நம் குரல்

அது 'பீப்' பாடல் இல்லை; 'ஹேட்' பாடல்!


பீப் பாடலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அது வெறுமனே ஒரு பாடலில் அல்லது சினிமாவில் 'கெட்ட வார்த்தையைப்'பயன்படுத்துதல் குறித்த உரிமை, கருத்துரிமை என்பதாகத் திசைதிருப்பப்படுகிறது. அநியாயம்.

அந்த 'பீப்'பாடல் ஒரு hate song. பெண் வெறுப்புப்பாடல். இலக்கியம், சினிமா, ஊடகம் என எல்லா துறைகளிலும் வியாபித்திருக்கும் பெண் வெறுப்பின் சீழ் தான் இப்படி அதிகாரத்துடன், மறைமுக இச்சையுடன், நமுட்டுச்சிரிப்புடன் வெளிப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் கலையாகவும் கலையுரிமையுடனும் ஒப்பிட்டு முழக்கமிடுவது என்பது செய்வதையும் செய்துவிட்டு அப்படிச் செய்யவில்லை என்பதான தப்பித்தல் தந்திரம் தான்.

இன்றைய சமூக ஆண்களிடம், தாய்ப்பாசம், அண்ணன் - தங்கைப்பாசம், தோழி, காதலியர் என்பதெல்லாம் அர்த்தமற்ற, உணர்வுகளற்ற வெற்று வார்த்தைகள். எல்லாமே Use & Throw.
காலங்காலமாக, கலை ஊடகங்களால் விதைக்கப்பட்டுவந்த 'ஆணாதிக்க' (அரதப்பழசான வார்த்தை தான்) பழக்கங்கள் தாம் இன்று அனிருத்தாகவும் சிம்புவாகவும் வெடித்திருக்கிறது.

பெண்கள் மீது குருட்டாம்போக்கில் அமிலத்தை வீசும் ஆண்களாய் இன்றைய தலைமுறை மாறிவிட்டதற்கு, அதிலும் எந்தக்குற்றவுணர்வுமில்லாமல் பொதுவெளியில் வெளிப்படுத்த வாய்ப்பு உண்டாக்கித் தந்ததற்கு, நம்முன் உள்ள எல்லா ஊடகங்களும் பொறுப்பு ஏற்கவேண்டும்.
நம்மைச் சுற்றியுள்ள எந்த ஆணுக்கும் குறைந்தபட்ச அளவில் கூட பெண்கள் மீது மரியாதையோ அல்லது அது இல்லாதது குறித்த அவமானமோ இல்லை.

எங்கேயாவது அப்படி ஒன்றிரண்டு ஆண்கள், பெண்கள் மீது நன்னடத்தையுடன் நடந்துகொள்வதைப் பார்க்க நேர்ந்தால் வேறு கிரகம் வந்துவிட்ட உணர்வு எழுகிறது.

நண்பர்கள் எல்லோரும் சமீபத்திய பயணத்தில், டி.ராஜேந்திரரின் அண்ணன் - தங்கை பாசப்பாடல்களைக்கேட்டு சிலாகித்துக் கொண்டு வந்தோம்.
அப்படியான உறுதிப்பாடான பாடல்கள் இன்றைய வாழ்க்கையில் மிகவும் பொருத்தமற்றவையாகவும் தொடர்பற்றவையாகவும் ஆகிவிட்டதன் நவீன விடங்கள் தான் 'அனிருத் - சிம்பு'
உண்மையில், இதை எதிர்த்துப் போராடவேண்டியவர்கள் மற்ற ஆண்கள் தாம். இப்படியான பெண் வெறுப்புப் பாடல்கள் சமூகத்தில் மற்ற ஆண்களுக்கும் இழிவைச் சம்பாதித்துத் தருகிறது என்று நம்பினால் 'ஆண்கள்' தாம் தெருவிறங்கிப் போராடவேண்டும்.

திரைத்துறையில், 'அனிருத் - சிம்பு' தொடர்ந்து இயங்குவதைத் தடைசெய்யவேண்டும்.
இப்படியான 'பெண் வெறுப்பு' ஆண்கள் திருந்துவதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, அவர்களுக்குப் பிறக்கும் மகள் மீது, இந்தச் சமூகம் செலுத்தும் வன்முறையைக் காண நேர்வது தான் என்பது எனது என்றென்றைக்குமான நம்பிக்கை.
ஆனால், அப்படியெல்லாம் நிகழ்வதற்குள் மற்றவர்களின் மகள்கள் மீதெல்லாம் கடுமையான வன்முறையை இவர்களே ஏவிவிட்டுவிடுவார்கள் போல. அதுவரை, நாம் காத்திருக்கவா போகிறோம்.

குட்டி ரேவதி

சாதி மீறிய காதல் என்றால் மயானத்தில் தான் போய் முடியும்!


MASAAAN - இரு காதல் உறவுகளுக்கு இடையே இருக்கும் சாதியச் சமன்பாடுகளைச் சொல்லும் படம். ஆதிக்கசாதிக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் இடையே உலவும் காதல் உறவுகளை இந்திய சினிமா அவ்வளவாகப் பொருட்படுத்தியதில்லை.
அப்படியே அவர்களின் கதைகளைச் சொல்ல முனைந்தாலும், 'ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் இன்னொரு குறிப்பிட்ட சாதிக்கும் இடையே' என்று பத்திரிகையாளர்களைப் போலவே, இலை மறை காய் மறையாக, கடந்து செல்லும் தயக்கமும் அச்சமும் குழப்பமும் எப்பொழுதும் கதையில் தொங்கலாக இருக்கும். இந்திய சினிமாவின் பிதாமகன்கள் என்று சொல்லப்பட்ட சத்யஜித்ரே போன்றவர்கள் கூட, திரைக்கதையில் சாதியை ஓர் உட்பொருளாக வைத்துச்சொல்லும் அக்கறைகள் கொண்டாரில்லை.

அப்படியே சொன்னாலும் அவை, ஆதிக்கசாதியினர் மீது பரிவு கொண்ட, சாய்வு கொண்ட கதைகளாகிப் போயின. கெளதம் கோஷ், 'அந்தர்ஜாலி யாத்ரா' என்ற படத்தில், பார்ப்பன ஆணுக்கு இருக்கும் பலதாரப் பெண் வாய்ப்புகளை எள்ளிநகையாடியிருப்பார். அதன் உட்பொருளாய், 'இந்துமதக்கட்டுமானம்' எவ்வளவு சப்பைக்கட்டுகள் நிறைந்தது என்பதையும் திரைக்கதையின் கலைவடிவம் திரியாமல் சொல்லியிருப்பார்.
FANDRY, COURT மற்றும் TITLI போன்ற படங்கள் வரிசையில் MASAAAN திரைப்படமும் இந்திய சாதியமுறையின் இக்கட்டுகளை நேர்மை தவறாமல், மிகவும் கவனமாகச் சொல்கிறது. ஆயிரம் ஆயிரம் காதல் கதைகளைச் சினிமா வழியாகச் சொல்ல முயன்றாலும் பின்னணியில் இருக்கும் சாதிய வன்மங்களை எல்லாம் சொல்லும் வாய்ப்பை சினிமா எடுத்துக்கொள்வதில்லை.
MASAAAN படத்தில், காதல் உறவில் ஈடுபடும் ஆதிக்க சாதியினர், ஒன்று சாதிய அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கின்றனர் அல்லது, கொல்லப்படுகின்றனர். காதல் உறவில் நம்பிக்கை கொண்ட தாழ்த்தப்பட்டவர்களோ, எல்லாவற்றிற்கும் சாட்சியாய் மரண விளிம்பிற்குத் தள்ளப்பட்டு ஆணிஅறைந்தாற்போல அங்கேயே இருத்திவைக்கப்படுகின்றனர்.
ஆனால், கதையின் முடிவில் எந்த மாற்றமுமில்லை. ஆதிக்கசாதிக்காதலர்களை பெற்றவர்களே கொன்றுவிடுவர். தாழ்த்தப்பட்ட காதலர்களையும் ஆதிக்கசாதியினரே கொல்வர். சாதியப்பிரமிடின் பின்னால் இருக்கும் மனித வன்மங்களை எந்த சமரசமும் இன்றி கலைவடிவம் பரவலாக பல திரைப்படங்கள் வழியாக முன்னேற்றிக் கொடுக்கையில் தான் இந்திய சினிமா சரியான வழியில் பயணிக்கும் என்று சொல்லலாம்.
ஆதிக்கசாதிக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் இடையே காதல் உறவு என்றால் அது மயானத்தை நோக்கியே அழைத்துச்செல்லும் என்ற யதார்த்தம் சொல்லும் படம்.

குட்டி ரேவதி

ஒரு தமிழ்சினிமாவிற்கான நடிகை தேடும் படலம் இன்னும் ஓயவில்லை!

நம்பர் 1 நடிகைகள் யாரும் நம் சுயமான, அசலான கற்பனைக் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருப்பதில்லை. ஸ்மிதா பட்டேல், தன் 31 வயதுக்குள் ஒரு நடிகையாகச் செய்த சாதனைகள் அபாரமானவை. தான் நடித்த கலைப்படங்கள் வழியாகவும் வணிகப்படங்கள் வழியாகவும் இந்தியப் பெண் ஆளுமையையும் மனோபாவத்தையும் திரைக்குக் கொண்டு வந்ததில் இவர் ஒருவருக்கே முதன்மையான இடம் என்று சொல்லலாம். இருவகை சினிமாவையும் தன் ஒட்டுமொத்த ஈடுபாட்டால் நேர்மையாகக் கையாண்டவர், ஸ்மிதா பட்டேல்

ஆனால், இன்று இந்தியப்பெண்களின் உளவியலை சற்றும் தொடாத வணிகப்படங்களுக்கு இடையே நாம் உழன்று கொண்டிருக்கிறோம். தமிழ்ப்படங்களின் நிலை இன்னும் அவலமானவை. இன்றும் தமிழ்ப்படங்களில் நடிக்க, தமிழ் பேசத்தெரிந்த, தமிழ் சமூகவியலை அடிப்படை அளவிலேனும் உணரக்கூடிய, உடலிலும் உடல் மொழியிலும் பன்முகப்பெண் ஆளுமையை ஏற்கக்கூடிய, நம் வெயில் காய்ந்த தோலின் நிறமுடைய, நடிப்பு என்பதன் சிறுமைகளை மீறி ஓங்கி நிற்கக்கூடிய நடிகைகளுக்குப் பஞ்சம் தான். இத்தகைய தேவைகளுக்கெல்லாம் நம்மிடம் இருக்கும் ஒரே மைல் கல், ஸ்மிதா பட்டேல் தான்.
முதல் விடயம்: தமிழ்ச்சமூகத்திலிருந்து தமிழ்க்குடும்பங்களிலிருந்தெல்லாம் பெண்களை நடிப்புத்துறைக்கு அனுப்புவதில்லை. இதற்கு நாம் பயன்படுத்தும் இழிவான ஒரே வார்த்தை, அது 'கூத்தாடி'த் தொழில் என்பதே. உண்மையில், திரையில் மற்றும் திரைத்துறையில் ஒரு பெண் நடிகையாக இயங்குவதற்கு பெரும் ஆற்றல் தேவைப்படுகிறது. அவ்வாறு இருப்பதற்கான சவால்கள் சகமனிதராகக் கூட, நாம் இன்னும் அறியாதவை. அதன் உடல் அரசியலும் எதிர்கொள்ளவேண்டிய ஆண்மைய புரிதலும் வேறு எந்தத்துறையை விடவும் அதிகமானவை. பெண் உடல் அரசியலை முழுமைப்படுத்தும் பெண்ணியமும் பெண்உரிமையும் அங்கே தான் முளைத்துவர வேண்டியிருக்கிறது.
இரண்டாவது விடயம்: ஒரு பக்கம் நடிகையை இழிவுபடுத்திய படியே, அவர்களை மிகையான வெளிச்சத்தில் நிறுத்திவைக்கும் வணிக ஃபார்முலாக்களின் அங்கமாகவும் நாம் தான் இருக்கிறோம். இன்று, நமக்கு (எனக்கு)த் தேவை, ஸ்மிதா பட்டேல் போல ஒரு நடிகை. முழுமையான மனவெழுச்சியும் தொழில்சார்ந்த அக்கறையும் உள்ள பெண்களை மற்ற மொழிகளிலிருந்து கண்டிப்பாக இறக்குமதி செய்யமுடியாது. வணிகமும், அங்கீகாரமும், சிந்தனையும் மொழி சார்ந்ததாக இருக்கும்பொழுது 'பாவனை'யை மட்டும் மற்ற மொழிநடிகைகள் வழியாக எப்படி இறக்குமதி செய்யமுடியும்?
நம் வெப்பப்பிரதேசத்தின் கனன்ற தோல் கொண்ட, கருத்த முடியும் பெரிய, கூர்மையான விழிகளும் கொண்ட, நம் ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் மீதான பரிவைக் கொண்ட நடிகை யாராக இருந்தாலும் அவர் அடுத்த 'ஸ்மிதா பட்டேல்' ஆகக்கடவர். ஸ்மிதா பட்டேலின் பெருமைகளைப் பேசிப்பேசியே, அங்கேயே பெண் நடிப்பின் சவாலை நிறுத்திவிடமுடியாது. தமிழ்த்திரைத்துறை ஒவ்வொரு நடிகை வழியாகவும் நிறைய கற்பனைகளையும் புனைவுகளையும் முன்வைக்கத் தயாராக இருக்கிறது.



குட்டி ரேவதி

அரசியல்வாதி, சினிமாவாதி, இலக்கியவாதி

அரசியல்வாதி, சினிமாவாதி, இலக்கியவாதி என எல்லா வகையான கேரக்டர்களுக்கும் பொருத்தமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரே நடிகன் 'வடிவேலு' என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா?
ஒவ்வொரு அரசியல், சினிமா, இலக்கிய ரியல் கேரக்டருக்கும், வடிவேலுவின் ஒவ்வொரு சினிமா கேரக்டர் பொருந்திப்போகிறது!
இதை, பப்ளிக்ல அவிழ்த்து விட்டா, எப்பவும் போல ' வடிவேலுக்கு'த்தான் செம அடி விழும். அதனால, அடக்கமா வச்சிக்குவோம். tongue emoticon
குட்ட

கேரளநாடும் தமிழ்நாடும்

கேரள நண்பர் ஒருவரிடம், நலம் விசாரிப்பாகத்தான் கேட்டேன்.
'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று.

'கேரள நாட்டை எப்படி தனியாகப் பிரிப்பது என்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன்.'
'செய்யுங்கள். எங்களுக்கும் வசதியாக இருக்கும்!' என்றேன்.
'இப்படியான மோடி ஆட்சி தொடர்ந்தால், நாம் விரும்புவதெல்லாம் சில வருடங்களில் சிரமமின்றித் தானாகவே நடந்துவிட வாய்ப்பிருக்கிறது!' என்றாரே பார்க்கலாம்.


குட்டி ரேவதி

தனிமை


தனிமையும் மகிழ்ச்சியும் ஒன்றாக வாழ்வதில்லை.
ஆனால், தனிமையும் நிம்மதியும் ஒன்றாகத்தான் 

உறங்குகின்றன.


காதல், தனிமையை விரும்புவதில்லை.
தனிமை, காதலை எதிர்ப்பதில்லை.
தனிமைக்கு நாவுகள் கிடையாது என்று நம்புகிறோம்.
நம்முடன் பேசுவோரின் நாவுகளை எல்லாம் கடன் வாங்கிவருகிறது, தனிமை.
தனிமைக்குக் கடிகார முட்கள் கிடையாது.
காலத்தின் தோழி, எப்பொழுதும் தனிமை தான்.
எலும்புகளில் உறைந்திருக்கிறது தனிமை.
எலும்புகளைத் தசையுடன் தின்னும் மண்ணாக வருகிறது காலம்.

குட்டி ரேவதி

நவீன இலக்கியவாதிகள் யார்?

இன்று காலை இரண்டு இலக்கியவாதிகள் என்னை அழைத்தார்கள்.
சீரியசான இலக்கிய நிகழ்வு ஒன்று வடிவமைக்கவேண்டும், பத்து இலக்கியவாதிகளின் பெயர்களைத் தரமுடியுமா என்று கேட்டார்கள்.

நான் சொன்ன பெயர்களையெல்லாம் கேட்டு,
'இவர்களை எல்லாம் எப்படி இலக்கியவாதிகள் என்று சொல்கிறீர்கள்?' என்று அதிர்ந்தார்கள்.

ஏன்,
ரவுடித்தனம் செய்பவர்கள், சாதிக்குறியீடுகள் - சடங்குகள் செய்பவர்கள், குரு - சீடர் வழிபாடு கொண்டவர்கள், விருதுகள் பெற்றவர்கள், தன் பெயரில் விருதுகள் வழங்குபவர்கள், வெளிநாடு சென்றவர்கள், தொலைக்காட்சியில் தொடர்ந்து பேசுபவர்கள், யாரையேனும் புகழ்ந்துகொண்டே இருப்பவர்கள் அல்லது ஒருவரையேனும் அவதூறுசெய்தவர்கள், வீடு புகுந்து அடித்தவர்கள், ஃபேஸ்புக்கில் 500 லைக்குகளுக்குக் குறையாதவர்கள், பொதுவெளியிலும் எழுத்திலும் பெண்களை இழிவாகப் பேசுபவர்கள், புத்தகக்கண்காட்சியின் முகப்பில் ஆளுயரத்தட்டி வைத்தவர்கள்.....
இவர்கள் பெயரைச் சொன்னால் தான் 'இலக்கியவாதி' என்று ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டதும்,
கப்-சிப் என்று பெயர்ப்பட்டியலை வாங்கிக்கொண்டு ஃபோனை வைத்துவிட்டார்கள்.

ஃபோனைத் துண்டிக்கும் முன், சென்னை வந்தால், உங்களை நேரில் சந்திக்கமுடியுமா என்றும் கேட்டுவைத்தார்கள்.
பயமில்லாதது போல் காட்டிக்கொண்டாலும், கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. tongue emoticon








கு





கு

வீடு என்றால் அது மரத்தடியாக இருக்கவேண்டும்!




எங்கள் வீடு முதல் தளத்தில் உள்ளது என்றாலும் கிழக்கிலும் மேற்கிலும் சில மரங்கள் வீட்டின் சுவர்களைத் தழுவிக்கொண்டிருக்கின்றன. ஒரு மாமரம், இரு தென்னைமரங்கள், வில்வமரம், வேப்பமரம் என. பக்கத்துவீட்டில் இருக்கும் மரங்களும் எங்கள் வீட்டுச் சுவர்களில் சாய்ந்து கொள்கின்றன.

பத்துவருடங்களாக, சுற்றிச்சுற்றி இந்தப்பகுதியிலேயே நாங்கள் வீடு தேடி இருப்பதற்குக் காரணம், இங்கு போல் கோடம்பாக்கத்தின் வேறெங்கிலும் குறைந்த சுற்றில் அதிக மரங்கள் இல்லை. அத்தி, ஆல், அசோகமரம், மாமரங்கள், புங்கமரங்கள், வாகை மரங்கள். பன்னீர் மரங்கள், வாதாம் மரங்கள் இன்னும் பலவகையான காட்டுமரங்களும் கூட. குறுங்காடு போல் இருக்கும்.


ஐந்து வருடங்களுக்கு முன் இன்னும் அதிகமான மரங்கள் இருந்தன. அதிக மழையில் கால் ஊன்றி நிற்க முடியாத சிமெண்ட் தளங்களினால் அவை தலைசரிந்தன.
நாங்கள் கோடையின் வேதனையை முறையிடுவதை மறந்து இருக்க, இந்த மரங்களின் அன்பு தான் காரணம். வருடத்திற்கு வருடம், கோடை உக்கிரமெடுக்கிறது. அனலாகிறது. சில வேப்பங்கன்றுகளை நட்டாலே, வேகமான அதன் வளர்ச்சியால், இரண்டாவது வருடமே நாம் நிழலும் குளுமையும் பெறக்கூடும்.

ஆனால், மனிதனின் சிறப்பான குணம், குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பது. குற்றத்தைக் கண்டறிந்து நீக்குவது இல்லை என்பதை உணர, 'கோடை' எளிய முன்னுதாரணமாகிறது.
பகல் பொழுதுகளை வீட்டிற்குள் வேலை செய்தும் எழுதியும் படங்கள் பார்த்தும் கழித்து விட்டு, சந்திப்புகளையும் வெளிவேலைகளையும் மாலைகளில் வைத்துக் கொள்கிறோம்.

குட்டி ரேவதி

புனைவு என்பது......

புனைவுகளுக்குப் பின் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

புனைவுகள் உண்மைகளை மெய்ப்பிப்பதற்காக, வருவதில்லை. பொய்களையும், கற்பனைகளையும் இட்டு நிரப்பவும் அவை முயற்சிப்பதில்லை. மனிதனாகக் கிடைத்த வாய்ப்பில், இந்தப் பிரபஞ்சத்தையும் சிந்தனைகளையும் எவ்வளவு தூரத்திற்கு நுரையீரல் வெடிக்க ஊதிப்பருக்கவைக்கமுடியும் என்பதில் தீவிரமாக இருக்கின்றன.

யதார்த்தத்தை அப்படியே கிழிப்பதிலோ, கீறல்கள் ஏற்படுத்துவதிலோ புனைவுகளுக்கு அக்கறை ஏதும் இல்லை. பட்டுத்துணியின் உராய்வில் சதை மீது பரவும் கணநேர மின்சாரம் போன்ற உணர்வைச் செயல்படுத்திச் செல்கின்றன. 
ஆகச்சிறந்த கதை என்று பிரசுரமாவதை எல்லாம், இதழ்களில் குப்பையாக்கிச் சாதிக்கும் தருணங்களில், மனித மனங்களின் உன்னதம் என்பவை யாதாக இருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

உன்னதம் என்றால், புனிதம் மட்டுமே இல்லை. அழுக்கையும் வலியையும் சீழையும் துயரநொதியையும் எந்தத் திறனால், ஒரு தனிமனிதன் சரியாகச் செரித்துக்கொள்ளமுடிகிறது என்பதுவும் தான். உன்னதம் என்றால் புனிதம் இல்லை. உடலின் அகநோக்கங்கள், பிரபஞ்சத்தின் எல்லைகளையும், காலமுடிவுகளையும், மனிதவரையறைகளையும் மீறியவை. தன்னையே, தன் உடல் வழியாகக் கடந்து செல்ல முடியும் வீரம். 

எங்கே இப்படி ஒரு புனைவு எது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

குட்டி ரேவதி

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை - இது, பட விமர்சனம் அன்று!




இப்படம் குறித்து விவாதிக்கவும் விரிவாக உரையாடவும் நிறைய அரசியல் விடயங்கள் உள்ளன. அதற்கு வேறு சந்தர்ப்பம் எடுத்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
ஆனால், படம் தொடக்கம் முதல் முடிவு வரை எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது, பெண் இயக்கவாதியையும் உடன் செயல்படும் போராளிகளையும் காட்டியிருக்கும் விதம் தான்.

தமிழகம், பல வகையான சமூக அரசியல் இயக்கங்களையும், அதில் தீவிரமாக ஈடுபட்டு பல மாற்றங்களை சாத்தியப்படுத்திய பெண் செயல்வீரர்களையும் களம் கண்டது. அதற்கான, சமீபத்திய அனுபவமும், சாட்சிகளும் கூட நிறைய உண்டு.
இயக்கங்களுக்குத் தம் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்த நிறைய பெண்களையும் அவர்களின் தீவிரத்தையும் நான் அறிவேன்.

இயக்குநர் ஜனநாதனே கூட, இவ்வியக்கங்களையும் போராளிகளையும் நன்கு அறிந்தவர்.
இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றிருக்கும், போராளிகளிடம் காணப்பட்ட உடல்மொழியும், உரையாடலும் அந்நியத்தன்மையையும் சங்கடத்தையும் கொடுத்துக்கொண்டே இருந்தது. கதையின், படத்தின் நோக்கத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்தது.
தமிழக இயக்கங்களின் சமூக உழைப்பை, மக்களிடம், ஊடகங்களிடம் கொண்டு சேர்ப்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பை நழுவவிட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது.

தமிழகத்தின் பெண் போராளிகள் எல்லோரும் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டார்களா, அவர்களின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ளக் காத்திருக்கிறேன்.
சமூகப்பொறுப்புணர்வு என்பது வெறும் நடிப்பினால் மட்டுமே வெளிப்படுத்திவிடக்கூடிய ஒரு விடயமில்லை போல!

குட்டி ரேவதி

பத்தாம்வகுப்பும் சீனிவாசனும்!


அப்பொழுதே எனக்கும் 'சீனிவாசன்' என்ற பெயருக்கும் ஆகாது. எட்டாம் வகுப்பு வரை என்னுடன் சீனிவாசன் என்றொரு பையன் படித்தான். இருவரும், திருச்சி, கைலாசபுரம் Y.W.C.A மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தோம். என் வாழ்வின் பொற்காலம் அந்தப் பள்ளியில் படித்த காலமே.

மாணவ, மாணவியருக்கிடையே பாரபட்சம் காட்டாத பள்ளி. என் தந்தையோ, தாயோ எதன்பொருட்டு ஆசிரியர்களைச் சந்தித்தாலும், அப்படியானதொரு மரியாதையுடன் நடத்தப்படுவர். சீனிவாசனுக்கும் எனக்கும் வகுப்பில் கடுமையான போட்டி இருக்கும். எவ்வளவு தான் முயன்றாலும், என்னைவிட சில மதிப்பெண்களேனும் அதிகமாகப் பெற்றுவிடுவான். வகுப்பில் முதலாவதாக, வந்துவிடுவான். படிப்பைத்தவிர, வேறு எதிலும் கவனத்தைச் சிதறடிக்காதவன்.


அந்தப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை தான் என்பதால், ஒன்பது, பத்தாம் வகுப்புக்கல்விக்கு நான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். அவனும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றுவிட்டான். இடையில், இருவரும் சந்திக்கும் வாய்ப்பே இல்லையென்றாலும், பத்தாம் வகுப்பில் அவனை முறியடிப்பது என்பதே என் இலக்காக இருந்தது.

பத்தாம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வந்து இருவரும், ஒரே நாளில், Y.W.C.A மெட்ரிக்குலேசன் பள்ளியின் தலைமை ஆசிரியை ரூபி கனகராஜுக்கு, இனிப்பு வழங்கச் சென்றிருந்தோம். மொத்த மதிப்பெண்ணில், அவனை விட ஒரு மதிப்பெண் நான் அதிகமாகப் பெற்றிருந்தேன்.

தற்செயலாக, இது நினைவிற்கு வருகிறது. இன்று இது பொருளற்ற ஒன்றாக இருந்தாலும், நினைத்துப்பார்க்க இனிமையாக இருக்கிறது. இந்த அனுபவத்தின் இனிமை, சீனிவாசனைப் பற்றியது என்பதை விட, அந்தக் குறிப்பிட்ட பள்ளிவெளியுடன் இணைத்து சீனிவாசனை நினைத்துப் பார்ப்பது தான்.
அந்தப்பள்ளியில் பெற்ற நிழலையும் குளுமையையும் நம்பிக்கையையும் உடைமை உணர்வையும், பின் எந்தக்கல்வி நிறுவனத்திலும் என்னால் உணரமுடிந்ததே இல்லை.

குட்டி ரேவதி

அருண் ஷான்பாக்






அருண் ஷான்பாக் பற்றி நிறைய பதிவுகள். எல்லாவற்றையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே அழுகாச்சிப் பதிவுகள். கொஞ்சம் எரிச்சலாகவும்,  சங்கடமாகவும் கூட இருக்கிறது.

ஒரு பெண்மீதான பாலியல் வன்முறையை கூட, இன்னும் நாம் சரியாக அலச, ஆராயக் கற்றுக்கொள்ளவில்லை. 

பிரச்சனை இது தான்: தனி நபர் மீதான பிரச்சனையாக, தனி நபர், ஒரு பெண்ணின் மீது காட்டிய வன்முறையாக மட்டுமே பார்ப்பதால் தான், இது இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது.  ஒரு குறுகிய பார்வையுடனேயே முடிந்துபோகிறது.

இந்தப்பிரச்சனையை, நாளுக்கு நாள், மிகவும் தவறான இடத்தில் இருந்து கொண்டே பார்ப்பதால், இந்த வன்முறையும் நாளுக்கு நாள் அதிகமாகத் தான் போகிறது. 

இந்த சிஸ்டம் அப்படி. சாதிய ஏற்றத்தாழ்வுகளால் விளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வன்முறையை வெளிப்படுத்தும் எல்லா தூண்டுதல்களையும் கொண்டிருக்கிறது.

'எந்த வகையிலும் வன்முறை கூடாது!. ஏனெனில், இந்தியா என்பது அகிம்சை இந்தியா' இதுவே ஒரு புரட்டு. 

வன்முறை கூடாது, ஆனால், வன்மங்களை அமைதியான, திட்டமிட்ட நடவடிக்கைகள் வழியாகச் செயல்படுத்தலாமாம். இது, வன்முறையினும் கொடுமையான வன்முறை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

சிந்தனைகளில் வன்முறை இருக்கலாம், செயல்களில் இருக்கக்கூடாதாம். 

ஊதிப் பெரிதாக்கப்பட்ட வன்முறைகள் மீதே நம் பரிவும், அக்கறையும் குவிவது என்பது, மனிதனின் வாயூரிஸ்டிக் மனநிலையின் எதிரொளி தான். 

உண்மையில், அருண் ஷான்பாக்கை விட, 'வெஜிடபிள்களாக' இலட்சக்கணக்கான பெண்கள் இந்தியாவில் வாழ்ந்து மடிகின்றனர். 

அருண் ஷான்பாக்கின் விடயத்தில், அறம் மீறாமல் இருக்க அந்த மருத்துவமனை முயன்றது ஒரு சிறப்பான நிலைப்பாடு.

ஆனால், இது வெறுமனே ஆண் X பெண் பிரச்சனை என்று பார்ப்பது ஓயாதவரை, பிரச்சனைக்கும் தீர்வில்லை. இப்படி, 42 வருடங்கள் ஒரு பெண்ணை 'வெஜிடபிளாக' வைத்துக்கொள்வதும் தீர்வில்லை.


குட்டி ரேவதி

“பார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது!” மு.வி.நந்தினி

நேபாள பூகம்பம்

திருச்சி வந்திருக்கிறேன். அம்மா முழு நேரமும் வானொலியின் அருகில் அமர்ந்து செய்திகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். நேபாளம் குறித்த செய்திகளை, கவலையுடனும் அக்கறையுடனும் கேட்கிறார்.
தற்செயலாகத் தான் நாம் எல்லோரும் உயிருடனும், நம் உறவுகளுடனும் இருக்கிறோம் என்பதை உணரநேரும்போது இப்பூமியில் நம் வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையும் புரிகிறது.
நேபாளத்தின் சில வீடியோ பதிவுகளைக் காண நேரிட்டது. இந்தப்பூமியில், இந்தக்காலக்கட்டத்தில் வாழ, மனிதனுக்கு அசாதாரணமான துணிவு வேண்டும் என்று தோன்றுகிறது.
இதையெல்லாம் அறிந்தாலும், மனிதன் மாறுவதாக இல்லை. இலட்சோப இலட்ச வருடங்கள் மனிதனை ஆட்கொண்ட, அடிமைகொண்ட மனித மரபணுக்களின் குரல்களைப் பரிசீலிக்க அவனால் முடிவதே இல்லை.
தன்னைத் தவிர எதுவுமே முக்கியமில்லை என்று நம்புவது இந்தக்காலத்தில் எவ்வளவு முட்டாள்தனமான நம்பிக்கை என்றும் தோன்றுகிறது.

குட்டி ரேவதி

காற்றுவெளிப் பாடல்கள்


முன்பதிவு எதுவும் செய்யாமல், அன்று ஓடிப்போய் பேருந்தைப் பிடித்தேன். கோடை விடுமுறை என்பதால், பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. பொதுவாக, ஸ்பீக்கர்களில் பாடல்களை அலறவிடும் பேருந்துகளில் ஏறுவதில்லை. பயண அமைதியை விலை கொடுத்துக் கெடுத்துக்கொள்ளவேண்டாமே என்று நினைப்பேன்.
அந்தப்பேருந்தில், பழைய திரை இசைப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. குறிப்பாக, கேவி மகாதேவன், எம்எஸ் விசுவநாதன் ராமமூர்த்தி முற்காலப்பாடல்கள். வாகன ஓட்டுனர், தேர்ந்த இசை ரசனையுடன் பாடல்களைக் கோர்த்திருந்தார். ஒவ்வொரு பாடலின் வரிகளையும் இசையையும் அவை தரும் உணர்வுகளையும் ரசித்தபடியே, முந்தைய நாள் பெய்த மழையில் நிலம் வீசும் குளிர்க்காற்று பரவ, கேட்கக் கேட்க புதுமையாக இருந்தது. கருமையான இரவிற்கு, நட்சத்திரப்பந்தல் இட்டது போன்ற இரவு. எவ்வளவு நேரம் விழித்திருந்தேன் என்றே தெரியவில்லை.
ஏஆர் ரஹ்மானிடம் பணிபுரியத்தொடங்கிய பின்பு, வெளியாகும் அத்தனை பாடல்களையும் அப்பாடல்களில் பதிவாகும் புதிய பண்பாட்டுச்சொற்களை அறிவதற்காக ஒரு முறையேனும் கேட்டுவிடும் பழக்கத்தை வைத்திருக்கிறேன். மற்றபடி, காதுகளில் ஒயர்களைத் தொங்கவிட்டுப் பாடல்களைக் கேட்கும் வழக்கம் கிடையாது. கவிதைகள் வழியாக மொழியை நுகரமுடியும் அளவிற்குப் பாடல்களில் வாய்க்கவில்லை.
எங்கள் வீட்டில், கஜல் மற்றும் விதவிதமான நுட்பமான இசை கொண்ட பாடல்களைக் காலையிலேயே சீனி ஒலிபரப்பத்தொடங்கிவிடுவதால், அதுவே போதுமானதாக இருக்கிறது. தமயந்தியின் சிறுகதைகளில், ஆங்காங்கே இளையராஜாவின் பாடல்கள், மிகையின்றி கதாபாத்திரங்களின் குணாம்சங்களுடன் கலந்து வருவதை, தேநீர் அருந்தியபடியே புத்தகம் வாசிப்பதைப் போல ரசிக்கலாம்.
இந்தப்பேருந்து அனுபவம் தந்த உணர்வுகளையே, வங்காள மூலத்தில் மைத்ரேயி தேவி எழுதிய 'கொல்லப்படுவதில்லை' நாவலிலும் உணர்ந்தேன். மிக அருமையான பெண் மன ஓட்ட நாவல். மையமான பெண்கதாபாத்திரம், தாகூரின் மொத்தமான கவிதைகளையும் வாசித்து ரசித்து, எழுபது வயது தாகூருடன் உரையாடும் அனுபவம் பெற்றவள். அந்நாவலை வாசிக்கும் போது, அந்தப்பெண்ணிற்குப் போலவே, கடுந்தேனின் இயல்புடைய தாகூரின் கவிதைச் சொற்கள் நம் உடலில் ஊர்ந்தேறுவதை உணரமுடிகிறது.
இப்படியாக, கவிதைகள், பாடல்கள் உடலெங்கும் ஏறிப்படரும் அனுபவம், திரை இசைப்பாடல்கள் மிகையான போற்றுதலாலும், மிகை நுகர்தாலும், புறக்கணித்தலாலும் கிடைக்காமல் போகின்றனவோ என்று தோன்றுகிறது.
கர்நாடக இசை, ஆதிக்க இசையாக எல்லா கலைவெளிகளிலும் இடம் பிடிக்க முண்டியடித்தாலும், நம் தமிழ் திரை இசை தான், நம் எதிர்ப்பு இசை. காடுமேடெல்லாம், வெட்டவெளியெல்லாம், சேரிகளிலெல்லாம், மலைமுகடுகளிலெல்லாம் சளைக்காமல் கடந்து சென்று சேர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனாலென்ன, அகம் அல்லது புறம் என்ற பாங்கில் அவை இருமுனைப்பாடல்களாக இருக்கின்றன. அதன் வடிவ பலத்திற்கேற்ற்றாற் போல, நாம் இன்னும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
ஒன்றைத் தெளிவாக்கிக் கொள்கிறேன், கவிதைகள் வேறு, பாடல்கள் வேறு. கவிதைகளைப் பாடல்களாக்கும் முயற்சியும் வேறு.


குட்டி ரேவதி

'தி இமிடேஷன் கேம்' - கடிக்கப்பட்ட ஆப்பிளும் ஹோமோசெக்சுவலின் வரலாறும்!



இரண்டாம் உலகப்போரின் பொழுது, கணிதவியலாளன் ஆலன் டூரினின் அசாதாரண செயலை அவருடைய வாழ்க்கையினூடாகப் பார்க்கும் ஒரு படம். ஹோமோசெக்சுவலாக இருந்த ஆலன் டூரின், ஹிட்லர் போருக்குப் பயன்படுத்திய குறியீடுகளின் அர்த்தங்களை ஆராய்ந்து கண்டறிந்ததே, இந்தப்படத்தின் ஒட்டுமொத்தக்கதை.
கதையினூடாக, ஆலன் டூரினின் வாழ்வும், ஹோமோசெக்சுவலாக இருந்ததால் உண்டான போராட்டங்களும் சொல்லப்படுகிறது. அதேசமயம், இந்த நூற்றாண்டின் மனிதக்கண்டுபிடிப்புகளில் முதன்மையானதும் முக்கியத்துவம் உடையதுமான, கணினி உருவாக்கத்தில் ஆலன் டூரினினின் பங்கு முழுமையும் இந்தப்படத்தின் வழியாக உணரப்படுகிறது.

நாஜிக்களின் படைகள், பிரிட்டன் மீது எங்கு எவ்வாறு குண்டுகள் இடப்படவேண்டும் என்பதை, குறியீட்டுத்தகவலாகப் பரிமாறிக்கொண்டிருந்த பொழுது, அந்தக் குறியீடுகளைப் பிரித்து அறியும் சாதனையைச் செய்கிறார், டூரின். இந்தத்தனிமனிதரின் செயலால், இரண்டு வருட காலப் போர் குறைப்பு நிகழ்ந்ததாகவும், லட்சக் கணக்கான மக்களின் உயிரும் வாழ்வியலும் பாதுகாக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். ஒரு மனிதனின் அறிவு, வரலாற்றையும் அரசியலையும் நல்வழியில் புரட்டிப்போடமுடியும் என்பதற்குக் காலகாலமான ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது, ஆலன் டூரினின் வாழ்வு. ஒரு தனிமனிதனின் பாலியல் போராட்டமும், அறிவார்ந்த சவாலை எதிர்கொள்ளும் விதமும், இருபக்கக் கதைகளாக இப்படத்தில் விரிகின்றன.

அப்பொழுது, பிரிட்டனில், ஹோமோசெக்சுவலாக இருப்போர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். ஆலன் டூரினின் பாலியல்பின்புலம் அறியநேர்ந்த அரசு, அவருடைய சாதனைகளையும் மறந்து சிறை தண்டனை அல்லது, ஈஸ்ட்ரோஜென் என்ற பெண்ணய ஹார்மோனை உடலுக்குள் செலுத்துதல் என்ற இரண்டு தண்டனைகளைப் பரிசீலித்தபொழுது, ஆலன் டூரின் ஹார்மோனை உடலுக்குள் செலுத்தும் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
ஆனால், குறைந்த காலத்திலேயே அவர் நஞ்சூட்டப்பட்ட ஆப்பிளைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டார் அல்லது, அது சயனைட் தடவப்பட்ட ஆப்பிளை தற்செயலாகக் கடிக்க நேர்ந்ததில் நிகழ்ந்த விபத்து என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. ராணி எலிசபெத், அவரது ஹோமோசெக்சுவல் அடையாளத்தைத் தண்டித்ததற்காக, மரணத்திற்குப் பின்பான அரசு மன்னிப்பை அறிவித்தார்.
இன்று புகழ்மிக்க, ஆப்பிள் மற்றும் ஐஃபோன்களின் லோகாவாக இருக்கும், 'கடிக்கப்பட்ட ஆப்பிள்' என்பதை ஸ்டீவன் ஜாப்ஸ், ஆலன் டூரின் இறக்கக் காரணமான அந்த நஞ்சூறிய ஆப்பிளிலிருந்து தான் எடுத்துக்கொண்டார் என்ற தகவல் உண்டு.

கணிதவியலாளன் ஆலன் டூரினின் வாழ்வு, ஒரு கவிஞனின் வாழ்வைப் போன்றே குறியீடுகளுடனும் வெளிப்படையான அரசியலுடனும், அறியாமைகளுடனும் இருப்பதாக உணர்ந்தேன். இந்தப்படத்தில், கதை சொல்லப்பட்டிருக்கும் விதத்தில், சூழும் சமூகப் பாதிப்புகளை எல்லாம், தன் மார் மீதே வாங்கிக்கொள்ளும் ஒரு கலைஞனாக ஆலன் டூரின் நிமிர்ந்தெழும் பரவசத்தைப் படம் காணும்பொழுது உணரமுடியும்.
அதே சமயம், ஒரு சரியான சினிமா எப்படி தன் கலைவாய்ப்பை ஒரு சாக்காகக் கொண்டு, மனிதஇனத்தின் சாதனைகளையும் அவற்றின் துல்லியங்களையும் அழகாகப் பதிவுசெய்துவிடுகிறது என்பதையும் இப்படத்தில் உணரமுடிகிறது.

குட்டி ரேவதி

சினிமாவை எவரும் விமர்சிக்கலாம்!



தமிழ் சினிமாவின் சமூகத்தாக்கம் அளவிடமுடியாதது. இன்னும் சொல்லப்போனால், சமீப காலங்களில், அது சமூக மையம் நோக்கித் தன்னை வேகமாக நகர்த்திக்கொண்டு வரும் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு நிரந்தரமில்லாத கொந்தளிப்பான நிலையில், இன்னும் முடிவெடுக்க முடியாத ஒரு தத்தளிப்பான, தன்னை சீரமைத்துக்கொள்வதற்கான நிலையில் இருக்கிறது.

மேட்டுக்குடித்தன்மையையும் மேல்சாதியாதிக்கத்தையும் சரளமாகக்கொண்டிருந்த பழைய சினிமா போக்கிலிருந்து நகர்ந்து, பாமரனின், ஒடுக்கப்பட்டவனின் குரலாக, நவீனத்தின் அடையாளமாக மாறிக்கொண்டே இருக்கிறது.
இதில் பல தனிமனித கலைமுயற்சிகளும், எவரும் சினிமாவை விமர்சனம் செய்யக்கிடைத்த வாய்ப்பும், டிஜிட்டல் புரட்சியும், இணைய வீச்சும் மிகப்பெரிய பங்குகளை வகிக்கின்றன.
இன்னும் சினிமா பெருவாரியாக மாறும். சினிமாவிற்கான முதலீடு மீது இருக்கும் அதிகாரமும், குறிப்பிட்ட பணபலம் மட்டுமே இருப்பவர்களுக்கான வாய்ப்பும் மாறும் போது, தற்பொழுதைய சூழலும் மாறும்.


உலக சினிமாவுடனும், பிற மாநில மொழி சினிமாக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் தமிழ் சினிமாவைப் புரிந்து கொண்டாலும், சீர்தூக்கிப் பார்த்தாலும் கூட, தனித்துவப் போக்கில், தமிழ் சினிமா தனக்கென புதிய உருவாக்கங்களை, உள்ளடக்கங்களை, தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது.
மாற்று சினிமா, கலை சினிமா, வணிக சினிமாவுக்கு எதிரான சினிமா என்பதையெல்லாம் இன்றைய இளைய தலைமுறையின் சினிமா தன் புறங்கையால் உதறி, முற்றிலும் புதிய இடத்திற்கு நகர்த்திச் செல்ல முயற்சிசெய்த வண்ணம் உள்ளது.

நித்தமும் தன் அதிகார வரையறைகளை மாற்றும் தமிழ்சினிமாவுடன் ஓட்டம் பிடிக்க முடியாதவர்கள், அதன் மீது ஒவ்வாமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்கள். ரகசியமாக, நேசித்திருக்கிறார்கள். சினிமா மீது பேதலிப்புடன், காதலுடன் திரிந்திருக்கிறார்கள். தம் வாழ்வைப் பணயம் வைத்திருக்கிறார்கள்.

சினிமா என்னும் கலை ஊடகத்தின் மீதான மக்கள் விமர்சனம் கூர்மையாக, கூர்மையாக, அது இன்னும் அதிகமாகத் தன்னைச் செம்மையாக்கிக் கொள்ளும். சமூகத்திற்கானதாக ஆக்கிக்கொள்ளும். அதிகாரத்தின் கைகளிலிருந்து பிதுங்கி வெளியேறி எப்பொழுதும் தன்னை நவீனமாக்கிக்கொள்ளும், விடுதலையாக வைத்துக்கொள்ளும் சினிமாவின் தாக்கத்தை யாரும் புறக்கணிக்க முடியாது. சினிமா தான் இன்றைய நம் கை ஆயுதம்!

குட்டி ரேவதி

கவிதை என்றால், எனக்கு பிரமிளை நினைவூட்ட ஒரு சாக்கு!



கவிதை என்றால் என்ன என்பது குறித்த தெளிவான விவாதக்களத்திற்கு இன்னும் நாம் வந்து சேரவில்லை.
தமிழ்நவீனக்கவிதை எழுத வரலாறு, தத்துவம், மொழி எல்லாம் அவசியம் என்று பதிவிட அறிந்தவர்கள், நவீனத்துவம் நிறைந்த ஒரு கவிதையை எழுத, சமகால மொழியின் அரசியல், சமூக அரசியல் அறிந்திருக்கவேண்டும் என்பது முக்கியமாகத் தோன்றவில்லை.

கவிதைகள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே எழுதப்படவேண்டும், எழுதியவராலே எழுதப்பட்டதாக இருக்கவேண்டும், அங்கீகாரம் பெற்றவராலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற மனநிலை, வழக்கமான 'சிற்றிதழ் மனநிலை'.
சிற்றிதழ் மனநிலை, இன்று மேட்டிமை மனநிலையாக, மேலாதிக்க மனநிலையாக, ஏன் ஆதிக்கசாதி மனநிலையாக நன்கு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அதற்கென்று ஓர் அதிகாரம் தேவைப்படுகிறது என்பதையும் நீங்களே பார்க்கலாம்.

ஆதிக்க சாதிவெளிப்படைப்புகளுக்கு பொதுவெளியின் அங்கீகாரமும் அதிகாரமும் தாராளமாக வழங்கப்பட்டிருப்பதும் நாம் அறியாதது அல்ல.
தனக்கான அங்கீகாரத்திற்கு மட்டுமே பொறுப்பேற்கும் தனிமனித மனநிலையிலிருந்து தீவிர இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளப்படும் 'சிற்றிதழ் இலக்கியவெளி' இன்னும் விடுபடவே இல்லை.
கவிதை இயக்கம், ஒரு தீப்பந்தம் போல. தொடர் ஓட்டத்தில் அது கைகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது. அவ்வளவே.

சமகால கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதில், நிறைய அசெளகரியங்களும், கருத்தியல் பிழைகளும், முரண்பாடுகளும் நிகழ்ந்துவிடுவதாலும்,
பிரமிளின் கவிதை வீச்சும் அரசியல் தெளிவும் பொதுச்சமூகத்தைச் சென்று சேருவதன் அவசியம் இன்னும் அதிகமானது என்பதை இந்நாளில் உணர்வதாலும்,
என் கவிதை வாழ்வுக்கான முழு எழுச்சியையும் பிரமிளின் கவிதை ஆக்கங்கள் தரும் தீரா கொந்தளிப்புகளிலிருந்தே நான் பெற்றுக்கொள்வதாலும்,
கவிதையென்றால், பிரமிளை நினைவூட்டிப்பேச அவருடைய பிறந்த நாள் நல்லதொரு சாக்கே என்பதாலும் இன்று, இங்கே பிரமிள்!

குட்டி ரேவதி

தாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்


கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி
என்ற பேச்சே கிடையாது
தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.
மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.
ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.
தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.
நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே.
கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.
தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.
நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது.
எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு)
இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்)
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்.
ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது.
இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.
அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.

புத்தகங்கள் உறங்குவதே இல்லை!


புத்தகங்களுடன் புழங்குவதற்கான நெருக்கமும், அவற்றை வாசிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்க, அதிகரிக்க புத்தகங்கள் மீதான அளவுக்கதிகமான உடைமை உணர்வு மாறியே விட்டது.
ஆனால், பிடிவாதமான சில விடயங்கள் இன்னும் மாறவே இல்லை.
இன்றும் ஒரு நண்பருக்கு அல்லது குறிப்பிட்ட நிகழ்விற்கு, தருணத்திற்கு அன்பளிப்பாக செய்ய புத்தகத்தினும் உன்னதமானதும், பொருத்தமானதும் வேறு இல்லை.
நம் அடிமனதில், எந்த விடயத்தின் மீது அதிகமான ஆர்வமும் ஈடுபாடும் உள்ளதோ, அதுகுறித்த முக்கியமான நூலைத் தேடிச்செல்லும் வாய்ப்பு அல்லது அந்த நூலே உங்கள் கைகளுக்கு வரும் வாய்ப்பு மிகவும் குறைந்த தூரத்தில் இருக்கிறது. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தான், அம்பேத்கரின் புத்தரும் அவர் தம்மமும் நூல் எனக்கு நிகழ்ந்தது.
மேலும், ஒரு நூலை மிக விருப்பத்துடன், அட்டை முதல் அட்டை ஒவ்வொரு சொல்லையும் வாசித்து அதன் அர்த்தத்தை உறிஞ்சிய பின்னும், நூலை கீழே வைக்க மனமில்லாமல், உடன் தூக்கிச் சுமக்கும் மனநிலையும் மாறவில்லை.
ஒவ்வொரு நூலுக்காகவும் நீண்ட காலம் உழைத்து, அதனுடன் பொறுமையானதொரு காலம் செலவழித்த பின்னும், அச்சான அந்த நிமிடத்தில், நூலுக்கு இறக்கை முளைத்தது போல் அது என்னிடமிருந்து பறந்துவிட்ட உணர்வே ஏற்படுகிறது. அந்த நூல் மீது, பின் எந்த ஒட்டுதலும் இருப்பது இல்லை.
உண்மையில், சரியான நோக்கத்துடன் எழுதப்பட்ட எவருடைய ஒரு நூலும், அது கவிதையோ, கட்டுரையோ, நாவலோ, ஒரு விசித்திரமான மாயக்கம்பளம் தான். அது, தன்னுள் எல்லாவிதமான மந்திரவித்தைகளையும் கட்டுகளாகக் கொண்டிருக்கிறது.
மனிதர்களை விட, புத்தகங்களே மேலானவையாக இருக்கின்றன என்ற கருத்தை எப்பொழுதும் மாற்றிக்கொள்ளவேண்டியிருக்காது என்றும் மனம் உறுதியாக நம்புகிறது.
புத்தகங்கள் உறங்குவதே இல்லை. நிரப்பப்பட்ட சொற்களின் முழு உணர்வெழுச்சியுடன் எப்பொழுதும் விழித்திருக்கின்றன.
புத்தகங்கள் ஒரு தனிமனிதனுடன் கொண்டிருக்கும் இடத்தை வேறெந்த ஊடகமும் எடுத்துக்கொள்ளமுடியாது என்றே நினைக்கிறேன்.

குட்டி ரேவதி

இப்பொழுதும் அவர்கள் மீது எனக்கு வெறுப்பில்லை.




காலங்காலமாக, தம் கால்களின் கால்களால் பெண்களை நசுக்கியவர்கள், 
இன்று அவற்றைச் செயல்படுத்த இயலாததை 
'ஆண்மைக் குறைவாய்' என்ணி, வெறுப்பை உமிழ்கிறார்கள்.
அவை அமிலச்சொற்களாய், எச்சில் துளிகளாய் 
அவர்கள் முகங்களைச் சுற்றித் தெறிக்கிறது.
இப்பொழுதும் அவர்கள் மீது எனக்கு வெறுப்பு மூளவில்லை.

ஏனெனில், அவர்களின் பெண் வெறுப்பை ஏற்றுக்கொண்டும், 
சுயமரியாதையை உதறிக்கொண்டும் 
அவருடன் அணிவகுத்து நிற்கும் பெண்களின் வரிசை 
அப்படியே உள்ளது.
அவர்கள் எழுத்து, நன்றாய்த்தானிருக்கிறது. 
ஆள்கள்தான் சரியில்லை என்று சொல்லும் ஆண்களின் வரிசையும் 
அப்படி அப்படியே உள்ளது.
விருதுகளின் வெளிச்சமும் அழைப்பிதழ்களின் நிறங்களும் கூட 
அப்படியே நிறம் மங்காமல் உள்ளது.
இதழ்களின் நடுப்பக்கங்களும் கேமராக்களின் முகங்களும் கூடக் காத்திருக்கின்றன.
சூத்திரப்பெண்களின் மீது வெறுப்பை உமிழ்வது தானே சாதியின் இயல்பு. 
இப்பொழுதும் அவர்கள் மீது எனக்கு வெறுப்பு மூளவில்லை.

ஆசான்கள் என்ன சொன்னாலும் ஆசாரிகள் என்ன சொன்னாலும் 
முதுகெலும்பின்றி கருத்தியலை விலைக்கு வாங்கும் கூட்டங்களும் கூட
அப்படியே காத்திருக்கின்றன. வரிசை நீள்கிறது.
கோழைத்தனங்களும் அப்படியே கூன்விழுந்து கிடக்கின்றன.
அணி மாறிக் கலைந்து மீண்டும் திரள்கின்றனர்.
அவ்வவ்வரிசைகள் அப்படியே உள்ளன. 
அவர்கள் மீது இப்பொழுதும் எனக்கு வெறுப்பு மூளவில்லை.

எதிர் வன்முறையை அடக்கிக்கொள்ளும் ஒரு மிடறு உமிழ்நீர் கூட 
இப்பொழுதெல்லாம் எனக்கு சுரப்பதில்லை.
எனது கவலையெல்லாம் அவர்களின் பெண்மகள்கள் பற்றியது.
இந்தியாவின் மகள்கள் எவர் மீதும்,
'இந்தியாவின் மகன்களோ, சகோதரரோ, மாமன்களோ, மருமகன்களோ 
ஏன் தந்தையரோ கூட ஒரு கணமும் கருணையுடன் நடந்து கொண்டதில்லை. 
கருணையுடன் நடந்து கொண்டதாய் வரலாறும் இல்லை.
எனது கவலையெல்லாம் அவர்களின் பெண்மகள்களும் பற்றியது.

ஆனால், இன்னும் அவர்கள் நிறைய எழுதி முடிக்கவேண்டியிருக்கிறது.
முழுக்கழிவும் வெளியேறும் வரை, எழுதித் தீர்க்கவேண்டியிருக்கிறது.
எனது கவலையெல்லாம் அவர்களின் பெண்மகள்கள் பற்றியது.

குட்டி ரேவதி

'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன் வைத்து! - 4







4. ஆவணப்படத்தின் புரிதலில் உள்ள சிக்கல்.









இந்தியச் சமூகத்தில், இப்படி 'பாலியல் வல்லுறவுகள்' இருபது நிமிடங்களுக்கு ஒன்றாக நிகழ்வதற்கும், கற்றோர் முதல் கல்லாதோர் வரை, 'ஆண் பாலியல் வல்லுறவு' செய்வதை நியாயப்படுத்துவதற்கும், செய்துவிட்டு பொதுமக்கள் பார்வையிலிருந்து தப்பிக்கமுடிவதற்கும் ஒரே காரணம், இச்சமூகத்தின் கட்டமைப்பு, 'சாதிய வலையால்' ஆனது. இது ஆதிக்க சாதியினருக்கும், மேல்மட்டத்தில் இருப்போரும் தப்பிப்பதற்கு ஏற்ற பெரிய ஓட்டைகளையும், நலிந்தோர் தப்பிக்க ஏதுவான சிறிய ஓட்டைகளையும் அல்லது ஓட்டைகளே அற்ற முட்டுச்சந்துகளையும் கொண்டது.



இந்துமதம், ஆகவே, சாதியமுறையை வற்புறுத்துகிறது. பெண்களை அடிமைப்படுத்தும் விடயங்களை மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்துகிறது. இதற்கு ஏற்ப இந்துமதம் வலிமையுடையதாகும் என்று நம்புகிறது.



இதை, அந்த பிபிசி ஆவணப்பட இயக்குநரால் ஒரு பொழுதும் புரிந்து கொள்ளமுடியவில்லை. அல்லது, புரிந்து கொள்ளமுடியாது. 



இதைப் புரிந்துகொள்ள, நம்மை ஆண்ட பிரிட்டீசாராலும் இயலவில்லை. ஆகவே, நம்மை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். 



லெஸ்லி வுடின் என்ற இந்த ஆவணப்பட இயக்குநராலும் இதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதில் குற்றமிழைத்த எல்லோரும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள். 



வறுமைக்கும் மேட்டிமைக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு, சாதிஅதிகாரத்தினால் செயற்கையாய் உருவாக்கப்பட்டது. 



ஆகவே தான், இந்நிகழ்வில், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது இருக்கும் வெறுப்பும், ஏழ்மையின் மீது இருக்கும் அருவெறுப்பும் இயங்கி, தண்டனையைப் பெற்றுத்தரமுடிந்தது.



இதே நியாயத்தை, இரு தலித் பெண்களை வல்லுறவு செய்து, கொன்று மாமரங்களில் தொங்கவிடப்பட்ட, 'மாமர வழக்கிலும்' ஏன் நம்மால் பெற முடியவில்லை? ஏன் ஊடகங்களின் ஆதரவை, கவனத்தைப் பெறமுடியவில்லை? என்பது முக்கியமான கேள்வி.



சென்ற வருடம் மட்டும், 'நிருபயா' போன்று, 900 - க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் வல்லுறவு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். 



ஏன், இவர்கள் 'இந்தியாவின் மகள்கள்' இல்லையா?



பிபிசி ஆவணப்பட இயக்குநரால், இந்தியாவின் இப்பிரச்சனையைப் பரந்த அளவில் அறிந்து கொள்ளவோ, உள்வாங்கவோ முடியவில்லை. அப்படி முடிந்திருந்தால், இந்த ஆவணப்படம், இந்தியாவின் நீதிமுறையைப் பெருத்த கேள்விக்குள்ளாக்கியிருக்கும்.



இந்தியா, இன்னும் பெருத்த அவமானத்திற்கு ஆளாகியிருக்கும்.



குட்டி ரேவதி