நம் குரல்

'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன் வைத்து! - 4







4. ஆவணப்படத்தின் புரிதலில் உள்ள சிக்கல்.









இந்தியச் சமூகத்தில், இப்படி 'பாலியல் வல்லுறவுகள்' இருபது நிமிடங்களுக்கு ஒன்றாக நிகழ்வதற்கும், கற்றோர் முதல் கல்லாதோர் வரை, 'ஆண் பாலியல் வல்லுறவு' செய்வதை நியாயப்படுத்துவதற்கும், செய்துவிட்டு பொதுமக்கள் பார்வையிலிருந்து தப்பிக்கமுடிவதற்கும் ஒரே காரணம், இச்சமூகத்தின் கட்டமைப்பு, 'சாதிய வலையால்' ஆனது. இது ஆதிக்க சாதியினருக்கும், மேல்மட்டத்தில் இருப்போரும் தப்பிப்பதற்கு ஏற்ற பெரிய ஓட்டைகளையும், நலிந்தோர் தப்பிக்க ஏதுவான சிறிய ஓட்டைகளையும் அல்லது ஓட்டைகளே அற்ற முட்டுச்சந்துகளையும் கொண்டது.



இந்துமதம், ஆகவே, சாதியமுறையை வற்புறுத்துகிறது. பெண்களை அடிமைப்படுத்தும் விடயங்களை மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்துகிறது. இதற்கு ஏற்ப இந்துமதம் வலிமையுடையதாகும் என்று நம்புகிறது.



இதை, அந்த பிபிசி ஆவணப்பட இயக்குநரால் ஒரு பொழுதும் புரிந்து கொள்ளமுடியவில்லை. அல்லது, புரிந்து கொள்ளமுடியாது. 



இதைப் புரிந்துகொள்ள, நம்மை ஆண்ட பிரிட்டீசாராலும் இயலவில்லை. ஆகவே, நம்மை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். 



லெஸ்லி வுடின் என்ற இந்த ஆவணப்பட இயக்குநராலும் இதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதில் குற்றமிழைத்த எல்லோரும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள். 



வறுமைக்கும் மேட்டிமைக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு, சாதிஅதிகாரத்தினால் செயற்கையாய் உருவாக்கப்பட்டது. 



ஆகவே தான், இந்நிகழ்வில், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது இருக்கும் வெறுப்பும், ஏழ்மையின் மீது இருக்கும் அருவெறுப்பும் இயங்கி, தண்டனையைப் பெற்றுத்தரமுடிந்தது.



இதே நியாயத்தை, இரு தலித் பெண்களை வல்லுறவு செய்து, கொன்று மாமரங்களில் தொங்கவிடப்பட்ட, 'மாமர வழக்கிலும்' ஏன் நம்மால் பெற முடியவில்லை? ஏன் ஊடகங்களின் ஆதரவை, கவனத்தைப் பெறமுடியவில்லை? என்பது முக்கியமான கேள்வி.



சென்ற வருடம் மட்டும், 'நிருபயா' போன்று, 900 - க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் வல்லுறவு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். 



ஏன், இவர்கள் 'இந்தியாவின் மகள்கள்' இல்லையா?



பிபிசி ஆவணப்பட இயக்குநரால், இந்தியாவின் இப்பிரச்சனையைப் பரந்த அளவில் அறிந்து கொள்ளவோ, உள்வாங்கவோ முடியவில்லை. அப்படி முடிந்திருந்தால், இந்த ஆவணப்படம், இந்தியாவின் நீதிமுறையைப் பெருத்த கேள்விக்குள்ளாக்கியிருக்கும்.



இந்தியா, இன்னும் பெருத்த அவமானத்திற்கு ஆளாகியிருக்கும்.



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: