நம் குரல்

இப்பொழுதும் அவர்கள் மீது எனக்கு வெறுப்பில்லை.




காலங்காலமாக, தம் கால்களின் கால்களால் பெண்களை நசுக்கியவர்கள், 
இன்று அவற்றைச் செயல்படுத்த இயலாததை 
'ஆண்மைக் குறைவாய்' என்ணி, வெறுப்பை உமிழ்கிறார்கள்.
அவை அமிலச்சொற்களாய், எச்சில் துளிகளாய் 
அவர்கள் முகங்களைச் சுற்றித் தெறிக்கிறது.
இப்பொழுதும் அவர்கள் மீது எனக்கு வெறுப்பு மூளவில்லை.

ஏனெனில், அவர்களின் பெண் வெறுப்பை ஏற்றுக்கொண்டும், 
சுயமரியாதையை உதறிக்கொண்டும் 
அவருடன் அணிவகுத்து நிற்கும் பெண்களின் வரிசை 
அப்படியே உள்ளது.
அவர்கள் எழுத்து, நன்றாய்த்தானிருக்கிறது. 
ஆள்கள்தான் சரியில்லை என்று சொல்லும் ஆண்களின் வரிசையும் 
அப்படி அப்படியே உள்ளது.
விருதுகளின் வெளிச்சமும் அழைப்பிதழ்களின் நிறங்களும் கூட 
அப்படியே நிறம் மங்காமல் உள்ளது.
இதழ்களின் நடுப்பக்கங்களும் கேமராக்களின் முகங்களும் கூடக் காத்திருக்கின்றன.
சூத்திரப்பெண்களின் மீது வெறுப்பை உமிழ்வது தானே சாதியின் இயல்பு. 
இப்பொழுதும் அவர்கள் மீது எனக்கு வெறுப்பு மூளவில்லை.

ஆசான்கள் என்ன சொன்னாலும் ஆசாரிகள் என்ன சொன்னாலும் 
முதுகெலும்பின்றி கருத்தியலை விலைக்கு வாங்கும் கூட்டங்களும் கூட
அப்படியே காத்திருக்கின்றன. வரிசை நீள்கிறது.
கோழைத்தனங்களும் அப்படியே கூன்விழுந்து கிடக்கின்றன.
அணி மாறிக் கலைந்து மீண்டும் திரள்கின்றனர்.
அவ்வவ்வரிசைகள் அப்படியே உள்ளன. 
அவர்கள் மீது இப்பொழுதும் எனக்கு வெறுப்பு மூளவில்லை.

எதிர் வன்முறையை அடக்கிக்கொள்ளும் ஒரு மிடறு உமிழ்நீர் கூட 
இப்பொழுதெல்லாம் எனக்கு சுரப்பதில்லை.
எனது கவலையெல்லாம் அவர்களின் பெண்மகள்கள் பற்றியது.
இந்தியாவின் மகள்கள் எவர் மீதும்,
'இந்தியாவின் மகன்களோ, சகோதரரோ, மாமன்களோ, மருமகன்களோ 
ஏன் தந்தையரோ கூட ஒரு கணமும் கருணையுடன் நடந்து கொண்டதில்லை. 
கருணையுடன் நடந்து கொண்டதாய் வரலாறும் இல்லை.
எனது கவலையெல்லாம் அவர்களின் பெண்மகள்களும் பற்றியது.

ஆனால், இன்னும் அவர்கள் நிறைய எழுதி முடிக்கவேண்டியிருக்கிறது.
முழுக்கழிவும் வெளியேறும் வரை, எழுதித் தீர்க்கவேண்டியிருக்கிறது.
எனது கவலையெல்லாம் அவர்களின் பெண்மகள்கள் பற்றியது.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: