நம் குரல்

கவிதை என்றால், எனக்கு பிரமிளை நினைவூட்ட ஒரு சாக்கு!



கவிதை என்றால் என்ன என்பது குறித்த தெளிவான விவாதக்களத்திற்கு இன்னும் நாம் வந்து சேரவில்லை.
தமிழ்நவீனக்கவிதை எழுத வரலாறு, தத்துவம், மொழி எல்லாம் அவசியம் என்று பதிவிட அறிந்தவர்கள், நவீனத்துவம் நிறைந்த ஒரு கவிதையை எழுத, சமகால மொழியின் அரசியல், சமூக அரசியல் அறிந்திருக்கவேண்டும் என்பது முக்கியமாகத் தோன்றவில்லை.

கவிதைகள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே எழுதப்படவேண்டும், எழுதியவராலே எழுதப்பட்டதாக இருக்கவேண்டும், அங்கீகாரம் பெற்றவராலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற மனநிலை, வழக்கமான 'சிற்றிதழ் மனநிலை'.
சிற்றிதழ் மனநிலை, இன்று மேட்டிமை மனநிலையாக, மேலாதிக்க மனநிலையாக, ஏன் ஆதிக்கசாதி மனநிலையாக நன்கு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அதற்கென்று ஓர் அதிகாரம் தேவைப்படுகிறது என்பதையும் நீங்களே பார்க்கலாம்.

ஆதிக்க சாதிவெளிப்படைப்புகளுக்கு பொதுவெளியின் அங்கீகாரமும் அதிகாரமும் தாராளமாக வழங்கப்பட்டிருப்பதும் நாம் அறியாதது அல்ல.
தனக்கான அங்கீகாரத்திற்கு மட்டுமே பொறுப்பேற்கும் தனிமனித மனநிலையிலிருந்து தீவிர இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளப்படும் 'சிற்றிதழ் இலக்கியவெளி' இன்னும் விடுபடவே இல்லை.
கவிதை இயக்கம், ஒரு தீப்பந்தம் போல. தொடர் ஓட்டத்தில் அது கைகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது. அவ்வளவே.

சமகால கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதில், நிறைய அசெளகரியங்களும், கருத்தியல் பிழைகளும், முரண்பாடுகளும் நிகழ்ந்துவிடுவதாலும்,
பிரமிளின் கவிதை வீச்சும் அரசியல் தெளிவும் பொதுச்சமூகத்தைச் சென்று சேருவதன் அவசியம் இன்னும் அதிகமானது என்பதை இந்நாளில் உணர்வதாலும்,
என் கவிதை வாழ்வுக்கான முழு எழுச்சியையும் பிரமிளின் கவிதை ஆக்கங்கள் தரும் தீரா கொந்தளிப்புகளிலிருந்தே நான் பெற்றுக்கொள்வதாலும்,
கவிதையென்றால், பிரமிளை நினைவூட்டிப்பேச அவருடைய பிறந்த நாள் நல்லதொரு சாக்கே என்பதாலும் இன்று, இங்கே பிரமிள்!

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: