நம் குரல்

தமிழ்சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு தமிழ்சினிமாவிற்கான நடிகை தேடும் படலம் இன்னும் ஓயவில்லை!

நம்பர் 1 நடிகைகள் யாரும் நம் சுயமான, அசலான கற்பனைக் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருப்பதில்லை. ஸ்மிதா பட்டேல், தன் 31 வயதுக்குள் ஒரு நடிகையாகச் செய்த சாதனைகள் அபாரமானவை. தான் நடித்த கலைப்படங்கள் வழியாகவும் வணிகப்படங்கள் வழியாகவும் இந்தியப் பெண் ஆளுமையையும் மனோபாவத்தையும் திரைக்குக் கொண்டு வந்ததில் இவர் ஒருவருக்கே முதன்மையான இடம் என்று சொல்லலாம். இருவகை சினிமாவையும் தன் ஒட்டுமொத்த ஈடுபாட்டால் நேர்மையாகக் கையாண்டவர், ஸ்மிதா பட்டேல்

ஆனால், இன்று இந்தியப்பெண்களின் உளவியலை சற்றும் தொடாத வணிகப்படங்களுக்கு இடையே நாம் உழன்று கொண்டிருக்கிறோம். தமிழ்ப்படங்களின் நிலை இன்னும் அவலமானவை. இன்றும் தமிழ்ப்படங்களில் நடிக்க, தமிழ் பேசத்தெரிந்த, தமிழ் சமூகவியலை அடிப்படை அளவிலேனும் உணரக்கூடிய, உடலிலும் உடல் மொழியிலும் பன்முகப்பெண் ஆளுமையை ஏற்கக்கூடிய, நம் வெயில் காய்ந்த தோலின் நிறமுடைய, நடிப்பு என்பதன் சிறுமைகளை மீறி ஓங்கி நிற்கக்கூடிய நடிகைகளுக்குப் பஞ்சம் தான். இத்தகைய தேவைகளுக்கெல்லாம் நம்மிடம் இருக்கும் ஒரே மைல் கல், ஸ்மிதா பட்டேல் தான்.
முதல் விடயம்: தமிழ்ச்சமூகத்திலிருந்து தமிழ்க்குடும்பங்களிலிருந்தெல்லாம் பெண்களை நடிப்புத்துறைக்கு அனுப்புவதில்லை. இதற்கு நாம் பயன்படுத்தும் இழிவான ஒரே வார்த்தை, அது 'கூத்தாடி'த் தொழில் என்பதே. உண்மையில், திரையில் மற்றும் திரைத்துறையில் ஒரு பெண் நடிகையாக இயங்குவதற்கு பெரும் ஆற்றல் தேவைப்படுகிறது. அவ்வாறு இருப்பதற்கான சவால்கள் சகமனிதராகக் கூட, நாம் இன்னும் அறியாதவை. அதன் உடல் அரசியலும் எதிர்கொள்ளவேண்டிய ஆண்மைய புரிதலும் வேறு எந்தத்துறையை விடவும் அதிகமானவை. பெண் உடல் அரசியலை முழுமைப்படுத்தும் பெண்ணியமும் பெண்உரிமையும் அங்கே தான் முளைத்துவர வேண்டியிருக்கிறது.
இரண்டாவது விடயம்: ஒரு பக்கம் நடிகையை இழிவுபடுத்திய படியே, அவர்களை மிகையான வெளிச்சத்தில் நிறுத்திவைக்கும் வணிக ஃபார்முலாக்களின் அங்கமாகவும் நாம் தான் இருக்கிறோம். இன்று, நமக்கு (எனக்கு)த் தேவை, ஸ்மிதா பட்டேல் போல ஒரு நடிகை. முழுமையான மனவெழுச்சியும் தொழில்சார்ந்த அக்கறையும் உள்ள பெண்களை மற்ற மொழிகளிலிருந்து கண்டிப்பாக இறக்குமதி செய்யமுடியாது. வணிகமும், அங்கீகாரமும், சிந்தனையும் மொழி சார்ந்ததாக இருக்கும்பொழுது 'பாவனை'யை மட்டும் மற்ற மொழிநடிகைகள் வழியாக எப்படி இறக்குமதி செய்யமுடியும்?
நம் வெப்பப்பிரதேசத்தின் கனன்ற தோல் கொண்ட, கருத்த முடியும் பெரிய, கூர்மையான விழிகளும் கொண்ட, நம் ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் மீதான பரிவைக் கொண்ட நடிகை யாராக இருந்தாலும் அவர் அடுத்த 'ஸ்மிதா பட்டேல்' ஆகக்கடவர். ஸ்மிதா பட்டேலின் பெருமைகளைப் பேசிப்பேசியே, அங்கேயே பெண் நடிப்பின் சவாலை நிறுத்திவிடமுடியாது. தமிழ்த்திரைத்துறை ஒவ்வொரு நடிகை வழியாகவும் நிறைய கற்பனைகளையும் புனைவுகளையும் முன்வைக்கத் தயாராக இருக்கிறது.



குட்டி ரேவதி

சினிமாவை எவரும் விமர்சிக்கலாம்!



தமிழ் சினிமாவின் சமூகத்தாக்கம் அளவிடமுடியாதது. இன்னும் சொல்லப்போனால், சமீப காலங்களில், அது சமூக மையம் நோக்கித் தன்னை வேகமாக நகர்த்திக்கொண்டு வரும் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு நிரந்தரமில்லாத கொந்தளிப்பான நிலையில், இன்னும் முடிவெடுக்க முடியாத ஒரு தத்தளிப்பான, தன்னை சீரமைத்துக்கொள்வதற்கான நிலையில் இருக்கிறது.

மேட்டுக்குடித்தன்மையையும் மேல்சாதியாதிக்கத்தையும் சரளமாகக்கொண்டிருந்த பழைய சினிமா போக்கிலிருந்து நகர்ந்து, பாமரனின், ஒடுக்கப்பட்டவனின் குரலாக, நவீனத்தின் அடையாளமாக மாறிக்கொண்டே இருக்கிறது.
இதில் பல தனிமனித கலைமுயற்சிகளும், எவரும் சினிமாவை விமர்சனம் செய்யக்கிடைத்த வாய்ப்பும், டிஜிட்டல் புரட்சியும், இணைய வீச்சும் மிகப்பெரிய பங்குகளை வகிக்கின்றன.
இன்னும் சினிமா பெருவாரியாக மாறும். சினிமாவிற்கான முதலீடு மீது இருக்கும் அதிகாரமும், குறிப்பிட்ட பணபலம் மட்டுமே இருப்பவர்களுக்கான வாய்ப்பும் மாறும் போது, தற்பொழுதைய சூழலும் மாறும்.


உலக சினிமாவுடனும், பிற மாநில மொழி சினிமாக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் தமிழ் சினிமாவைப் புரிந்து கொண்டாலும், சீர்தூக்கிப் பார்த்தாலும் கூட, தனித்துவப் போக்கில், தமிழ் சினிமா தனக்கென புதிய உருவாக்கங்களை, உள்ளடக்கங்களை, தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது.
மாற்று சினிமா, கலை சினிமா, வணிக சினிமாவுக்கு எதிரான சினிமா என்பதையெல்லாம் இன்றைய இளைய தலைமுறையின் சினிமா தன் புறங்கையால் உதறி, முற்றிலும் புதிய இடத்திற்கு நகர்த்திச் செல்ல முயற்சிசெய்த வண்ணம் உள்ளது.

நித்தமும் தன் அதிகார வரையறைகளை மாற்றும் தமிழ்சினிமாவுடன் ஓட்டம் பிடிக்க முடியாதவர்கள், அதன் மீது ஒவ்வாமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்கள். ரகசியமாக, நேசித்திருக்கிறார்கள். சினிமா மீது பேதலிப்புடன், காதலுடன் திரிந்திருக்கிறார்கள். தம் வாழ்வைப் பணயம் வைத்திருக்கிறார்கள்.

சினிமா என்னும் கலை ஊடகத்தின் மீதான மக்கள் விமர்சனம் கூர்மையாக, கூர்மையாக, அது இன்னும் அதிகமாகத் தன்னைச் செம்மையாக்கிக் கொள்ளும். சமூகத்திற்கானதாக ஆக்கிக்கொள்ளும். அதிகாரத்தின் கைகளிலிருந்து பிதுங்கி வெளியேறி எப்பொழுதும் தன்னை நவீனமாக்கிக்கொள்ளும், விடுதலையாக வைத்துக்கொள்ளும் சினிமாவின் தாக்கத்தை யாரும் புறக்கணிக்க முடியாது. சினிமா தான் இன்றைய நம் கை ஆயுதம்!

குட்டி ரேவதி

தமிழ்சினிமாவும் பெண் உதவி இயக்குநர்களும்


தமிழ்சினிமாவில் ஏன் பெண் உதவி இயக்குநர்கள் அதிகமில்லை என்ற கேள்வியை, பலர் என்னிடம் எழுப்புகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தான், பெண் உதவி இயக்குநர் என்றால், ஏதோ "நடிகையின் எடுபிடி" என்று நினைக்கிறார்கள்.


நடிகைகளும் அவர்கள் தொழில்களுக்கான சவால்களைச் சந்திப்பவர்கள் என்று புரிந்து கொண்டால், இத்தகைய பொத்தாம்பொதுவான விமர்சனம் எழாது. 'நடிகையின் எடுபிடி' என்பது சினிமாவைப் புரிந்துகொள்ளாத, ஒரு பிற்போக்குத்தனமான சிந்தனை.
நடைமுறை இது இல்லை என்பதை, ஒரு சினிமாவிலேனும் வேலை பார்த்து தான் புரிந்துகொள்ளமுடியும் போல.
பொதுவாகவே, சினிமாவிற்கு வெளியே இருந்து சினிமாவின் பார்வையாளராக இருந்து மட்டுமே புரிந்து கொள்ளும் மனோபாவமே இது.


நான் அறிந்த இயக்குநர் ஒருவர், தன்னுடன் வேலை செய்ய பெண் உதவி இயக்குநர்கள் தாம் வேண்டும் என்பார்.
'இயக்குநர்' வேலைக்கான துல்லியத்தையும், அதன் அபரிமிதமான வேலைகளின் தேவைகளையும் பெண் உதவி இயக்குநர் அளவுக்குப் புரிந்து கொண்டு வேலைசெய்ய பெண் உதவி இயக்குநர்களால் தான் முடியும் என்பார்.
மும்பையில் ஹிந்தி சினிமாவில் பணிபுரியும் பெண்உதவி இயக்குநர்கள் பலருடன் பணிபுரிந்திருக்கிறேன். அங்கு, இந்த நிலைமை இல்லை. அங்கு சினிமா என்பது மிகவும் தொழில்முறை வேலையாகப்பார்க்கப்படுகிறது. பெண் / ஆண் என்ற பேதம் இல்லை.

'உதவி இயக்குநர் வேலை', ஓர் அன்றாட வேலை. எண்ணங்களுக்கும் நடைமுறைக்கும் இடையே நெருக்கடிகளைக் கொடுக்கும் வேலை.
ஆனால், பெண் உதவி இயக்குநர்கள், நவீன தொழில்நுட்பத்தையும் தம் படைப்பாற்றலையும் கைக்கொண்டு இந்த வேலையை மிகவும் லாவகமாகச் செய்து முடிக்க முடிப்பதாக இன்னோர் இயக்குநர் தனிப்பட்ட உரையாடலில் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
நாளுக்கு நாள் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருக்கிறது, சினிமா. அதன் அதிநவீன தொழில்நுட்பத்தையும், மொழியையும், கலைவடிவத்தையும் ஒருங்கிணைந்து கையாள, 'தயாரிப்பு மனநிலையும்', 'தயார் மனநிலையும்' வேண்டும்.
படத்திற்கான முன் தயாரிப்பு, படப்பதிவு, படப்பதிவுக்குப் பின்பான தொகுப்பு வேலைகள் எனத் தொடர்ந்து அதி நவீனச்சவால்களைப் பெண்கள் எளிதாகக் கையாண்டாலும், பெண் உதவி இயக்குநர்களுக்குக் கிடைப்பதென்னவோ அவப்பெயர்.
தமிழ்சினிமா குறித்து, குடும்பங்களிலும் ஊடகங்களில்உம் பொதுச்சமூகத்திலும் நல்லெண்ணமே கிடையாது. சினிமா என்றாலே ஏதோ இழிவான தொழிலாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்தும் பிற மொழிகளில் இருந்தும் தமிழ்சினிமாவில் வேலை செய்யும் பெண்கள், நல்ல முறையில் வேலை செய்து தம்மை பலப்படுத்திக்கொள்வதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை.

நடிப்புத்தொழிலுக்கும், தொழில்நுட்பத்துறைக்கும், இயக்கத்திற்கும் நான் மேற்குறிப்பிடுபவை ஒரு சேரப் பொருந்தும்.
நடிப்பு, இயக்கம், தொழில்நுட்பம் என எந்த வகையிலும், சினிமாவிற்குள் பெண்களை வரவிடாத கருத்துகளை உதிர்த்தவண்ணமே, சினிமாவில் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புவது எந்த வகையில் நியாயம்.
சினிமாவை எல்லோரும் தொடர்ந்து திட்டித்தீர்ப்பதற்கு, அப்படித் திட்டுவதில் உள்ளார்ந்த குதூகலத்தை அனுபவிப்பதற்கு வேண்டுமானால் இது உதவலாம்.

தழிழ்சினிமாவில் முற்போக்கான, கலைவடிவ மாற்றத்தைக் கொண்டுவர இது ஒருபொழுதும் உதவாது.


குட்டி ரேவதி
*