நம் குரல்

ஏன் நமக்கு 'அம்பேத்கரியம்' அவசியம்?






கொள்கைகளில் பிரச்சனை இல்லை. அதைப் புரிந்துகொள்ளும் நம்மிடம் தான் சிக்கல் இருக்கிறது!
பல உதாரணங்கள் பார்த்துவிட்டேன்.


தங்கள் தங்கள் துறைகளில், போராடி முன்னேறி வரும் பெண்களாகிய நாம், போராட்டத்தின் பொழுது, தம் நம்பிக்கைக்கு நெஞ்சிற்கு உறுதுணையாக இருக்கும், 'இயக்கத்தையும்', 'கொள்கைகளையும்', 'கருத்தியலையும்' பற்றிப்பிடித்துக்கொள்வதுடன்,
அந்த இயக்கத்தில், கருத்தியலில், கொள்கையில் கால் ஊன்றி நிற்கும் 'ஆண்களை'யும் நெஞ்சார நம்புகிறோம். அந்த ஆண்களை வாழ்க்கைத்துணையாக, நண்பர்களாக, காதலராக ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், தனக்கும் அவருக்கும் இடையே உறவுசார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் போது, இயக்கம், கருத்தியல், கொள்கைகள் தாம் அந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்று வெகு எளிதாகச்சொல்லி விடுகிறோம்.
இதற்கிடையில், அந்த ஆணின் பின்னணி, சாதி, குடும்பம், அது தவிர நம் புரிதலில் இருக்கும் குறைபாடு என பல காரணங்களை வெகு எளிதாகவும் வசதியாகவும் மறந்துவிடுகிறோம். சம்பந்தப்பட்ட அந்த ஆணை விட, நாம் தாம் அரைகுறையாகக் கருத்தியலை, கொள்கையை உள்வாங்கியவராக இருந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.


உண்மையில், இது மிகவும் பிற்போக்கான சிந்தனை.
பெரியாரியம் விடயத்திலும் சரி, தமிழ்த்தேசியம் விடயத்திலும் சரி, கம்யூனிச விடயத்திலும் சரி, இதுவே போக்காக உள்ளது.
எனக்கென்னவோ, ஆண்கள் எல்லா இடங்களிலும் ஆண்களாகவே, ஆண்களுக்கான அதிகார விடயங்களுடன் இருப்பதற்கான வாய்ப்பையே உலகமும், சமூகமும், இயக்கங்களும் அவர்களுக்கு நல்குகிறது.
இவ்விடயத்தில், நாமும் இவ்வாறு பாரபட்சமான அணுகுமுறையைக்கொண்டிருப்பது இன்னும் நம் வலிமையைக் குலைக்கவே செய்யும்.
இதோ, இப்படி இவ்விடயத்தை அணுகுவதற்கான நம்பிக்கையும் புரிதலும் 'எனக்கு' வந்திருப்பதே கூட, ஏன், 'உங்களுக்கும்' ஏற்பட்டிருப்பதே கூட இவ்வியக்கங்களினால், கொள்கைகளால் தாம்.


நடைமுறையில், 'அம்பேத்கரியம்' தான் மேற்சொன்ன இயக்கங்களில் எல்லாம் இருக்கும் வெற்றிடங்களை ஆண்களிடமும், பெண்களிடமும் ஒரு சேர நிரப்பமுடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.
சமீபமாக, நிறைய பெண்கள் தங்கள் சொந்தவாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளை, சம்பந்தப்பட்ட இயக்கத்தின் கொள்கைகளுடன் போட்டுக்குழப்பிக் கொள்கிறோம்.


இதற்கு காரணம், இந்தக் கொள்கைகள் அவசியப்படும் இந்தச் சமூகத்தில் பெண்களும் ஆண்களும் தனித்தனி மனிதர்கள் இல்லை. ஒருவருடன் ஒருவர் பின்னிப்பிணைந்தவர்கள் என்பதை ஆண்களைப் போலவே, பெண்களும் தங்கள் வசதிக்கேற்ப மறந்துவிடுவது தான்.
கொள்கைகளில் பிரச்சனை இல்லை. அதைப் புரிந்துகொள்ளும் நம்மிடம் தான் சிக்கல் இருக்கிறது. கொள்கைகளின் திசைகளைத் திருகி மாற்றமுடியாது. மனிதர்களின் மனோபாவங்களை, அணுகுமுறைகளை இத்தகைய நம் புரிதலின் வழியாக வெகு எளிதாக மாற்றிவிடலாம்.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: