நம் குரல்

இரண்டடுக்குச் சிந்தனை






பழங்களைத் தின்று விதைகளைக் கழிக்கும் போதேல்லாம் தேடுகிறேன் ஜன்னலுக்கு வெளியே அந்தப் பக்கம் ஒரு சிறு மண்நிலத்தை. ஆனால் விதைகள் எப்பொழுதும் சிமெண்ட் தரையைத் தான் மோதி உடைகின்றன.

ஏராளமான தோழிகள் வாழ்க்கையின் அந்தரங்கம் வரை தொட்டு விட்டு ஏதுமே நடவாதது போல் வெளியேறுகின்றனர், எனில் அவர்கள் ஆண்களிடம் அன்னியோன்யம் தொடுவது எப்படி?

மனதுக்குள் ஏராளமான கதைகளை வைத்திருந்தேன். ஆனால் காலத்தின் ஓட்டத்திலும் நெருக்கடியிலும் அக்கதைகள் எல்லாம் வெளியேறுவதற்கு வாய்ப்பின்றி கலைந்து குலைந்து ஒன்றோடு ஒன்றாய் பின்னிக் கொண்டு ஒரே கதையாய் ஆகிவிட்டன.

கவிதைகளை விவாதிப்பவரை விட, விளைவிப்பவரை விட கவிதைகளை வாசிப்பவர்கள் சமீபத்தில் அதிகமாகிவிட்டனர். அரங்கங்கள் அதிகமாகிவிட்டதால் இருக்கலாம். ஆனால் எழுதியவர்களே தம் கவிதைகளையே ஏன் வாசித்துக் கொண்டு இருக்க வேண்டும்?

வீடு நம்முடன் எப்பொழுதாவது தான் உரையாடுகிறது. வெளி நம்முடன் உரையாடி உரையாடிக் களிக்கிறது.

தன்னுடலுக்குள் தானே நுழைவதற்கான ஒரே வழி தான் மூச்சு என்று சித்தர்கள் ஆணித்தரமாகச் சொல்ல விரும்பியிருக்கலாம்.

தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளர்களுடன் எதையுமே பரிமாறிக்கொள்வதேயில்லை. அதுவே தனக்குத் தானே ஓயாமல் அர்த்தம் சலிக்கப் பேசி ஓய்ந்து போகின்றன. படம் முடிந்து எல்லோரும் வெளியேறிய பின் திரையரங்கின் தரையில் சிதறியிருக்கும் சோளப்பொரிகள் போல வறுபட்ட வெறுமையே எஞ்சியிருக்கிறது.

பழைய நிறைவேறாத நெருங்க அனுமதியாத காதல் நாளடைவில் மழையின் ஈரக்காற்றினால் பாசம்படர்ந்த தலையணையைப் போல.

தங்கைகள் விசித்திரமான பெண்கள். அக்காக்கள் தவற விட்ட கேளிக்கைகளை எல்லாம் தேடிப் பிடித்துக் கொண்டாடும் வாழ்க்கையை வரைந்து கொள்ள முடிகிறது அவர்களால்.

காதலர்கள் எல்லோரும் ஆண்களாயிருக்க வேண்டிய அவசியமில்லை, நண்பர்களெல்லோரும் பெண்களாயிருக்க வேண்டிய அவசியமுமில்லை என்ற நிலைக்கு உலகம் உய்வடைந்த பின் என் தனிமை எனக்கு மிகவும் அவசியமானதாயிற்று.

ஆண்களின் உரையாடல்கள் சலிப்பூட்டுபவையாக இருக்கின்றன. இரத்தக் கறைகள் படர்ந்த சுவர்களைப் போல எப்பொழுதோ நிகழ்ந்து முடிந்த வன்முறையை எப்பொழுதும் நினைவூட்டுவதாலோ என்னவோ?

எனக்கான சென்னை தொடங்குவது, என் தோழிகளுடன் சேர்ந்து காபி அருந்தும் இடத்திலிருந்தும் மனோவுடன் இரண்டாம் காட்சி திரைப்படம் பார்த்துத் திரும்பும் தருணத்திலிருந்தும்

நீண்ட பயணங்கள் தாம் நினைவுகள் சலித்த அகன்ற வெளியை கொடையளிக்கின்றன. ஆனால் அவை தூரத்தால் மட்டுமே வரையப்படுவதில்லை. நினைவுகளினூடான பயண சிரத்தையையும்.



குட்டி ரேவதி

புனைவு

முன்பு போல் நீயும் நானுமினி வாழ இயலாது என்றுன்
உதடுகளும் விரல்களும் ஒரு சேர பகன்ற சமயம்
வலிகளை கொதிக்கும் தேநீர் இலைகளென்றெண்ணி
இனி ஒரு போதும் பருகப் போவதில்லை என்றும்
கண்ணாடி தாக்குண்டு உடைந்து சிதறிக் கிடந்ததான
ஓர் அவலம் பற்றிய வெளியிலிருந்து
வேறு வேறு கதவுகளைத் திறந்து பிரிந்தோம்
வேறு வேறு புனைவுகளின் எலும்புக் கூடுகள் வழியே
இருமையான காலங்களைத் திறந்தோம்
கதைகளின் பக்கங்கள் நீரலைகளால் ஆனவை போல
கண்ணீருக்கும் தாகத்துக்கும் இடையே நம் இரவுகள் புரண்டன
நல்ல வேளையாகக் கனவுகளுக்குள் புனைவுகள் நுழைய விதியில்லை
பாறை மிகுந்த வெளியில் கண்ணீர்க் கிணறுகள் திறப்பதை
நானும் ஒப்பவில்லை நீயும் விரும்பவில்லை
நெடுகத் திறந்த புனைவுகளில் மனித ஆவிகளைச் சுமந்து
மரங்களின் கபால உச்சிகள் அங்குமிங்கும் அலைந்தன
அவற்றின் மீது சிந்திக் கொண்டிருந்த நிலவின் ஒளி
புனைவுக்கான விதைகளைப் பருவமெய்தச் செய்தது
இருவரும் வேறு வேறு கதவுகள் திறக்க ஓரிடம் வந்து
எதிரெதிர் கண்டோம் நம்மை நாம் இறுகப் பிணைய






குட்டி ரேவதி