நம் குரல்

ஞாயிற்றுக்கிழமை என்பது!







ஞாயிற்றுக்கிழமைகள், கட்டாய ஓய்வு போலவும் மற்ற கிழமைகள் விருப்ப ஓய்வு போலவும் இருக்கின்றன.
நிரந்தர வேலைகளில் இல்லாதவர்களுக்கு இப்படித்தான்.



மூன்று நாட்களாக, இணைய இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை. ஒரு மின்னஞ்சல் அனுப்புவதற்குக் கூட போராடவேண்டியிருந்தது. இன்று காலையிலேயே வேகமாக, வேலை செய்யத்தொடங்கிவிட்டது.

எழுதி அனுப்ப வேண்டிய கடிதங்களை எல்லாம் நிறைவு செய்துவிட முடியும் என்று நம்புகிறேன்.

சில நாட்கள் முன்பு, எங்கள் ஓய்வு வேளையில், ஆர். ஆர். சீனிவாசனிடம் விளையாட்டாகத்தான் கேட்டேன்.
அவருக்குப் பிடித்தமான, சிறந்த கவிதைகள் சிலவற்றைச் சொல்லுங்கள் என்று சொன்னேன். இத்தகைய உரையாடல்கள் எங்களுக்கு இடையே அடிக்கடி நிகழ்வது தான். ஆங்கில இலக்கியத்தில், இளநிலைப் பட்டம் பெற்றவர். உண்மையில், பட்டத்திற்கும் ஆர்வத்திற்கும் சம்பந்தமே இல்லை எனும் அளவிற்கு, ஆங்கில இலக்கியத்தின் சிறந்த எல்லைகளை எல்லாம் ஆர்வத்துடன் வாசித்து வைத்திருப்பவர். என்னுடைய கல்லூரி காலத்தில், ஆங்கில இலக்கியத்தை  எனக்கு  முறையே அறிமுகம் செய்து வைத்தவர் அவரே. இல்லை என்றால், இலக்கியப்பாதைக்குத் திரும்பியிருக்கவேமாட்டேன்.

சில்வியா பிளாத் தொடங்கி நிசிம் இசக்கியல் வரைக்கும் கவிதைகளையும், அக்கவிதைகளில் இருந்து மனனமாகியிருக்கும் முக்கியமான வரிகளையும் சொல்லிக் கொண்டே வந்தார்.
எவ்வளவு அறிந்திருந்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளவே மாட்டார். ஆண்களுக்கு அடக்கம் அவசியம் என்பதிலும், பெண்களுக்கு அடக்கம் அவசியமில்லை என்பதிலும் கருத்தியல் சார்ந்த திடமான நம்பிக்கை எனக்கு உண்டு.
அவர் ஒவ்வொரு கவிதையையும் சொல்லச்சொல்ல, இணையத்தில் தேடித்தேடி வாசித்தேன். ஏற்கெனவே அறிந்த, வாசித்தக் கவிதைகள் என்றாலூம், இப்படி ஒரு தொகுப்பாய் வாசிக்க ஒரு புத்தாக்கப் பயிற்சி போல இருந்தது.
Sylvia Plath's Mirror, Emily Dickinson's Because I could stop for death, Eliot's The Love Song of J. Alfred Prufrock, Faiz Ahmed Faiz;s My heart, He Traveller, Ted Hughs's Crows, Nissim Ezekiel's Night of the Scorpion, Ted Hughs's Apple Dumps, Rainer Maria Rilke's Solitude is like rain என நீண்டு கொண்டே இருந்தது.

இன்று காலையில், இந்த நாளுக்கு, கவிஞர் பாதசாரியின் சில கவிதைகளை எடுத்து வாசித்தேன்.
நாம் நல்ல கவிதைகள் எழுத, நம்மினும் சிறந்த கவிதை அறிவு உள்ளோரைச் சூழ வைத்திருக்கவேண்டும். அப்பொழுது தான், நம்மிடம் கற்களுக்குப் பதிலாக, சில கவிதைகள் இருக்கும்.

இன்று காலையில் ஃபேஸ்புக்கில், Run For Life என்று ஒரு புகைப்படம் பார்த்தேன். இத்துடன் இணைத்திருக்கிறேன், பாருங்கள். மனித வாழ்வின் நிறைய தருணங்களையும் கூட, அது கிளர்த்துகிறது. மீண்டும் மீண்டும், அடங்கமாட்டா ஆர்வத்துடன் அதையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.


நடிகர் முருகருடன் சென்னையின் அதிகாலையையும் பார்த்துவந்துவிட்டேன். ஞாயிற்றுக்கிழமையின் நினைவுகளுக்கு, திரைகளை இழந்த சன்னல்களில் வழியாகப் பீறிடும் வெளிறிய ஒளி வீசும் தன்மையும், வெறிச்சோடிப்போன சாலைகளின் குணமும் உண்டு!
ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துகள்!
ஃபோட்டோ கிராஃபர்: Roie Galitz

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: