நம் குரல்

'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன் வைத்து! - 2


இன்னும் மேலதிகமான குற்றங்களுக்கான வழி தான், குற்றங்களுக்குத் தீர்வா?




எல்லோருமே, இந்தப்பிரச்சனைக்குத் தீர்வாக, 'கல்வி'யைச் சொல்வது நகைப்பை வரவழைக்கிறது.
'கல்வி'யைப் பெற்றவரும், கல்வியைப் பெற வாய்ப்பில்லாதோரும் ஒரே மாதிரி சிந்தனையைத் தான் கொண்டிருக்கின்றனர் என்பது இப்படத்தின் போக்கில் தெளிவாகத் தெரிகிறது.
நமக்குக் கற்பிக்கப்படுவது, அடிமைக்கல்வி. அதிலும், இந்துமதம் மற்ற எல்லா மதங்களையும் விட, மூர்க்கமான, மடத்தனமான வன்முறையை, பெண்கள் மீதான அடக்குமுறையை நியாயப்படுத்துவது.
இந்த நாட்டை முழுமையும் 'இந்து நாடாக' ஆக்க, ஒரே வழி: பெண்களின் கருப்பையைக் காவல் காப்பது அல்லது சீரழிப்பது என்ற நம்பிக்கையைக் காலந்தோறும் வலியுறுத்திவருகின்றனர்.

'பெண்கள் விடயத்தில்' எந்த ஊடகமும் முழு விழிப்புணர்வுடன், நீதிநம்பிக்கைகளுடன் இல்லை என்பது வெளிப்பாடு.
வீட்டில் பெற்ற தாய் முதல் மணந்து கொண்ட மனைவி வரை, 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்ற அடிமைச் சிந்தனை உடைய சமூகத்தை பெற்ற மகளைக் கொன்றும் நிலைநாட்டி வரும் ஓர் அபத்தமான நாடு இது.
எந்த நூலிலும், பெண்ணை மதிக்கும் கல்வி இல்லை.
இந்த நிலையில், 'கல்வி' எப்படி தீர்வாகும்?

அல்லது, 'தூக்கில் போடுங்கள்!' என்று சொல்கிறார்கள். அதைத் தீர்வு என்று சொல்கிறார்கள். எனில், அங்கு டில்லி வீதிகளில் நின்று போராடிய, அத்தனைப் பெண்களின் தந்தையரையும், சகோதரர்களையும், ஏன் பார்லிமெண்டில் தினம் தினம் நுழைந்து நாட்டுப்பற்றைப் பேசிவரும் அத்தனை ஆண்களையுமே 'தூக்கில் போடுவது என்பது சாத்தியமா?
தண்டனை பெற்றவன், தண்டனை பெறாதவனைக் குற்றம் சாட்டுகிறான். தண்டனை பெறாதவன், வன்முறைக்கு ஆளானோரே குற்றவாளி என்கிறான். வன்முறைக்கு உள்ளாகும் மக்கள், 'நீதி பெற போராடாமல்' தண்டனை பெற போராடுகிறார்கள்.
இதற்கு முடிவே இல்லை. எந்தக் கல்வியும் போதாது என்பதை இப்படமே முகத்தில் அறைந்தாற்போல் சொல்கிறது.

வீட்டிலும், பொதுவெளியிலும், ஊடகங்கள் வழியாகவும், 'உண்மையான ஓர் ஆண், பெண்கள் மீது மிகுந்த மரியாதையைக் கொண்டிருப்பான்,' என்ற ஒரு சாதாரணமான நம்பிக்கையை விதைப்பதே, சரியான, முதல்கட்ட தீர்வாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன்.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: