்டுகளின்
மத்தியில் நவ சோழிகளின் பொலிவு
உம் கண்களைத் திருடும்
கைப்பற்றி உருட்டி விளையாட இம்சிக்கும்
சோழிகளை அலை வந்து கலைக்க
வழி மறந்து திணறி நீருக்குள் உருளும்
சோழிகளற்ற கடலாகா கரையை
என் உடலென்று ஆக்கினால்
தன்னைத் தானே இயக்கும் மகிழ்ச்சியறியா
கூழாங்கற்களே மிஞ்சும் உமக்கு




குட்டி ரேவதி
நன்றி: ’சாளரம்’ இலக்கிய இதழ்